Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

காக்கா முட்டை

காக்கா முட்டை,Kakka Muttai
சிறுவர்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் காக்கா முட்டை.
22 ஜூன், 2015 - 15:11 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » காக்கா முட்டை

தினமலர் விமர்சனம்



இரண்டு தேசிய விருதுகள் பெற்ற திரைப்படம், நடிகர் தனுஷின் தயாரிப்பில், நடிகர் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கம் படம், ஐஸ்வர்யா ராஜேஷ், 2 வளர்ந்த குழந்தைகளுக்கு தாயாக, குப்பத்து பெண்ணாக கண்ணீரும் கம்பளையுமாக வாழ்ந்திருக்கும் படம்... என அடுக்கி கொண்டே போகலாம் காக்கா முட்டை பற்றி..! குப்பத்து சிறுவர்கள் இருவரது பீட்சா திண்ணும் ஆசை பிரச்னை ஆவதும், அது அரசியல் ஆக்கப்படுவதும் தான் காக்கா முட்டை படத்தின் கரு, கதை, களம், எல்லாம்!


சென்னை, கூவம் ஆற்றங்கரையோரம் வாழும் ஐஸ்வர்யாவுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். ஏதோ சிறிய குற்றம் ஒன்றிற்காக சிறை சென்ற கணவனை ஜாமினில் எடுக்க பணத்திற்கு படாதபாடுபடும் ஐஸ்வர்யா, உடன் வயதான மாமியாரையும் வைத்து கொண்டு பாத்திர கம்பெனியில் வேலை பார்த்தபடி, வரும் வருமானத்தில் வயிற்றை கழுவவே கஷ்டப்படுகிறார். அதனால் பிள்ளைகளை படிக்க வைக்க வழியில்லாமல் அவர்களை ரயில்வே தண்டவாளத்தில் கூட்ஸ் வண்டிகளில் இருந்து விழும் கரியை பொறுக்க விடுகிறார்.


கரி விற்று வரும் காசில் குடும்பத்தை நடத்தியபடி கணவனை மீட்க போராடும் ஐஸ்வர்யாவை புரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளும் வயதிலும் இல்லாத சிறுவர்கள் இருவரும், ஏரியாவில் நடிகர் சிம்பு வந்து தொடங்கி வைக்கும் பீட்சா கடையில் பீட்சா திண்பதற்கு ஆசைப்படுகின்றனர். அந்த சிறுவர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் பீட்சா ஆசை பேராசையாக தெரிகிறது. அது நிராசை ஆனதா.?, தடை பல கடந்து நிறைவேறும் ஆசை ஆனதா.? என்பது தான் காக்கா முட்டை படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!


இந்த கதையினுள் அழுக்கு உடையும், அசால்ட்டான முகமும் உடைய ஏழை எளிய சிறுவர்கள், பீட்சா கடைகளுக்குள் நுழையக்கூட முடியாது என்கிற யதார்த்தத்தையும், அதிலும் இறுதியில் ஜெயிப்பது முதலாளிகளும், அவர்களது பண பலமும், படை பலமும் தான் எனும் உண்மையையும் சொல்லி, முதலாளிகளின் பணம் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தான் போய் சேரும், பாதிக்கப்பட்ட ஏழை எளியவர்களுக்கு ஒரு போதும் வந்து சேராது... எனும் நிஜத்தையும் நெஞ்சுறுதியுடன் சொல்லியிருக்கும் காக்கா முட்டையின் இயக்குநர் நிச்சயம் கவனிக்கப்பட்டு, பாராட்டுகளும், இன்னும் பல பரிசுகளும் பெற வேண்டியவர்!


கூவம் சாக்கடை அல்ல... எங்கள் வாழ்க்கையுடன் கலந்தோடும் நதி... என குப்பத்து மக்கள் வாழ்ந்து வரும் வாழ்க்கையையும், அந்த வாழ்க்கைக்குள் கிடைத்த வரை லாபம்... என கொள்ளை அடிக்கும் சிலரின் போலி தனத்தையும் அழகாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் எம்.மணிகண்டனுக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லியே ஆக வேண்டும்!


சிறுவர்கள் ரமேஷ், விக்னேஷ் இருவரும் சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டையாக நடிக்கவில்லை, குப்பத்து சிறுவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்! அதிலும் இந்த சகோதரர்களுக்கு சின்ன, பெரிய காக்கா முட்டை பெயர் அமையும் காரணம் பிரமாதமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏழ்மையால், திருட்டுத்தனமாக, தந்திரமாக காக்கா முட்டையை உடைத்து குடித்துவிட்டு, கரி மூட்டையை தூக்கி கொண்டு அவர்கள் செய்யும் சேட்டைகள் சிரிப்பு சீனி பட்டாசுகள்.


ஐஸ்வர்யா ராஜேஷ், கதாநாயகியாக இல்லாமல் கதையின் நாயகியாக வாழ்ந்திருக்கிறார். அம்மணிக்குள் இத்தனை பெரிய நடிகை இத்தனை நாள் எப்படி ஔிந்து கொண்டிருந்தார்.? என்பது ஆச்சர்யமான கேள்வி்!


பீட்சா கடை முதலாளி பாபி ஆண்டனி, மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி, லோக்கல் ஜேப்படி பேர்வழிகளான ரமேஷ் திலக், யோகி பாபு, ரயில்வே கலாசி பழரசம் - ஜோ மல்லூரி உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பக்காவாக பளிச்சிட்டிருக்கின்றனர்.


பீட்சா கடை திறக்க நடிகராகவே கெஸ்ட் ரோலில் வரும் எஸ்டிஆர் - சிம்புவும் பெஸ்ட் ரோல் செய்திருக்கிறார்! (தனுஷ் தயாரித்த படத்தில் சிம்பு எப்படி.?)


ஜி.வி.பிரகாஷ் குமரின் இசை பிரகாசம், இயக்குநர் வெற்றிமாறனின் உதவியாளர் எம்.மணிகண்டனின் ஔிப்பதிவு மற்றும் இயக்கத்தில், பீட்சாவுக்காக அலையும் சிறுவர்கள் இருவரும், வசதியான வீட்டு பிள்ளை தரும் எச்சில் பீட்சாவை திண்ணாது யெஸ் ஆகும் எழையின் சுயகவுரவ காட்சி, அப்பாவே வேணாம், பீட்சா தான் வேண்டும் என அம்மாவிடம் அடம்பிடிக்கும் சிறுவர்களின் பிடிவாதம், தெருநாய் குட்டியை ரூ.25 ஆயிரம் விலை பேசும் அறியாமை, க்ளைமாக்ஸில் பீட்சா கடை முதலாளி சிறுவர்கள் இருவரையும் கைகூப்பி வணங்கி கடைக்குள் அழைத்து சென்று பீட்சா சாப்பிட வைத்து, பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் லாவகம்.... உள்ளிட்ட ஒவ்வொரு காட்சிகளிலும் காக்கா முட்டை - கலர்புல் முட்டையாக ஜொலிக்கிறது.


மொத்தத்தில், கலைப்படம் என்றாலும், கமர்ஷியல் படமாகவும் ஜொலிக்கும் காக்கா முட்டை - நிச்சயம் வசூலிலும் பெரிய மூட்டை கட்டும்!




குமுதம் விமர்சனம்




காக்கா முட்டை


உலக நாடுகளின் திரைப்படங்களை வாய்கிழிய வியந்து பேசி வந்த தமிழ் ரசிகர்கள், விமர்சகர்கள் இனி, 'காக்கா முட்டை'யையும் பேசுவார்கள். அந்தளவிற்கு தமிழ் சினிமாவின் அடையாளமாகிவிட்டது காக்கா முட்டை.

இரண்டு தேசிய விருதுகள், தனுஷ் - வெற்றிமாறன் தயாரிப்பு, சிம்பு கெஸ்ட்ரோல் என்று கூடுதல் கவனம் படத்தின்மேல் விழுந்துள்ளது.

சென்னைச் சேரியில் வாழும் சகோதரர்கள் சின்ன காக்கா முட்டை ரமேஷ், பெரிய காக்கா முட்டை விக்னேஷ். இவர்களின் அப்பா சிறையில். வறுமையில் வாடும் அம்மா ஐஸ்வர்யா, பாட்டியுடன் வாழும் இவர்களுக்கு சிம்புவை வைத்து புதிதாகத் திறந்த பீட்சா கடையைப் பார்த்து, பீட்சா சாப்பிட ஆசை அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சியும் அது அரசியல் ஆக்கப்படுவதும்தான் கதை. கதை நிகழும் இடமும் அதன் பின்புலமும் சேரிதான் என்றாலும், விளிம்புநிலை மனிதர்களின் இயல்பை மீறாத படப்பிடிப்பால் வியக்க வைக்கிறார் இயக்குநர்.

பெரிய நடிகர்கள், பிரமாண்ட காட்சிகள், ஆக்ஷன் அதிரடி என்று எதுவுமில்லாமல், எளிமையாக வந்து, எல்லாமே இதில் இருக்கிறது என்று பார்வையாளர்களை உணர வைத்திருக்கிறார் இயக்குநர்.

சின்ன காக்கா முட்டையின் சேட்டைகளும், பெரிய காக்கா முட்டையின் கனவுகளும் அந்த இயல்பான நடிப்பும் குடிசைவாழ் சிறுவர்களாகவே அவர்கள் வாழ்ந்து காட்டுவது ஏ க்ளாஸ்.

படுக்கையில் ஒண்ணுக்கு இருக்கும் குழந்தைத்தனம், பீட்சா வாங்க தெரு நாய்க்குட்டியை 25 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசும் அறியாமை, 'அப்பா வேணாம்; பீட்சாதான் வேணும்' எனும் பிடிவாதம், காக்கா முட்டையை திருட்டுத்தனமாக சாப்பிடும் ஏழ்மை வசதியான பையன் சாப்பிட்டுத்தரும் பீட்சாவை வாங்க மறுக்கும் சுய கௌரவம், 300 ரூபாய் பீட்சாவை வாங்க ரயில் தடத்தில் சிந்தியிருக்கும் நிலக்கரிகளைச் சேமித்து எடைக்க போட்டு காசு பார்க்கும் உழைப்பு. பீட்சா கடை மேனேஜர் பீட்சா தராமல் அடித்து விரட்டும்போது முகத்தில் காட்டும் ஏமாற்றம்! இப்படி காட்சிக்கு காட்சி தேர்ந்தெடுத்த நடிப்பு இருவரிடமும்.

இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாக சேரிப்பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா. பீட்சாவுக்காக ஏங்கும் சிறுவர்களுக்காக, வீட்டிலேயே தோசையை பீட்சா மாதிரி சுட்டுக்கொடுக்கும் அந்த பாட்டி நடிப்பு இயல்பு.

'சிம்பு பீட்சா தின்னானா, ஏன் ரசம் சாதம் சாப்பிட மாட்டானா?' என்று கமெண்ட் அடிக்கும் கலாசி தொழிலாளி ஜோமல்லூரி, இன்னும் பாபு ஆண்டனி, கிருஷ்ணமூர்த்தி என்று அத்தனை பேரும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

ஜி.வி. பிரகாஷின் இசையும், கிஷோரின் எடிட்டிங்கும் இண்டு இடுக்கு விடாமல் நுழைந்து வரும் இயக்குநர் மணிகண்டனின் ஒளிப்பதிவும் சேரியின் இன்னொரு உலகத்தைக் காட்டிவிடுகின்றன.

அடிபட்டவர்கள் காக்கா முட்டைச் சிறுவர்கள். ஆனால் அவர்களைப் பகடையாக்கி, அரசியல்வாதிகளும் ஏரியாவாசிகளும் மீடியாக்களும் தன்னலத்தோடு நடத்தும் விளையாட்டை நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி பகிரங்கப்படுத்தியிருப்பது தமிழ் சினிமாவுக்குப் புதுசு.

கிளைமாக்ஸில் பீட்சா கனவு நிறைவேறும் தருவாயில் 'ஐய... பீட்சா நல்லாவே இல்லை. அதுக்கு ஆயா சுட்ட தோசை நல்லாயிருந்திச்சில்ல' என்ற உண்மையை உடைக்கும் இடத்தில் மேல்தட்டு வர்க்கத்தின் பகட்டும் உலகமயமாக்கலின் வெற்று ஆராவாரமும் வெளிச்சத்திற்கு வருகிறது. இயக்குநர் மணிகண்டன் வெற்றி பெறும் இடங்கள் ஏராளம்.


காக்கா முட்டை - வைர முட்டை!




குமுதம் ரேட்டிங் - சூப்பர்



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

காக்கா முட்டை தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in