கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
லிங்கா படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிகுமார் முடிஞ்சா இவன புடி படத்தை இயக்கி உள்ளார். கன்னட நடிகர் சுதீப், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் நடித்துள்ள இந்தப் படம் நாளை வெளிவருகிறது. இதையொட்டி கே.எஸ்.ரவிகுமார் அளித்த சிறப்புபேட்டி:
சூப்பர் ஸ்டாரை இயக்கி விட்டு ஒரே தாவலாக கன்னடத்துக்கு போய்விட்டீர்களே?
சுதீப்பும் கன்னடத்தில் சூப்பர் ஸ்டார்தான். அங்கு அவருக்கு இருக்கும் மாஸே தனி. இந்தப் படம் லிங்காவுக்கு முன்பே முடிவான படம். இதன் ஆரம்பகட்ட பணியில் இருக்கும்போதுதான் ரஜினி சார் அழைத்து லிங்கா படத்தின் கதையை சொல்லி இதனை உடனே பண்ண வேண்டும் என்றார். சுதீப்பிடம் அனுமதி பெற்றுவிட்டு லிங்காவுக்கு சென்றேன். லிங்காவை முடித்த கையோடு இதனை இயக்கினேன்.
லிங்கா தோல்வி பற்றி....?
லிங்கா தோல்வி படன்னு யார் சொன்னா? 172 கோடி வசூல் பண்ணியதாக ரஜினியே கூறியிருக்கிறார். லிங்கா தோல்வி என்பதை ஒப்புக் கொள்ளவே மாட்டேன்.
லிங்கா கிளைமாக்ஸ் கடுமையாக விமர்சிக்கப்பட்டதே?
நாங்கள் முடிவு செய்து வைத்திருந்த கிளைமாக்ஸ் வேறு. கடைசி நேரத்தில் கிராபிக்ஸ் செய்கிறவர்கள் நிறைய கால அவகாசம் கேட்டதால் கிளைமாக்சை மாற்ற வேண்டியதாயிற்று. அதனால் சீரியசான அந்த கிளைமாக்ஸ் காமெடியாகி விட்டதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.
கபாலி படம் பார்த்தீர்களா? உங்கள் விமர்சனம் என்ன?
படத்தை பார்த்தேன். அதுபற்றிய விமர்சனத்தை ரஜினியிடமே சொல்லிவிட்டேன். கபாலி ரஜினி சார் படமும் இல்லை, ரஞ்சித் படமும் இல்லை. ஒரு டான் படம். வயதான ஒரு டான் கேரக்டரை ரஜினி பிரமாதமாக செய்திருக்கிறார். இதுதான் என் விமர்சனம். இதைத்தான் ரஜினியிடமும் சொன்னேன்.
திடீரென்று நடிப்பு பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டீர்களே?
நான் நடிப்பது புதிதில்லை. என்னுடைய படங்களில் சிறு சிறு கேரக்டர்களில் நடிப்பேன். நண்பர்கள் விரும்பி அழைக்கும்போது சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுப்பேன். ஒரு கட்டத்தில் அழைப்புகள் அதிகமாகவே தவிர்க்க ஆரம்பித்தேன். தங்கமகன் படத்தில் தனுஷ் நீங்கதான் நடிக்கணும் என்று வற்புறுத்தி அழைத்ததால் நடித்தேன். இப்போதும் நான் முழுநேர நடிகன் இல்லை. நேரம் இருக்கும்போது நல்ல கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன். மற்றபடி நான் எப்போதுமே இயக்குனர்தான்.
உங்கள் படங்கள் அனைத்தும் பொழுதுபோக்கு படங்களாகவே இருக்கிறது. ஒரு கிரியேட்டரா எப்போது படம் இயக்குவீர்கள்?
(கோபமாக) ஏன் நான் கிரியேட்டர் இல்லையா, கமர்ஷியல் படம் இயக்குறவங்க கிரியேட்டர் இல்லையா? பீம்சிங், ஏ.சி.திருலோகசந்தர், ஸ்ரீதர் எல்லாம் கிரியேட்டர் இல்லையா? ஒரு படத்தோட தலைப்பு வைகிறதுக்கே அம்புட்டு யோசிக்கிறோம். ஆர்ட் படம் எடுக்கிறவர்கள் ஏன் அடுத்த படத்தை கமர்ஷியல் படமாக எடுக்கிறார்கள். ஒரு கமர்ஷியல் இயக்குனரால் ஆர்ட் படம் எடுக்க முடியும். ஒரு ஆர்ட் பட டைரக்டரால் கமர்ஷியல் படம் எடுக்க முடியாது. கமர்ஷியல் படம் எளிதான காரியமில்லை. காமெடி பிடிக்கிறவங்களுக்கு காமெடி, செண்டிமெண்ட் பிடிக்கிறவங்களுக்கு செண்டிமெண்ட், ஆக்ஷன் பிடிக்கிறவங்களுக்கு ஆக்ஷன்னு எல்லாத்தையும் ஒரே கதைக்குள் கொண்டு வந்து பார்த்து பார்த்து பண்ணணும். தயாரிப்பாளர் ரெடியா இருந்தால் ஆர்ட் படம் இயக்க நானும் ரெடி.
"நான் இன்னும் இயக்குனர்தான்" என்று மேடையிலேயே சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியிடம் வாய்ப்பு கேட்டீர்களே?
நான் பேசியதை தப்பாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். நான் தீவிரமாக நடிப்பில் இறங்கி விட்டேன் என்ற ஒரு கருத்து இருந்ததால்... அப்படி இல்லை நான் இன்னும் இயக்குனர்தான் என்ற பொருள்படவே சொன்னேன். நான் சினிமாவுக்கு வந்து 36 வருடங்கள் ஆகிவிட்டது. அதில் 10 வருடங்கள் உதவி இயக்குனராக இருந்திருக்கிறேன். யாரிடமும் இதுவரை வாய்ப்புக் கேட்டதில்லை. என் முதல்பட வாய்ப்புகூட ஆர்.பி.சவுத்ரி சார் வற்புறுத்தி கொடுத்தது. இனிமேலும் அப்படித்தான் யாரிடமும் வாய்ப்பு கேட்க மாட்டேன்.
சமூக வலைத்தளங்களில் வரும் விமர்சனங்களை கடுமையாக எதிர்க்கிறீர்களே...?
காசு கொடுத்து படம் பார்க்கிறவனுக்கு விமர்சனம் செய்ய எல்லா உரிமையும் உண்டு. ஆனால் ஒரு ரீல் பார்த்து விட்டு படம் சுமார், மொக்கைன்னு டுவிட் பண்றதை எப்படி ஒத்துக்க முடியும். அதோடு ஒருவரின் விமர்சனம் என்பது தனிப்பட்ட ஒருவருடைய கருத்து அதை ஒட்டுமொத்த மக்களின் கருத்தாக ஏன் திணிக்க வேண்டும். எப்படி வேணாலும் விமர்சனம் பண்ணுங்க. இது என்னோட தனிப்பட்ட கருத்துன்னு கடைசியில ஒரு வரி எழுதுங்கன்னு சொல்றேன். நான் விமர்சனம் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. என்னோட தெனாலி படத்தையும், பஞ்ச தந்திரம் படத்தையும் நாறு நாறா கிழிச்சு தொங்கவிட்டாங்க. இரண்டு படமுமே சில்வர் ஜுப்ளி படம்.
சொந்தமாக படம் தயாரிக்கும் யோசனை இல்லையா?
கமல் கேட்டுக் கொண்டதற்காக தெனாலி படத்தை தயாரித்தேன். மற்றபடி படம் தயாரிக்கும் யோசனை இல்லை. நான் ஏற்கெனவே டென்சன் பார்ட்டி, இதுல இரண்டு பொறுப்பு இருந்தா அவ்ளோதான். எப்போது படம் இயக்க முடியலை வயசாயிட்டுது என்று ஃபீல் பண்றேனோ அப்போது படம் தயாரிப்பேன்.
இவ்வாறு கேஎஸ் ரவிக்குமார் படபடவென பட்டாசு போல் பதிலளித்தார்.