தினமலர் விமர்சனம்
புதுமுகங்கள் நடிக்க சிவாணி என்னும் அறிமுக பெண் இயக்குநர் இயக்கி வெளிவந்திருக்கும் திரைப்படம் சோன்பப்டி.
கதைப்படி., காதலிக்க பெண் கிடைக்காததால் திருமணம் நிச்சயிக்கப்பட்டபின் மனைவியாக வர இருப்பவரை காதலிக்கிறார் நாயகர் ஸ்ரீ. நாயகி பிரியாவும் அவரது காதலுக்கு ஒப்புக்கொண்டு காதலிக்கிறார். திருமணத்திற்குள் ஊடலும், கூடலுமாய் செல்லும் அவர்களது வாழ்க்கை கரை சேர்ந்ததா? கவிழ்ந்ததா...? எனும் கதைக்குள் ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படும் விஷயத்தில் ஏகப்பட்ட தகிடுதத்தங்கள் நடப்பதையும் கலந்துகட்டி வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சோன்பப்டியை தர முயற்சித்திருக்கும் பெண் இயக்குநர் சிவாணி அதில் கொஞ்சமே கொஞ்சம் வெற்றியையும் நிறைய தோல்வியையும் சந்தித்து ரசிகர்களை சந்தியில் விடுகிறார். பாவம்!.
காதலிக்க பெண் கிடைக்காததால் நிச்சயிக்கப்படும் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளும் நாயகன் ஸ்ரீ, கொஞ்சநாளில் கணவர் ஆகப்போகிறவரை காதலிக்கும் பிரியா, சிறுவனை நேசிக்கும் நிரஞ்சனா, நிரஞ்சனாவை கடத்த சிறுவனை துரத்தும் கும்பல், நடிகர் ஆர்யாவின் ரசிகையான மனைவி, நடிகை த்ரிஷாவின் ரசிகரான கணவன், வெளிநாட்டு மோகம் கொண்டு சுற்றும் இளைஞன், எல்லோரையும் சிக்கலில் மாட்டிவிட்டு சிரிக்கும் சிறுவன் என ஏகப்பட்ட கேரக்டர்கள். எல்லோரும் ஏகத்துக்கும் நடித்து கெக்கேபிக்கே சிரிப்பும் காட்டுவது ரொம்பவும் அபத்தமாக இருக்கிறது. கடத்தி வைத்துக்கொண்டு கொன்று விடுவதாக மிரட்டும்போதுகூட காமெடி என கடிப்பது....கடுப்பேற்றுகிறது!
தாணு பாலாஜியின் ஒளிப்பதிவு ஆறுதல்! தன்ராஜ் மாணிக்கத்தின் இசை எடுபடவில்லை. ஒலிம்பிக் ஊழல்கள்...வீரர்கள் தேர்வில் உள்ள பாரபட்சம் எல்லாம் புதசாக இருந்தாலும் அதை அழுத்தமாக காட்சிப்படுத்தாமல் அபத்தமாக அரைவேக்காட்டுத்தனமாக காட்சிப்படுத்தி இருப்பதால் ரசிகனை படுத்தி எடுத்துவிடுகிறார்கள்!
மொத்தத்தில் சோன்பப்டி இனிக்கவும் இல்லை, உறைக்கவும் இல்லை....கசக்கிறது!!