ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மணிரத்னத்தின் உதவியாளர் தனா இயக்கியுள்ள படம் படைவீரன். பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவர்களுடன் அமிர்தா, கல்லூரி அகில் உள்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இசை விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது டைரக்டர்கள் மணிரத்னம், மிஷ்கின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குனர் மணிரத்னம் பேசுகையில், என் படங்களில் பணியாற்றும் போது படப்பிடிப்பு தளம், ஸ்கிரிப்ட் எழுதும்போது என அனைத்திலுமே தனாதான் முதலில் நிற்பார். படப்பிடிப்பு தளத்தில் ஏதேனும் அடிதடின்னாலும் அவர்தான் முதலில் நிற்பார். அவர் தனது படத்திற்கு படைவீரன் என்று பெயர் வைத்ததில் எனக்கு வியப்பே இல்லை. முதலில் எழுத்து, அப்புறம் நாடகம், இப்போது சினிமா என எல்லாத்திலயும் ஆர்வம் உள்ளவர். அதை தாண்டி ஒரு வெறி அவருக்கு உண்டு. அதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
இங்கே வந்து டிரெய்லரில் பார்த்தால் போலீஸ் டிரஸ் போட்டுக்கொண்டு டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார். எதையும் அவர் விடுவதில்லை. என்னுடன் அவர் 6 வருடங்கள் இருந்தபோதும், உதவி இயக்குனராக மட்டுமே இல்லாமல் நண்பராக நெருக்கமாக பழகக்கூடியவர். முன்பு அவர் என்னிடம் ஒரு கதை சொன்னார். அவங்க ஊரைச்சுற்றி நடக்கக்கூடிய ஒரு கதையை ஐந்து நிமிடத்தில் சொன்னார். வித்தியாசமாக இருந்தது. ஆனால் எனக்கு சரியாக பிடி கிடைக்கல. ஆனால் மூன்று மாசத்துக்கு அப்புறம் ஜெயமோகனின் வெப்சைட்டில் புதிய எழுத்தாளர்கள் என்று அறிமுகம் செய்திருந்தார்.
அதில் முதல் கதையாக தனா எழுதிய கதை வந்திருந்தது. அதை படித்துப்பார்த் தேன். என்னிடம் சொன்ன கதையை அவர் எழுதின விதம் ரொம்ப அற்புதமாக இருந்தது. எனக்கு பிரமிப்பாக இருந்தது. அட நம்ம ஆளு இப்படி பண்ணிட்டாருப்பா என்கிற சந்தோசம் இருந்தது. இந்த படைவீரன் படத்தை பார்க்கும்போதும் அதே சந்தோசம் எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த படத்தில் நடித்திருக்கிற பாரதிராஜா சார் வருவார் என்று எதிர்பார்த்தேன். அவர் வரவில்லை. அவரை ரொம்பவே மிஸ் பண்றேன். தமிழ் சினிமாவை முழுமையாக மாற்றியவர் என்றால் அது பாரதிராஜாதான். தென்னிந்திய சினிமாவில்கூட யாருமே இல்லை என்றுதான் சொல்வேன். இந்த மேடையில் அவர் இருந்திருந்தால் கொஞ்சம் நேரம் ஜாலியாக பேசிக்கொண்டிருந்திருக்கலாம். இந்த படைவீரன் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.