Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்,Varutha Padatha Valibar Sangam
23 செப், 2013 - 15:37 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » வருத்தப்படாத வாலிபர் சங்கம்

  

தினமலர் விமர்சனம்


வழக்கமான கிராமத்து காதலில், கொஞ்சம் நகைச்சுவை ‘ஜிகர்தண்டா’ சேர்த்திருக்கிறார்கள். கடைசி 30 நிமிடங்களில் எகிறும் ‘சிரிப்பு வெடிகள்’தான், மொத்த படத்தையும் காப்பாற்றுகின்றன. இயக்குனர் பொன்ராம், அரியர்ஸுடன் பாஸ்!

மூன்று பெண்களைப் பெற்று பூரிப்புடன் இருக்கும் சிவனாண்டி (ஹீரோயின் தந்தை), ஊரின் பெரிய லொள்ளு பார்ட்டி! அவரது கடைசிப் பெண் லதா பாண்டியன் (புதுமுகம் ஸ்ரீதிவ்யா) பத்தாம் வகுப்பில் ஆரம்பிக்கிறது கதை! வெட்டியாக சுற்றுவதையே வேலையாகக் கொண்ட போஸ் பாண்டி (சிவகார்த்திகேயன்), நண்பன் கோடியுடன் (சூரி) ‘வெட்டி’ சங்கம் ஆரம்பித்து, அலப்பறைகளை அள்ளிவிடுவது ஒரு பக்கம். சிவனாண்டியை ஏற்றிவிட்டு சுகம் காணும் ‘அல்லக்கை’ கூட்டம் இன்னொரு பக்கம். கல்யாணி (பிந்துமாதவி) டீச்சருக்கு காதல் கடிதம் கொடுக்க, லதாவை பயன்படுத்துகிறான் போஸ். ஒரு சூழலில்... டீச்சர்-போஸ் காதல் முறிகிறது. லதாவின் பக்கம் போஸின் பார்வை திரும்புகிறது. போஸ்-லதா இணைந்தார்களா? என்பது க்ளைமாக்ஸ்.

கதை... உப்பில்லாத சப்பாத்திதான்! என்றாலும்... இன்னும் அலுத்துப்போகாத சிவாவும்‌, ‘லொள்ளு’ காமெடியில் கவனம் ஈர்க்கும் ஹீரோயினின் தந்தையும் படத்தைப் பார்‌க்கும்படி செய்கிறார்கள். இமான்... இந்தப் படத்தின் எசமான்! ஹரிஹரசுதன் குரலில் ‘‘ஊதா கலரு ரிப்பன்...’’ அசத்துகிறது!

விரசமில்லாத ‌காமெடி, அழகான ஒளிப்பதிவு என, ஒரு ஓடையைப் போல ஓடுகிறது... படம்! ‘ஆழம்’தான் இல்‌லை’

மொத்தத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ - ‘சிரிப்பு பட்டாசு’


ரசிகன் குரல்: பின்பாதி ஜாலி! முன்பாதி காலி!
    



----------------------------------------------------------




நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்


அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com




ஹீரோ வழக்கம் போல வெட்டாஃபீஸ். ஹீரோயின் பிளஸ்டூ படிக்கும் பொண்ணு . ஹீரோ ஹீரோயினோட க்ளாஸ் டீச்சருக்கு லவ் லெட்டர் கொடுக்க அனுமாரா ஹீரோயினை யூஸ் பண்ணிக்கறாரு. டீச்சரும் ஓக்கே தான் , ஆனா திடீர்னு ஒரு ட்விஸ்ட். ஹீரோயினை திருவிழாவில் சேலைல பார்த்துடறாரு ஹீரோ. டக்னு லவ் வந்துடுது , நல்ல வேளை யாரையும் ஸ்விம்மிங் டிரஸ்ல பார்க்கலை.
 
அந்த டீச்சர அம்போன்னு விட்டுட்டு ஹீரோ ஹீரோயினை லவ் பண்றாரு . ஹீரோயின்க்கு ஹீரோ மேல காதல் இருந்தாலும் அதை வெளீல சொல்லாம ஹீரோவை இழுத்தடிக்கறாரு.
ஹீரோயின் அப்பா ஒரு காமெடி பீசு .ஊர் என்ன சொல்லும்?னு4 பேருக்கு பயந்து காதலை எதிர்க்கறாரு . இவங்க காதல் என்ன ஆச்சு? என்பது தான் மிச்சமீதிக்கத.

படத்தோட பி்ளஸ் பாயிண்ட் என்னான்னா சிவா மனசுலசக்தி , பாஸ் என்கிற பாஸ்கரன் , ஒரு கல் ஒரு கண்ணாடி என ஹாட்ரிக் ஹிட் அடிச்ச எம்.ராஜேஷின் உதவி இயக்குநர் இயக்கிய படம் . வசனம் குரு ராஜேஷ் . ஆனா பாருங்க காமெடி வசனங்கள் பெரிய அளவில் கை கொடுக்கலை .
ஹீரோ சிவ கார்த்திகேயன் . எதிர் நீச்சல் ஹிட்டுக்குப்பின் அதை விட ஒரு மாற்றுக்குறைவான சாதா காதல் கதைல நடிச்சிருக்கார். குறை சொல்ல முடியாத நடிப்பு . இவர் கவனமாக கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்தால் துள்ளாத மனமும் துள்ளும் விஜய் ரேஞ்சுக்கு முன்னேற முடியும் . பாடல் காட்சிகளில் விஜய், காமெடிகாட்சிகளில் ரஜினி என இவர் இமிடேட் செய்யாமல் சொந்த சரக்கையே ட்ரை பண்ணலாம். இவர் ஒன்றும் மதுரை முத்து மாதிரி சொந்த சரக்கில்லாத ஆள் இல்லையே?அதே போல் ரிப்பீட் டான்ஸ் ஸ்டெப் அதிகம் வந்து போவதையும் கவனத்தில் வெச்சுக்கனும்.
 
ஹீரோவுக்கு மாமனார் துப்பாக்கியை வெச்சு பண்ணும் கூத்து சி செண்டர் ஆடியன்சை சிரிக்க வைக்கும் . படம் முழுக்க விறைப்பாவே வரும் இவர் க்ளைமாக்சில் காமெடியன் ஆகி இருப்பது நம்ப முடியவில்லை என்றாலும் மக்கள் ரசிக்கிறார்கள் .
 
புரோட்டா சூரி தான் காமெடியன். இவர் கிட்டே என்ன குறைன்னா இவர் பாடி லேங்குவேஜ் பூரா வடிவேலுவை இமிடேட் பண்ணுவது. மனசுக்குள் சந்தானம் மாதிரி பஞ்ச், கவுண்ட்டர் டயலாக் கொடுக்கனும் என நினைப்பது , ஆனா வெறும் நினைப்பு மட்டும் தான் , அவருக்குன்னு சொந்த உழைப்பு ஏதும் இல்லை. இயக்குநர் சொன்னபடிசெய்கிறார், அவ்வளவுதான்

ஹீரோயின் புதுமுகம் ஸ்ரீ வித்யா , பால் மணம் மாறா பாலகி. பார்க்கவே பாவமா இருக்கு. ஹோம்லியான முகம். பாஸ் மார்க் வாங்கிடும் .

பிந்து மாதவி டீச்சராக 2 சீனில் வந்தாலும்கொள்ளை கொள்ளும் அழகு. பின்னால லோ ‘ப’ கழுத்து ஜாக்கெட் போட்ட டீச்சரை நான் இப்போதான் பார்க்கறேன். ஆசிரியர் தின சிறப்பு டிரஸ் போல .

ஹீரோவின் மாமனாருக்கு அடிபொடிகளாக வரும் காதல் தண்டபாணி உட்பட்ட 4 பேரும் ஆங்காங்கே சிரிக்கவைக்கிறார்கள்.

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. படம் பூஜை போட்ட நாள் முதல் வெளிவரும் ஸ்டில்கள் , போஸ்டர் டிசைன் எல்லாமே நல்ல ஒரு காமெடிப்படம் மாதிரி தோற்றத்தை ஏற்படுத்தியது.
2. இயக்குநர் எம்.ராஜேஷ் தான் வசனம் என்பதை போஸ்டர்களில் முன்னிலைப்படுத்தியது
3. பெண்கள் தியேட்டரில் பார்க்கும்படி அனைவருக்கும் கண்ணியமான ஆடை அலங்காரங்களில் செய்த நேர்த்தி
4. வசனங்களில் பிரமாதமான காமெடி இல்லாவிட்டாலும் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டி விட்டது போல் சிச்சுவேஷன் காமெடி ட்ரை பண்ணியது
5. பட்டி தொட்டி எல்லாம் சூப்பர் ஹிட் ஆன ஊதாக்கலரு ரிப்பன் பாடல் காட்சி அதகளம் , தியேட்டரில் செம ஆட்டம், இந்தப்பொண்ணுங்களே இப்படித்தான் பாட்டும் ஹிட்தான்

இயக்குநரிடம் சில கேள்விகள்: திரைக்கதையில், நடன அமைப்பில் சில ஆலோசனைகள்

1. ஓப்பனிங்க் சீனில் ஆல மரத்தடியில் படுத்திருக்கும் பரோட்டா சூரி போலீஸ் ஆஃபீசரிடம் படுத்தவாக்கில் 2 காலால் வணக்கம் சொல்வதெல்லாம் ஓவர்.கவுண்டமணி கூட இப்படி நடிச்சதில்லை. பொருத்தமும் இல்லை . என்ன தான் காமெடி என்றாலும் எந்த போலீஸ் ஆஃபீசராவது இதை சகித்துக்கொள்வாரா? பார்க்கும் நமக்கே சகிக்கலை, கோபம்வருது .
2. கோர்ட்டில் ஜட்ஜ் அய்யாவைப் பார்த்து போலீஸ் ஆஃபீசர் சல்யூட் வைக்காமல் எதுக்கு கூழைக்கும்பிடு போடறார்? அவர் என்ன ஜமீன்தாரா?
3. திண்டுக்கல் ரீட்டா கரகாட்டக்காரியின் ஆட்டம் மேடையில் நடக்கும் போது ஹீரோயினின் தோழி இடது கையில் இடது கை விரலால் வாயில் விரல் வைத்து விசில் அடிக்குது . அதே போல் நான் கடவுள் மொட்டை வில்லன் இடது கையால் சாக்லெட் எடுப்பதும் ஏன்?
4. ஹீரோ மாமனாருக்கு விழா ,ஆட்டம் , பாட்டம் எல்லாம் பிடிக்கலைன்னா எதுக்கு அந்த விழாவுக்கு வர்றார்? வீட்டிலேயே படுத்து இருக்கலாமே?
5. இம்சைஅரசன் 23-ஆம் புலிகேசியில் வடிவேலு ஆல்ரெடி செஞ்ச மாடிப்படி சறுக்குவிளையாட்டுகாமெடியை பரோட்டா சூரி செய்வது எரிச்சல்
6. மருதாணி வாங்கும் ஹீரோயின் தோழியிடம் அந்த மருதாணியை முகத்துல வை , அப்பவாவது நீ கலர் ஆவியா?ன்னுபார்க்கலாம் என்ற வசனம் தேவை இல்லாதது . ஏன்னா அதை வசனம் பேசும் சிவகார்த்திகேயன், அதை எழுதிய ராஜேஷ் இருவருமே மாநிறம் தான் என்பதை மறந்து விடக்கூடாது . மேலும், ஒரு படத்தில் கறுப்புநிறத்தை கிண்டல் செய்வதெல்லாம் அந்தக்காலம் , மாடர்ன் யுகத்துக்குவாங்கப்பா
7. ஹீரோ ஹீரோயின் இருவருக்கும் பரஸ்பரம் காதல் வரும் காட்சி படு அபத்தம் . ஹீரோ ஹீரோயினை ஸ்கூல் யூனிஃபார்மில் பார்க்கும்போது வராத காதல் அவரை சேலையில் பார்த்ததும் வருவது கூட தேவலை . ஆனால் ஹீரோயினுக்கு நடக்க இருந்த திருமணத்தை ஹீரோ தடுத்து நிறுத்திட்டாரென்பதைகேட்ட மாத்திரத்தில் காதல் வருவது காதலை கேலிக்கூத்து ஆக்குகிறது . காமெடிப்படம் என்றாலும் காதல் மலரும் தருணம் மிக முக்கியமானது , அதை காமெடிஆக்கக்கூடாது.
8. கலக்கலான ஊதாக்கலரு ரிப்பன் பாட்டு படமாக்கலில் கொண்டாட்டம் குறைவு.இன்னும் பிரமாதப்படுத்தி இருக்கலாம். அந்த பாட்டு விஷுவலில் மட்டும் நடன இயக்குநரிடம் இன்னும் வேலைவாங்கி இருக்கலாம் . இந்த மாதிரி செம ஹிட் ஆன பாட்டுக்கு டான்ஸ் மூவ்மென்ட் ரொம்ப முக்கியம் , இந்த சிச்சுவேஷனில் மொக்கை காமெடி எல்லாம் ட்ரை பண்ணக்கூடாது.
9. பயங்கர வில்லனா வர்றவரு அவங்க வீட்டு பசு மாட்டை, கிணத்துல விழுந்தவுடன் ஹீரோ காப்பாத்திட்டார் என்ற ஒரே காரணத்துக்காக உருகுவதும் , காதலுக்கு ஓக்கே சொல்வதும் படு சொதப்பல்
10 . ஹீரோயின் பேரு லதா பாண்டி.அதுக்காக எல்லா காட்சிகளிலும் அவரை அம்மா ஃபுல் நேம்சொல்லி கூப்பிடுவது ஏன்? லதாஅப்டித்தானே பொதுவா கூப்பிடுவாங்க.இந்தக்காலத்துல ராஜின்னு பேரு வெச்சாலே நீளமா இருக்குன்னு சுருக்கி ரா அப்டின்னு கூப்பிடற மாடர்ன் காலம் .

மனம் கவர்ந்த வசனங்கள்


1. போற இடத்துல எல்லாம் புரோட்டாவை எதிர்பார்க்கக்கூடாது.
2. விடிகாலைல எந்திரிச்சு பரீட்சைக்கு படிக்கறவனும் ,பொண்ணுங்க நம்மைக்கண்டுக்கலையேன்னு கவலைப்படறவனும் நம்ம சங்கத்துக்கு சரிப்படமாட்டான்.
3 சர்க்கஸ்னா சிங்கம் இருக்கனும்.திருவிழான்னா நம்ம சங்கம் இருக்கணும்.
4. காமெடியனுக்குத்தெரியுமா காதலோட அருமை.
போடா டேய். அதனால என்ன? வில்லனுக்கு தெரியுமே?
5. சும்மா வெறும் லவ் லெட்டர் குடுத்தா எப்டி? க்ரீட்டிங் கார்டு வாங்கி சாக்லெட் வெச்சுக்குடு வாங்கிக்கறேன்.
அய்யோ.ரொம்ப காஸ்ட்லி லவ் மாதிரி தெரியுதே?
6. நாட்டு நடப்புல குடிகாரங்க தான் பல உண்மைகளை வெளிலசொல்றாங்க
7.வாழ்க்கைல டீட்டிகெஷன் ரொம்ப முக்கியம்
டேய், அது டெடிக்கேஷன் டா
கோபத்துல எனக்கு அப்படித்தாண்டா வரும்.
8. இவன் கவிப்பேரரசு ஏ ஆர் ரஹ்மானையே மிஞ்சிட்டாண்டா
அடப்பாவி , ஒரு டீ வாங்கிக்குடுத்தான்கறதுக்காக இப்படி எல்லாம் அள்ளி விடறதா?
9. நீ பேசும்போதே ஏகப்பட்ட ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் வருது . இதுல கவிதை வேறயா? விளங்கிடும்.
10 . நீ என் வீட்டுப்பக்கமே வரமாட்டியே , எங்கே, எதுக்கு வந்தே?
நீ எப்படி இருக்கே?ன்னு பார்த்துட்டு ப்போகவந்தேன் மாப்ளை.
11. இப்படி 1000 ரூபா சட்டை , 750 ரூபா ஷூ , 500 ரூபா பேண்ட் கலர் ஃபுல்லா இறங்குனா அவ என்ன நினைப்பா ?
அடுத்த ராமராஜன் நீதான் -னு நினைப்பா.
12 என் நண்பனை யார் கலாய்ச்சாலும் என்னால சும்மா இருக்க முடியாது
டேய்
13 . துப்பாக்கின்னா தோட்டா இருக்கணும் , பிளக்ஸ் பேனர்னா அதுல நம்ம ஃபோட்டோ இருக்கணும்
14. நீ எப்போடா சட்ட ஆலோசகர் ஆனே?
போன வாரம் தான் அப்ளிகேஷன் போட்டுவெச்சேன்.
15. இதை எல்லாம் நான் சொன்னா சிரிச்சிடுவாங்க ஜனங்க
நான் சொன்னா மாட்டும் ?
16. உனக்கு என்ன நரம்புத் தளர்ச்சியா? அடுத்தவன் சோத்தை பரிமாற உனக்கு ஏன் கை இப்படி நடுங்குது ?
17. அடிப்பாவி . கண்ணை மூடிக்கறேன்
யோவ் , மூட வேண்டியது நாங்கதான்
அந்த பழக்கம் தான் உங்களூக்கு அறவே கிடையாதே ?
18. கெழ போல்ட்டு - திண்டுக்கல் ரீட்டா எங்கே?அந்த கட்டை வந்தாத்தான் இந்தக்கட்டை வேகும்
ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி ஊத்துனா எல்லா கட்டையும் வெந்துடும்.
19. காதல் மனசுக்குள்ளே இருந்தாலும் அதை வெளீல காட்டிக்கக்கூடாதுடி. அவனுங்களை அலைய விடனும்
இது தேறாதுன்னுஅடுத்த பார்ட்டிக்கு ரூட்டுபோடகிளம்பிட்டா ?
அந்த வல்லமை இவர்க்கு இல்லை ( அந்த வேய்க்கானம் இவருக்கு இல்லை )
20. டேய் , என்னடா பண்றே? இதெல்லாம் நம்ம சங்க செட்யூலிலேயே இல்லையேடா ?
இனிமே சங்கமே இல்லை
21. மாப்ளை, ஓசில ஓடற படம் தானே? யார் பார்த்தா என்ன ? ( தூக்கக்கலக்கத்தில் ஹீரோயின் ஆடை விலகும்போது சூரியின் வசனம்)
22.. ஏய், மேரேஜ்க்கு முன்னால ஒரு ரிகர்சல் பார்க்கலாமா?
23. டேய் , என் கட்டை அவுத்து விடுங்கடா
சுத்தம் , உன்னை கட்டவே இல்லையே?
24. என்ன வேணும் ?
எல்லாமேவேணும் , ஹி ஹி
25. சிவப்புகலர் ல சீவுனா ஃபர்ஸ்ட் நைட் ஒழுங்கா நடக்காதுடா
அடப்பாவி , சிவப்புக்கலர் சீப்புக்கும் , முதல் இரவுக்கும் என்னடா சம்பந்தம் ?
26. கொஞ்சம் பவுடர் வேணும்
ஏன் நீங்க கொண்டாரலையா?
அவசரத்துல ப்ளீச்சிங்க் பவுடர் கொண்டாந்துட்டோம்
27. டியர் , 2 நாள் ல உன் முடிவை சொல்லிட
அப்டி முடியலைனா?
3 நாள் ல சொல்லு
28. காதல் ஒர்க் அவுட் ஆகனும்னா பிசிக்கல் டச் ரொம்ப முக்கியம்டா மாப்ள
29. விலக்கி விடும் ஆட்கள் இருக்கும் தைரியத்துல தான் இவனுங்க இப்படி அடிச்சுக்கறாங்க , கண்டுக்கவே கண்டுக்காதீங்க; தானா சரி ஆகிடுவாங்க
30 . சிவணாண்டி மாடு கிணத்துல விழுந்துடுச்சு
சிவணாண்டி விழலை ?
31. ஹீரோயின் - அய்யோ , அப்பா
ஹீரோ -நான் அப்பாஆக இன்னும் டைம் இருக்கு
32 மைனர் , மேஜர் இதெல்லாம் கல்யாணத்துக்குத்தான் போல, கழட்டி விடுறதுக்கு வயசே தேவை இல்லை போல . அப்பா பேச்சத்தான் கேட்பேன்னா எதுக்குடா இந்த பொண்ணுங்க நம்ம மனசுல ஆசையைத்தூண்டனும் , அவங்கபேச்சையே கேட்டுட்டு வீட்டுலயேஇருக்கறதுதானே?
33. தாய் இல்லாம வளர்ந்த பையன்தான் தனக்கு வர்ற மனைவியை தாயா பார்த்துப்பான்
34. சின்னப்பொண்ணு - அக்கா உங்களைக்கூப்பிடறாங்க , சீக்கிரம் வாங்க
ஹீரோ - யாரு?உங்கக்காவா? நல்லா இருப்பாங்களா? பார்க்க ?
அய்யோ , எங்கக்கா இல்லை லதா அக்கா


சி பி கமெண்ட் வருத்தப்படாத வா ச - சாதா காதல் கதை, காமெடி பற்றாக்குறை.


---------------------------------------------


குமுதம் விமர்சனம்


‘படத்தின் தலைப்பே கதை. நீதி எல்லாம் பெரிதாய் எதிர்பார்த்து வராதீர்கள். சும்மா கொஞ்ச நேரம் ஜாலியாக சிரித்துவிட்டுப் போங்கள்’ என்பதைச் சொல்லாமலே சொல்லிவிடுகிறது.

அப்புறம் என்ன?

சிவகார்த்திகேயன், சூரி இரண்டு நகைச்சுவைத் துப்பாக்கிகளோடு ஸ்ரீதிவ்யாவின் தந்தையான நிஜத்துப்பாக்கியும் இருப்பதால் கலகல மழையில் தாராளமாக நனைந்துவிட்டு வரலாம்.

கதை?

மகள், காதல் திருமணம் செய்துகொண்டால், தன் காதை அறுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் தந்தை. எதிர்பார்த்ததுபோல் மகள் காதல் வலையில் விழுந்துவிட, காதலர்களை மலைமேல் குடி வைத்துவிட்டு, அவர்களைக் கொலை செய்துவிட்டதாய் சீன் போடுகிறார். க்ளைமாக்சில் என்ன? உண்மை தெரிந்து தந்தையின் காது காணாமல் போவதுதான் வ.வா.ச.! இயக்கம் பொன்ராம்.

சிவகார்த்திகேயன் வழக்கம்போல் நக்கல்களால் நகைக்க வைக்கிறார். கூட சூரி வேறு கவுன்ட்டர் கொடுப்பதால் கலகல கல்லா கட்டுகிறது. காதலிக்குக் கல்யாணம் என்ற பரபரப்பான நிலையில் காதலியிடமிருந்து ஒரு சிறுமி ஓடிவந்து ‘அக்கா கூப்பிடறாங்க’ என்று சிவாவிடம் சொல்ல, ‘அப்படியா உங்க அக்கா நல்லா இருப்பாங்களா?’ என்று கேஷுவலாகக் கேட்கும்போது தியேட்டர் கிழிகிறது. சிவாயும் சூரியும் பயங்கரமாய் சண்டை போட, குறுக்கே போகும் ஓர் ஆசாமி, ‘ஓரமாய்ப் போய் விளையாடுங்கப்பா’ என்று அசால்ட்டாகக் கூற, இருவரும் அதிர்ந்துபோகும் காட்சி செமை.

புதுமுகம் ஸ்ரீதிவ்யா முகத்தில் ஆவின் பால் வழிகிறது.ஸ்கூல் யூனிபார்மில் சாதாரணமாய் இருந்தவர், நம் ஊர் புடவையைக் கட்டியதும் பால்கோவாவாய் மாறிவிடுகிறார்!

கையில் எப்போதும் துப்பாக்கியுடன் ஹீரோயினின் தந்தை. கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பது தெரிகிறது. ஏன் தலைவா? அவர் கூடவே இருக்கும் அந்த நான்கு அல்லக்கைகளும் எரிச்சலைக் கிளப்பிக்‌கொண்டே இருக்கிறார்கள்.

ஸ்ரீதிவ்யாவின் கால்களை சிவா ரசிக்கும்போது சூரியும் ஜொள்ளுவிட, முறைக்கும் சிவாவிடம், ‘ஓசியில ஓடற படத்தை யார் பார்த்தா என்ன?’ என்று புலம்புவது பலே! வசனம், ராஜேஷ்!

‘ஊதா கலரு ரிப்பன்’ பாடலும், ‘இந்தப் பொண்ணுங்களே’ பாட்டும் பட்டையைக் கிளப்புகிறது. இமான்!

ஹீரோயினின் தந்தை மனம் மாறவேண்டும் என்பதற்காக ஒரு பசுமாட்டை கிணற்றில் இறக்கி கொடுமைப்படுத்தியிருக்க வேண்டாம்.

பத்து நிமிடமே வந்தாலும் பிந்துமாதவி கண்ணால் சொக்க வைக்கிறார். ஆனால் அவர் எதற்காக வந்தார் என்பதுதான் தெரியவில்லை.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - வருத்தத்தை மறக்கலாம்.


குமுதம் ரேட்டிங் - ஓகே.





-------------------------------------


கல்கி விமர்சனம்



‘‘ஆர்ட் படம், சோஷியல் படம்னு மெரட்சிக் காட்டுவான்க. போய்ப் பார்த்தா டுபாக்கூரா ஆயிரம் பொத்தல் இருக்கும். ஆனா இது அப்படியில்ல மச்சி. விக்கலும், நக்கலுமா ‘மிக்கி மெளஸ்’ மாதிரி இந்தப்படத்துல சிவனாண்டி, போஸ்பாண்டி (சிவகார்த்திகேயன்) வந்து கலக்குறாங்க. மெலிசா வாழக்காய சீவி மாவுல முக்கி சொய்யுனு பஜ்ஜி  சுடுறா மாதிரி சின்னச்சின்ன அட்வைஸ காமெடியில முக்கிச் ‌சொய்யுனு சிரிக்க வெக்குறாங்கடா’’.

‘‘அப்படியென்ன மாமு சொல்லிட்டாங்க இந்த காமெடி படத்துல?’’

‘‘படிக்கிற பொண்ண லவ்வுக்குப் பயந்து திடுதிப்பின்னு நிறுத்தி கல்யாணத்தை செஞ்சி ஏண்டா காவு வாங்குறீங்க? லவ்வு ஒரு குத்தமாடா? புடிச்சவனோட ஆச தீர வாழட்டுமே. வெத்து கெளரவத்த காட்டி ஏண்டா பொண்ணு வாழ்க்கைய நாசமாக்கிறீங்க?ன்னு கி்ச்சுகிச்சு மூட்டியே சொல்றானுக. தியேட்டர்ல ஜாதி கட்சிக்காரங்க கூட உழுந்து உழுந்து சிரிக்கிறாங்க விவரம் புரியாம’’.

‘‘அட... அப்போ டைரக்டர் பொன்ராம் பாஸாயிட்டாருன்னு சொல்லு’’.

‘‘அத விட வசனம் எழுதுன ராஜேஷ் வாயில சக்கரய கொட்டணும்... ‘நீ தலைவனா இருப்ப, அப்புறம் உம்புள்ள, அதுக்கப்புறம் உம்பேரன், நாங்க எப்பவும் இப்படி செயலாளராவே இருக்கணுமா’ன்னு கோடி +2 (பரோட்டா சூரி) கேக்கும்போது தலையில கொட்டுறா மாதிரி ஜனங்க கைய தட்டுறாங்க மச்சி’’.

‘‘கடசியா நீ கதய சொல்லிவியா மாட்டியா?’’

‘‘அட ஓப்பனிங்கில்... காதலிச்ச குத்தத்துக்காக சிவனாண்டி பெத்த பொண்‌ணையே கண்ட துண்டமா வெட்டினவருன்னு ஸ்டார்ட் பண்றாங்க. என்னடான்னா ஒரு வாய்த்தகராறுல சிவனாண்டி ‘எம் பொண்ணுங்க காதலிச்சு ஓடிட்டா நான் காத அறுத்துக்கிறேன்’னு சபதம் உடுறாரு. அதனால 2 பொண்ணுங்க படிப்பை பாதியில நிறுத்திக் கல்யாணம் பண்ணிடுறாரு. 3வது பொண்ணு (ஸ்ரீதிவ்யா)க்கும் அப்படி பண்ணும்போது நம்ம ஹீரோ தடுத்து நிறுத்துறாரு. அந்தப் பொண்ண லவ்வும் பண்றாரு. மோதல் ஸ்டாட்டாகுது. காதல் என்னாச்சு? பொண்ண ஏன் வெட்டுனாரு? இதுதான் கத’’.

‘‘அட நாதாரி பெத்த பொண்ண வெட்டிட்டு...’’

‘‘பதறாத மாமு. பெத்த அப்பனே மனசு மாறி ஊருக்குத் தெரியாம லட்ச ரூபா கொடுத்து ஆசபட்டவனோடு ஊர விட்டு ஓடிப்போய் வாழுன்னு அனுப்பி வெச்சது அப்புறம் தெரியுது. இமான் மியூசிக்கும் யுகபாரதி பாட்டும் மழகாலத்துல கருவாட்டுக் கொழம்பு மாதிரி நச்சுன்னு இருக்கு. அதுலேயும் எல்லார் வாயிலே‌யும் பாட வர்றா மாதிரி வார்த்தைங்க போட்டு... ‘ஊதா கலரு ரிப்பன் - உனக்கு யாரு அப்பன், ரோஜா ‌கலரு பொம்மி - உனக்கு யாரு மம்மி’ - அட தூள்.

‘‘சிலுக்குவார்பட்டி கிராமத்தை பாலசுப்பிரமணியம் சிலுக்கு மாதிரி அழகா காமிச்சு இருக்காரு. சிவனாண்டி தான் பெரியார் ஆளுங்கிறத காமெடியிலும் ‌சொல்லிட்டாரு. விடிஞ்சா லவ் பண்ண பொண்ணுக்குக் கல்யாணம். நைட்ல சோகத்துல இருக்குறப்ப  ஒரு பொண்ணு ‘அக்கா உங்கள அவசரமா வரச்சொன்னாங்க’ன்னு சொன்னதும் சிவகார்த்திகேயன், ‘பாப்பா உங்க அக்கா அழகா இருப்பாங்களா?’ என்று அசால்டா அடுத்த வேலைய பாக்கப்போகும்போது ஜனங்க சிரிக்கிறாங்க. இதுதானே பிராக்டிக்கல் மாமு. எல்லாரும் இப்படி டேக் இட் ஈஸின்னு எடுத்துகிட்டா ஆஸிட்  வீசுறதுக்குத் தோணாதே?’’

‘‘அப்போ படம் ஏ கிளாஸ்னு சொல்லு...’’

‘‘சிரிக்கத் தெரிஞ்ச எல்லா கிளாஸ் சனங்களும் இந்தச் சங்கத்துல சேரலாம்’.



வாசகர் கருத்து (42)

Madhu Sreenivasan - Salem,இந்தியா
28 செப், 2013 - 14:44 Report Abuse
Madhu Sreenivasan எவனாவது குறை சொன்னீங்க அவ்வளவு தான். குறை சொல்றவன் எல்லாம் படத்தை தியேட்டர்ல போய் பாருங்கடா என் டொமாடோ......
Rate this:
kaviya - coimbatore,இந்தியா
28 செப், 2013 - 10:06 Report Abuse
kaviya பிலிம் சூப்பர் காமெடி இதை நல்ல இல்லைன்னு சொல்லறவங்க இதை விட நல்ல பிலிம் எடுத்து காமீங்க பார்க்கலாம்...
Rate this:
kaviya - coimbatore,இந்தியா
28 செப், 2013 - 10:00 Report Abuse
kaviya vry super
Rate this:
rajmohamed - nagapattinam  ( Posted via: Dinamalar Android App )
21 செப், 2013 - 09:34 Report Abuse
rajmohamed super movie nice comedy... I enjoy full movie great siva
Rate this:
Sai Subramanian - Chennai,இந்தியா
16 செப், 2013 - 21:43 Report Abuse
Sai Subramanian என்னதான் சொல்லுங்க, அவர் மாதிரி வருமா? இதெல்லாம் காலத்தின் கட்டாயம் வேறென்ன சொல்ல ......சாய்சு
Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in