தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
நடிகர் சங்க தேர்தலை போலவே தயாரிப்பாளர் சங்க தேர்தலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. ஏனென்றால் எந்தாண்டும் இல்லாத அளவுக்கு வரவிருக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பல்முனைப்போட்டி உருவாக உள்ளது, இதனால் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற பரபரப்பு ஆரம்பமாகியுள்ளது.
ஏவிஎம்., நிறுவனம், மாடர்ன் தியேட்டர்ஸ், ஜெமினி ஸ்டுடியோஸ், வாஹினி ஸ்டுடியோ என பல பிரமாண்ட தயாரிப்பு நிறுவனங்களை கொண்டது தமிழ் சினிமா. தயாரிப்பாளர்களுக்கு என்று தனி சங்கம் உள்ளது. இதில் தலைவர், துணை தலைவர், பொருளாளர், செயலாளர் என பல பதவிகள் உள்ளன. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இரண்டாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கிறது. தற்போது, எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகிகள் பொறுப்பு வகித்து வருகின்றனர்.
2017, ஜனவரியில் தேர்தல்
திருட்டு விசிடி பிரச்னை, சிறுபட்ஜெட் படங்கள் ரிலீஸாவதில் பிரச்னை... என பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது தயாரிப்பாளர்கள் சங்கம். இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்து வரும் தாணுவின் பதவி காலம் ஜனவரியில் முடிவடைவதையொட்டி, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு கோர்ட் மூலம் ஜனவரியில் வெளியாக உள்ளது.
பல்முனைப்போட்டி
இதனிடையே எந்தாண்டும் இல்லாத அளவுக்கு வரவிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் பல்முனைப்போட்டியை சந்திக்க உள்ளது.
மீண்டும் தேர்தல் களத்தில் தாணு
தற்போது தலைவர் பொறுப்பில் உள்ள தாணு அணியினர் மீண்டும் களமிறங்க உள்ளனர். தாணு மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார்.
முன்னாள் தலைவர் கேயார் அணி
முன்னாள் தலைவர் கேயார் தலைமையிலான ஒரு அணியினரும் இந்த தேர்தலை சந்திக்க களம் காணுகின்றனர். இதுப்பற்றி முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயாரிடம் கேட்டபோது... ‛‛எனக்கு இந்த சமயத்தில் தேர்தலில் நிற்க சரியாகப்படவில்லை, ஆனால் என் அணியில் இருப்பவர்கள் என்னை நிற்க வைக்கும் முயற்சியில் உள்ளார்கள். இந்த முறை பலத்த போட்டி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. சங்கத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி பேசவே எனக்கு மூன்று நாள் தேவைப்படும். அவ்வளவு பிரச்னைகள் உள்ளன. தேர்தலுக்கு இன்னும் ஒருமாத காலம் இருப்பதால் இன்னும் நான் முழுதாக இதில் இறங்கவில்லை என்றார்.
புதிதாக களமிறங்கும் விஷால் அணி
இந்த தேர்தலில் ஏற்கனவே நிர்வகித்த உறுப்பினர்களுடன் புதிதாக விஷாலை மையமாக வைத்து ஒரு இளம் அணியினரும் களம் இறங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அணி சார்பில் ஐசரி கணேஷ், ரித்தீஷ், ஞானவேல் ராஜா, கமீலா நாசர் ஆகியோர் தலைவர், துணை தலைவர், பொருளாளர் மற்றும் செயலாளர்கள் பதவிக்கு போட்டியிடுவார்கள் என தெரிகிறது.
இவர்களுடன் ஏற்கனவே தற்போது துணை தலைவராக இருந்து வரும் பைவ்ஸ்டார் கதிரேசனும், செயலாளராக இருக்கும் சிவசக்தி பாண்டியனும் கூட தலைவர் பதவியை குறிவைத்து களம் காண இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலே சொன்னவர்கள் தவிர்த்து அதிருப்தி தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சியும், நடிகர் மன்சூரலிகான் ஆகியோர் இந்த தேர்தலில் தனித்தனியாக போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது இந்தாண்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பல்வேறு பதவிகளுக்கு சுமார் 500பேர் போட்டியிடுவார்கள் என தெரிகிறது.
புதிதாக 200 தயாரிப்பாளர்கள்
கடந்தாண்டு தேர்தலின் போது சுமார் 970 தயாரிப்பாளர்கள் ஓட்டுபோட தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டு அவர்கள் ஓட்டும்போட்டனர். ஆனால் இந்தாண்டு இன்னும் 230 தயாரிப்பாளர்கள் புதிதாக இணைந்துள்ளனர். இதன்காரணமாக தற்போது தயாரிப்பாளர்கள் தேர்தலில் ஓட்டுபோட 1200 பேர் தகுதியுள்ளவர்களாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலோடு ஒப்பிடும்போது 230பேர் கூடுதலாக இணைந்துள்ளனர்.
காத்திருக்கும் சவால்கள்...
வட்டி கட்டி மீள முடியாமல் தவிக்கும் தயாரிப்பாளர்கள்
கடந்த சில ஆண்டுகளாக வருடத்திற்கு 200க்கும் அதிகமான படங்கள் ரிலீஸாகியுள்ளன. இதில் வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் ஒவ்வொரு ஆண்டும் அதிகப்பட்சமாக 10 முதல் 15 படங்கள் வரை மட்டுமே உள்ளன. மற்ற படங்கள் எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்ததால் பல தயாரிப்பாளர்கள் இன்றும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி முடியாமல் தவித்து வருகின்றனர். இன்னும் சிலரோ தங்களின் சொத்துபத்துக்களை எல்லாம் விற்பனை செய்து கடனை கட்டி வருகின்றனர்.
என்னதான் தயாரிப்பாளர்கள் பலர் நஷ்டப்பட்டாலும் குறிப்பிட்ட சிலர் மட்டும் நல்ல லாபம் சம்பாதித்து வருகின்றனர். அதில் கியூப் சிஸ்டம் முறையில் படம் வெளியிடுபவர்கள், டிவி., உரிமையாளர்கள் சிலர் என படங்களை தொடர்ந்து வாங்கி வெளியிட்டு, ஒளிப்பரப்பி லாபம் பார்த்து வருகின்றனர்.
10 நடிகர்களின் மார்க்கெட் மட்டுமே ஸ்டெடி
தமிழ் சினிமாவை பொறுத்தமட்டில் குறிப்பிட்ட 10 நடிகர்களின் மார்க்கெட் மட்டும் தான் ஸ்டெடியாக இருப்பதால் அவர்களின் படங்களை மட்டும் விநியோகஸ்தர்கள், தியேட்டர்கள் வாங்கி வெளியிட ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மற்ற படங்கள் ரிலீஸாவதில் பிரச்னை நீடிக்கிறது.
திருட்டு விசிடி பிரச்னை
தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாகவே பெரும் தலைவலியாக இருந்து வரும் பிரச்னை திருட்டு விசிடி. முன்பெல்லாம் படம் வெளியான ஒருமாதம், ஒருவாரம் கழித்து தான் திருட்டு விசிடிக்கள் வெளியாகி சினிமாக்காரர்களுக்கு தலைவலி ஏற்படுத்தும். ஆனால் இன்றைக்கு இருக்கும் நவீன யுகத்தில் படம் வெளியான அன்றே இணையதளங்களில் படம் திருட்டு தனமாக வெளியாகி விடுவதால் தியேட்டருக்கு போகும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது. இதனால் ஒரு படம் ஒருவாரம் கூட ஓடுவதே குதிரை கொம்பமாக உள்ளது.
நடிகர்களின் சம்பளம்
பொதுவாக இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான நடிகர்கள் ஒரு படம் ஓடிவிட்டாலே தங்களை ஆஹா, ஓஹோ என்று எண்ணிக்கொண்டு தங்களது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி விடுகின்றனர். இதனால் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விளம்பரம்
இன்றைக்கு ஒரு படத்தை தயாரிப்பதை விட அதை ரிலீஸ் செய்ய மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஆகும் புரொமோஷன் செலவு தான் தயாரிப்பாளர்களை மலைக்க வைக்கிறது.
வரமா...?, சாபமா...?
ஆண்டுக்கு ஆண்டு தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்தாண்டு 970 பேர் உறுப்பினர்களாக இருந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இப்போது 1200 பேர் உள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரும் படம் தயாரிக்கிறார்களா...? என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் உண்மை. ஒருகாலத்தில் தயாரிப்பு நிறுவனத்தில் கொடி கட்டி பறந்த ஏவிஎம்., நிறுவனம் கூட இன்று சினிமா தயாரிப்பிலிருந்து ஒதுங்கி நிற்கிறது. சினிமாவை நேசித்து படம் தயாரித்தவர்களின் காலம் போய்... இன்று காசு இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் படம் தயாரிக்கலாம் என்ற நிலைக்கு இந்த சினிமா உலகம் தள்ளப்பட்டுள்ளது. இது வரமா...?, சாபமா...? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
இதுபோன்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பல பிரச்னைகள் உள்ளன. இவை எல்லாவற்றுக்கும் விடை காண்பது என்பது அவ்வளவு எளிதல்ல, இருந்தாலும் இந்த சாவல்கள் எல்லாவற்றையும் முன் வைத்து புதியவர்கள் பலர் தேர்தலில் களம் இறங்க உள்ளனர். அவர்கள் அதில் வெற்றி பெற்று தயாரிப்பாளர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுப்பார்களா..?, தயாரிப்பாளர்களுக்கு புதிய விடியல் பிறக்குமா...? என்று பொறுத்திருந்து பார்ப்போம்...!