ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகத்திற்கு, ஏன் இந்தியத் திரையுலகத்திற்கே முக்கியமான ஒரு வருடமாக, மாதமாக 2017ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் அமைந்துவிட்டது. அப்படி அமையக் காரணமாக அமைந்தது ஏப்ரல் 28ம் தேதி வெளியான பாகுபலி 2 திரைப்படம்.
உலக அளவில் ஒரு இந்தியப் படத்திற்கான வரவேற்பும், வசூலும் அபரிமிதாக அமைந்து வருகிறது. இப்படி ஒரு வரவேற்பையும், வசூலையும் இந்தியப் படங்கள் இதுவரை கண்டதில்லை என்பதே உண்மை. முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதை பாகுபலி 2 படத்தின் இயக்குனர் ராஜமௌலி, தயாரிப்பாளர்கள், மற்ற குழுவினர் என அனைவரும் நிரூபித்துக் காட்டிவிட்டார்கள். இந்த தைரியமும், முயற்சியும் இனி மற்ற இயக்குனர்களுக்கும் வரலாம், அதன் மூலம் பாகுபலி 2 படத்தையும் மிஞ்சும் அளவிற்கு எதிர்காலத்தில் வரலாம் என ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
திரையுலகத்தில் ஒரு மறுமலர்ச்சி, புரட்சி, திருப்புமுனை என எத்தனை பெருமையான வார்த்தைகள் போட்டாலும் அது பாகுபலி 2 படத்திற்குப் பொருந்தும். அதனால்தான், ஏப்ரல் மாதம் ஏற்றத்தில் அமைந்த ஒரு மாதமாக அமைந்துவிட்டது.
கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால், 2017ம் ஆண்டில் அந்த அதிகப்படியான எண்ணிக்கை குறைந்து கொஞ்சம் தடுமாற்றத்துடனேயே இந்த ஆண்டு ஆரம்பமானது. ஏப்ரல் மாதத்தில்தான் இந்த ஆண்டின் படங்களின் எண்ணிக்கை 50ஐத் தாண்டிய மாதமாகவும் அமைந்தது. ஏப்ரல் மாதம் முடிய சுமார் 57 படங்கள் வெளிவந்துள்ளன.
தேர்வுகள் நடந்த முந்தைய மாதமான மார்ச் மாதத்திலேயே 25 படங்கள் வெளிவந்தன. ஆனால், விடுமுறை ஆரம்பமான ஏப்ரல் மாதத்தில் 13 படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. பாகுபலி 2 வெளிவந்து அதிக வரவேற்பைப் பெற்றுள்ளதால் இந்த மே மாதத்தில் வெளிவரும் படங்களின் எண்ணிக்கையும் குறையவே வாய்ப்புகள் அதிகம்.
ஏப்ரல் 7ம் தேதி “8 தோட்டாக்கள், ஜுலியும் 4 பேரும், காற்று வெளியிடை, செஞ்சிட்டாளே என் காதல, விருத்தாச்சலம்” ஆகிய படங்கள் வெளிவந்தன. வெளியீட்டிற்கு முன்பாக காற்று வெளியிடை படத்திற்கு அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் வெளிவந்த ஒரு சில நாட்களில் படத்தைப் பற்றி ஆஹா, ஓஹோ என்றார்கள். இருப்பினும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பையும், தாக்கத்தையும் இந்தப் படம் ஏற்படுத்தவில்லை. ரகுமானின் பாடல்களுக்குக் கூட பெரிய வரவேற்பு இல்லை என்பதும் ஆச்சரியம்.
அறிமுக இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெளிவந்த 8 தோட்டாக்கள் படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு இருந்தது. இந்தப் படம் அவருக்கு பெரிய வசூலைத் தரவில்லை என்றாலும் நம்பிக்கையான இயக்குனர் என்ற பெயர் அவருக்குக் கிடைத்துள்ளது. ஜுலியும் 4 பேரும், செஞ்சிட்டாளே என் காதல, ஆகிய படங்கள் புதியவர்களின் முயற்சி. இருந்தாலும் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி, அழுத்தமான காட்சிகளை அமைத்திருக்கலாம். விருத்தாச்சலம் வழக்கம் போல பட்டியலில் ஒரு படத்தைக் கூட்டிய படம்.
ஏப்ரல் 14ம் தேதி “கடம்பன், ப பாண்டி, சிவலிங்கா ஆகிய படங்கள் வெளிவந்தன. தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான ப பாண்டி ஒரு அழகான குடும்பக் கதையாகவும், வயதானவர்களின் காதல் கதையாகவும் வித்தியாசமான படமாக அமைந்தது. தனுஷிடமிருந்து இப்படி ஒரு படமா என பலரும் ஆச்சரியப்பட்டார்கள். ஆர்யா நடித்து வெளிவந்த கடம்பன் நல்ல கதைக்களம் கொண்ட படம். ஆனால், மனதில் பதியும்படியான காட்சிகள் படத்தில் இல்லாதது குறையானது. சிவலிங்கா, ராகவா லாரன்ஸின் வழக்கமான அரைத்த பேயை மீண்டும் அரைத்த படம்.
ஏப்ரல் 21ம் தேதி “ஆவிப் பெண், இலை, நகர்வலம்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இலை படம் பெண்களில் கல்வியைப் பற்றிய நல்ல கதை கொண்ட படமாக அமைந்தது. ஆனால், தமிழ்ப் படமா, மலையாளப் படமா என யோசிக்க வைக்கும் அளவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. நகர்வலம் வழக்கமான காதல் கதை. சாதாரண வேலை செய்யும், ஏழைப் பையன், படித்த, வசதியான பெண் இருவருக்குமான காதல் என இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் எடுக்கப் போகிறார்களோ ?. ஆவிப் பெண் படத்தைப் பார்த்தவர்கள் யாராவது இருந்தால் தொடர்பு கொள்ளவும்.
ஏப்ரல் 28ம் தேதி “அய்யனார் வீதி, பாகுபலி 2” ஆகிய படங்கள் வெளிவந்தன. அய்யனார் வீதி படம் தயாரிப்பாளர் தனக்காகவே எடுத்துக் கொண்ட படம். நாயகன், மற்ற கதாபாத்திரங்களை விட வில்லனாக நடித்த அவர்தான் படத்தில் அதிகம் வருகிறார். மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை.
பாகுபலி 2 படத்தில் பிரமிக்க வைக்கும் காட்சிகள், பிரம்மாண்டம், விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் என மிரட்டல்கள் இருந்தாலும் கதை ரீதியாக, தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில் வெளிவந்த பல சரித்திரப் படங்களின் சாயல் இருந்தது என்பதை தாராளமாகச் சொல்லலாம். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், கடல் புறா என சரித்திர நாவல்களை வியந்து வியந்து படித்தவர்கள் பாகுபலி 2 படத்தின் பல இன்ஸ்பிரேஷன் எதிலிருந்து வந்திருக்கும் எனத் தெரிந்து கொள்ளலாம். இருந்தாலும் தங்களைப் பெரிய இயக்குனர்கள், பிரம்மாண்ட இயக்குனர்கள் என சொல்லிக் கொண்ட மணிரத்னம், ஷங்கர், பாலா ஆகியோர் முயற்சிக்காத ஒன்றை ராஜமௌலி முயற்சித்து சரித்திர வெற்றியைப் பெற்றுவிட்டார்.
2017 - ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியான பாகுபலி 2 படம் என எதிர்காலத்தில் பல சினிமா கட்டுரைகளில், சாதனைச் செய்திகளில் அந்தத் தேதி இடம் பெறும் பதிவைத் தவிர்க்கவே முடியாது. இந்தச் சாதனையை எதிர்காலத்தில் வேறு படங்கள் முறியடித்தாலும், இப்படி ஒரு சாதனையை முதலில் நிகழ்த்திய படம் அன்று வெளியான படம் என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த பெருமையுடன் 2017 ஏப்ரல் மாதம் சினிமா வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடிக்கும்.
ஏமாற்றம்... வரவேற்பு... பிரமாண்டம்...!
மொத்தத்தில், ஏப்ரல் மாதத்தில் எதிர்பார்க்காத ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது, எதிர்பாராத வரவேற்பும் கிடைத்துள்ளது, எதிர்பார்த்ததற்கும் மேலாக மாபெரும் ஏற்றமும் கிடைத்துள்ளது. ஏமாற்றம், மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த காற்று வெளியிடை, வரவேற்பு, தனுஷ் இயக்கிய முதல் படமான ப பாண்டி, மாபெரும் ஏற்றம் பாகுபலி 2.
ஏப்ரல் மாதம் வெளியான படங்கள்...
ஏப்ரல் 7 : 8 தோட்டாக்கள், ஜுலியும் 4 பேரும், காற்று வெளியிடை, செஞ்சிட்டாளே என் காதல, விருத்தாச்சலம்
ஏப்ரல் 14 : கடம்பன், ப பாண்டி, சிவலிங்கா
ஏப்ரல் 21 : ஆவிப் பெண், இலை, நகர்வலம்
ஏப்ரல் 28 : அய்யனார் வீதி, பாகுபலி 2