டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமாவில், சில நடிகர்கள் வருவதும், மார்க்கெட் இழந்து போவதும் வழக்கமானது தான். அதில், சில நடிகர்கள் மட்டும் தான், தொடர்ந்து போராடி, தங்கள் இடத்தை தக்கவைக்க முயற்சிக்கின்றனர். அந்த வகையில், எந்த சினிமா பின்னணியும் இல்லாமல், சினிமாவுக்குள் வந்து, வெற்றி பெற்ற நடிகர் வித்தார்த், அவர் நடித்து வெளியாக உள்ள குற்றமே தண்டனை படம் பற்றியும், தன்னைப் பற்றியும் நம்மிடம் பேசுகிறார்.
கொஞ்ச நாளாக உங்களை பற்றி செய்தியே இல்லையே?
நான் எங்கும் போகவில்லை; சினிமாவுக்குள் தான் இருக்கிறேன். காக்கா முட்டை படம் எடுத்த இயக்குனர் மணிகண்டனின் இயக்கத்தில், குற்றமே தண்டனை படம் வெளியாவதற்கு ரெடியாகியுள்ளது. அதற்கு பின், குரங்கு பொம்மை, ஒரு கிடாயின் கருணை மனு என, அடுத்தடுத்து படங்கள் வரவுள்ளன. லேட்டானாலும், நல்ல படங்களில் நடிப்பது நல்லது தானே; அதனால் தான் இந்த அமைதியும், இடைவெளியும்.
குற்றமே தண்டனை படம் எதைப் பற்றி பேசப் போகிறது?
குற்றம் செய்த யாராக இருந்தாலும் தண்டனை உண்டு என்பதை பற்றி, பேசும் படம் தான் இது. த்ரில்லர் படம்; நவீன பின்னணியில் சொல்கிறோம். இந்த படம் வெளியானதும், விவாதத்துக்கு உள்ளாகும். இந்த படத்துக்கு பாடல் கிடையாது. ராஜாவின் பின்னணி இசை மட்டுமே படத்தை துாக்கி நிறுத்தும்.
புதுமுகங்கள் படையெடுப்பு அதிகமாக உள்ளதே?
புது முகங்கள் வருகை அதிகம் என்பது உண்மைதான்; இதற்கு முன், கதைகளை சரியாக தேர்வு செய்யவில்லை. இப்போது தான் நல்ல கதைகள் கிடைக்கின்றன. இனி, ஆண்டுக்கு ஒரு படம் நடித்தாலும், அது, மக்கள் கொண்டாடும் படமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். புதுமுகங்கள் அதிகமாக வந்தால் தான், போட்டி அதிகமாக இருக்கும். நிலையான இடத்தை தக்க வைக்க, நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்.
நீங்கள் தயாரிப்பாளரானது பற்றி?
நாமும் ஏதாவது செய்ய வேண்டுமே என்ற ஆர்வம் தான், இதற்கு காரணம். நாம் நடிக்க ஆசைப்படும் படங்களை, நாமே தயாரித்தால் என்ன என்ற கேள்வி தான், படங்களை தயாரிக்க துாண்டியது; மற்றபடி, வியாபார நுணுக்கங்கள் இன்னும் தெரியவில்லை. யாருமே எதையும் தெரிந்து கொண்டு, சினிமாவுக்கு வருவது இல்லை. அனுபவங்கள் மூலமாகவே கற்றுக் கொள்கின்றனர்.
சினிமா உங்களை மாற்றியதா அல்லது சினிமாவுக்காக நீங்க மாறினீர்களா?
நான் மாறவில்லை. ஆனால், என்னை மாற்றிக் கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்கு சினிமாவில் உள்ள பலரை தெரியாது. அவர்களிடம் பழக்கம் இல்லை. குற்றமே தண்டனை படத்தின் புரமோஷனுக்கு, எந்த நடிகரிடம் உதவி கேட்பது என்று கூட எனக்கு தெரியவில்லை; விஷாலிடம் பேசினேன்; ஆர்யாவிடம் பேசும்படி கூறினார். ஆர்யா தான், மற்ற நடிகர்களிடம் பேசி, இந்த விஷயத்தில் உதவினார். வாங்க பிரதர்; நம்ம ஜோதியில் ஐக்கியமாகுங்க என, இயல்பாக பேசினார் ஆர்யா. இப்படிப்பட்டவர்களுடன் நட்பில்லாமல் இருந்தது, எனக்கு மைனஸ் தான்.
மைனா படம் கிடைத்திருக்காவிட்டால்...?
இன்னும் கொஞ்ச நாளைக்கு சின்ன சின்ன வேடங்களில் தான் நடித்துக் கொண்டு இருந்துருப்பேன். மின்னலே, கொக்கி படங்களில் சிறிய வேடங்களில் நடித்தேன். பிரபு சாலமன் தான், கூத்து பட்டறையில் இருந்து என்னை கூட்டி வந்து, மைனா பட வாய்ப்பை தந்தார்.
வீரம் படத்தில் அஜித்துடன் நடித்தீர்கள்; வேறு எந்த நடிகருடனாவது நடிக்கும் ஆசை உள்ளதா?
நான் அஜித் ரசிகன் என்பதால், அந்த படத்தில் நடித்தேன். எந்த நடிகர் கூட வேண்டுமானாலும் நடிக்க தயார். அதன் மூலமாவது, மற்ற நடிகர்களுடன் நட்பை வளர்த்துக் கொள்ள நினைக்கிறேன்.
புதியவர்களுக்கு உங்களின் அட்வைஸ்?
நான் நடிக்கும் போது, நடிக்க வைத்து டெஸ்ட் ஷூட் எடுப்பது போன்ற விஷயங்கள் எல்லாம் இல்லை. ஆனால் இப்போது எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவர்கள் அந்த கதாபாத்திரத்துக்கு பொருந்துவார்களா என்று பார்க்க டெஸ்ட் ஷூட் எடுக்கிறார்கள். இது நல்ல விஷயம். ஒரு படத்தில் ஒரு நடிகரின் கதாபாத்திரம் நன்றாக இருந்தால் அந்த இயக்குனர் மட்டுமே காரணம். ஆகவே இப்போது நடிக்க வர விரும்புகிறவர்கள் தன்னை முழுமையாக தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
வரவிருக்கும் படங்கள் பற்றி?
விழித்திரு, உலா, ஒரு கிடாயின் கருணை மனு, பெயரிடப்படாத புதுப்படம் ஒன்று போன்ற படங்கள் அடுத்தடுத்து வர உள்ளன. இன்னும் பல நல்ல படங்கள் கொடுப்பேன்.