டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புட். தொடர் தோல்விப்படங்கள் கொடுத்தாலும் ஒவ்வொரு படத்திலும் புத்துணர்ச்சியுடன் நடித்து வருகிறார். தற்போது தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த தெம்போடு களத்தில் இறங்கியுள்ளார். செப்., 30ம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் தோனி படத்தில் நடித்த அனுபவம் பற்றியும், அதற்காக தான் மேற்கொண்ட பயற்சிகள் குறித்தும் சுசாந்த் சிங் அளித்த சிறப்பு பேட்டி இதோ...
‛தோனி' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது உங்களது மனநிலை எப்படியிருந்தது.?
கடந்த 12 ஆண்டுகளாக தோனியின் மிகத்தீவிர ரசிகன் நான். முதன்முதலாக 2004ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தான் தோனியை முதன்முதலில் பார்த்தேன். அப்போது எனக்கு கல்லூரியில் தேர்வும் நடந்து வந்தது. என்ன ஒரு பேட்டிங் ஸ்டைல், அவருடைய நீண்ட தலைமுடி உள்ளிட்ட பல விஷயங்களை ரசித்தேன். அப்போது முதல் அவரை சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதன்படி போலீஸாக உள்ள எனது சகோதரன் மூலம் அதற்கான முயற்சி எடுத்தேன். 2006-07-ம் ஆண்டு மொகாலியில் நடந்த மற்றொரு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் என் சகோதரரன் மூலமாக தோனியை நேரடியாக சந்தித்தேன், அவருடன் போட்டோவும் எடுத்து கொண்டேன். என் வாழ்நாளில் அந்த நாளை மறக்க முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருடைய ரோலில் நடிக்க வாய்ப்பு வந்தபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது. படத்தில் என்னை நடிக்க கேட்டதும் உடன் சம்மதம் சொன்னேன்.
உங்களது பார்வையில் தோனி பற்றி சொல்லுங்க.?
தோனி ஒரு வியத்தகு மனிதர். ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்து இன்றைக்கு கிரிக்கெட் உலகில் இவ்வளவு பெரிய இடத்தை பிடித்திருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. அவர் தன்னுடைய கிரிக்கெட் வீரன் கனவை நினைவாக்கியிருக்கிறார். அவர் எல்லோருக்கும் ஒரு ரோல் மாடலும் கூட. தோனியிடம் இன்னொரு ஆச்சர்யமான விஷயம் இருக்கிறது. பொதுவாக மனிதர்கள் தங்களின் கடந்தகாலங்களையும், எதிர்காலத்தையும் பற்றி தான் அதிகம் சிந்திப்பார்கள். ஆனால் தோனியோ, நிகழ்காலத்தை மட்டுமே இந்த நொடிப்பொழுதை மட்டுமே சிந்திப்பார், அதை அவர் மகிழ்ச்சியுடன் எடுத்து செல்வார். இதுதான் அவருடைய வெற்றியின் ரகசியம் என்று நினைக்கிறேன்.
தோனி படத்திற்காக உங்களை எப்படி நீங்கள் தயார்படுத்தினீர்கள்.?
பொதுவாக கற்பனைக்கு எட்டாத கதாபாத்திரங்களில் கூட சுலபமாக நடித்துவிடலாம். ஆனால் ஒருவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஏனென்றால் கற்பனைக்கு எட்டாத கதாபாத்திரங்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஒருவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் போது அவர்களை பற்றி அனைவரும் நன்கு அறிவர். எனவே அவர்களை அப்படியே பிரதிபலித்து நடிப்பது என்பது கொஞ்சம் சிரமமான ஒன்று தான். தோனி படத்தை பொறுத்தமட்டில் நான் சுமார் 100 மணிநேரத்திற்கு மேலாக அவர் பற்றி வீடியோவை பார்த்தேன், அவரைப்போன்று குணாசதியங்கள் கொண்டு வர நிறைய பயிற்சி எடுத்தேன். குறிப்பாக தோனியின் பேட்டிங் ஸ்டைலை கொண்டு வர நிறைய பயிற்சி எடுத்தேன். ஒருவரியில் சொல்ல வேண்டும் என்றால் தோனி மாதிரி வர தோனியையே அதிக முறை பார்த்தேன்.
சமீபத்தில் வெளியான கிரிக்கெட் வீரர் அசார் பற்றிய படம் சரியாக போகவில்லை, தோனி படம் அசார் படத்திலிருந்து எந்தளவு மாறுப்பட்டது.?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கதைகளம் வித்தியாசப்படும். எம்எஸ் தோனி படத்தில் அவரின் சிறு வயது முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், அவருடைய வாழ்க்கையில் நடந்த பல்வேறு விதமான விஷயங்களை சொல்ல போகிறோம். நிச்சயம் இந்தப்படம் ரசிகர்களை கவரும் விதமாக இருக்கும். தோனி எப்படி டிக்கெட் செக்கராக இருந்து கிரிக்கெட் வீரராக மாறினார் என்பதை படத்தில் சொல்ல இருக்கிறோம். அதுமட்டுமல்ல தோனியின் எண்ணங்கள் என்ன.?, தன் வாழ்க்கையில் அவர் எடுத்த முக்கியமான முடிவு அவரை எப்படி மாற்றியது உள்ளிட்ட விஷயங்களை படத்தில் உணர்வுப்பூர்வமாக படமாக்கியுள்ளோம். ஒருமுறை சுனில் கவாஸ்கரே, தோனியின் எண்ணங்களை அறிய நான் விரும்புகிறேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
உங்களின் சமீபத்திய படங்கள் சரியாக போகவில்லை? ஒரு நடிகராக உங்களை இது பாதிக்காதா.?
நிச்சயம் பாதிக்காது. நான் ஒரு நடிகன், அதற்காக நான் சம்பளமும் பெறுகிறேன். ஒரு படம் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் எனக்கு பாதிப்பில்லை. ஆனால் படம் தோல்வியை தழுவினால் கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்யும். அதேசமயம் ஒரு தயாரிப்பாளர் லாப-நஷ்டம் எல்லாவற்றையும் பார்பார். தோனி படத்துக்கு பிறகு நான் 6 படங்களில் நடிக்க உள்ளேன், அதேசமயம் 12 படங்களை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டேன். வெறும் பணத்திற்காக மட்டும் நான் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வது கிடையாது. நான் வாழ என்னிடம் போதுமான பணம் உள்ளது. பணத்திற்காகவும், புகழுக்காகவும் நான் நடிக்கவில்லை. இன்ஜினியரிங்கை விட்டுவிட்டு மேடை நடிகராக, சீரியல் நடிகராக கடந்து அதன்பின்னர் தான் சினிமாவிற்கு வந்தேன். ஒருவேளை சினிமாவில் நான் வெற்றி பெறாவிட்டால் கூட மீண்டும் மேடை நடிகராக மாறிவிடுவேன்.
தோனி படத்தில் நடித்த பின்னர் கிரிக்கெட் பற்றி உங்களின் எண்ணம் என்ன.?
ஒரு ரசிகனாக, பார்வையாளனாக இருந்து கொண்டு இந்த ஷாட்டை இப்படி அடித்திருக்கலாம், அந்த பாலை அப்படி போட்டிருக்கலாம், இந்த கேட்ச்சை இப்படி பிடித்திருக்கலாம் என்று சொல்லலாம். ஆனால் களத்தில் இறங்கி விளையாடும் போது தான் ஒவ்வொருவருக்கும் அதில் உள்ள கஷ்டம் தெரியும். தோனி பட ஷூட்டிங்கின் போது அதை நான் உணர்ந்தேன். குறிப்பாக விக்கெட் கீப்பர்கள் படும் பாட்டை நன்கு அறிந்தவன் நான். ஒருபேட்ஸ்மேன் ஒரு பந்தை எதிர்கொள்ளும்போது அது நல்ல விதமாக இருக்கும். அதேசமயம் அடுத்த பந்து அந்த பேட்ஸ்மேனை தாக்க கூட செய்யும். எனவே இனி நான் எந்தவொரு கிரிக்கெட் வீரரை பற்றியும் குறை சொல்ல மாட்டேன், விமர்சிக்க மாட்டேன். இப்போது கிரிக்கெட்டை பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளேன்.
இவ்வாறு சுசாந்த் சிங் ராஜ்புட் கூறினார்.