தினமலர் விமர்சனம்
தமிழ் கஜினியை அடுத்து இந்தி கஜினியும் வெளிவந்து வசூல் சாதனை படைத்து வரும் இந்த சூழலில் அதே சாயலில் தமிழ், தெலுங்கில் வெளிவந்திருக்கும் படம் என்னை தெரியுமா?
ஒரு விபத்தின் காரணமாக தன் தந்தையை இழக்கும் ஹீரோ மனோஜ், அந்த விபத்தின் மூலமே தனது பழைய நினைவுகளையும் இழக்கிறார். தூங்கி எழுந்தால் முந்தின நாள் நடந்த எல்லாவற்றையும் மறந்து விடும் ஹீரோவின் பிரச்னை தெரியாமலேயே அவரை காதலிக்கிறார் படத்தின் ஒரு நாயகி ரியாசென். இந்நிலையில் மனோஜ் பற்றிய உண்மை எல்லாம் தெரிந்த அவரது சித்தப்பா நாசர் கொலை செய்யப்பட, பழி ஹீரோ மீதே விழுகிறது. இந்த கொலை பற்றி வலிய வந்து விசாரிக்க இந்த கேஸில் ஆஜராகிறார் மனோஜின் முன்னாள் காதலியும், இந்நாள் போலீஸ் ஆபீசருமான சினேகா உல்லல். நாசரை யார் கொன்றது? மனோஜ் கொலை பழியில் இருந்து மீண்டு முன்னாள் காதலியை கரம் பிடித்தாரா? அல்லது இந்நாள் காதலியை கை பிடித்தாரா? என்பது க்ளைமாக்ஸ்!
இந்த படத்தின் மூலம் ஹீரோவாக தமிழுக்கு அறிமுகமாகியிருக்கிறார் மனோஜ்குமார். இவர் பிரபல தெலுங்கு நடிகரும், நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆரம்ப கால நண்பருமான மோகன் பாபுவின் வாரிசு. மனோஜின் சரளமான தமிழும், ஸ்டைலான நடிப்பும் நிச்சயம் அவருக்கொரு இடத்தை பெற்றுத்தரும் என நம்பலாம்.
சினேகா உல்லல், ரியா சென் என இரண்டு நாயகிகள். இருவரில் ரியாவை காட்டிலும் சினேகா நடிப்பிலும், இளமை துடிப்பிலும் கவர்கிறார். பி.வாசு, நாசர் உள்ளிட்ட இன்னும் பல தமிழ், தெலுங்கு நடிகர்களும் படம் முழுக்க பெயர் சொல்லும்படி பவனி வருகின்றனர். பேஷ்! பேஷ்!
ப்ளாஷ்பேக்கில் சினேகா உல்லலை மனோஜ் பிரிவதற்கு சொல்லப்படும் லாஜிக் இல்லாத சாதாரண காரணம், கம்பெனியின் முதலாளி மகன் என கடைசி வரை யாரும் மனோஜை அடையாளம் கண்டு கொள்ளாத லாஜிக் மிஸ்டேக் என ஒன்றிரண்டு குறைகள் ஆங்காங்கே காணப்பட்டாலும் நிறைய புதுமைகளும், நிறைகளும் அதை மறக்கடிக்கச் செய்கின்றன! சரனின் இசையும், சுனிலின் ஒளிப்பதிவும் புதியவர் இயகுனர் அஜய் சாஸ்திரிக்கு சபாஷ் வாங்கி கொடுத்திருக்கிறது என்றால் மிகையல்ல.
என்னை தெரியுமா? - வித்தியாசமான நல்ல படம் தெரியுமா?
____________________
குமுதம் விமர்சனம்
கடுமையான ஞாபக மறதியால் என்னைத் தெரியுமா? நான் யாரு? எனப் புலம்பித் தவிக்கும் இளைஞனைப் பற்றிய கதை.
கொலையை துப்பறிவதில் ஆரம்பித்து அதில் காதலையும் குழைத்து சொல்லியிருக்கும் விதம் கொஞ்சம் புதுசு. கலைந்த தலைமுடியும், கன்னத்தில் குழிச் சிரிப்புமாக புதுமுகம் மனோஜ்குமார் செம ஷார்ப். தினமும் என்ன நடந்தது என்பதை மாலை வேளையில் டேப் ரிக்கார்டரில் பதிவு செய்யும்போதே அவஸ்தையை சட்டெனப் புரிய வைத்துவிடுகிறார். நடனமும் வசன உச்சரிப்பும் அவருக்கு கைகொடுக்கின்றன.
காதலுக்கு ரியாசென், கவர்ச்சிக்கு சினேகா உல்லால். சினேகாவுக்கு காக்கிச் சட்டையை மாட்டிவிட்டு நம்மை கடுப்பேற்றுகிறார்கள். நாசரின் கொலையில் மர்மம் அவிழ்வது நல்ல சஸ்பென்ஸ். க்ளைமேக்ஸை வித்தியாசமாக யோசித்ததற்காக இயக்குநர் அஜய் சாஸ்திரியைப் பாராட்டலாம்.
என்னைத் தெரியுமா? தெரியுது கொஞ்சம் போல...!