தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குடி போதையில் கார் ஓட்டி, போலீஸ் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய நடிகர் அருண் விஜய், போலீஸ் காவலில் இருந்து, தப்பி ஓடிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய். இவர், பாண்டவர் பூமி, மாஞ்சா வேலு' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், அஜித் நடித்த, என்னை அறிந்தால் படத்தில், வில்லனாக நடித்துள்ளார். சென்னை, ஈக்காட்டுதாங்கல், கலைமகள் நகரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள, நட்சத்திர ஓட்டலில், நேற்று முன்தினம் இரவு நடந்த, நடிகை ராதிகாவின் மகள் ரயானே- மற்றும் -மிதுன் ஆகியோரின் திருமண வரவேற்பில், மனைவி ஆர்த்தியுடன், அருண் விஜய் பங்கேற்றார்.
நிகழ்ச்சியை முடித்து, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை வழியாக, நேற்று அதிகாலை, 3:00 மணியளவில், 'பி.எம்.டபுள்யூ' சொகுசு காரில், மனைவி ஆர்த்தியுடன், வீட்டுக்கு கிளம்பினார். அப்போது, நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அருகே தாறுமாறாக ஓடிய கார், அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனம் மீது மோதியது.
சத்தம் கேட்டு, காவல் நிலையத்தில் இருந்த போலீசார் ஓடி வந்து பார்த்த போது, அருண் விஜய், போதையில் தள்ளாடியபடி காரை விட்டு இறங்கினார்; அவருடன் மனைவி ஆர்த்தியும் கீழே இறங்கினார்.
இருவரையும், காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்த போது, அருண் விஜய், செம போதையில் இருந்தது தெரியவந்தது. பரிசோதனையில், அவர் குடித்த மதுவின் அளவு, 59 சதவீதமாக இருந்தது. விபத்தில், போலீஸ் வாகனத்தின் பின்பகுதி பலத்த சேதமடைந்தது; அதேபோல், காரின் முன்பக்கமும் சேதமடைந்தது.
வழக்கு பதிவு செய்யாமல் இருக்க, காவல் நிலையத்தில் அருண் விஜய், பேரம் பேசினார்; போலீசார் உடன்பட மறுத்தனர். உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில், நடிகர் விஜயகுமார் காவல் நிலையம் விரைந்தார். அவர், சேதமடைந்த போலீஸ் வாகனத்தை சரி செய்து தருவதாக கூறினார்.
இதையடுத்து, வாகன சட்ட பிரிவு, 185; இந்திய சட்ட பிரிவு, 279ன் படி, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், பொது சொத்திற்கு சேதம் ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்து, மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜராகி, அபராதம் செலுத்தி, காரை எடுத்து செல்லும்படி போலீசார் கூறினர். இதனால், நுங்கம்பாக்கம் சட்டம் - ஒழுங்கு பிரிவில் இருந்து, பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து, பாண்டி பஜார் காவல் நிலையத்துக்கு, அருண் விஜயை போலீசார் அழைத்த போது, தந்தை விஜயகுமாரின் காரில் வருவதாக கூறினார்; போலீசாரும் அனுமதித்தனர். ஆனால், பாண்டி பஜார் காவல் நிலையத்தில், போலீசார்
காத்திருந்தனர்; வெகுநேரமாகியும் நடிகர், பாண்டி பஜார் வரவில்லை.
இதனால், போலீஸ் காவலில் இருந்து, தப்பிச் சென்றவர்கள் பட்டியலில், அருண் விஜய் சேர்க்கப்பட்டார் என்றும், அவரை தேடி வருவதாகவும் போலீசார் கூறினர்.முதலில், அபராதம் செலுத்தி, ஜாமினில் வரக்கூடிய பிரிவுகளின்படி தான், போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். போலீஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றதால், வழக்கு பிரிவுகளை மாற்றி உள்ளனர்; அவரது வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில், நடிகரை போலீசார் தேடி வருகின்றனர்.
விடியும் வரைமது விருந்து!
ராதிகாவின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மது விருந்து நடந்தது. அதில் நடிகர், நடிகையர் மற்றும் பல திரை பிரபலங்கள் பங்கேற்றனர். விடியும் வரை நடைபெற்ற மது விருந்தில், அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக, அருண் விஜய் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், நட்சத்திர ஓட்டலில் நடந்த மது விருந்துக்கு, போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர். பல நடிகர், நடிகையர், போதையில் கார் ஓட்டி சென்றதையும் பார்த்துள்ளனர்; ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.
சமரசம் கிடையாது!
அருண் விஜய் மீது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது, பொது சொத்திற்கு சேதம் ஏற்படுத்தியது போன்ற பிரிவுகளில் மட்டும் தான், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதிவேகமாக கார் ஓட்டியது, போலீசுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது போன்ற பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யவில்லை.
மேலும், தனிநபர் வாகனங்களில் சேதம் ஏற்படுத்தினால் மட்டுமே, இந்திய சட்ட பிரிவு, 279ன் படி சமரசம் செய்து கொள்ள முடியும். பொது சொத்து என்றால், அதில் சமரசம் ஏற்படுத்த முடியாது.
நிருபர்களுக்கு மிரட்டல்
விபத்து குறித்து செய்தி சேகரிக்க, சம்பவ இடத்துக்கு சென்ற, பத்திரிகையாளர்களை, அருண் விஜயின் உறவினர் ஒருவர், தகாத வார்த்தையால் பேசியதோடு, மிரட்டியுள்ளார்; அது தொடர்பாக, போலீசார் வழக்கு பதியவில்லை.
அப்பாவிகளுக்கு மட்டுமே அபராதம்!
சென்னையில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார், குடிபோதையில் வாகனம் ஓட்டும் ஒருவரை, தினமும் பிடிக்க வேண்டும். அதன்படி இரவு, 12:00 மணி வரை மட்டும் சோதனையில் ஈடுபடும் போலீசார், 'டாஸ்மாக்' பாரில் இருந்து வருவோரை மட்டுமே பிடிக்கின்றனர். இது போன்ற சினிமா பிரபலங்களை கண்டு கொள்வதில்லை. இதனால், குடி போதையில் கார் ஓட்டுபவர்களால், அதிகாலையில் அதிக விபத்துகள் நடக்கின்றன.
ராம்குமார் வந்த வாகனம்!
திருநெல்வேலி மாவட்டம், டி.மீனாட்சிபுரத்தில் இருந்து, சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, ராம்குமாரை அழைத்து வந்த, போலீஸ் வாகனத்தை தான், அருண் விஜய் சேதப்படுத்தியுள்ளார்.