தினமலர் விமர்சனம் » ஆண்டவ பெருமாள்
தினமலர் விமர்சனம்
ஒருதலையாக காதலித்த பெண்ணுக்காக... ரவுடிகளின் கூடாரத்தை கலைத்து, களையெடுத்து, அவள் மணம் முடிக்கும்போது, மரணம் தொடும் வாலிபனின் கதை. காதல் தாயத்து கயிறே, கழுத்தை இறுக்கு வினோத ரசவாதம்.
சாரதி(சிவன்) ஒரு வெட்டி ஆபிசர், பாசமுள்ள குடும்பம் அவனுக்கு. ஆனால், அவர் கவனம் எல்லாம் அனிதாவின்(இதயா) மேல்! கண்டதும் காதல் என்பது நாளாக நாளாக கண்டமேனிக்கு காதலாகிறது. ஆனால் அனிதாவுக்கு இவன் மேல் பரிதாபம் கூட இல்லை. மறுக்கப்பட்ட காதலை துறந்து, உருப்பட வழி தேடும் நிலையில் சாரதியின் வாழ்வில் குறுக்கிடுகிறான் ரவி(சசி) என்கிற தாத. ரவியின் பகைமை, தன்னை அவமானப்படுத்திய அனிதாவின் மேல்! சாரதி, ரவியை புரட்டியெடுக்க, அவன் சாகிறான். அவன் கூட்டம் சாரதியை தேடுகிறது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட அனிதாவை, அவள் வீட்டாருடன் சேர்த்து வைக்க சாரதி எடுக்கும் ஆக்ரோஷ அவதாரம் பின் கதை. சாரதியின் முடிவு என்ன? அனிதா என்ன முடிவு எடுக்கிறாள்? என்பது க்ளைமாக்ஸ் சுவாரஸ்யம்.
தமிழ் சினிமாவுக்கு ஏற்ற பக்குவ முகம் சிவனுக்கு. ஆனால், அதற்கேற்றாற்போல கதை அமைக்க தவறியது இயக்குனர் பிரியனின் குற்றம். இதயா, சில கோணங்களில் அழகாக தெரிகிறார். புள்ளி ராஜாவாக வரும் "லொள்ளுசபா ஜீவா சிரிக்க வைக்க முயற்சித்து தோற்றுப்போகிறார். வலித்து திணிக்கப்பட்ட வசனங்கள், வேதனையை வரவழைக்கின்றன. ரவிச்சந்திரனின் இசையில், "காதலைத்தான் சொல்ல, என் காதலிதான் இல்ல..." என்கிற பாடலும், "டாஸ்மாக் குத்தும்", "கண்ணே கண்மணியே கனவாகக் கலைந்தாயோ..." என்கிற சோகப்பாட்டும் ஓரளவு தேறுகிறது. ராபின் சாமுவேலின் ஒளிப்பதிவில் குறையில்லை. 105 நிமிட நீளம் படத்தின் நிறை என்று சொல்ல தோன்றினாலும், கதையில்லாமல், தவிட்டுப்பானையில் சிக்கிய எலியாக படம் திண்டாடுவதற்கு இதுவே அதிகம் என்று மனம் எண்ணுகிறது.
மொத்தத்தில், "ஆண்டவ பெருமாள்", "வெத்து வேட்டு!!"