தினமலர் விமர்சனம்
வெள்ளக்கார துரை வெற்றித்தயாரிப்பாளரும், பிரபல சினிமா பைனான்சியருமான ஜி.என்.அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸும், நடிகர் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸும் இணைந்து தயாரித்திருக்கும் படமே தங்க மகன்.
வேலையில்லா பட்டதாரி நாயகர் தனுஷ், இயக்குனர் ஆர்.வேல்ராஜ், இசையமைப்பாளர் அனிரூத் உள்ளிட்டோரின் வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதாலும், மாமனார் ரஜினி நடித்த தங்க மகன் பட டைட்டில் மருமகன் தனுஷின் பட தலைப்பாகி இருப்பதாலும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கிளப்பி விட்டு, வெளிவந்திருக்கும் "தங்க மகன் தங்கமா? தரமா.? பார்ப்போம்...
கதைப்படி, இன்கம்டாக்ஸ் அலுவலகத்தில் மகன் தனுஷூடன் வேலை பார்க்கும் மறதி பேர்வழியான தனுஷின் அப்பா கே.எஸ்.ரவிக்குமார், முக்கியமான ஆபிஸ் பைலை தொலைத்து விட்டு தன்னையும் தொலைத்து கொள்கிறார். அவர், தொலைந்ததற்கான காரணம் தேடும் மகன் தனுஷின் தோல்வியில் முடிந்த காதல் ப்ளாஷ்பேக்கையும், வெற்றிகரமான கல்யாண ப்ளாஷ்பேக்கையும்... கலந்து கட்டி, அதனுடன் அவரது அப்பா, தன்னை தொலைத்து கொண்டதற்கான சஸ்பென்ஸ் நிரம்பிய உண்மையான காரணத்தையும் கண்டுபிடிக்கும் தனுஷின் சாமர்த்தியத்தையும் சேர்த்து, கோர்த்து சொல்லியிருக்கும் படம் தான் தங்கமகன் மொத்த படமும் !
தனுஷ், தமிழ் எனும் பாத்திரத்தில பெற்றோருக்கு அடங்கிய பிள்ளையாக, குடும்பம், அழகிய மனைவி, இனிய காதலி... என வழக்கம் போலவே தமிழ்மகனாக, தங்கமகனாக வாழ்ந்திருக்கிறார்.
ஹேமா டிசோசா எனும் எமியின் பாத்திரபெயரை கேட்டுவிட்டு, என்ன உன் பெயர் கசமுசாவா.? என கலாய்பதில் தொடங்கி., காதலிக்கு நண்பர் சதீஷுடன் சேர்ந்து நான் பீர் வாங்கி தருகிறேன்... என அலைவது, சாப்பிட கேட்கும் புது சம்சாரம் சமந்தாவுக்கு முதலிரவு அறையில் ஆம்லெட் போட்டு கொடுத்து அசத்துவது, இந்த பூனையும் பால் குடிக்குமா? எனும் ரேஞ்சில் இருந்து கொண்டு, பழநி போய் ஒரு வாரம் கழித்து திரும்பிய பெற்றோரைப்பார்த்து அதற்குள் வந்துட்டீங்களா.? எனக் கேட்பது .,? அப்பாவின் சாவுக்கு காரணமானவர்களை அமைதியாக கண்டுபிடித்து தண்டனை வாங்கி தருவது, அம்மா ராதிகாவுடன் பாசத்தில் நெகிழ்வது... நண்பர் சதீஷிடம், உனக்கே தெரியுமுல்ல நீ காமெடியன் என்பது... அதனால அந்த வெள்ளக்காரி.... எனக்கு தான், என்று வெறுப்பேற்றுவது... என சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார் தமிழ் தனுஷ்... பேஷ் , பேஷ்!
தமிழ் தனுஷின் காதலியாக எமி ஜாக்ஸனும், மனசுக்கு பிடித்த மனைவியாக சமந்தாவும் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். எமி, தனுஷை பிரிவதற்கு இன்னும் சரியான ஸ்ட்ராங்கான காரணம் கண்டுபிடித்து இயக்குனர் வைத்து இருக்கலாம். அதே மாதிரி, சமந்தா ஒரேயடியாய் தனுஷ் மீது நெருக்கம், கிறக்கம் காட்டுவதற்கான ரீசனையும் எல்லா தரப்பு ரசிகனுக்கும் புரியும்படி, இன்னும் பக்காவாக இயக்குனர் சொல்லியிருக்கலாம்.
தனுஷின் பாசத்திற்குரிய தந்தையாக கே.எஸ்.ரவிக்குமாரும், நேசத்திற்குரிய தாயாராக ராதிகா சரத்குமாரும் பாத்திரமறிந்து, பக்கா பாசப் பெற்றோராக பளிச்சிட்டிருக்கின்றனர். வில்லன் அரவிந்தாக வரும் ஆதித், காமெடி சதீஷ், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோரும் நச்-டச் !
உயிரே உயிரே..., என்ன சொல்ல... உள்ளிட்ட அனிருத்தின் பாடல்களில் ரசிகனை உருக வைக்கும் இசை. ஏ.குமரனின் எளிமையான குடும்ப கதை, படத்திற்கேற்ற ஒளிப்பதிவு, எம்.வி.ராஜேஷ்குமாரின் பக்கா படத்தொகுப்பு, உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் ஆர்.வேல்ராஜின் எழுத்து, இயக்கத்திற்கு வலு சேர்த்து தங்கமகனை தரமானவனாக்க முயற்சித்திருக்கின்றன.
ஆர்.வேல்ராஜின் எழுத்து, இயக்கத்தில், பெரிதாக குறைகள் இல்லாத தங்க மகன் தகதகவென ஜொலிக்கவில்லை... என்றாலும், யாரும் பழிக்கும் படியுமில்லை!
ஆகவே., தனுஷின் "தங்க மகன் - தரமானவன்!