நாயகன் - நிகில்
நாயகி - நந்திதா ராஜ்
இயக்குனர் - உதய் நந்தவனம்
டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் நிகில், 'பாஸ் கயா ரீ ஒபாமா' எனும் ஹிந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான ''சங்கராபரணம்'' படத்தில் நடித்துள்ளார். பிரபல கதாசிரியர் கோன வெங்கட், சிறிய பட்ஜெட் படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். இயக்குனர் உதய் நந்தவனம் இப்படத்தை இயக்கியுள்ளார்.
சங்கராபரணம் படத்தின் நாயகன் கெளதம்(நிகில்) ஒரு அமெரிக்க வாழ் இந்தியன், எல்லா சினிமாக்களில் வருவது போலவே வாழ்வை அதன் போக்கிலேயே எடுத்துக்கொள்ளும் ஒரு யதார்த்த இளைஞன். நாயகனின் தந்தையான சுமன் வங்கியில் ஏகப்பட்ட கடனை வாங்கி வைத்துவிட்டு கட்டுவதற்கு வழி செய்யாமல் இறைவனடி சேர்ந்து விடுகிறார். இந்நிலையில் கடனை அடைக்க கெளதமின் தாய் , இந்தியாவில் பீகார் மாநிலத்தில் இருக்கும் தங்கள் பூர்வீக சொத்தை விற்று கடனை அடைப்பது என்கிற முடிவுக்கு வருகிறார்.இதற்காக கெளதம் இந்தியா வருகிறான்.
இப்போது ரசிக பெருமக்களின் எதிர்பார்பிற்கிணங்க கௌதமின் குடும்பத்தாரின் ரூபத்தில் நிலம் விற்பதில் பிரச்சனை வருகிறது. அவர்கள் ஏற்கனவே அந்த நிலத்தை ஆகிரமித்திருக்கிறார்கள். இவன் என்ன செய்வது என தெரியாமல் நிற்கிறான்.ஒரு வழியாக நிலத்தை விற்கும் முயற்சி வெற்றி பெற இருக்கையில், கெளதம் ஒரு ரவுடி கும்பலால் கடத்தப்படுகிறான் ஏன் கடத்தப்பட்டான்? நிலத்தை விற்றானா? கடன் அடைக்கப்பட்டதா? படத்தில் நாயகியின் வேலை என்ன என்பன போன்ற கேள்விகளுக்கு இரண்டாம் பாதி பதில் சொல்லியிருக்கிறது.
படம் என்னவோ பாலிவுட் படத்தின் தழுவல் தான் என்றாலும் கோன வெங்கட் தெலுங்கு தேசத்திற்கு ஏற்றார் போல் படத்தின் திரைக்கதையை மாற்றியிருக்கிறார். கெளதமாக நிகில் தனது நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். வெளிநாட்டு வாழ் இந்தியருக்கான உடல்மொழியிலும், வசன உச்சரிப்புகளிலும் அவரின் மெனக்கிடல் தெரிகிறது. நகில் மற்றும் நந்திதா இவரும் மிக அருமையாக தனது கதாபாத்திரத்தை நடித்து கொடுத்திருக்கிறார். பிருத்வீ வரும் காட்சிகள் அவரது ஒரு வரி வசனங்கள் அனைவரையும் ரசித்து சிரிக்க வைக்கிறது. காவல் துறை அதிகாரியாக அவரது கதாபாத்திரம் நல்ல வடிவமைப்பு.
மூலக்கதையின் வெளிப்பாடானது இரண்டாம் பாதியில் நடைபெறுகிறது,சம்பத் மற்றும் நிகில்-க்கு இடையேயான காட்சிகள் ரசிக்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளன. பின்பாதியில் வரும் அனேக காட்சிகள் பொழுதுபோக்கிற்கு மட்டுமே அமைக்கப்பட்டு படம் கிளைமேக்ஸை நோக்கி நகர்கிறது.
படத்தின் பலவீனம் என்று பார்த்தால், ஏகப்பட்ட கடத்தல் காட்சிகள். சொல்லிவைத்தார் போல் எல்லோரும் ஏமாருகிறார்கள். இதில் புதிதாக ஏதும் இல்லை. மற்றபடி இயக்குனர் உதய் கதை சொல்லல் யுக்தியில் இன்னும் உழைத்திருக்கலாம். சாதரணமாகவே காட்சிகள் நகர்வது சலிப்பு தட்ட செய்கிறது. குறிப்பிட்டு பாராட்ட வேண்டும் என்றால் அது ஒளிப்பதிவாளரைத்தான். எல்லா இடத்தையும் அழகாக பதிவு செய்திருக்கிறார். மொத்தமாக மெதுவான முதல் பாதியுடன் நகரும் படம், பின் பாதியில் சற்றே வேகம் எடுக்கிறது அதற்கு காமெடி கை கொடுக்கிறது.
''சங்கராபரணம் - பார்த்து சிரிக்கலாம்!''