மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிப்புக்கு ஒரு திலகம் சிவாஜி கணேசன், அவருடைய வழியில் வந்த மற்றுமொரு திலகம் என்றால் அது கமல்ஹாசன் தான். சினிமாவில் பல்துறை வித்தகரான கமல்ஹாசன், ‛சகலகலா வல்லவராக திகழ்பவர். ‛‛களத்தூர் கண்ணம்மா தொடங்கி, சப்பானியாக உருமாறி, ராஜபார்வை பார்த்து, அபூர்வ ராகமாய் ஒலித்து, மன்மத லீலை எல்லாம் அரங்கேற்றி, அபூர்வ சகோதரனாய், நாயகனாய் உருமாறி, இந்தியனாய் நிமர்ந்து, உலகத்தை ஆளவந்தவனாய் விஸ்வரூபமெடுத்து இன்று சபாஷ் வாங்கி கொண்டிருக்கும் கமலின் எண்ணற்ற சாதனைகள் கணக்கில் அடங்காதது. கமலின் இந்த சாதனையை பாராட்டி பிரான்ஸ் அரசு ‛செவாலியே விருது அறிவித்து அவரை கவுரவித்துள்ளது. கமலின் இந்த சாதனையை எட்ட அவர் கடந்து வந்த பாதையை பற்றி இங்கு பார்ப்போம்...
* ஏவி மெய்யப்ப செட்டியார் ‛களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார். முதல் படத்திலேயே கவனிக்கப்படும் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டவர், இதற்காக இந்திய அரசின் விருதும் பெற்றார்.
* அந்தக்காலத்திலிருந்த ஜாம்பவான் நடிகர்களான எம்ஜிஆர்., சிவாஜி, ஜெமினி, சவுகார் ஜானகி, சந்திரபாபு, எஸ்வி சுப்பையா, சத்யன் உள்ளிட்ட மிகப்பெரிய கலைஞர்களுடன் குழந்தை நட்சத்திரமாகவே நடித்துள்ளார் கமல்.
* சினிமாவில் நடிக்கும் போதே மேடை நாடகத்திற்கு செல்வது அபூர்வம். கமல், அந்த சாதனையை செய்தார். டிகே சண்முகத்தின் நாடக குழுவில் சேர்ந்தார், நாடகத்துறையிலும் அசத்தினார். கூடவே பரதம், கதக்களி, குச்சிபுடி போன்ற நடன கலைகளையும் கற்று தன்னை வளர்த்து கொண்டார்.
* நடன இயக்குநர் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக கமல் பணியாற்றியிருக்கிறார். அப்போது எம்ஜிஆர்., சிவாஜி உள்ளிட்டவர்களின் படங்களில் உதவி நடன அமைப்பாளராக பணிபுரிந்திருக்கிறார்.
* நாடகத்தில் இருக்கும்போதே, கமல் அடல்ட் ரோலாக நடித்த படம் ‛மாணவன். 1970ம் ஆண்டு இப்படம் வெளிவந்தது.
* இயக்குநராக வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்த கமலுக்கு 1975-ம் ஆண்டு ‛அந்தரங்கம் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒரு வாய்ப்பு வந்தது. அந்தப்படத்தில் தான் கமல் முதன்முதலாக தன்னை ஒரு பின்னணி பாடகராகவும் வெளிப்படுத்தினார்.
* நாகேஷ், செளகார் ஜானகி போன்ற தேர்ந்த பிரபலங்களை வைத்து படங்களை இயக்கி வந்த இயக்குநர் சிகரம் கே பாலசந்தரின் பார்வை கமலின் பக்கம் திரும்பியது. அதன்படி 1973-ம் ஆண்டு ‛அரங்கேற்றம் என்ற படத்தில் முதன்முதலாக கே.பாலசந்தரின் இயக்கத்தில் நடித்தார் கமல்.
* அதன்பிறகு கே பாலச்தரின் அபூர்வ ராகங்கள், மன்மதலீலை, மூன்று முடிச்சு, அவர்கள், நினைத்தாலே இனிக்கும்.... என கடைசியாக உன்னால் முடியும் தம்பி படம் வரை பல படங்களில் நடித்தார். கமலின் வளர்ச்சியில் கே பாலசந்தரின் பங்கு அளப்பரிய ஒன்றாகும்.
* இந்தக்காலக்கட்டத்தில் ருத்ரய்யாவின் இயக்கத்தில் வெளிவந்த ‛அவள் அப்படித்தான் என்ற படத்தில் அருமையான ஒரு ரோலில் நடித்தார் கமல். இந்தப்படத்தில் ‛பன்னீர் புஷ்பங்களே... என்று தன் சொந்த குரலில் அருமையான பாடல் ஒன்று பாடியிருப்பார்.
* பெரிய பெரிய நகரங்களிலும், ஸ்டுடியோவிற்குள்ளும் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை, கிராமத்திலும் எடுக்க முடியும் என்று நிரூபித்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் பார்வை கமல் மீது பட்டபின்னர், கமலின் வளர்ச்சி முற்றிலும் வேறுவிதமாக மாறியது. குறிப்பாக 16 வயதினிலே என்ற படத்தில் யாரும் நடிக்க முடியாத ஒரு ரோலான சப்பானி என்ற வேடத்தில் நடித்து மிகப்பெரிய உச்சத்தை தொட்டார் கமல்.
* 16 வயதினிலே படத்தில் கமலை, சப்பானியாக காண்பித்த பாரதிராஜா, தனது அடுத்தப்படமான ‛சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமலை இன்னும் வேறு விதமாக சைக்கோ ரோலில் காட்டினார் கமல். அந்தக்காலக்கட்டத்தில் காதல் இளவரசனாக வலம் வந்தார் கமல்.
* நடிகராக ஜொலித்து வந்த கமல், தயாரிப்பு துறையிலும் முத்திரை பதித்தார். ஹாசன் பிரதர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி முதன்முதலாக ராஜபார்வை என்ற படத்தை தயாரித்தார். இது கமலின் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கமலின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான சிங்கீதம் சினிவாசராவ் இயக்கியிருந்தார். இந்தப்படத்தில் தான் கமல் முதன்முதலாக திரைக்கதை எழுதினார்.
* அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் கமல் மூன்று விதமான ரோலில் நடித்தார். அதிலும் ஒரு ரோலில் குள்ள அப்புவாக நடித்தார். இன்று வரை கமல் எப்படி இந்தமாதிரி ரோலில் நடித்தார் என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது. கமலின் இந்த வித்தியாசமான நடிப்பில் வெளிவந்த இப்படம் சூப்பர், டூப்பர் ஹிட்டானது.
* இயற்கையிலேயே நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட கமலுக்கு வட்டார மொழி என்பது மிகவும் எளிதாக வரக்கூடியது. எந்த மொழியாக இருந்தாலும் அந்த மொழி சிதையாமல் அவ்வளவு அழகாக பேசக்கூடியவர் கமல். உதாரணத்திற்கு ‛மைக்கேல் மதன காமராசன் படத்தில் பாலக்காட்டு தமிழ், மகாராசன் படத்தில் சென்னை குப்பத்து பாஸை, தசாவதாரம் படத்தில் பல்ராம் ராயுடு கேரக்டர், பாபநாசம் படத்தில் நெல்லை தமிழ் என பல பாஸைகளில் பேசி அசத்தியவர் கமல்.
* சிவாஜி எனும் மிகப்பெரிய நடிகரை தன்னுடைய தேவர் மகன் படத்தில் அவ்வளவு அழகாக, முழுமையாக பயன்படுத்தியவர் கமல்.
* எம்.எஸ்.விஸ்வநாதன் தொடங்கி கார்த்திக் ராஜா உட்பட இவர் பாடாத இசையமைப்பாளர்களே கிடையாது. அநேக இசையமைப்பாளர்களின் இசையில் கமல் பாடியிருக்கிறார்.
* திரைத்துறையில் கமல், கால் பதிக்காக துறையே கிடையாது. ‛சாக்ஷி 420 படம் கமல் இயக்கிய முதல் படம். நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா, திரைக்காசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், நடன அமைப்பாளர், தயாரிப்பாளர் என ஒரு சகலகலா வித்தகராக ஜொலித்தவர் கமல்.
* கமலின் கனவுப்படமான ‛மருதநாயகம் படம் இங்கிலாந்து ராணி எலிசபெத்தால் பிரமாண்டமாக தொடங்கி வைக்கப்பட்டது, படம் பாதி வளர்ந்த நிலையில் நிதி பிரச்னையால் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அதை மீண்டும் உருவாக்க பணிகள் நடந்து வருகிறது.
* கமலின், 6 படங்கள் இதுவரை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
* தொழில்நுட்ப ரீதியாக கமலின் பார்வை உலகத்தரத்திற்கு இருக்கும். தமிழ் சினிமாவில் எந்த ஒரு புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அதில் கமல் தான் முன்னோடியாக இருப்பார். சில விஷயங்கள் தோல்வி அடைந்தாலும் பின்னர் அது வெற்றியாகவும் இருக்கிறது. சில சமயங்களில் இதுபோன்ற விஷயங்களில் அதிகமாக சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கிறார்.
* வித்தியாசமான ரோலை எடுத்து செய்வதற்கு ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியம் கமலுக்கு 100-க்கு 200 சதவீதம் உண்டு. ‛16 வயதினிலே படத்தில் சப்பானி கமல், ‛அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள கமல், ‛ராஜபார்வை படத்தில் கண்பார்வையற்ற கமல், ‛சிகப்பு ரோஜாக்கள் படத்தில் சைக்கோ கமல், ‛பேசும் படம் படத்தில் பேசாத கமல், ‛சத்யா படத்தில் புரட்சிமிகு இளைஞன் கமல், ‛நாயகன் படத்தில் மும்பை தாதா கமல், ‛சலங்கை ஒலி படத்தில் பரதநாட்டிய கமல், ஷங்கர் இயக்கத்தில் ‛இந்தியன் படத்தில் இந்தியன் தாத்தா கமல், ஆளவந்தான் படத்தில் நந்து கமல், ‛அன்பே சிவம் படத்தில் சிவம் கமல், ‛தசாவதாரம் படத்தில் 10 கமல், ‛விஸ்வரூபம் படத்தில் வித்தியாசமான கமல்.... என சொல்லிக் கொண்டே போகலாம்.
* குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல்படமான கள்ளத்தூர் கண்ணம்மா படத்திலேயே தேசிய விருது வாங்கினார். தொடர்ந்து ‛மூன்றாம் பிறை, ‛நாயகன், ‛இந்தியன் போன்ற படங்களுக்கும் தேசிய விருது வாங்கியுள்ளார். இதுதவிர ஏகப்பட்ட மாநில விருதுகள், 19முறை பிலிம்பேர் விருதுகள், தனியார் பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம், உள்ளிட்ட பல விருதுகளை கமல் பெற்றுள்ளார்.
* இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ விருது 1990-ம் ஆண்டும், 2014-ல் பத்மபூஷண் விருதும் பெற்றுள்ளார்.
* சமீபத்தில் தான் பிரான்ஸ் நாட்டின் சார்பில் ‛ஹென்றி லாங்லாயிஸ் விருது அறிவிக்கப்பட்டது. அடுத்த சிலமாதங்களிலேயே இப்போது ‛செவாலியே விருது அறிவித்துள்ளது பிரான்ஸ் அரசு.
இங்கே கமலை பற்றி நாங்கள் சொல்லியிருக்கும் விஷயங்கள் ஒரு சில தான். இன்னும் கணக்கில் அடங்காத சாதனைகள் எவ்வளவோ கமலிடத்தில் உள்ளது. ஆனால் அதை எதையும் தலையில் ஏற்றி கொள்ளாமல் தான் சார்ந்த துறையில் இன்னும் பாடம் படித்து கொண்டு இருப்பதாக கூறும் கமல், இன்னும் பல சாதனைகளை எட்ட வாழ்த்துவோமாக...!