தினமலர் விமர்சனம்
நடிகர்கள் : பிருத்விராஜ், மியா ஜார்ஜ், மஞ்சு வாரியர் (சிறப்பு தோற்றம்), ஆஷா சரத், அனூப் மேனன், நெடுமுடி வேணு, மனியம்பிள்ள ராசு, கலாபவன் சாஜன்.
டைரக்சன் : ஜி.மார்த்தாண்டன்
குடி குடியை கெடுக்கும் என்பதை கமர்ஷியல் கண்ணோட்டத்தில் சொல்லியிருக்கும் படம் தான் இந்த 'பாவாட'
கேரள கிராமம் ஒன்றில் எந்நேரமும் குடித்துக்கொண்டு இருக்கும் அனூப் மேனனை எல்லோரும் பாவாட' என்று அழைக்கிறார்கள். காரணம் 20 வருடங்களுக்கு முன் அவர் தயாரித்த படத்திற்கு 'பாவாட' என டைட்டில் வைக்கப்பட்டு அது ரிலீசும் ஆகாமல் போனதுதான். இந்த நிலையில் அவரை குடி மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சேர்க்கிறார்கள் அவரது விசுவாசிகளான நெடுமுடி வேணுவும் லாயர் மணியம்பிள்ள ராஜூவும்.
அங்கே ஏற்கனவே வந்து சேர்ந்த இன்னொரு குடிகாரரான பிருத்விராஜை சந்திக்கிறார் அனூப் மேனன்.. இடைவிடாத குடிப்பழக்கத்தால் பிருத்விராஜின் மனைவி மியா அவரைவிட்டு பிரிந்து வேறு நகரத்தில் நர்ஸ் வேலைபார்க்க போய்விட, பிருத்விராஜின் மீது அன்பு செலுத்தும் பாதர் ஒருவர் அவரை இங்கே சேர்க்கிறார். அனூப் மேனன், பிருத்விராஜ் இருவருக்கும் இப்போது நட்பு ஏற்பட அந்த சிகிச்சை மையத்தில் இருந்து தப்பித்து அனூப் மேனன் வீட்டிற்கு செல்கிறார்கள்..
சில நாட்கள் கழித்து அனூப் மேனன் வீட்டில் ஒரு அறையில் தூசு படிந்துக்கிடக்கும் படப்பெட்டியை பார்த்ததும் அது 20 வருடத்திற்கு முன் தன் அம்மா நடித்த படம் என்பதும், அந்தப்படம் காரணமாக தான் வீட்டைவிட்டு வெளியேறி அநாதை ஆனதும் தெரியவருகிறது. இதனால் கோபத்தில் அனூப் மேனனை கொல்ல முயற்சிக்கிறார் பிருத்விராஜ்.
ஆனால், அனூப் மேனன் 20 வருடங்களுக்கு முன் தனது நண்பன் முரளி கோபியை இயக்குனராக்க 'தீ வண்டிப்பாதை' என்கிற படத்தை தயாரிக்க முன் வந்ததும், அந்தப்படத்தில் நடிக்க பிருத்விராஜின் அம்மாவான ஆஷா சரத்தை ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்ததும், படப்பிடிப்பு முடிய சில நாட்கள் இருக்கும்போது இயக்குனர் மாரடைப்பால் மரணமடைந்ததும், இன்னொரு உதவி இயக்குனரை வைத்து படத்தின் புரடக்சன் மேனேஜர் அந்தப்படத்தில் ஆபாச காட்சிகளை சேர்த்து 'பாவாட' என பெயர் மாற்றி ரிலீஸ் செய்ய முயற்சி செய்ததும், ஆனால் அது முடியாமல் கடன் வாங்கிய பணத்தை அனூப் மேனன் சொத்துக்களை விற்று அடைத்ததும், ரிலீசாகாமல் படம் முடங்கியதும் என நடந்த விபரங்கள் பிருத்விராஜுக்கு தெரிய வருகின்றன.
இந்தநிலையில் அந்த புரடக்சன் மேனேஜர் 'பாவாட' படத்தை இப்போது ரிலீஸ் செய்யப்போவதாக அறிவிப்பு வெளியாகிறது. அந்தப்படம் வெளியானால் அதில் மார்பிங் செய்யப்பட ஆபாசக்காட்சிகளின் மூலம் தனது தாயின் மானம் இந்த சமூகத்தின் முன் ஏலம் விடப்படும் என்பதை உணர்ந்த பிருத்விராஜ் அதை அனூப் மேனன் மூலம் தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார். ஆனால் படத்தின் உரிமையை ஏற்கனவே அந்த புரடக்சன் மேனேஜருக்கு அனூப் மேனன் எழுதிக்கொடுத்த பத்திரம் அவர்களிடம் இருக்கிறது. இப்போது வழக்கு கோர்ட்டிற்கு வருகிறது.. இறுதியில் சட்டம் வென்றதா..? உண்மை வென்றதா என்பது க்ளைமாக்ஸ்.
தொடர்ந்து மூன்று படங்களில் ஸ்டைலிஷ் ஹீரோவாக பார்த்து பழகிய பிருத்விராஜ் இதில் பக்கா கிராமத்தானாக மாறியிருக்கிறார். தண்ணியடித்து விட்டுத்தான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே வந்திருப்பாரோ என நினைக்கும்படியாக குழறலான பேச்சும், எந்நேரமும் போதையை வெளிப்படுத்தும் கண்களுமாக தத்ரூபமான நடிப்பை தந்துள்ளார்.
கிட்டத்தட்ட இன்னொரு நாயகனாக வரும் அனூப் மேனனுக்கும் இந்த பாராட்டு பொருந்தும். பிருத்விராஜின் தாயின் மானம் சந்திக்கு வந்துவிடக்கூடது என அவர் துடிக்கும் இடம் இடங்களில் ஜென்டில்மேன் அவதாரம் எடுத்திருக்கிறார்.. தன்னை திருமணம் செய்யாமல் ஒதுங்கி, தானும் இருபது வருடமாக திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் பெண்ணை, குடித்துவிட்டு வரும்போது தினசரி அவர் வீட்டில் கல் எறிந்து வசைபாடுவது நல்ல காமெடி.
எளிமையான குடும்பத்து பெண்ணாக, குடிகார கணவனாக இருந்தாலும் அவன் திருந்துவான் என நம்பிக்கை கொண்ட கதாபாத்திரத்தில் அழகாக மிளிர்கிறார் மியா ஜார்ஜ். வயதான தோற்றத்தில் வரும் ஆஷா சரத் டிவி நேர்காணல் காட்சிகளில் நம்மை நெகிழ வைத்துவிடுகிறார்.. புரடக்சன் மேனேஜராக கலாபவன் சாஜனின் வில்லத்தனம் படு சூப்பர். ரெஞ்சி பணிக்கர், நெடுமுடி வேணு, லாயராக வரும் சித்திக் உட்பட மற்ற சில கதாபாத்திரங்களும் கதையின் சூழலுக்கு ஏற்ப கச்சிதமாக பொருந்துகிறார்கள். க்ளைமாக்ஸ் சீனில் ட்விஸ்ட்டிற்காக மட்டுமே என்ட்ரி கொடுக்கும் மஞ்சு வாரியர் கைதட்டலை மட்டுமே பெறுகிறார்.
கோபி சுந்தரின் இசையில் பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி எந்நேரமும் துள்ளலுடன் வளைய வருவதுடன் நம்மையும் தாளம்போட வைக்கிறது. படத்தில் பாதி நேரம் மது அருந்துவது சம்பந்தப்பட்ட காட்சிகள் இருந்தாலும் குடிப்பது தவறு என்பதை சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஆணித்தரமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் மார்த்தாண்டன்.. ஆனாலும் இது ஒரு பிரச்சாரப்படமாக மாறிவிடாமல், அதை கதையோட்டத்துடன் இயல்பாக இணைத்துள்ளதில் கவனம் ஈர்க்கிறார். ஹீரோயிசம் இல்லாத, ஒரு நல்ல உணர்வுப்பூர்வமான படத்தை பார்த்த திருப்தியை தருகிறது இந்த 'பாவாட'.