கே.ஜி.வீரமணி இயக்கத்தில் அறிமுக நாயகர் ஜெய ஆனந்த் - ரஹானா இணைந்து நடிக்க., ரொம்பவும் டைமிங்காக, மதுபானக் கடைகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டும்... எனும் தமிழக மக்களின் இன்றைய மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் பூமிகா இன்பெரா டெவலப்பர்ஸ் வழங்க, இன்பெரா பிலிம்ஸ் புரொடக்ஷன் பேனரில், எம்.ரெஜினா பேகம் தயாரிக்க, வந்திருக்கும் படம் தான் 'திறப்பு விழா.
தந்தையின் குடிப்பழக்கத்தால் தன் குடும்பம் மொத்தையும் இழந்த நாயகன், அரசு மதுக்கடையில் வேலை பார்த்தப்படியே மதுவுக்கு எதிராக, மக்களைத் திரட்டி போராடி, அதில் தன், உயிருக்கு உயிரான காதலியின் உயிரையும் பறிகொடுத்து அந்த ஊரில் மதுவையும், மதுக்கடையையும் ஒழித்து ஊரையும் மக்களையும் காப்பது தான் திறப்பு விழா படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்.
மதுவுக்கும், போலி மதுவுக்கும் எதிரான போராட்டத்தினால் அரசுக்கும், அயோக்கியர்களுக்கும் பகையாளி ஆகி பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி அவைகளில் இருந்து மீண்டு வரும் நாயகராக புதுமுக நாயகன் ஜெய ஆனந்த், மதுபானக் கடையை மூட வேண்டும் எனும் தனது கொள்கைக்காக , போராடும் காட்சிகளில் தத்ரூபமாக நடித்து, தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மதுக்கடைக்கு எதிராக போராடும் ஒரு இளைஞனாக அவரது துடிப்பு மிக்க நடிப்பு படத்திற்கு மேலும், பலத்தை கூட்டியிருக்கிறது... எனலாம்.
அழகிய கிராமத்து நாயகியாக ரஹானா, தன் உயிருக்கு உயிரான காதலனின் மது எதிர்ப்பு கொள்கைக்காக., க்ளைமாக்ஸில் உயிரையும் கொடுத்து நடித்திருக்கும் தனது கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் வாழ்ந்திடுகிறார். கிராமத்து இளம் பெண்ணாக அம்மணியின் யதார்த்தமான நடிப்பு, ரொம்ப நாளைக்கு அப்புறம் ரசிக்கும்படி இருக்கிறது.
மொடாக் குடிகாரர்களாக நாயகியின் அப்பா ஜி.எம்.குமாரும், நாயகரின் அப்பா பசங்க சிவக்குமாரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
போலி மது விற்பனை பேர்வழியாக நாயகரை முறைக்கும் வில்லனாக சி.காமராஜ், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார். மேலும், பாவா லஷ்மன், முனிஸ், விஜய் சந்தர், கவிதா பாலாஜி, ரெங்கநாயகி உள்ளிட்ட அனைவரும் அவரவர் பாத்திரம் உணர்ந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
நிலம் என்பவரது அர்த்தம் பொதிந்த கதையும், வசனங்களும் இப்படத்திற்கு கூடுதல் பலத்தை கூட்டியிருப்பது பெரிய ப்ளஸ். பி.ஜி.வேலின் படத்தொ குப்பில் காட்சிகள் இன்னும் சற்றே சிறப்பாக செதுக்கப்பட்டிருக்கலாம். ஆர்.பி.செல்வாவின் ஒளிப்பதிவில் கிராமிய எழில் கொஞ்சும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.
வசந்த ரமேஷ் இசையில் "வெள்ளாடு மேஞ்ச பொட்டக்காடு....", "அக்டோபர் மழையில....", "இந்தா, இந்தா வாங்கிக் கய்யா...", "தடதட ரயில..." , "பருத்தி பூ பூக்கும்..." உள்ளிட்ட மண் மணம் கமழும் பாடல்கள் படத்திற்கு பெரும் பலம். படத்தின்பின்னணி இசையிலும் பெரிய குறை இல்லை என்பது ஆறுதல்
தமிழகத்தின் தற்போதைய சூழலில் மிகமுக்கிய பிரச்சனையாக கருதப்படும் மதுபானக் கடையால் ஏற்படும் பாதிப்பு, மதுப்பிரியர்களால் அவர்களது குடும்பத்திற்கு ஏற்படும் இழப்புகள்... ஆகியவற்றை, யதார்த்தமாக, அதேநேரம் துணிச்சலாக திரையில் காட்டியிக்கிறார் படத்தின் இயக்குநர் கே.ஜி.வீரமணி. மது மற்றும் ,மதுக்கடைகளால் ஏற்படும் பிரச்சனையை பெரிதாக போரடிக்காமல் துணிச்சலாக இயக்கிப்பதற்காக இயக்குநர் வீரமணிக்கு, பாராட்டுத் தெரிவித்து கைகுலுக்கலாம்.
"குடி குடியைகெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தைகெடுக்கும்..." என்பதற்கு சாட்சியாகவும், விழிப்புணர்ச்சியாகவும், தமிழகத்தில் தற்போது நடந்து வரும் போராட்டங்களுக்கு இடையே அப்போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக மதுவுக்கு எதிராக இப்படம்வெளியாகி இருப்பது போற்றுதலுக்குரியது.
ஆக மொத்தத்தில், மதுபானக்கடைகளுக்கு "மூடு விழா காணும் நோக்கில் வந்திருக்கும் திறப்பு விழா - திரையரங்குகளில் விழா கோலம் காணுமா ? பொறுத்திருந்து பார்க்கலாம்!"