போதையில் கார் ஓட்டி விபத்து: சல்மானுக்கு கோர்ட் "சம்மன்
மது அருந்தி கார் ஓட்டி, விபத்தை ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில், கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி, பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு, மும்பை கோர்ட், சம்மன் அனுப்பியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான். இவர் மீது, 2002ல், மும்பையில், மது அருந்தி கார் ஓட்டி, விபத்தை ஏற்படுத்தியதாக, வழக்கு தொடரப்பட்டது. இந்த விபத்தில், ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த வழக்கு, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சமூக ஆர்வலரும், வக்கீலுமான, அபா சிங் என்பவர், மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்டில், சமீபத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் கூறப்பட்டதாவது:விபத்து குறித்த வழக்கில், சல்மான் கானுக்கு சாதகமாக, சாட்சியங்களையும், ஆவணங்களையும், போலியாக, போலீசார் தயாரித்துள்ளனர். இந்த வழக்கிலிருந்து, சல்மான் கானை, தப்ப வைப்பதற்கான முயற்சி இது. எனவே, இதுகுறித்து விசாரித்து, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.இதையடுத்து, வரும், 27ம் தேதி கோர்ட்டில் ஆஜராகும்படி, சல்மான் கானுக்கும், சம்பந்தபட்ட போலீசாருக்கும், சம்மன் அனுப்ப, மாஜிஸ்திரேட் கோர்ட், உத்தரவிட்டது.