3 படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில், வெளிவந்திருக்கும் திரைப்படம் வை ராஜா வை. கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்சி, டேனியல் பாலாஜி ஆகியோருடன் ஐஸ்வர்யாவின் ஆத்துக்காரரும், அம்மணியின் 3 பட நாயகருமான தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்து வௌிவந்திருக்கும் படம் தான் வை ராஜா வை. சரி இனி படம் பற்றி பார்ப்போம்...
கதைப்படி, பிறக்கும் போதே ஒரு அபரிதமான நினைவு ஆற்றல் உடன் பிறக்கும் கார்த்திக் எனும் கௌதம் கார்த்திக்கிற்கு, பின்னால் நடப்பதை முன்கூட்டியே அறியும் திறன் இருக்கிறது. தன்னுடன் வேலை பார்க்கும் பாண்டா எனும் நபர் சூதாட்டத்தில், ராந்த எனும் டேனியல் பாலாஜியிடம் பணத்தை இழக்க, கௌதம் கார்த்தியின் சக்தியை பயன்படுத்தி டேனியல் பாலாஜியிடம், கௌதம் கார்த்திக்கை விளையாட அழைத்து செல்கிறார் பாண்டா. அங்கு டேனியல் பாலாஜியை வெற்றி கொள்கிறார் கெளதம் கார்த்திக். கௌதமிடம் இப்படியொரு சக்தி இருப்பதை அறிந்து கொண்ட டேனியல் பாலாஜியும், கௌதமை அழைத்து கொண்டு கோவாவில் ரூலெட் எனும் விளையாட்டிற்கு அழைத்து செல்கிறார். அங்கு கோடிக்கணக்கான ரூபாயை கௌதமும், டேனியலும் சம்பாதிக்கிறார்கள். ஒருக்கட்டத்தில் அந்த விளையாட்டு கும்பலிடம் டேனியலை மாட்டிவிட்டு கௌதம் தப்பி சென்னை திரும்புகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கதை.
கடல், என்னமோ ஏதோ படங்களை காட்டிலும் வை ராஜா வை படத்தில் அருமையாக நடித்திருக்கிறார் கெளதம் கார்த்திக். கௌதம் கார்த்திக்கின் துறுதுறு பார்வையும், விறுவிறு நடிப்பும், காமெடி காட்சிகளும் அருமையாக இருக்கிறது.
கொக்கி குமாராக கெஸ்ட் ரோலில் வந்து போகும் தனுஷ் ஐந்து நிமிடங்களே வந்தாலும் மனதில் நிற்கிறார்.
ப்ரியா ஆனந்த் - டாப்சி என இரண்டு ஹீரோயின்கள். இருவரது நடிப்பும் ஓ.கே., என்றாலும் இருவரில், ப்ரியா ஆனந்த்தை தனது உயரத்தாலும், அதற்கே உரிய உயரிய கிளாமரிலும் தூக்கி சாப்பிட்டு கெஸ்ட் ரோலில் வந்தாலும் டாப்பாக தெரிகிறார் டாப்சி.
இயக்குநர் வஸந்த், கௌதம் கார்த்தியின் அப்பாவாக வந்து கார்த்திக்கை ஞாபகப்படுத்த முயன்றிருக்கிறார். அவரைப்போலவே டேனியல் பாலாஜி, காமெடி சதீஷ் போன்றோரும் தங்கள் கேரக்டரை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும், எஸ்.ஜே.சூர்யா கெஸ்ட் ரோலில் வந்து ஆடிவிட்டு போகும் வை ராஜா வை பாடல் மட்டும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்துள்ளது. அதேப்போல் பின்னணி இசையும் கதைக்கேற்றபடி மிரட்டலாக இருப்பது பிரமாதம்.
வேல்ராஜின் ஔிப்பதிவு ஓவிய பதிவாக மிளிர்கிறது. குறிப்பாக கப்பல் காட்சிகளில் அவரது கேமரா சூதாட்டத்துடன் சேர்ந்து விளையாடி இருக்கிறது.
முதல்படத்தில் காதலுடன் கொஞ்சம் சைக்கோ தனத்தையும் கலந்து கனமான கதையை சொன்ன இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ், இந்தப்படத்தில் சூதாட்டத்தை மையமாக வைத்து அதை நேர்த்தியாக கொண்டு சென்றுள்ளார். ஆனாலும் கதையின் அடிநாதமான ஒன்-லைன் நம்ப முடியாத பொய் ராஜா பொய்யாக இருப்பதால் வை ராஜா வை ரசிகர்களை பெரிதாக கவருமா தெரியவில்லை.?!
மொத்தத்தில், வை ராஜா வை - செய் ஐஸ்வர்யா செய் - இன்னும் பெரிதாக செய்! என இயக்குநரை பார்த்து சொல்ல வைத்திருக்கிறது என்பதே நிதர்சனம்!!
கல்கி சினி விமர்சனம்
பென் மெர்ஸ்ரிச் என்ற அமெரிக்க நாவலாசிரியர் எழுதிய 'பிரிங் டவுன் தி ஹவுஸ்' என்னும் நாவலால் உந்தப்பட்டு, 2008 ஆம் ஆண்டு 21 என்ற ஹாலிவுட் படம் ரிலீசாகியது. அதை இயக்கியவர் ராபர்ட் லூகெட் டிக். 'சரி! அதையெல்லாம் இப்போது எதற்காகச் சொல்கிறாய்?' என்றுதானே கேட்க நினைக்கிறீர்கள். கொஞ்சம் பொறுங்கள். முதலில் '21' படத்தின் கதை என்ன என்று லேசாகப் பார்க்கலாமா?
கதாநாயகனுக்கு ஒரு விசித்திரத் திறமை இருக்கிறது. கார்ட் கவுன்டிங் என்ற உத்தியைப் பயன்படுத்தி சூதாட்டத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதை அறியும் ஆற்றல்தான் அது. காஸினோ எனப்படும் சூதாட்ட விடுதியில் சமிக்ஞைகள் மூலம் அவனும் நண்பர்களும் செய்திகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். அது அவர்களைச் சிக்கலில் மாட்டிவிடுகிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவார்கள்.
இப்போது 'வை ராஜா வை' படத்தின் கதையைப் பார்ப்போம். கதாநாயகனுக்கு ஒரு விசித்திரத் திறமை இருக்கிறது. வருங்காலத்தை முன்கூட்டியே அறியும் ஆற்றல் அவனுக்கு இருக்கிறது. அதைப் பயன்படுத்தி காஸினோ எனப்படும் சூதாட்ட விடுதியில் சமிக்ஞைகள் மூலம் அவனும் நண்பர்களும் செய்திகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். அது அவர்களைச் சிக்கலில் மாட்டிவிடுகிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவார்கள்.
கவனக் குறைவால் இரண்டு முறை ஒரே விஷயம் அச்சாகிவிட்டது என்று நினைக்காதீர்கள். 'இதன்' கதையும் 'அதன்' கதையும் ஒன்றேதான்! ஹிஹி!
ஓக்கே! தமிழ் '21' பற்றிப் பார்ப்போமா?
சீட்டாட்டத்தில் தொடர்ந்து டபுள்ஸ் வந்தால் ஏற்படும் சுபாவத்தைக் கதாநாயகன் கெளதம் கார்த்திக் மாற்றிக் கொண்டால் நல்லது.
இழுவையான கிளைமாக்ஸில் 'ரம்மி அண்ட் ஷூட்' போல ஏதாவது நிகழும் என்று எதிர்பார்த்தால் 'ஃபுல்' கொடுக்கவைத்து, ஆட்டத்தை முடித்துவிடுகிறார்கள். அரஸ்ட் ரம்மி போல விவேக்கின் பெண் வேடத்தின் முழுப் பயனும் கிடைக்க விடாமல் திரைக்கதை தடுத்துவிடுகிறது.
பெண்களும் குடிப்பார்கள் என்ற முன்னேற்றக் கருத்தைச் சொல்வதனால் சில பழம் பெருசுகள் முகத்தைச் சுளிப்பார்கள் என்று தெரிந்து சில 'பழங்'காட்சிகளையும் வைத்திருக்கிறார்கள். 'நான் சொன்னதைச் செய்யாவிட்டால் உன் குடும்ப உறுப்பினர்களைக் கொல்வேன்' என்பது, கட்டிப்போட்டு வைத்தவரைப் பெண் ஒருத்தி காப்பாற்றுவது எனச் சில காட்சிகளைப் பழமைக்க உதாரணமாகச் சொல்லலாம்.
தொடர்ச்சியாக ரம்மி ஆட்டத்தில் ஜோக்கர்கள் வருவதைப்போல சில ஒன் லைனர்கள் பிரமாதமாக இருக்கின்றன. உதாரணத்துக்கு, 'அந்த டாக்டர் சொன்ன எதுவுமே எங்க அப்பாவுக்குப் புரியலை. அதனாலேயே அவர் மேல அப்பாவுக்கு ரொம்ப மதிப்பு' என்பதைச் சொல்லலாம். வில்லன், 'இந்த இடத்துக்கு ஒரு சிட்டுக் குருவி கூட வர முடியாது. சுத்திலும் செல்ஃபோன் டவர் இருக்கு' என்பது இனனொரு சான்று.
படத்தோடு ஒட்டாவிட்டாலும் எஸ்.ஜே.சூர்யாவின் குத்தாட்டமும், 'வை ராஜா வை' பாடலும் ஒரிஜினல் ரம்மி சேர்ந்த மகிழ்வைத் தருகின்றன. ஒலிப்பதிவும் ஒளிப்பதிவும், ரம்மியும், ஜோக்கரும் ஒருங்கே வந்த நிறைவை அளிக்கின்றன. படத்தின் முதல் பாதி, வேண்டிய சீட்டுகள் தொடர்ந்து வந்ததைப் போன்ற திருப்தியைக் கொடுக்கிறது! காஸினோ காட்சிகள் தமிழுக்குப் புதுமை. தெனாலி ரம்மி வந்ததைப் போல தனுஷின் நுழைவால் தியேட்டரில் உற்சாகம் கொப்பளிக்கிறது. சோலோவாக ஜெயித்துவிடுகிறார்.