பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
துடிக்கும் இதயமும், இவர் பெயர் கேட்டால் நடிக்கும். கேமரா முன் முகம் சிவந்தால், எரிமலை கூட வெடிக்கும். அதனால் தான், ஏற்ற பாத்திரங்களுக்கே, அவரை பிடிக்கும். சின்னையாபிள்ளை கணேசனாக பிறந்து, உலக சினிமாவின் உயிர் நாடியாய் உலா வந்த அந்த மூன்றெழுத்து, மூச்சுக் காற்றிருக்கும் வரை மறையாது. உடல், பொருள், ஆவி அத்தனையும், தமிழ் சினிமாவிற்கு அர்ப்பணித்த அந்த அதிசய பிறவிக்கு பெயர் "சிவாஜி. தன்னை படைத்த கடவுளுக்கே, தன் நடிப்பில் முகம் கொடுத்தவர். பராசக்தியில் தொடங்கி, படையப்பா வரை, இவரை மிஞ்ச எவரப்பா? இன்று அவரது 88வது பிறந்தநாள், இந்தநாளில் அவரைப்பற்றிய சில நினைவலைகளை சற்று திரும்பி பார்ப்போம்...
திருச்சி சங்கிலியாண்டவர்புரத்தில் சின்னையா மன்றாடியார்-ராஜாமணி தம்பதியருக்கு நான்காவது மகனாக 1928 அக்., 1ல் பிறந்தார் சிவாஜி. கணேசமூர்த்தி என பெற்றோர் பெயர் வைத்தனர். பள்ளிப்படிப்பை துவங்கிய சிவாஜிக்கு படிப்பு மீது நாட்டம் இல்லை. அக்கம் பக்கத்து தெருக்களில் நடந்த பாவைக்கூத்துகளும், புராண நாடகங்களும், சிறுவன் சிவாஜியை கவர்ந்தன. திருச்சி தேவர் ஹால் ஒரு மகா கலைஞனின் பாதங்களை தாங்கும் பாக்கியம் பெற்றது. மராட்டிய மாவீரன் சிவாஜி கேரக்டரில் வாழ்ந்ததால் தந்தை பெரியாரால் சிவாஜி கணேசன் என்று அழைக்கப்பட்டு அதுவே நிலைத்த பெயரும் ஆனது. மக்கள் கொடுத்த பட்டம் நடிகர் திலகம்.
‛பராசக்தி'யில் ஆரம்பித்த ‛சக்சஸ்'
பராசக்தி நாடகத்தில் நடித்தார். அதன் பெருமை அறிந்த நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாள் முதலியார், ஏ.வி.மெய்யப்பசெட்டியாருடன் இணைந்து படமாக எடுக்கவும், அதில் சிவாஜியை நடிக்க வைக்கவும் முடிவு செய்தார். ஏதையும் ஆராய்ந்து முடிவு செய்யும் ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கு புதிய நடிகரான சிவாஜியை வைத்து சினிமா எடுத்தால் ஓடுமா என்ற சந்தேகம் எழுந்தது. அன்றைய சூழலில் பிரபலமாக இருந்த கே.ஆர்.ராமசாமியை நடிக்க வைக்கலாம் என ஆலோசனை கூறினார். அதை ஏற்க மறுத்த பெருமாள்முதலியார், சிவாஜியே நடிக்கட்டும் என்ற உறுதியுடன் 1951ல் அப்படம் எடுக்கப்பட்டது. முதல் வசனமாக சக்ஸஸ் என சிவாஜி பேசிய இடம் இன்றும் ஏ.வி.எம்., ஸ்டூடியோவில் நினைவு சின்னமாக திகழ்கிறது.
வெற்றி தந்த ‛பா' வரிசை படங்கள்
சிவாஜிக்கு பா வரிசையில் அமைந்த படங்கள் வெற்றியை தந்தன. அண்ணன் தங்கை பாசத்தை விளக்கும் பாசமலர், மகளுக்கும் தந்தைக்கும் உள்ள பாசத்தை விளக்கும் பார் மகளே பார், படித்தால் மட்டும் போதுமா, பாலும் பழமும், நிச்சய தாம்பூலம் போன்ற படங்கள் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன.
தெய்வங்களையும், விடுதலை வீரர்களையும் கண்முன் நிறுத்தியவர்
வீரபாண்டிய கட்டபொம்மனாக, கப்பலோட்டிய தமிழனாக, பாட்டுக்கொரு புலவன் பாரதியாக, கர்ணனாக சிவாஜி நடித்தது வரலாற்றின் பதிவு. கட்டபொம்மன் இப்படி இருப்பார் என்று சிவாஜியின் நடிப்பை பார்த்து தானே தெரிந்து கொண்டோம். திருமால் பெருமை, திருவருட்செல்வர், திருவிளையாடல் போன்ற படங்களில் தெய்வகளை கண்முன் நிறுத்தியவர். தமிழில் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
இன்றைய இளம் தலைமுறையினருக்கு முன்னோடி
வாழ்நாளின் இறுதிவரை தொழில் பக்தி, நேரம் தவறாமை போன்ற குணங்களால் போற்றப்பட்டார். இன்றைய இளம் நடிர்களுக்கு முன்னோடியாக திகழ்பவரும் அவர் தான்.
அரசியலில் ஜெயிக்க தவறியவர்
காமராஜரின் தொண்டராக காங்கிரசில் இணைந்தார். பிறகு காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற அரசியல் கட்சி தொடங்கினார். அரிதாரத்தில் ஜெயித்த சிவாஜியால் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை. நான் சாகும்வரை அன்னை இல்லத்துக்குள் அரசியல்வாதிகள் நுழையக்கூடாது என்று அறிவித்தார்.
பட்டிதொட்டிகளில் எல்லாம் சிவாஜி பாட்டு
கண்ணதாசனின் எழுத்து, டி.எம்.சவுந்திரராஜனின் குரல், எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை ஆகியவற்றால் சிவாஜியின் படப்பாடல்கள் இன்றும் பட்டிதொட்டிகளில் அன்றாடம் ஒலிக்கின்றன.
அங்கீகரிக்காத இந்திய அரசு
உலகமே அவரை சிறந்த நடிகர் என்று புகழ்ந்தபோதும் இந்திய அரசு அவரை சிறந்த நடிகராக தேர்வு செய்ததே இல்லை. இது ஒரு வருத்தமான விஷயமும் கூட. இருந்தபோதும் மத்திய அரசியின் பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியர் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, தெலுங்கு அரசின் என்டிஆர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
2001ல் அவர் மறைந்த போது, சிவாஜி என்ற மிகப்பெரும் நடிகரின் சுவடுகள் தமிழ் மண்ணிலும், தமிழர் மனதிலும் என்றும் பதிந்திருக்கும்.
இந்தநாளில், அவரது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, அவரைப் பற்றிய நினைவுகளையும், வாழ்த்துக்களையும் நீங்கள் பதிவு செய்யலாம்.