Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

இரும்புக்குதிரை

இரும்புக்குதிரை,Irumbu kuthirai
16 செப், 2014 - 19:08 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » இரும்புக்குதிரை

தினமலர் விமர்சனம்


முரளியின் வாரிசு அதர்வா நடித்து வெளிவந்திருக்கும் மற்றுமொரு படம்! மாற்றத்திற்கான படமோ., மாற்று சினிமாவுக்கான படமோ அல்ல... இந்த ‛இரும்புக்குதிரை என்பது தான் வேதனை!

சிலருக்கு குதிரை, குதிரை ரேஸ் பிடிக்கும்... பலருக்கு குதிரை மாதிரி பெண்களை பிடிக்கும்... ஒரு சிலருக்கு ‛இரும்புக்குதிரை மாதிரி பறக்கும் பைக்குகளை பிடிக்கும்... அப்படி நாயகி ப்ரியா ஆனந்துக்கு விதவிமான பைக்குகளையும், அதன் சப்தங்களையும் பிடிக்கிறது. அவருக்காகவே ப்ரியாவின் காதலர் அதர்வா, தன் வாழ்க்கையில் பெரும் இழப்பு ஏற்பட காரணமான ‛டுக்காட்டி ரேஸ் பைக்கையே வாங்குகிறார்! அப்புறம்? அப்புறமென்ன.? அந்த பைக்கின் பின்னால் காதலி ப்ரியாவை வைத்துக் கொண்டு சாலைகளில் பறக்கிறார். எஞ்சிய நேரங்களில் ரேஸ்., சேஸ்... என்று புகுந்து புறப்படுகிறார். இதில் எதிர்பாராமல் வில்லனை சந்திக்கும் அதர்வா, அவரிடம், காதலி ப்ரியாவையும், தன் பிரியத்திற்குரிய பைக்கையும் இழக்கும் சூழல். இரண்டையும் வில்லனுடனான சவாலில் ஜெயித்து எப்படி மீட்கிறார்! என்பதுதான் ‛இரும்புக்குதிரை படத்தின் தலையை சுற்றி மூக்கை தொடும் முழுநீளக்கதை!

அதர்வா, சிக்ஸ்பேக், டுக்காட்டி பைக் என ஹீரோவாக நிற்கிறார். ஆனால் கேரக்டராக ஜொலிக்கவில்லை. தன் படத்தில் ப்ரியா ஆனந்த், ராய் லட்சுமி(லட்சுமி ராய்) மாதிரி சதைகளை நம்பாமல் இனியாவது அதர்வா, நல்ல கதைகளை கேட்டு நடிக்க வேண்டுமென்பது நம் அவா மட்டுமல்ல... ரசிகர்களின் விருப்பமும்கூட! செய்வாரா அதர்வா? பொறுத்திருந்து பார்ப்போம்!!

ப்ரியா ஆனந்த், வழக்கம்போலவே வட இந்திய நடிகைகளையும் தாண்டி கவர்ச்சி காட்டி இருக்கிறார். ஆனால், படத்தில் பைக் விற்கும் பந்தா பெண்ணாக வரும் லட்சுமிராயின் திரட்சிக்கும், கிளர்ச்சிக்கும் முன் ப்ரியாவின் பிசாத்து கவிச்சி சாரி, கவர்ச்சி பிசுபிசுத்து போகிறது பாவம்! ப்ரியாவிற்கு லட்சுமி பெட்டர்!

ஏழாம் அறிவு ஜானியின் வில்லத்தனம் தான் படத்தின் பெரும்பலம்! அதுவும் எப்படியும் இறுதியில் ஹீரோ தான் ஜெயிப்பார்... என்பதை உணரும் போது பலவீனமாகிவிடுகிறது. ஆனாலும், ரியல் லேடி ரேஸ் பைக்கர் அலிஷா அப்துல்லா, வில்லன் ஜானியின் ஜோடியாக பைக் ஓட்டி மிரட்டுவதும், இன்னும் சில விஷயங்களில் ரசிகர்களை மிரள செய்வதும் ஆறுதல்!

ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசையும் சரி, பாடல்கள் இசையும் சரி மிரட்டவில்லை, ரசிகர்களை தியேட்டரவை விட்டு விரட்டுகிறது. ஒளிப்பதிவாளர் குருதேவின் ஒளிப்பதிவு கச்சிதம்!

தேவதர்ஷினியின் டிராமாட்டிக் நடிப்பு, கதையிலும், திரைக்கதையிலும் இல்லாத விறுவிறுப்பு, டுக்காட்டி பைக்கை யார் வைத்திருந்தாலும் அவர்களை விரட்டிப்பிடிக்கும் வில்லன் ஜானி, ஒருகாட்சியில், கைக்கெட்டிய தம்பியின் டுக்காட்டி பைக்கை தான், ஹீரோவிடம் விட்ட சவாலுக்காக மறந்துவிட்டு நாயகி ப்ரியா ஆனந்த்தை மட்டும் தூக்கி செல்வதும், அப்புறம் என் பைக்கை திரும்பி கொடு... என்று ஹீரோவிடம் கேட்பதும், கெஞ்சுவதும் கொஞ்சம் மிஞ்சுவதும் செம காமெடி. இதுமாதிரி மிகப்பெரும் ஓட்டைகள்... புதியவர் யுவராஜ் போஸின் இயக்கத்தில், ‛இரும்புக்குதிரையை நொண்டிக்குதிரையாகவும் சண்டிக்குதிரையாகவும் ஆக்கிவிடுகிறது.

மொத்தத்தில், ‛‛இரும்புக்குதிரை - சண்டிக்குதிரை - நொண்டிக்குதிரை!










------------------------------------------------------------



குமுதம் சினி விமர்சனம்





அதர்வாவும், ப்ரியா ஆனந்தும் ஒரு சூப்பர் பைக்கில் (இதுதான் இரும்புக் குதிரை) ஜாலியாக ஈ.சி.ஆரில் ஒர லாங்க டிரைவ் கிளம்புகிறார்கள். நடுவழியில் திடீரென முளைத்த நான்கைந்து பேர், அதர்வாவை அடித்துப் போட்டுவிட்டு, ப்ரியா ஆனந்தைக் கடத்திச் செல்கிறார்கள். அவர்கள் யார்? அவர்களுக்கும் அதர்வாவுக்கும் என்ன சம்பந்தம்? ப்ரியா ஆனந்த் மீட்கப்பட்டாரா இல்லையா என்பதுதான் க.சு! (இயக்கம் யுவராஜ் போஸ்)


பரதேசிக்குப் பிறகு 6 பேக்குடன் ஆதர்வா. ரூல்ஸ் ராமானுஜமாக இருக்கும் போதும், மெல்லிய காதலின் போதும் மனதைக் கவர்கிறார். அதிரடி ஆளாக மாறும்போது கொஞ்சம் ட்ரெய்னிங் எடுத்திருக்கலாம்.


ப்ரியா ஆனந்த் ச்சோ ச்வீட்! காஸ்ட்யூம் டிசைனருக்கு ஒரு உம்மா!


ஏழாம் அறிவு வில்லன் ஜானிக்கு ஒரே ஒரு சண்டைக் காட்சியா? அக்கிரமம்!


மாடர்ன் அம்மா தேவதர்ஷினி ஸ்லிம் அண்ட் ஃபிட். ப்ரியாவின் ஆன்ட்டியும் க்யூட். (நம்ம டேஸ்டே மாறிடுச்சி போல)


பாண்டிச்சேரியை அழகாகக் காட்டியிருக்கிறது கேமரா. படத்தின் பலம் நர்சிம்மின் வசனம். "வேற காடா இருந்தாலும் சிங்கம் வேட்டையாடாம இருக்காது போன்ற டயலாக்ஸ் பளிச்.


ஜி.வி. பிரகாஷின் பாடல்கள் இதமாக இருந்தாலும் ஆர்.ஆர்.ரில் கொஞ்சம் கவனம் குறைந்த உணர்வு.


வில்லன், பைக்கையோ, அதர்வாவையோ தூக்காமல் ப்ரியாவைக் கடத்திச் செல்வதில் கொஞ்சம்கூட லாஜிக் இல்லை. அதேபோல ஐட்டம் சாங்கும் ஸ்பீட் ப்ரேக் போடுகிறது.


இ.கு. யூத்களுக்குப் பிடிக்கும்.


குமுதம் ரேட்டிங்: ஓகே





-----------------------------------------------------------------



கல்கி சினி விமர்சனம்



தன் அப்பா தன்னுடைய பைக்கில் அமர்ந்து வரும்போது ஆக்ஸிடென்ட் ஆகி இறந்து போனதால் மகன் மூன்று வருடமாக பைக் ஓட்டாமல் இந்து, காதலிக்காக மீண்டும் பைக் ரேஸர் ஆவதுதான் மையக்கதை.


இறந்துபோன அப்பாவாக ரகுவரன், (அவரது போட்டோவே பேசுகிறது) அவரது மனைவியாக தேவதர்ஷினி, இருவரின் மகனாக ஷாம் என்ற வேடத்தில் அதர்வா பின்னியெடுக்கிறார். தேவதர்ஷினியும் அதர்வாவும் இன்றைய இளம் தலைமுறை அம்மா, மகனாக கலகலக்க வைக்கிறார்கள்.


அம்மாவின் காதலை அதர்வா கேட்பதும், "உங்க அப்பா பிராமின் ஆக இருந்தாலும் எனக்காக ஞாயிற்றுக்கிழமை கோட் போட்டு சர்ச்சுக்கு 10 மணிக்கு டானென்று வந்திடுவார் என்று மகனைக் கலாய்ப்பதும், அதர்வாவின் காதலைக் கேட்டு உற்சாகப்படுத்துவதுமாக தேவதர்ஷினி ரசிக்க வைக்கிறார்.


அதர்வா அப்பாவின் மறைவுக்கு பிறகு , மெல்ல மெல்ல தேறி ப்ரியா ஆனந்த்தைக் கண்டதும் உற்சாகமாகி அவருக்காக விலையுயர்ந்த பைக் ஒன்றை வாங்கி அதில் இருவரும் டிராவல் செய்யும்போது, அந்த பைக்கின் சொந்தக்காரர் டோங்லியால் ப்ரியா ஆனந்த் கடத்தப்பட்டு அவரை மீட்க அதர்வா தன் உயிரைப் பணயம் வைத்துக் காதலியை மீட்கும் காட்சிகளில் பளிச்சிடுகிறார்.


அவரது தோழியாக ராய் லட்சுமி கிறிஸ்டியானா வேடத்தில் வந்து உதவுகிறார். அதர்வாவும், ராய் லட்சுமியும் பள்ளி நண்பர்கள் என்பதை இருவரின் உருவ அமைப்பு ஒத்துப் போகாததால் நம்ப முடியவில்லை.


வில்லன் டோங்லி வந்த பிறகு கதையில் நல்ல திருப்பம். "ஏவன் என்ற அந்த பைக்கை தன்னுடைய தம்பி மைக்கேல் ஓட்டி அதைப் பந்தயத்தில் தோற்று இழக்கபோக... அந்த பைக் வைத்திருப்பவனைவ டோங்லி தேடிவர அந்தப் பைக்கை அதர்வா ஓட்டி வர அவன்தான் தன் தம்பியின் சாவுக்குக் காரணமானவன் என்று அதர்வாவுடன் வரும் ப்ரியா ஆனந்தைக் கடத்தி அதர்வாவைத் தன்னுடன் போட்டிக்கு அழைக்கும் வில்லன் டோங்லியின் நடிப்பு ரசிக்க வைக்கிறது.


படத்தின் பின்னணி இசையில் ஜி.வி. பிரகாஷ் படத்தை நிமிர வைக்கிறார். பாடல்கள் இரண்டு மனத்தில் நிற்கின்றன.


மொத்த படப்பிடிப்பும் பாண்டிச்சேரியில் எடுக்கப்பட்டது கண்களுக்கு குளுமை. இயக்குநர் யுவராஜ் போஸ் நுணுக்கமான தொழில் நுட்பங்களைக் கையாண்டிருக்கிறார். இருந்தாலும் பைக் ரேஸ் பரிச்சயம் இல்லாதது என்பதால் திரைக்கதையில் ஒட்ட மறுக்கிறது. சி.ஏ. படித்துவிட்டு பீட்சா கடையில் பகுதி நேர வேலை செய்யும் அதர்வாவுக்கு அம்மாவுக்கத் தெரியாமல் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக்கை வாங்கிக் கொடுத்தது யார்? போன்ற லாஜிக் மீறல்களைத் தவிர்த்திருக்கலாம்.


சச்சு, ரகுவரனின் அம்மாவாக வந்து அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். ப்ரியா ஆனந்த் அதர்வாவிடம், "நண்பனாகத்தானே பழகினேன். உனக்குள் எப்போது காதல் வந்தது? என்று கேட்கும்போது இன்றைய இளம் பெண்களின் மனநிலையை பிரதிபலிக்கிறார். எதார்த்தம் மீறாத காதல் காட்சிகள் படத்துக்குப் பொருந்துகின்றன.




இரும்பு குதிரை - வேகம்



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in