நடிகர்கள் : குஞ்சாக்கோ போபன், இந்திரஜித், மஞ்சு வாரியர், 'காதல்' சந்தியா.
கதை : அருண்லால் ராமச்சந்திரன்
இசை : ஷான் ரஹ்மான்
ஒளிப்பதிவு : அனீஷ்லால்
டைரக்சன் : ராஜேஷ் பிள்ளை
'ட்ராபிக்' என்கிற மெகாஹிட் படத்தின் மூலம் மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவரும், சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் மரணத்தை தழுவியவருமான இயக்குனர் ராஜேஷ் பிள்ளையின் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'மைண்ட் கேம்' த்ரில்லர் படம் தான் இந்த 'வேட்ட'.
தனது கல்லூரித்தோழியான சினிமா நடிகை ஒருவரையும் அவரது நண்பன் ஒருவனையும் கடத்தி கொலை செய்ததாக கைதாகிறார் நீதிமன்றத்தில் குமாஸ்தா வேலைபார்க்கும் குஞ்சாக்கோ போபன். அவரை போலீஸ் உயர் அதிகாரிகளான மஞ்சு வாரியரும் இந்திரஜித்தும் விசாரிக்கின்றனர். விசாரணையில் தனக்கு துரோகம் செய்த தனது மனைவி காதல் சந்தியாவை தான் பால்கனியில் இருந்து தள்ளி கொலை செய்ததாக, இன்னொரு புதிய குண்டு ஒன்றை போடுகிறார் குஞ்சாக்கோ..
அதனால் தான் தனது மனைவியின் கள்ளக்காதலனையும் அவனுடன் நட்பாக இருந்த தனது பள்ளித்தோழியுமான சினிமா நடிகை சனுஷாவையும் கொன்று ஏரியில் வீசிவிட்டதாகவும் கூறுகிறார்.. ஆனால் எந்த இடத்தில் வீசினேன் என்பதை அவரால் சரியாக சொல்ல முடியாததால் கேஸ் முன்னோக்கி நகராமல் திணறுகிறது. இதனால் வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றும் நெருக்கடி ஏற்பட, சிறிது அவகாசம் கேட்கின்றனர் இந்த அதிகாரிகள் இருவரும்.
இந்த நேரத்தில் நகரத்தில் உள்ள முக்கியமான பள்ளி ஒன்றின் முதலாளியான இளைஞன் ஒருவர் கார் விபத்தில் பலியாகிறார். இந்த கொலையின் பின்னணியில் போலீஸ் அதிகாரி இந்திரஜித் இருப்பதாக, இன்னொரு அதிகாரியான மஞ்சு வாரியருக்கு ரகசிய தகவல் கிடைக்கிறது. இந்திரஜித்தின் மீது நடவடிக்கை எடுக்க மஞ்சு முனையும் நேரத்தில் குஞ்சாக்கோவிற்கு, அவர் சடலங்களை வீசிய இடம் ஞாபகத்துக்கு வந்துவிட்டதாக கூறி மஞ்சுவையும், இந்திரஜித்தையும் அதை விசாரிக்க அனுப்புகிறார் கமிஷனர்.
ஆனால் அங்கே சென்று பார்க்கும்போது நடிகையும், அந்த இளைஞரும் உயிருடன் ஒரு இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதை காட்டுகின்றார் குஞ்சாக்கோ. இதனால் குஞ்சாக்கோ மனநிலை சரியில்லாதவர் என மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார். மஞ்சு வாரியர் அந்த கள்ளக்காதலனை விசாரித்ததில், குஞ்சாக்கோவின் மனைவி சந்தியா யாரென்றே தனக்கு தெரியாது என கூறுகிறார்.
இதுபற்றி மஞ்சு வாரியர் ஆழமாக இறங்கி விசாரிக்கையில்தான், குஞ்சாக்கோ தங்கள் இருவரிடமும் பொய்யான விஷயங்களை கூறி நாடகமாடியது தெரியவருகிறது.. அவரிடம் அதுபற்றி மீண்டும் விசாரிக்க முற்படும்போது தாங்கள் இருவருமே குஞ்சாக்கோ போபன் பின்னிய வலையில் தங்களை அறியாமல் சிக்கி கொலைப்பழிக்கும் ஆளாகி இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வருகிறது..
குஞ்சாக்கோ போபன் எதற்காக இப்படி தகிடு தத்தங்கள் செய்யவேண்டும்...? மாற்றி மாற்றி பேசவேண்டும்..? எதற்காக போலீஸ் அதிகாரிகள் இருவரையும் தந்திரமாக கொலைப்பழியில் சிக்கவைக்க வேண்டும்..? இப்படி பல கேள்விகளுக்கு மனம் கனக்கவைக்கும் வகையில் மனம் திறக்கிறார் குஞ்சாக்கோ போபன். அதுதான் க்ளைமாக்ஸும் கூட..
த்ரில்லர் படங்களில் அதிரடி த்ரில்லர், சைக்கோ த்ரில்லர் என சில வகைகள் உண்டு.. ஆனால் இந்தப்படம் 'மைண்ட் கேம் த்ரில்லர்' வகையை சேர்ந்தது. போலீஸ், விசாரணை என படம் மெதுவாக நகர்வது போல தோன்றினாலும், ஆரம்பத்தில் இருந்தே ஒரு எதிர்பார்ப்புக்குள் உங்களை கொண்டுவந்து உட்கார வைத்து விடுகிறார் இயக்குனர் ராஜேஷ் பிள்ளை. அதுதான் படத்தின் வெற்றிக்கான சூட்சுமமாகவும் அமைந்துள்ளது.
அவ்வப்போது மர்மப்புன்னகை புரியும் குஞ்சாக்கோ போபனின் முகமே கதைக்குள் வேறு ஏதோ விஷயம் ஒன்று இருக்கிறது என அவ்வப்போது பகீர் கிளப்புகிறது.. போலீசாரின் விசாரணையில் அவர் குழப்பி அடிப்பதும், பின்னர் உண்மையை சொல்வதாக கூறி அவர்களை முட்டாளாக்குவதும், கிளைமாக்ஸில் அவர்கள் இருவரையும் கையறு நிலைக்கு கொண்டு வருவதும் என அலட்டாமல் அண்டர்பிளே செய்து அப்ளாஸ் அள்ளுகிறார்..
மஞ்சு வாரியருக்கு இதுதான் முதல் போலீஸ் படம் என்றாலும் குறைசொல்ல முடியாத அளவுக்கு தன்னை உருமாற்றிக்கொண்டு இருப்பதை பாராட்ட வேண்டும்.. குஞ்சாக்கோ போபனிடம் பொறுமையாக விசாரிக்கும்போது அவரது பக்குவப்பட்ட நடிப்பு வெளிப்படுகிறது. பிளாஸ்பேக் காட்சிகளில் வரும் 'காதல்' சந்தியா பரிதாபம் கொள்ள வைக்கிறார்.
இன்னொரு நாயகனான இந்திரஜித்.. அவரை ஏற்கனவே பல படங்களில் போலீசாக நாம் பார்த்திருப்பதால் அவர் நம்முடனேயே உள்ள ஒரு நபர் தான் என நினைக்க வைக்கிறார். மனைவியின் செயல்களுக்கு தப்பான அர்த்தம் கற்பித்துக்கொண்டு சூழ்ச்சியில் சிக்கி கொலைப்பழிக்கும் ஆளாகி பரிதாபப்பட வைக்கிறார்.
அனீஷ்லாலின் ஒளிப்பதிவும் ஷான் ரஹ்மானின் இசையும் இந்த த்ரில்லருக்கு மேலும் கணம் சேர்க்கின்றன. எதிர்பாராத திருப்பங்களுடன் இந்த கதையை கையாண்டிருக்கும் அருண்லால் ராமச்சந்திரன் நிச்சயம் பாராட்டுக்குரியவர். படத்தில் சதுரங்க ஆட்டம் போன்று நுட்பமாக கொலையும் கொலைப்பழியும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தாலும் அதன் பின்னணியில் தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் நடைபெறும் ஒரு அராஜகத்தையும் தைரியமாக வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் ராஜேஷ் பிள்ளை.
தன்னைப்பற்றி தானே உண்மைகளை கூறுவதாக நடித்து, அதன்மூலம் எதிராளிகளின் கவனத்தை திசைதிருப்பி, பின் அவர்கள் அறியாமல் தான் பின்னிய வலையில் அவர்களை சிக்கவைத்து, அதன்மூலம் தான் தப்பிக்கும் ஒரு அருமையான கிரிமினல் மூளையுடன் 'வேட்ட' ஆடியுள்ள இயக்குனர் ராஜேஷ் பிள்ளை, இந்த வெற்றியை காண கொடுத்து வைக்காமல் இவ்வுலகை விட்டு சென்றுவிட்டதுதான் படம் பார்க்க வரும் ரசிகனை வருத்தம் கொள்ளவைக்கும் விஷயமாக இருக்கும்.
மொத்தத்தில், இந்த 'வேட்ட' புதுமையான ட்ரீட்மென்ட்டில் சொல்லப்பட்ட ஒரு மைண்ட்கேம் த்ரில்லர்.