தினமலர் விமர்சனம்
பாடலாசிரியர் பா.விஜய் எழுதி இயக்கி நடித்து தயாரித்துமிருக்கும் படம்!
சில வருடங்களுக்கு முன் தமிழகத்தின் ஒருபகுதியில் சரியாக பராமரிக்கப்படாத பள்ளி பேருந்தின் துவராத்தில் இருந்து விழுந்து இறந்த பள்ளி குழந்தையின் கண்ணீர் சொட்ட வைக்கும் துயரக்கதையில் நிறையவே கற்பனை கலந்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ஸ்ட்ராபெரி படம் மொத்தமும்!
நெஞ்சை பதறவைக்கும் அந்த உண்மை சம்பவத்துடன் ஆவி, அமானுஷ்யம்...இத்யாதி , இத்யாதி....என ஏகத்திற்கும் பில்-டப்புகளையும், அதையும் தாண்டி ப்ளோரசன்ட் கலர் கிராபிக்ஸ் பேய், பிசாசுகளையும் சேர்த்து ரசிகனை ஒருவழி செய்து விடுகிறார் பா.விஜய் என்பதுதான் ஸ்ட்ராபெரி படத்தின் பலம், பலவீனம் இரண்டும்!
கால் டாக்ஸி டிரைவர் சரவணனாக பாடலாசிரியர் பா.விஜய் எதற்காக? ஆவி அமுதா டைப் அவ்னி மோடியாலும், அவரது அப்பா ஜோ மல்லூரியாலும் அழைக்கப்படுகிறோம்...? என்பது தெரியாமலேயே பல்லைக்காட்டிக்கொண்டு போய் அவர்களது பங்களா முன் போய் நின்று சொந்தமாக நான்கைந்து கார்கள் வைத்திருக்கும் அவர்களுக்கு கால் டாக்ஸி ஓட்டுவதும், அவ்னி மோடியை ஒருதலையாய் காதலித்து பின் உதைபடுவதும் பா.விஜய்யின் நிலைகுத்திய பார்வை...நடிப்பையும் தாண்டிய சுவாரஸ்யம்!
சமுத்திரகனி - தேவயானி தம்பதியரின் செல்ல மகள் யூவினா பார்த்தவியை, போரூர் சிக்னலில் பள்ளி பேருந்தில் பார்த்தமாத்திரத்தில் பாசம் கொள்வது, பட்டாம்பூச்சி பற்றி அந்த சில வினாடிகளில் யூவினா, பா.விஜய்க்கு பெரிய லெக்சர் கொடுப்பதும், அடுத்த சில நிமிடங்களில் ஓட்டுநரின் உ.பா. ஓவர் டென்ஷனால் அடிக்கப்படும் சடன் பிரேக்கில் அந்த மூன்றாம் வகுப்பு பிஞ்சுமகள் பேருந்து தளத்தில் சரியாக மூடப்படாது இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரை விடுவதும், அதை பா.விஜய் குற்றுயிரும் குலையுயிருமாக தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடுவது உள்ளிட்டட காட்சிகள் நெஞ்சை பதறவைக்கும் விதமாக படமாக்கப்ட்டிருப்பது ஸ்ட்ராபெரி படத்திற்கு வலு சேர்க்கிறது. ஆனாலும், இந்த காட்சிகளில் உயிரை கொடுத்து நடித்திருக்க வேண்டிய பா.விஜய்., உர் என்று நிலைகுத்திய பார்வையும் முகமுமாக இருப்பது சலிப்பு!
பேபி யூவினா பார்த்தவியை பார்த்துக்கொண்டே இருக்கலாம் தூக்கி கொஞ்சி மகிழலாம் எனும் அளவிற்கு கொள்ளை அழகு! நடிப்பிலும் குழந்தை நட்சத்திரம் என்பதையும் தாண்டி ரொம்பவே ஸ்கோர் செய்திருக்கிறார் இந்த ஸ்வீட்டி! ஹேட்ஸ் ஆஃப் பேபி!!
அவ்னி மோடி அறிமுக சீனில் காட்டப்படும் அந்தரத்து யோகா காட்சிகளில் மட்டும் வாவ் சொல்ல வைக்கிறார்.மற்றபடி அவரது க்ளைமாக்ஸ் வில்லித்தனம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் எனும்போது சலிப்பு தட்டுகிறது. ஆனாலும், ஆவிகளை, ஆத்மாக்களை படம்பிடிக்கிறேன்...படம் வரைகிறேன் பேர்வழி...என அர்த்தராத்திரியில் நாயகர் விஜய்யையும் கூட்டிக்கொண்டு அலையும் இடங்கள் பா.விஜய்க்கு மட்டுமல்ல நமக்கும் பீதியை கிளப்புகிறது!
சமுத்திரகனி, தேவயானி, தம்பிராமைய்யா, ரோபோ ஷங்கர், ஜோ மல்லூரி, இமான் அண்ணாச்சி, மயில்சாமி, வெற்றி உள்ளிட்டவர்களில் சமுத்திரகனி, தேவயானி வழக்கம்போலவே கொஞ்சம் ஓவர் ஆக்டிங். தம்பிராமைய்யா, ரோபோ சங்கர் இருவரும் ஆறுதல்! அதிலும் "திருவள்ளுவரே தல அஜித்தை பற்றி ஒரு குறள் எழுதியிருக்கிறார்..." என ரோபோ அடிக்கும் கூத்து ஏக ரகளை!
தம்பிராமைய்யாவும் தன் பங்கிற்கு, "ரவுடிங்க நடத்த வேண்டிய ஒயின்ஷாப்பை அரசாங்கம் நடத்துது"..."அரசாங்கம் நடத்தவேண்டிய பள்ளிக்கூடத்தை ரவுடிங்க, தாதாங்க நடத்துறாங்க..." என தத்துவார்த்த காமெடியில் தன்னிகரற்று ஜொலிக்கிறார்.
தாஜ்நூரின் பயமுறுத்தும் இசை, மாராவர்மனின் பளிரிடும் கிராபிக்ஸ் காட்சிகள் நிரம்பிய ஒளிப்பதிவு உள்ளிட்ட எல்லாம் பா.விஜய்யின் எழுத்து, இயக்கத்தில் சொல்ல வந்த விஷயத்தை நேரடியாக சொல்லாமல், ஆவி, பேய் என்று பயம் காட்டி இக்கதையை படமாக்க பண்ணியிருப்பது தலைசுற்றவைக்கிறது.
ஸ்ட்ராபெரி - பிளேவர் மட்டும் குறிக்கிறது! பெரிதாக எதுவும் இல்லை!!