'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்க ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் 2.0 படத்தின் முதல் பார்வை வெளியீடு இன்று மாலை மும்பையில் நடைபெற்றது.
விழாவில் 2.0 படத்தின் மூன்று முதல் பார்வை புகைப்பட டிசைன்களை வெளியிட்டார்கள். ஒன்றில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் இருவரும் நேருக்கு நேர் முறைத்துக் கொள்ளும் போஸ்டரும், இரண்டாவதாக ரஜினிகாந்தின் தனி போஸ்டரும், மூன்றாவதாக அக்ஷய் குமாரின் தனி போஸ்டரும் ஆக மூன்று போஸ்டர்களை வெளியிட்டார்கள்.
விழா நிகழ்ச்சிக்கு தமிழ்ப் பத்திரிகையாளர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. ரஜினிகாந்த் விழாவில் பேசியது போல அக்ஷய்குமார்தான் படத்தின் நாயகன் என்று சொன்னதாலோ என்னமோ விழாவை மும்பையில் நடத்தியிருக்கிறார்கள் போலிருக்கிறது.
விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நிர்வாகத் தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம், இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, படத்தொகுப்பாளர் ஆண்டனி, ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி, கலை இயக்குனர் முத்துராஜ், சண்டைப் பயிற்சியாளர் சில்வா, விஎப்எக்ஸ் ஸ்ரீனிவாச மோகன், வால்ட் ஜோன்ஸ், பாடலாசிரியர் மதன் கார்க்கி, வசனகர்த்தா ஜெயமோகன், தமிழ் நடிகர்கள் ஆர்யா, விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஹிந்தித் திரையுலகத்திலிருந்து சல்மான் கான் மட்டுமே வந்திருந்தார். பிரபல இயக்குனர் கரண் ஜோஹர் விழாவைத் தொகுத்து வழங்கினார்.
விழாவில் படத்தைப் பற்றிப் படக்குழுவினர் பேசியதிலிருந்து....
ரஜினிகாந்த் : ஷங்கருடன் வேலை பார்ப்பது கடினமான ஒன்று. அவர் எதையும் சரியாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பார். அதனால்தான் 25 வருடங்களாக அவர் இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். இப்படத்தில் நடிப்பதே சிறந்தே அனுபவம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் 2.0 படத்தின் ஹீரோ அக்ஷய் குமார்தான். இந்தப் படத்தில் உங்களுக்கு எந்த கேரக்டர் வேண்டும் என்று கேட்டிருந்தால் நான் அக்ஷய் குமார் கேரக்டரைத்தான் தேர்ந்தெடுத்திருப்பேன். அந்தக் கேரக்டர்ல அக்ஷய் சூப்பரா பண்ணியிருக்காரு. படம் வந்த பிறகு இந்த நாடே அவரைப் பாராட்டும்.
அக்ஷய் குமார் : இந்த 25 வருஷத்துல நான் மேக்கப்பே போட்டதில்ல. அதைச் சேர்த்து வச்சி இந்தப் படத்துல எனக்குப் போட்டுட்டாங்க. 3 மணி நேரம் இந்தப் படத்துக்காக மேக்கப் போடுவாங்க. நான் எப்பவுமே பொறுமையான ஆளு. இந்தப் படத்துல அது இன்னும் அதிகமாகிடுச்சி. ஷங்கர், ரஜினிகாந்த் இருக்கிற படத்துல நானும் இருக்கிறன்கறது எனக்கு ரொம்பப் பெருமை. ரஜினி சார் கூட நடிக்க என்னைக் கேட்ட போது எனக்கு ரொம்ப ஷாக்கா இருந்துச்சி...அவர் கூட நடிக்கிறதே ஒரு பெருமை.
ஷங்கர் : ஒவ்வொரு படம் இயக்கும் போது என்னை நான் ரசிகனாதான் பார்ப்பேன். எந்திரன் படத்தை விட இந்தப் படம் 10 மடங்கு வித்தியாசமான படமா இருக்கும். அந்தப் படத்துல எவரெஸ்ட் சிகரம் ஏற மாதிரியான ஒரு அனுபவம். ஆனால், இந்தப் படத்துல அந்த எவரெஸ்ட் சிகரத்தை என் மேல தூக்கி வச்சிக்கிட்டு ஏற மாதிரியான ஒரு அனுபவம்.
ஏ.ஆர்.ரகுமான் : நானும், ஷங்கரும் ஒருத்தருக்கொருத்தர் முன்மாதிரியா இருந்துப்போம். அவரைப் பார்த்து நான் நிறைய கத்துக்கிட்டிருக்கேன். அவரோட விஷன் ரொம்ப வித்தியாசமாக இருக்கும். இசையைப் பத்திக் கூட அவர் நிறைய தெரிஞ்சி வச்சிருக்காரு. ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பா கவனிச்சி கேட்டு வாங்குவாரு.
எமி ஜாக்சன் : இவ்வளவு பெரிய நடிகர்கள் கூட நானும் நடிக்கிறேன்கறது எனக்குக் கிடைச்ச மிகப் பெரிய அதிர்ஷ்டம். அவங்க கிட்ட இருந்து நான் நிறைய கத்துக்கிட்டேன்.
ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா : இப்ப இந்தப் படத்தைப் பத்தி எதுவும் சொல்ல மாட்டேன். இது மிகப் பெரிய, பிரம்மாண்டமான படம். இதுக்கு முன்னாடி இப்படி ஒரு படத்தைப் பார்த்திருக்க மாட்டீங்க.
படத் தொகுப்பாளர் ஆண்டனி : எந்திரன் படத்தை விட இந்தப் படம் 10 மடங்கு சவாலான படமா இருந்தது. படத்தை 3டி கண்ணாடி போட்டுதான் எடிட் பண்ணணும். ஒவ்வொருத்தரும் அவங்களோட திறமைய அற்புதமா வெளிப்படுத்தியிருக்காங்க.
ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி : பல இரவுகள் தூங்காம இந்தப் படத்துக்காக உழைச்சிருக்கோம். ஒரு புதிய ஒலி தொழில்நுட்பத்தை இந்தப் படத்துல பார்க்கலாம். அது இந்த உலகத்துக்கே புதிதா இருக்கும். அது என்னன்கறத இப்ப சொல்ல முடியாது, அது ரகசியம்.
விஎப்எக்ஸ் கலைஞர் ஸ்ரீனிவாச மோகன் : எந்திரன், பாகுபலி ஆகிய படங்களை விட இது மிகப் பெரிய படம். ஒரு புதிய டெக்னாலஜியை இந்தப் படத்துல பார்க்கலாம். இந்தப் படத்துல பணி புரிந்ததே மிகப் பெரிய அனுபவம்.
மதன் கார்க்கி : எந்திரன் படம்தான் நான் வசனகர்த்தாவா அறிமுகமான முதல் படம். ஷங்கர் சார் எப்பவுமே பெஸ்ட்டைத்தான் விரும்புவாரு. அதுக்கேத்தபடி இந்தப் படத்துல பாடல்களைக் கொடுத்திருக்கேன்.
கலை இயக்குனர் முத்துராஜ் : ஒரு அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த படம். ரோபோட்டுகளை உருவாக்கியது எல்லாமே ரொம்ப வித்தியாசமா இருக்கும். இந்தப் படம் மிகப் பிரமாதமா இருக்கும்.
சண்டைப் பயிற்சியாளர் சில்வா : இந்தப் படம் ஒரு ஷங்கர் சாரோட படம், ரொம்ப சூப்பரா இருக்கும்.
சல்மான் கான் : 2.0 முதல் பார்வை திரையிடும் நேரத்தில் ஹிந்தித் திரையுலகின் வசூல் நாயகன் சல்மான் கான் வந்து கலந்து கொண்டார். அவர் பேசும் போது, “ரஜினி சாருக்காக நான் வந்ததேன். அவர் ஒரு அற்புதமான மனிதர், அவர் மேல எனக்கு தனி மரியாதை உண்டு. அக்ஷய் குமார் ஒரு கடின உழைப்பாளி. கஷ்டப்பட்டு உழைச்சி மேல வர்ற ஒவ்வொருத்தருக்கும் அக்ஷய்குமார் ஒரு உதாரணம். இயக்குனர் ஷங்கர் ஒரு மிகப் பெரிய, பிரம்மாண்டமான படத்தைக் கொடுக்கப் போறாருன்னு தெரியுது,” என்றார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு இயக்குனர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், ரகுமான் ஆகியோர் பதிலளித்தனர்.
சல்மான் கானுடன் நடிப்பீர்களா என ரஜினிகாந்திடம் கேட்ட போது, “சல்மான் கான் சரி என்று சொன்னால் நாளை கூட நடிப்பேன்,” என்றார்.
ரஜினிகாந்த்திடம் உங்கள் இப்போதைய வயதில், எதிர்காலத்தில் இந்தியத் திரையுலகத்தில் யார் சூப்பர் ஸ்டாராக இருப்பார்கள் என ஒருவர் கேட்டதற்கு ரஜினிகாந்த், நோ கமென்ட்ஸ் என பதிலளித்தார்.
“பாகுபலி 2, 2.0 ஆகிய படங்கள் போல ஒவ்வொரு மாதமும் படங்கள் வெளிவந்தால் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமா இருக்கும் என ஒருவர் கேட்டதற்கு ஷங்கர் பதிலளித்தார்.
“2.0 ஒரு கடினமான படம், நான் என்ன பண்ணாலும் எனக்கு அவ்வளவு சீக்கிரமா திருப்தி வரலை,” என்றார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், “2.0 திரைப்படம் இந்தியத் திரையுலகத்தின் மதிப்பு மிக்க சினிமாவாக இருக்கும். இந்தப் படம் நிச்சயமாக ஹாலிவுட் தரத்தில் இருக்கும்,” என்றார்.
நிர்வாகத் தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம் நன்றியுரையாற்றினார்.
நிகழ்ச்சியின் முடிவில் மூன்று பக்கமும் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான திரையில் 2.0 படத்தின் முதல் பார்வையை 3டி வடிவத்தில் திரையிட்டனர்.
2.0 படக்குழுவினர் அனைவருமே இந்தப் படம் உலகமே வியக்கும் ஒரு படம் ஆக இருக்கும் என்று சொன்னதை நாமும் அனுபவித்து மகிழ 2017ம் ஆண்டு தீபாவளி வரை காத்திருக்க வேண்டும்.