Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மாலை நேரத்து மயக்கம்

மாலை நேரத்து மயக்கம்,Maalai Nerathu Mayakkam
  • மாலை நேரத்து மயக்கம்
  • பாலகிருஷ்ணா கோலா
  • வாமிகா கபி
  • இயக்குனர்: கீதாஞ்சலி செல்வராகவன்
19 ஜன, 2016 - 18:14 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மாலை நேரத்து மயக்கம்

தினமலர் விமர்சனம்



இயக்குனர் செல்வராகவனின் காதல் மனைவி கீதாஞ்சலி செல்வராகவனின் இயக்கத்தில், கணவர் செல்வராகவனின் எழுத்தில், அவரது பாணியிலேயே வெளிவந்திருக்கும் படமே மாலை நேரத்து மயக்கம்.


இப்பட கதைப்படி, பெரியோர் பார்த்து சேர்த்து வைத்த ஜோடி, பிரபு எனும் அறிமுக நாயகர் பாலகிருஷ்ண கோலாவும், மனோஜா எனும் அறிமுக நாயகி வாமிகாவும். கணவன் - மனைவி இருவரும், சின்ன சின்ன விஷயங்களால் முதலிரவை முழுதாக முடிக்காமல் இரண்டு வருடங்கள் ஒரே வீட்டில் வெவ்வேறு படுக்கையில் ஊருக்கும், உறவுக்கும் புருஷன் - பொன்ஜாதியாக ஒன்றாகவே வாழ்கின்றனர். ஒரு நாள் இரவு புருஷன், பொண்டாட்டி ஒப்புதல் இல்லாமல், புல் மப்பில், வன்புணர்ச்சியில் ஈடுபடுகிறார், இதில், வெகுண்டெழுந்து புருஷனை வெறுத்து ஒதுக்கும் மனைவி, கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறார்.


மனைவியின் தற்கொலை மிரட்டலுக்கு பயந்து கணவரும் விவாகரத்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு மீண்டும் ஒரு நாள் தன் மனைவி தன்னிடம் வருவார்... எனும் நம்பிக்கையில் காத்திருக்கிறார். தொட்டு தாலிகட்டிய பொண்டாட்டியோ, தன் மாஜி பாய்பிரண்டுகளுடன் தனக்கு பொருத்தமான வரை தேடி, ஓடி திரிகிறார். காத்திருக்கும் கணவரின் நம்பிக்கை பலித்ததா?, இல்லை மனைவியின் மாற்று புருஷன்(?) தேடும் திட்டம் பலித்ததா...? என்பதே மாலை நேரத்து மயக்கம் படத்தின் மீதிக் கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்!


பிரபுவாக புதுமுகம் பாலகிருஷ்ண, கோலா பலே சொல்லும் அளவிற்கு யதார்த்த நடிப்பில் எக்கச்சக்க ஸ்கோர் செய்திருக்கிறார். அதுவே, ஒரு சில சீன்களில் ஒவர் டோஸ் ஆகி விடுவது சற்றே பலவீனம்.


ஆனாலும், மாஜி மனைவி, பாய்பிரண்டுடன் செல்லும் மூணாறு ஹோட்டலுக்கு தன் பேஸ்புக் காதலியை கூட்டிக் கொண்டு சென்று அவரது மனம் மாற காத்திருந்து பார்ப்பது, திருமணமாகி இரண்டு வருடம் கழித்து இருவருக்குமான ஒரு "மப்பு இரவில் மனைவியை முதல் முறையாக, வன்புணர்ச்சி செய்து அடைவது... என சகலத்திலும் வெளுத்து கட்டியிருக்கிறார்.


மனோஜாவாக அறிமுக நடிகை வாமிகா, அழகாக நடித்திருக்கிறார். ஆனாலும், அவர் அப்பாவி அப்பிராணி கணவரிடம் அவர் காட்டும் மூர்க்கம் காரண, காரணியங்கள் இல்லாத முட்டாள் தனமாக இருக்கிறது! மூணாறில் மாஜி புருஷனையும், அவனது நல்மனதையும் பார்த்ததும், மாஜி பாய்பிரண்டிடம் பீரியட் டேஸ் என சொல்லி அவாய்ட் பண்ணும் இடங்களிலும், புருஷனை லவ் பண்ணுவதாக சொல்லி அடைமழையில் அழும் காட்சிகளில் அற்புதமாக நடித்திருக்கிறார் வாமிகா!


பாய்பிரண்ட் ஷரன், அழகம்பெருமாள் உள்ளிட்ட நடிகர்களும், அவர்களது பாத்திரங்களும் கச்சிதம்.


எனக்கு பூ மாதிரி ஒரு பொண்ணு வேணும் பொண்ணு கிடைக்கல.... பூதான் கிடைச்சுது... எனும் ஹீரோவின் பன்ச்க்கு, மச்சான் எனக்குக் கக்கூஸ் வருது எனும் நண்பனின் பதிலில் தொடங்கி, அடிக்கடி வரும் டாய்லெட் பற்றிய டயலாக்குகள், சீன்கள் ரசிகனின் முகம் சுளிக்க வைப்பது பலவீனம்.



எங்கம்மாவுக்கு கேன்சர் எங்கம்மாவுக்காக கல்யாணம் பண்றேன்... அவ சந்தோஷமா இருக்கா அது போதும்... எனும் டயலாக். பர்ஸ்ட் நைட்டில் தனித்தனியாக தூங்குவது ஜூராஸிக் பார்க் டைனோசர்ஸ் மாதிரி சவுண்டுடன் குறட்டை விடுவது, கக்கூஸை காட்டுமிராண்டித்தனமாக யூஸ் செய்து திரும்புவது... டேப்பில் கணவரின் குறட்டையை பதிவு செய்து போட்டு காட்டுவது, என்ன ? வேற மாதிரி ஏதாவது செக்ஸ் வேணுமின்னு கேட்டானா? என பெற்றத் தாயே பெண்ணிடம் கேட்பது... மானஸ், என்னோட பர்ஸ்ட் பாய்பிரண்ட்.. ஷரன், ஸ்கூல்ல என்னோட சீனியர்... கொஞ்ச நாள் அவன் கூட டேட் பண்ணிட்டு இருந்தேன்... என்பது ., எல்லா பையனையும் மேய்க்க, ஒரு பொண்ணு வருவா ... அப்படி இவனுக்கும் ஒருத்தி வந்தா... ஆனா, என்ணாச்சோ., தெரியல... பசங்க பசங்கன் னு இடுப்புல தூக்கி வச்சிட்டு ஆடுறோம் ... சரியான நேரத்துல இறக்கி விடுலேன்னா .... இப்படித்தான் ... என பையனைப் பார்த்து அப்பா அழகம்பெருமாள் புலம்பும் இடம்..., கல்யாணமாகி நீ எனக்கு எதுவுமே கொடுக்கல.. ஆனா , இப்படி சிக்கன்குனியா ஜுரத்தை கொடுத்திட்ட .... இரண்டு வருடம் கழித்து மனைவிக்கு ஒயின் வாங்கி கொடுத்து டான்ஸுக்கும் பர்ஸ்ட் நைட்டுக்கும் அழைப்பது.., சார், இது கோர்ட் ரூமா? இல்ல, டிராமா தியேட்டரா ..? நீதிபதி முன் நாயகி வாதிடுவது ., உள்ளிட்ட வசனங்களிலும் வசன காட்சிகளிலும் தெரியும் செல்வராகவன் டச் படத்திற்கு பலம், பெரிய பலவீனம்!


சரக்க கொஞ்சம் இறக்கி... "காதல் தேன் சுவையா ... உள்ளிட்ட பாடல்களிலும் , பின்னணி இசையிலும் புதியவர் அம்ரித் மிரட்டயிருக்கிறார். ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரும் அவர் பங்கிற்கு அழகாக இப்படத்தை படம் பிடித்திருக்கிறார்.


செல்வராகவனின் எழுத்து, கீதாஞ்சலி செல்வராகவனின் இயக்கம் உள்ளிட்டவைகளில் இப்படத்தில் அடிக்கடி இடம் பெற்றிருக்கும் டாய்லெட், கக்கூஸ் சீன்களை சற்றே ஒதுக்கிவிட்டு முரட்டுத்தனமான முதலிரவு காட்சியை இளைஞர்கள் ரசித்துப்பார்த்தால், மாலை நேரத்து மயக்கம் - ரசிகர்களின் மதி மயக்கும்!


------------------------------------------------------------




குமுதம் சினி விமர்சனம்




இயக்குநர் செல்வராகவன் எழுத்தில், அவரது ஸ்டைலிலேயே அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கியிருக்கும் படம்!


பிரபு - மனோஜா அரேஞ்டு மேரேஜ் ஜோடி. ஆனால் பிரபு சுமார் ரகம், நாகரிகமே தெரியாதவர் என்று வெறுப்பை உமிழ்கிறார் மனோ. ஒரே வீட்டில் இரண்டு வருடங்களாக எந்த உறவுமின்றி வாழ்கிறார்கள். குடிபோதையில் பிரபு ரேப் அட்டம்டில் இறங்கி டைவர்ஸ் ஆகிறது. என்றாலும் மனைவி திரும்ப கிடைப்பாள் என்று காதலோடு காத்திருக்கிறார் பிரபு. மனைவி திரும்ப வந்தாளா என்பதே மாலை நேரத்து மயக்கம்!


பிரபுவாக வரும் புதுமுகம் பாலகிருஷ்ணா கட்டுப்பாடுன்றி வளர்க்கப்பட்ட மகன்களின் வார்ப்பு. ஃபர்ஸ்ட் நைட்டுக்காக ஏங்குவது, மனைவியை வேவுபார்ப்பது என்று எல்லாமே யதார்த்த நடிப்பு.


மனோஜாவாக வரும் புதுமுகம் வாமிகா அற்புதம் கணவனை வெறுப்பது, மூணாறில் மாஜி காதலன் நெருங்கும்போது பீரியட் டைம் என்று அவாய்ட் பண்ணுவது உள்ளிட்ட காட்சிகளில், அழுத்தமான நடிப்பு. அப்பா அழகம்பெருமாள், கல்யாணி நடராஜன், பார்வதி நாயர் போன்றோர் கச்சிதமான தேர்வு.


என்ன வேற மாதிரி செக்ஸ் வேணுமுன்னு கேட்டானா? என்று பெற்ற தாயே பெண்ணிடம் கேட்பது போன்ற வசனங்கள்தான் படத்தின் இன்னொரு ஹீரோ. இசை ஒளிப்பதிவும் பக்கபலம்.


அடுத்தது என்ன என்று யூகிக்கக் கூடிய காட்சிகள் பல இடங்களில் சலிப்பேற்படுத்துகின்றன என்றாலும் துளிகூட ஆபாசம் இல்லாமல், சொன்னால் புரியாத இந்த விஷயத்தை இளைஞர்களுக்குப் புரியும்படிச் சொல்ல துணிச்சல் வேண்டும். அதுவும் ஒரு பெண் இயக்குநருக்கு!


மா.நே. மயக்கம்: கிறக்கம்!


குமுதம் ரேட்டிங்: ஓகே


--------------------------------------------------------------




கல்கி சினி விமர்சனம்




செல்வராகவன் எழுத்தில், கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கி(?) வெளியாகியிருக்கும் படம் இது. மாத்தி யோசிப்பதாக நினைத்து விபரீதமாக யோசித்திருப்பது புரிகிறது.


நான்கைந்து நண்பர்கள் கொண்டவராகவும், ஆண் நண்பரின் இருப்பிடத்தில் இரவில் தனியே தங்குபவராகவும், மதுபழக்கம் உள்ளவராகவும் கதாநாயகியைச் சித்திரிக்கிறார்கள். ஆனாலும் திரமணத்துக்குப் பின்னர்தான் மற்றவை என்பதில் உறுதியாகக் கதாநாயகி இருக்கிறாராம்! என்னே பண்பாடு!


விவாகரத்தானதற்கான காரணத்தை, மகளிடம் தாய் கேட்கும் காட்சியின் வசனங்கள் உவ்வே ரகம். அதே போல மூணாறு விடுதி அறையில் கதாநாயகியும், அவளது முன்னால் ஆண் நண்பரும் பேசும் வசனங்கள் பார்வையாளர்களை ஜெர்க் ஆக்குகின்றன.


நகைச்சுவை என்ற பெயரில் வழக்கமான கிற்குத்தனங்கள் ஏதும் இல்லை. கதாநாயகி தமது கணவனையும் மாமனாரையும் 'வெளியே போங்கடா....' என்று விரட்டுவார். அப்போது அவர் பேசும் இரண்டு பீப் வார்த்தைகள் என்ன என்பதை அவரது உதட்டசைவு ஸ்பஷ்டமாகச் சொல்கிறது. பீப் எதிர்ப்பாளர்கள் எல்லாம் எங்கே போனார்கள்.


ஆறுதலான விஷயம் என்று தேடினால், பளீர் ஒலிப்பதிவு, கதாநாயகனின் அக்மார்க் அம்மாஞ்சித் தனம், கதாநாயகியின் அழுத்தமான முகபாவங்கள் ஆகியவற்றைச் சொல்லலாம். பாடலில் வார்த்தைகள் புரிகின்றன. உச்சரிப்பு கோராமை, உதாரணமாக காயம் என்ற வார்த்தையை Gayam என்று உச்சரிக்கிறார் பாடகர்.


சமீப காலங்களில் வன்புணர்வுக் காட்சிகள் அதிகம் வருவதில்லை. வந்தாலும் குறியீடாகச் சொல்லிவிட்டுச் செல்வார்கள். ஆனால், இந்த கால தோரஹா படப் பாணியில் ஒரு காட்சி இதில் உண்டு. வித்தியாசம் என்னவென்றால் இந்தப் படத்தில் கணவன் தனது (சொந்த) மனைவியை வன்புணர்வு செய்கிறானாம்! செல்வராகவன்! என்ன சொல்றதுன்னே தெரியலை!


அருவருப்பின் உச்சமாக, தன்னுடன் தங்கியிரந்து, தான் திருப்தியடையும் வண்ணம் சேவைகள் புரிந்தால், திருமணம் பற்றி யோசிப்பதாக ஆண் நண்பன் தெரிவிக்கிறார். ஒரு சாதாரண பால் பாயின்ட் போனாவுக்குக்கூடப் பொருந்தாத இந்த நிபந்தனையை மறுப்பேதும் இன்றி ஏற்று அவனைப் பின்தொடர்கிறார் கதாநாயகி. டூ மச்! சமூகச் சீரழிவு என்ற பேராபத்தை நோக்கிய பயணத்தை இது போன்ற படங்கள் விரைவுபடுத்தும்.




மாலை நேரத்து மயக்கம் - பெற்றோர் வயிற்றில் கலக்கம்!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in