விசுவாசமான தொழிலாளிக்கும், தொழிலாளிகளுக்கும் உரிய மரியாதை தரும் முதலாளியின் மகளுக்குமிடையில் நடக்கும் காதல் போராட்டமும், தந்தை - மகளின் பாசப்போராட்டமும் தான் ''அகத்திணை'' படம் மொத்தமும்!
கதைப்படி, தாய் இல்லாத தன் ஒற்றை மகள் மகிமாவை, உயிருக்கு உயிராய் வளர்த்து ஆளாக்கி வருபவர் 'ஆடுகளம்' நரேன். அவரின் விசுவாசமான தொழிலாளியாக காரோட்டியாக இருப்பவர் வர்மா! ஒருபெரும் விபத்தில் தன் உயிரை துச்சமென மதித்து மகிமாவின் உயிரை காபந்து செய்யும் வர்மா மீது மகிமாவிற்கு காதல்! அதற்கேற்றார்போல் வர்மாவிற்கு பார்த்த திருமண வரன்களும் தட்டி தட்டி போகிறது. ஆனால் வர்மாவிற்கு மகிமா மீது முதலாளி மகள் என்ற மரியாதை மட்டுமே இருக்கிறது.
''கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்...'' என்பதற்கேற்ப வர்மாவை கரைக்கிறார் மகிமா. வர்மா, மகிமாவிடம் தன் காதலை சொல்ல வரும் வேளையில், மகிமாவிற்கு தன்னை விட பெரிய இடத்தில் மாப்பிள்ளை பார்த்து முடிக்கிறார் நரேன்! அதனால் தன் காதலை காட்டிக் கொள்ளாமல் ஊரை விட்டே கிளம்புகிறார் வர்மா! இதனால் இருதலை கொள்ளி எறும்பாக தவிக்கும் மகிமா எடுக்கும் விபரீத முடிவு என்ன.? அதன் விளைவுகள் என்னென்ன.? என்பது தான் அகத்திணை படத்தின் கதையும் களமும்!
விசுவாசமிக்க வேலையாள் ஐயனராக புதுமுகம் வர்மா, காதலுக்காக உயிரையும் விடும் கார்த்திகாவாக மகிமா, பாசமுள்ள அப்பா ரத்தினசாமியாக 'ஆடுகளம்' நரேன், ஐயனாரின் தாத்தாவாக ஜி.எம்.குமார், வில்லன் ஆதிலிங்கமாக இப்பட தயாரிப்பாளர் டி.ஆர்.ஸ்ரீகாந்த், லொள்ளுசபா மனோகர், சுவாமிநாதன், நளினி, கருத்தம்மா ராஜஸ்ரீ, ராமச்சந்திரன், பிளாக்பாண்டி, பக்கடா பாண்டி, சிவநாராயண மூர்த்தி, அல்வா வாசு, மாஸ்டர் ஆதித்யா, செந்தில் குமார், பூவிதா, செந்தி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்தில் 'ஆடுகளம்' நரேன், தயாரிப்பாளரும், வில்லனுமான டி.ஆர்.ஸ்ரீகாந்த், ஐய்யனார் - வர்மா, நாயகி மகிமா உள்ளிட்டவர்கள் கவனம் ஈர்க்கின்றனர்.
மரியா மனோகரின் இசையில், ''தந்தையும் நீயே...'', ''முந்தானை சேலைக்குள்ளே...'', உள்ளிட்ட வைரமுத்துவின் வைரவரி பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. அகிலனின் ஔிப்பதிவும், ஜி.சசிகுமாரின் படத்தொகுப்பும் கச்சிதம்! இப்படத்தை எழுதி-இயக்கியிருக்கும் புதியவர் யூ.பி.மருது, க்ளைமாக்ஸில் சோகத்தை திணித்தே ஆக வேண்டும்... எனும் எண்ணத்தை மட்டும் கைவிட்டிருந்தார் என்றால் ''அகத்திணை'' - ''திணை விதைத்தவன் தினையை அறுத்த கதையாக மகிழ்வாக இருந்திருக்கும், அவ்வாறு இல்லாதது சற்றே வினையாகி விடுகிறது. ஆகவே, ''அகத்திணை - க்ளைமாக்ஸ் மட்டும் விணை! மொத்தபடமும் நற்றிணை!!''