தினமலர் விமர்சனம் » மாலினி 22 பாளையங்கோட்டை
தினமலர் விமர்சனம்
மலையாளத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி, வரவேற்பையும் பெற்ற 22 பீமேல் கோட்டயம் படத்தின் தமிழ் ரீ-மேக் தான் மாலினி 22 பாளையங்கோட்டை திரைப்படம்! சாந்தி முகூர்த்தம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நடிகை ஸ்ரீப்ரியாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மற்றுமொரு திரைப்ப(பா)டம் இப்படமன்றால் மிகையல்ல!!
குடும்ப கஷ்டம், வெளிநாட்டு வேலைக்காக விசா விஷயமாக ஏஜென்ட் கிரிஷ் ஜே சத்தாரை சந்திக்கிறார் நித்யா மேனன். விசா கிடைக்கும் வரை கிரிஷின் பங்களாவிலேயே தங்க வேண்டிய சூழல் நித்யாவுக்கு... இந்த சூழலில் இருவருக்கும் காதல் மலருகிறது!
கிரிஷ் இல்லாத சமயத்தில், கிரிஷின் முதலாளி நரேஷ், நித்யாவை திட்டமிட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறார். அதன் பிறகும் கிரிஷ் அவளை ஏற்றுக்கொண்டு காதலை தொடர அந்த கசப்பான சம்பத்தை மறந்து வாழ்கிறார் நித்யா. மீண்டும் நரேஷ், நித்யாவை பலாத்காரம் செய்கிறான். இதில் வெகுண்டெழும் நித்யா, நரேஷூக்கு எதிராக புயலாக கிளம்பும் போது அவளை போதைப்பொருள் கடத்தல்காரி என ஜெயிலுக்கு அனுப்புகின்றனர். அப்பொழுது கிரிஷ், நரேஷ் இருவரும் கூட்டு களவாணிகள் என்பதை கண்டுபிடிக்கும் நித்யா, சிறையில் இருந்து திரும்பியதும் தன் வாழ்க்கையை நாசப்படுத்தியவர்களை நரகத்தில் தள்ளி பழிவாங்குவது தான் மாலினி 22 பாளையங்கோட்டை படத்தின் வித்தியாசமும் விறுவிறுப்புமான மீதிக்கதை!
நித்யா மேனன் தான் மொத்த படமும்! கிரிஷூடன் காதலில் விழுவதிலாகட்டும், ஆஸ்பத்திரி நர்ஸாக கோட்டா சீனிவாசனின் சில்மிஷ கேள்விகளுக்கு சிரித்தபடி நழுவுவதிலாகட்டும், நயவஞ்சகர்களை பழிவாங்க புயலெ புறப்படுவதிலாகட்டும் அத்தனையிலும் அசத்தியிருக்கிறார். சில இடங்களில் இப்பட இயக்குநரும், பிரபல நடிகையுமான ஸ்ரீபிரியாவின் பிரதிபலிப்போ, பிம்பமோ.?! மூக்கின் மேல் விரல் வைக்க விட்டுவிடுகிறார் அம்மாணி என்றால் மிகையல்ல!
இதுநாள் வரை வில்லனாக இருந்த கோட்டா சீனிவாசராவ் இதில் ஜொள்ளர் அவ்வளவே! ஆனால் அவரது பணியை அழகாக செய்திருக்கிறார். நரேஷ், கிரிஷ் ஜே சத்தார் இருவரும் நித்யாவை நம்ப வைத்து கிரிஷ், நரேஷூக்கு விருந்தாக்கும் காட்சிகளில் குலை நடுங்குகிறது. அடபாதக பதர்களே!! கோவை சரளா, வித்யூலேகாராமன், அஞ்சலி ராவ், ஜானகி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள், ஆனாலும் சரளா கடுப்பேற்றி விடுகிறார். இப்படி ஒரு சிரியஸ் கதைக்கு சிரிப்பு என்ற பெயரில் கடுப்பும், கடிப்பும் பெரும்பலம்!
போதை மருந்து கடத்தல் சிறை தண்டனையில் இருந்து அத்தனை எளிதாக நித்யாமேனன் வெளியே வருவது உள்ளிட்ட ஒரு சில ஹம்பக்குகள் இருந்தாலும், ஸ்ரீப்ரியாவின் இயக்கத்தில்
மாலினி 22 பாளையங்கோட்டை - மதிகெட்ட காளைகளுக்கு கடுஞ்சிறை கொட்டகை!
-------------------------------------------------
கல்கி திரை விமர்சனம்
மாலினி (நித்யாமேனன்) நர்ஸாகப் பணிபுரிகிறார். அவரது கனவு வெளிநாடு போக வேண்டும் என்பது அதற்காக விசா எடுத்துத் தரும் ஏஜென்ட் அலுவலகம் வரும்போது அங்கு பணிபுரியும் "கிரிஷ்மீது காதல் கொள்ள காதலன் ஆன கிரிஷ், தம் பாஸுக்கு (நரேஷ்) மாலினியை இரையாக்குகிறான். நரேஷை பழிவாங்கத் துடிக்கும் மாலினியை கிரிஷ், நரேஷ் இருவரும் திட்டமிட்டுச் சிறைக்கு அனுப்ப, சிறை செல்லும் மாலினி அங்கு ஜானகி என்ற தீவிரவாத பெண்மணியைச் சந்திக்கிறாள். அவள் தரும் நம்பிக்கை, வீரம் மாலினியைத் துடித்தெழச் செய்து, வெளியே வந்து இருவரையும் ஆதாரமில்லாமல் பழிவாங்கிவிட்டு, மீண்டும் நர்ஸ் டிரெயினிங்குக்கு வெளிநாடு செல்வதுதான் "மாலினி 22 பாளையங்கோட்டை படத்தின் கதை. கெட்டுப்போய்விட்டால் நாயகி கடைசியில் சாகடிக்கப்பட வேண்டியவர் என்ற பாணியை மாற்றி அவள் வாழ வேண்டியவள் என்று காட்டியதற்கும், காயம்பட்ட பெண் தன்னைக் கடித்தவனை பழிவாங்கவும் ஒரு தூண்டுதல் வேண்டும் என்று இயல்பாகக் காட்டியுள்ளதற்கும் சபாஷ் போடலாம். பெண் இயக்குநர் ஸ்ரீப்ரியா இப்படி ஒரு கதையை தேர்வு செய்ததில் ஒரு நியாயம் உள்ளது.
இன்று நாட்டில் நடக்கும் பாலியல் கொடூர வன்முறைகளுக்குப் பதிலடியாக இப்படம் பங்காற்றுகிறது எனலாம். படத்தின் திரைக்கதையில் இன்னமும் கூடுதல் விறுவிறுப்பை ஏற்றி, கிளைமாக்ஸில், தன்னைக் கொல்லவரும் நித்யாமேனனை கிரிஷ் கொல்வாரா? அல்லது நித்யாமேனனை அவரைக் கொல்வாரா? என்று விறுவிறுப்பான மாயாஜால உச்சக்காட்சி அமைந்திருந்தால் படம் இன்னும் பேசப்பட்டிருக்கும். ஆயினும் பெண் இயக்குநரின் பங்களிப்பைப் பாராட்டலாம்.