நயவஞ்சகர்கள் சிலரின் தூண்டுதலால் நல்ல நட்பிற்குள் சந்தேகம் புகுந்தால் ஏற்படும் விபரீத விளைவுகளை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கும் படம் தான் காலகட்டம்.
கதைப்படி சொந்தமாக மீன்பிடி தொழில் செய்யும் மீனவர் பவனும், சினிமா நடன கலைஞரான கோவிந்தும் இணை பிரியா உயிர் நண்பர்கள். பவனின் திருமணத்திற்கு பிறகும் இவர்களது நல் நட்பு தொடர்கிறது. பவனின் மனைவி மீது ஆசைப்படும் அந்த ஏரியா மளிகைக்கடைக்காரர் நான் கடவுள் ராஜேந்திரன், தன் ஆசை நிராசை ஆன வருத்தத்தில், கோவிந்துக்கும், பவன் மனைவிக்கும் இடையில் கள்ளத்தொடர்பு என கிளப்பி விடுகிறார்.
சந்தர்ப்பமும், சூழ்நிலைகளும் நான் கடவுள் ராஜேந்திரன் சொல்லும் பொய்யை மெய்யாக உலகிற்கு காட்ட, இதில் வெறுப்புறும் பவன் எடுக்கும் விபரீத அவசர முடிவு, அவரது நண்பனையும், மனைவி மக்களையும் எந்தளவிற்கு பாதிக்கிறது.? என்பதையும் அதனால் பவன் அனுபவிக்கும் பாதிப்புகளையும் சொல்லும் படம் தான் காலகட்டம். இக்கதையுடன் இறுதியில் நயவஞ்சகர் நான் கடவுள் ராஜேந்திரனுக்கும், காலகட்டம் தகுந்த முடிவை தேடி தருவது சபாஷ் சொல்ல வைக்கிறது!
தாமஸாக பவன், சிவாவாக கேவிந்த், பாலாவாக நான் கடவுள் ராஜேந்திரன், சத்யஸ்ரீ, உமா, கானா பாலா, கிங்காங், ரஞ்சன், ஆனந்தி, மாலினி, கொட்டாச்சி உள்ளிட்டவர்களில் பவன், கோவிந்த், ராஜேந்திரன் உமா உள்ளிட்டவர்கள் கவனம் ஈர்க்கின்றனர். கானா பாலாவின் பாடல் சோபிக்கவில்லை! எழில் அரசனின் ஔிப்பதிவு, மகேந்திரனின் இசை, சங்கரின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் புதியவர் கே.பாஸ்கரின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.
சமீபத்தில் திருட்டு - புரட்டு கதைகளுக்கு மத்தியில், நல்ல நட்பிற்குள் ஏற்படும் சந்தேகத்தையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் விளக்கி இருக்கும் காலகட்டம் - சற்றே காட்டம் என்றாலும் கூடும் ரசிகர்கள் கூட்டம்!!