தினமலர் விமர்சனம் » வணக்கம் சென்னை
தினமலர் விமர்சனம்
கைவசம் நிறைய கதைகளை வைத்துக்கொண்டும், மனதில் இயக்குநர் ஆசையை வளர்த்துக் கொண்டும், நான் இயக்குநராக சம்மதித்தால் நீங்கள் கதாநாயகராக நடிக்க தடையேதுமில்லை... என்று தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினிடம், ‘‘ஒரு கல் ஒரு கண்ணாடி’’ ஆரம்பநேரத்தில் அவரது ஆத்துக்காரம்மா கிருத்திகா உதயநிதி சொல்லியிருப்பார் போலும், அதன் விளைவே, ‘‘வணக்கம் சென்னை!’’ ஆனாலும், ஆத்துக்காரம்மா இயக்கத்தில் உதயநிதிக்கு நடிக்கத் தயக்கம், அதனால் ‘மிர்ச்சி’ சிவாவை பிடித்து போட்டு, அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்தை வளைத்துபோட்டு, தன் புருஷனையும் க்ளைமாக்ஸில் கெஸ்ட்ரோலில் இழுத்துபோட்டு துணிச்சலாக ‘‘வணக்கம் சென்னை’’ என்றிருக்கும் கிருத்திகா உதயநிதி, வரவேற்பிற்குரிய இயக்குநர்கள் பட்டியலிலும் இடம்பிடித்து விட்டிருக்கிறார் என்றால் மிகையல்ல!
கதைப்படி தேனி, பக்கத்து மிடில்கிளாஸ் கிராமத்து இளைஞர் ‘‘மிர்ச்சி’’ சிவா. சென்னையில் சாப்ட்வேர் உத்தியோகவாசியாகி சென்னைக்கு வருகிறார். அதற்கு ஒரு சில நாட்கள் பின்பு, லண்டனில் செட்டில் ஆன ஹைகிளாஸ் இந்தியர் நிழல்கள் ரவியின் ஒற்றை பெண் வாரிசு பிரியா ஆனந்த், தனது போட்டோகிராபி மோகத்தால் ஒரு ஆறு மாதகாலம் சென்னையில் தங்கி தமிழகத்தை விதவிதமாக போட்டோ எடுத்து, லண்டன் புகைப்பட போட்டியில் வெல்ல சென்னை வருகிறார். வந்த இடத்தில் இருவருக்கும் சந்தானத்தின் ஏமாற்று வேலையால் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் ஒரே வீட்டில் வசிக்க வேண்டிய சூழல்! ஆரம்பத்தில் மோதிக் கொள்ளும் இருவரும் அதன்பின் அவர்களை அறியாமலே காதலில் விழுகின்றனர். ஆனால், பிரியா ஆனந்துக்கோ லண்டனில் ஏற்கனவே ஒரு ஹைகிளாஸ் இளைஞருடன், பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் கல்யாணம் நிட்சயிக்கப்பட்டிருக்கிறது! அந்த இளைஞரும் பிரியாவைத் தேடி சென்னை வருகிறார். தடை பல கடந்து சந்தானத்தின் உபத்திரத்தால் ஊருக்காக புருஷன்-பொண்டாட்டியான இவர்கள், உண்மையில் ஜோடி சேர்ந்தார்களா? இல்லையா..? அதற்கு உபத்திர சந்தானத்தின் உதவி என்ன? லண்டன் மாப்பிள்ளை ராகுல் ரவிந்தனின் நிலை என்ன? இதில் ரேணுகா, ஊர்வசி, சங்கீதா, ப்ளாக் பாண்டி, கிரேன் மனோகர் உள்ளிட்டோரின் ரோல் என்ன என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், அதேநேரம் வியிறு குலுங்க வைக்கும் காமெடியாகவும் பதில் அளிக்கிறது ‘‘வணக்கம் சென்னை’’ படத்தின் மீதிக்கதை!
அஜய்யாக சிவா, அஞ்சலியாக பிரியா ஆனந்த் இருவரும் ‘மேட்பார் ஈச் அதர்’ எனும் அளவில் கனகச்சிதமாக பொருந்தி நடித்திருக்கின்றனர். ஆனாலும் பிரியா, புல் பாட்டிலில் பாதியளவு இருக்கும் விஸ்கியை ‘ரா’ வாக அடிப்பதெல்லாம் என்னதான் லண்டன் ரிட்டர்ன் என்றாலும் ரொம்பவே ஓவர்! ‘தில்லு முள்ளு’ ஹவுஸ் ஓனர் நாராயணனாக வரும் சந்தானத்தில் தொடங்கி, க்ளைமாக்ஸில் கெஸ்ட்ரோலில் வரும் உதயநிதி வரை ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருப்பது ‘‘வணக்கம் சென்னை’’யின் பெரிய ப்ளஸ்!
அனிருத்தின் இளமை துள்ளும் (வரிகள் புரியவில்லை என்றாலும்...) இசை, ரிச்சர்ட் எம்.நாதனின் ஓவிய ஒளிப்பதிவு, செல்வகுமாரின் கலைநயமிக்க (குறிப்பாக பாடல் காட்சிகளில்...) கலை இயக்கம் உள்ளிட்ட மேலும் பல ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், எஸ்.திவ்யநாதனின் வசனம் மற்றும் இணை இயக்கமும் பக்க(கா) பலமாக இருந்து நம்பமுடியாத ஒரு கதையை, நம்புபடியான ஓர் திரைக்கதையாக்கி இயக்க கிருத்திகா உதயநிதிக்கு உதவி புரிந்திருக்கின்றன என்பதோடு, அவரை நம்பிக்கைக்குரிய இளம் இயக்குநர்கள் வரிசையிலும் தூக்கி நிறுத்தியிருக்கின்றன!
ஆக மொத்தத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும் ‘‘வணக்கம் சென்னை’’ - ‘‘ஒரு முறை பார்க்கலாம்ணே!’’-----------------------------------------------------------------
நமது
தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள்
வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில்
திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை
ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள
சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...
வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்
அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com
ஹீரோ கிராமத்தில் இருந்து சென்னை போறார். ஹீரோயின் ஃபாரீன்ல இருந்து சென்னை வர்றார். 2 பேரும் ஒரே அபார்ட்மெண்ட்ல ஒரே வீட்டில் தங்கவேண்டிய சூழல். பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தா என்ன ஆகும் ? பத்திக்குது . ஆனா பாருங்க அந்தப்பொண்ணு ஆல்ரெடி லண்டன் மாப்ளைக்கு நிச்சயம் ஆன பொண்ணு . 1999 கதைல நாம பார்க்காத ட்விஸ்ட்டா ? அந்த மாப்ளையை மீறி எப்படி 2 பேரும் சேர்றாங்க என்பதுதான் கதை.
ஹீரோவா சிவா. இவருக்கு காமெடி நல்லா வருது , மொக்கை நல்லா போடறார். ஆனா அவர் முகத்துல காதல் உணர்வு மருந்துக்குக்கூட வர்லை . ரொம்ப சிரமம் . அவர் தன்னை மாத்திக்கனும் இல்லைன்னா ஆடியன்ஸ்க்கு போர் அடிக்க ஆரம்பிச்சுடும் , ஆல்ரெடி தமிழ்ப்படம் அளவுக்கு ரசிக்க முடியலைன்னு மவுத் டாக் பரவிட்டு இருக்கு , டான்ஸ் காட்சிகளில் சமாளிக்கிறார்.
ஹீரோயின் ப்ரியா ஆனந்த். இவர் முகத்தில் ஆயில் எப்போதும் தடவியே இருப்பாரா? என சந்தேகப்பட வைக்கும் சருமம். புன்னகையில் அழகாகத்தெரியும் இவர் சோகக்காட்சிகளில் , கோபக்காட்சிகளில் அந்த அளவு மிளிரவில்லை. ஆனால் காலேஜ் , டீன் ஏஜ் பெண்களைக்கவர்வார் . காதல் உனர்வுகள் இவர் முகத்தில்சரளமாக வருகிறது. சபாஷ்.
சந்தானம் இடைவேளை விடும்போதுதான் என்ட்ரி ஆகிறார். படத்தில் அவர் அடிக்கும் டயலாக்ஸ் 24, அதில் கவுண்ட்டர் டயலாக்ஸ் 7 , உருவகேலி - 5 , டபுள் மீனிங் 2 , மொக்கை காமெடி 6 , ஆல்ரெடி வந்த எஸ் விசேகர் காமெடி டிராமாவில் உருவியது 4 என எப்போதும் போல் ஒரு ரேஷியோ வெச்சு காமெடி டிராக் அமைப்பார் போல. ஆனா ஒரு ஆறுதல் என்னான்னா அவர் இந்தப்படத்தில் அடக்கியே வாசிச்சிருக்கார். இயக்குநர் சொன்னதை மட்டும் செஞ்சிருக்கார் ( இயக்குநர் யாரு ? மேலிடம் இல்லை?)
ஊர்வசி, நாசர் , ரேணுகா , ராகுல் என நடித்தவர்கள் பட்டியல் இருந்தாலும் பெரிதாக சொல்லும்படி இல்லை .
அனிருத் இசை ஆல்ரெடி மரண ஹிட் . க்ளைமாக்சில் கங்கணம் ஸ்டைல் பாட்டுக்கு நடனமும் ஆடுகிறார் .
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
* உதய நிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி தான் இயக்குநர். ஒரு பெண் இயக்குநர் என்ற முறையில் அவருக்கு ஒரு பூங்கொத்து. குடும்பத்துடன் பார்ப்பது மாதிரி கண்ணியமான காட்சி அமைப்புகளுடன் ஒரு சராசரிக்காதல் கதை ரசிக்கும் படி தந்ததற்கு.
* சந்தானம் இருந்தும் பெண்களை நக்கல் அடிக்கும் காட்சியோ , ஆபாச டபுள் மீனிங் காட்சியோ இல்லாமல் கண்ட்ரோல் பண்ணியது குட்.
* ஓப்பனிங் சீனில் டாக்சியில் போகும் ஹீரோயினை டிரைவர் கரெக்ட் பண்ண ஆழம் பார்க்க கமல்-ன் கில்மா பாட்டை ஓட விட உடனே ஹீரோயின் செல் ஃபோனை எடுத்து அப்பாவிடம் பேசுவது போல் டிரைவர் பற்றிய டீடெயில் சொல்லி எச்சரிக்கை செய்வதும் உடனே டிரைவர், ரஜினியின் சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு பாட்டை மாற்றுவதும் கிளாஸ். இந்த ஒரு காட்சியில் இயக்குவது ஒரு பெண் என்பதை நிரூபணம் செய்கிறார். அதேபோல் ராத்திரியில் தனியாய் பயணம் செய்யும் பெண் எப்படி ஜாக்கிரதையாக இருக்கனும் என்பதற்கான டிப்சும் ஆச்சு.
* மிலிட்ரி மேன் நாசர், போலீஸ் ஆஃபீசர் ஊர்வசியை தாங்கிப்பிடிக்கும் காட்சியில் அவரது அவதாரம் படப்பாடலான தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ பாட்டை ஓட விட்டது தியேட்டரில் செம அப்ளாஸ் . கதையில் இன்னும் ரிலாக்ஸ் தேவைப்படும் பட்சத்தில் இந்த காமெடி டிராக்கை இன்னும் டெவலப் பண்ணி இருக்கலாம்.
* ஏ பெண்ணே பாடல் காட்சிக்கு அமோக வரவேற்பு . மரங்களுக்கு லைட்டிங் பண்ணி இருந்தது ரசிக்க வெச்சுது . ஆர்ட் டைரக்ஷன் அட்டகாசம் , பின்னிட்டாங்க. எல்லாப்பாடல்களுமே நல்லாருக்கு, 3 பாடல்கள் செம ஹிட் ஐலேசா, காற்றில், ஒசக்க, ஏ பெண்னே, சென்னை என 5 பாட்டு.
இயக்குநரிடம் சில கேள்விகள் * புகார் கொடுக்கவரும் சிவா முதல் ஷாட்டில் திருநீறு ஒரு வரிதான் வெச்சிருக்கார். அடுத்த ஷாட்டில் 3 வரி இருப்பது போல் பட்டை அடிச்சிருக்கார். கண்ட்டிநியூட்டி மிஸ்சிங்க் அது எதுக்கு தேவை இல்லாம ? அந்த ஒரு சீன் தவிர வேறு எந்தக்காட்சியிலும் அவர் ஒரு பக்தன் எனவோ , ஆன்மீகப்பிரியன் என்பதோ வரவே இல்லை . அபார்ட்மெண்ட்டில் இருவரும் சண்டை போட்டுட்டு போலீஸ் ஸ்டேஷன் ல புகார்கொடுக்க வ்ர்றவர் எதுக்கு மெனக்கெட்டு திருநீறு பட்டை அடிச்சுட்டு வரனும் ?
* ஹீரோயின் ஃபோன் நெம்பரை ஹீரோ கேட்டு வாங்கி தன் ஃபோன் ல ஸ்டோர் பண்றார் . பின் ஹீரோயின் கால் பண்ணும்போது ஹீரோவின் செல் மானிட்டரில் +91 944--------- என வருவது எப்படி ? ஹீரோயின் மிஸ்டு கால் கொடுத்தோ அல்லது ரிசீவ்டு காலோ இருந்து பின் ஹீரோ அதை ஸ்டோர் பண்ணி இருந்தால் தான் அப்படி +91 என வரும் , இல்லைன்னா 944.... என்றுதானே வரும் ?
* ஹீரோயின் ஒருஷாட்டில் ஏரியில் மீன் பிடித்து தூண்டிலை இழுக்கும் காட்சியில் ஆல்ரெடி பிடிச்சு செத்த மீனை தூண்டிலில் மாட்டியது நல்லாத்தெரியுது.
* ஹீரோ கிராமத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு ஹீரோயினை அழைத்து வர்றார் . ஒரு தேயிலைத்தோட்டத்தில் இறங்கி இதுக்கு மேல் வண்டி போகாது. நாம நடந்து போலாம்னு ஹீரோயினை நடக்க வெச்சு கூட்டிட்டுப்போறார். பின் ஹீரோயின் கிளம்பும்போது வீட்டு வாசலுக்கே ஜீப் வருவது எப்படி ?
* லண்டன் மாப்ளை நிச்சயதார்த்தத்துக்கு ஹீரோயின் விரல் ல எங்கேஜ்மெண்ட் ரிங் போட்டிருக்கார் . அதை ஹீரோ வாங்கி அடமானம் வெச்சாச்சு . ரிட்டர்ன் வந்த மாப்ள எங்கே நான் போட்ட மோதிரம்?னு கேட்கவே இல்லை ? விரலைக்கூடப்பார்க்காத கண்ணியமான மாப்ளையோ ?
* நிச்சயிக்கப்பட்ட லண்டன் மாப்ளை சென்னை வந்து ஹீரோயினைப்பார்த்து பின் அவர் தங்கி இருப்பது எங்கே?ன்னு கேட்கவே இல்லை, அவர் வீட்டுக்கும் வர முயற்சிக்கவே இல்லை.
* சந்தானம் லண்டன் மாப்ளையை சந்தித்து ஹீரோ காதலைச்சொல்லிடறார். அதை மாப்ளை ஏன் ஹீரோயினிடம் சொல்லவில்லை? அட்லீஸ்ட் வெரிஃபிகேஷன் கூடப்பண்ணலை ? க்ளைமாக்ஸில் மட்டும் எதுக்கு சம்பந்தமே இல்லாம அதை சொல்றார்?
* ஊர்வசி ஹீரோ -ஹீரோயின் அபார்ட்மெண்ட்க்கு நைட் வந்து ஹாலில் சோபாவில் படுத்து தூங்கிடறார். அவர் வந்ததால கணவன் - மனைவியா நடிக்கும் அவங்க வேற வழி இல்லாம பெட்ரூமில் போய் படுக்க வேண்டிய நிர்ப்பந்தம் மாதிரி சீன் ஓட்டவே இல்லை .
மனம் கவர்ந்த வசனங்கள்
* பாடுபடாம பலாச்சுளை கிடைக்காது
* பேய்ப்படத்துக்கு தியேட்டர்ல எத்தனை லவ் ஜோடிங்க பார்த்தியா? பேய் வந்தா பயத்துல கட்டிப்பிடிச்சுக்கலாம்.எல்லாரும் பேய்க்காகத்தான் வெயிட்டிங்
* எவ்ளவ் காஸ்ட்லி கேமராவா இருந்தாலும் லவ் FEELING கை படம் பிடிச்சுட முடியாது
* நீ சொன்ன மாதிரி அவ 1ம் அவ்ளவ் குண்டு இல்லையே?
உன் பொண்டாட்டிக்குப்பக்கத்துல அர்னால்டே நின்னாலும் அனிருத் மாதிரி தான் தெரியும்
* ஒருத்தனைப்பார்த்ததுமே அவன் நல்லவனா? கெட்டவனா?னு பொண்ணுங்க கண்டுபிடிச்சுடுவாங்க.அவங்க அவ்வளவு ஷார்ப்
* எப் ஐ ஆர் = FEMALE INFORMATION REPORT ,அதாவது பொண்ணுங்க சொல்றதைத்தான் போலீஸ் நம்பும்.
சி பி கமெண்ட் -காதலர்கள் , சந்தானம் ரசிகர்கள் பார்க்கலாம். பெண்களை கவரும் . போர் அடிக்காம போகுது. ஆண்கள் டி வி யில் பார்க்கலாம். வணக்கம் சென்னை - சராசரி காதல் கதை .சந்தானம் காமெடி அடக்கி வாசிப்பு.