நாயகன் - மஞ்சு மனோஜ்
நாயகி - சுரபி
இயக்குனர் - ராம் கோபால் வர்மா
தெலுங்கு திரை உலகின் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா இம்முறையும் ஒரு க்ரைம் பின்னணி கொண்ட கதையுடன் களம் இறங்கியிருக்கிறார். இதில் பெரும் நட்சத்திரங்கள் என்றால் அவர்கள் பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு மற்றும் மஞ்சு மனோஜ் மட்டுமே. சரி படத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.
ஒரு பெரும் தொழிலதிபரான பிரகாஷ் ராஜ் ஒரு கொடூர தாக்குதல் மூலம் கொல்லப்படுகிறார். இந்த கொலையின் மீது தான் மொத்த கதையும் பயணிக்கிறது. இவர் இறந்த பின்னர் இவரது முதல் மகனான ஜெகபதி பாபு தனது தந்தையின் சாவிற்கு பழிவாங்க நினைக்கிறார்.
ஆனால் இவரும் தனது தந்தையைப் போலவே கொலை செய்யப்படுகிறார். இப்போது வேறு வழியே இல்லாமல் பழிவாங்கும் வலை அவரின் மூன்றாவது மகனான மனோஜிடம் வந்து சேர்கிறது. இவர் எப்படி பழிவாங்குகிறார், இரண்டாவது மகனான நவீன் கதையில் எப்படி வருகிறார். நாயகி சுரபிக்கு படத்தில் என்ன வேலை? பழிவாங்கள் முடிவுற்றதா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடையாக அமைகிறது சற்று நீளமான படத்தின் மீதிக்கதை
என்ன தான் ஹைதர் அலி காலத்து பழைய கதை என்றாலும், கதைக்கு பின்புலமாக எடுடத்துக்கொண்ட ஒரு பழைய நகரமும் அதை காட்சிப்படுத்திய விதமும் ரசிக்க வைக்கிறது. ராம் கோபால் வர்மாவின் படங்களில் தனி பாராட்டைப் பெறும் ஒளிப்பதிவு இப்படத்திலும் சிறப்பாக அமைந்துள்ளது.
அதுவும் ஏரியல் காட்சிகளில் காட்டப்படும் நகரத்தின் அமைப்புகள் நன்றாக இருக்கிறன. சில காட்சிகளே வந்தாலும் பிரகாஷ்ராஜ் கவர்கிறார். மொத்தப்படத்தையும் தாங்கிப்பிடிப்பது என்னவோ மனோஜ் தான் உடல்மொழியிலும் நடிப்பிலும் மனோஜின் உழைப்பு தெரிகிறது. அதுவும் அவரது தோற்றம் கிளைமேஸ் காட்சிக்கு ஏகப்பொருத்தமாக இருக்கிறது.நவீனும் குறிப்பிடும் படியாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜெகபதி பாபுவும் தனக்கு கொடுக்கப்பட கதாபாத்திரத்தில் தனகே உரிய பாணியில் நடித்திருக்கிறார்.
படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்களின் இணைப்பு பார்ப்பவர்களை சற்றே குழப்பத்தில் தள்ளுகிறது. க்ரைம் த்ரில்லர் வகை படம் தான் என்றாலும் ரசிகர்களை அளவிற்கு அதிகமாகவே குழப்பியிருக்கிறார் ராம் கோபால் வர்மா.
சில காட்சிகளை வெட்டி இருக்கலாம், அதும் கிளைமேக்ஸ் காட்சியின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். இன்னும் நன்றாக இருந்திருக்கும். படம் இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடினாலும் கொஞ்சம் நீளமாகவே தோன்றுகிறது, எப்போதும் போல் எடுத்துக்கொண்ட கதையில் கவனத்தை ஈர்த்த ராம் கோபால் வர்மா அதைக்கொண்டு தனித்துவமான திரைக்கதையின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட தவறிவிட்டார். இதற்கு அவர் தன்னை தானே குற்றம் சொல்லிக்கொள்ள வேண்டியது மட்டும் தான் மிச்சம்.