டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நட்பு பற்றி நிறைய படங்கள் வந்திருக்கிறது. நட்பை கொண்டாடிய படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் திரைக்கு வெளியே சினிமா நட்பு மிக அரிதாகவே மலர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட அபூர்வங்களில் ஒன்றுதான் ரஜினி, தாணு நட்பு. இருவரும் தினசரி சந்தித்து கொள்ள மாட்டார்கள், தினசரி பேசிக் கொள்ள மாட்டார்கள். ஒருவரை பற்றி ஒருவர் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் புகழ்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனாலும் இருவருக்குள்ளும் ஆழமான நட்பு இருக்கும்.
சில அசாதாரண சூழ்நிலைகளில் இருவரும் சந்தித்து பேசுவார்கள். கருத்துக்களை பரிமாறிக் கொள்வார்கள், விவாதித்துக் கொள்வார்கள். ஒரு முடிவை ஒருவர் ஏற்றுக்கொள்வார்கள். குடும்ப பிரச்சினையிலிருந்து அரசியல் வரை அது இருக்கும். ஆனால் அது பற்றி வெளியில் பேசிக் கொள்ள மாட்டார்கள். ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வார்கள். சில நேரம் ஒருவர் செய்வது மற்றொருவருக்கு தெரியாமலே போய்விடும்.
கலைப்புலி தாணு விநியோகஸ்தராக இருந்தபோது வெளிவந்தது 'பைரவி' படம். அப்போது ரஜினி வளர்ந்து வரும் ஹீரோ. துணிச்சலுடன் அந்தப் படத்தை வாங்கி, முதன் முறையாக 30 அடி உயரத்தில் கட்அவுட் வைத்து அவருக்கு 'சூப்பர் ஸ்டார்' பட்டம் கொடுத்தவர் தாணு. அதை ரஜினி வேண்டாம் என்று மறுத்தபோது “உங்களை எனக்கு பிடிச்சிருக்கு நான் அப்படித்தான் செய்வேன்” என்று உறுதியாக இருந்தார் தாணு. அன்று உருவானது இருவருக்கும் இடையே நட்பு. கே.பாலச்சந்தருக்கு பிறகு இவர் சாதிக்கப் பிறந்தவர் என்று ரஜினியை 200 சதவிகிதம் முழுமையாக நம்பியது தாணு தான்.
1984ல் தாணு தனது நண்பர்களுடன் இணைந்து 'யார்' என்ற படத்தை தயாரித்தார். அது ஒரு திகில் படம். அப்போது வருடத்துக்கு 8 படங்கள் வரை நடித்துக் கொண்டிருந்த ரஜினி தாணுவுக்காக அந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்து தன் நன்றி கடனை தீர்த்தார். அது அவ்வளவு முக்கியமான கேரக்டரும் அல்ல. தீய சக்தி அழிய வேண்டும் என்பதற்காக உலக மக்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்வார்கள். அப்படி செய்பவர்களில் ஒருவராக ரஜினி நடித்தார். அது மட்டுமில்லாமல் 'யார்' படத்தின் 100 வது நாள் விழாவில் கலந்து கொண்ட ரஜினி “அடுத்து உங்களுக்கு ஒரு படம் நடிச்சுத் தர்றேன் கதை ரெடி பண்ணுங்க” என்று மேடையிலேயே அறிவித்தார்.
தாணு படத்தில் நடிக்க ரஜினி தயாராக இருந்தார். ஆனால் அப்போது இரட்டை இயக்குனர்களாக இருந்த சக்தி-கண்ணன் இருவரும் இயக்குவதாக இருந்த அந்தப் படம் இயக்குனர்களின் பிரிவால் கைவிடப்பட்டது. ஒரு கட்டத்தில் தாணு கொஞ்சம் பொருளாதார பிரச்சினையில் இருக்கிறார் என்று கேள்விப்பட்ட ரஜினி ஒரு நாள் திடீரென்று போன் பண்ணி “இந்தி படத்துல நடிச்சிட்டிருக்கேன். ஒரு கதை ரெடி பண்ணுங்க அடுத்து உங்களுக்கு பண்ணித் தர்றேன்” என்றார். தாணுவின் நண்பர் கலைப்புலி சேகரன் சொன்ன கதை ரஜினிக்கு பொருத்தமாக இல்லாமல் போகவே அப்போதும் கைவிடப்பட்டது.
'முத்து' படமும் தாணு தயாரிக்க வேண்டியது சில காரணங்களால் தள்ளிப்போனது. 'பாட்ஷா' வெற்றிக்கு பிறகு தாணுவுக்கு படம் நடிச்சுக் கொடுக்க தயராக இருந்தார் ரஜினி அந்த நேரத்தில் தாணு அரசியலுக்குள் நுழைந்து மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டதால் முடியாமல் போனது. இப்படி அவ்வப்போது தள்ளி போய்கொண்டே இருந்த விஷயம் 'கபாலி'யில் கைகூடியிருக்கிறது.
வழக்கம்போல ரஜினியிடமிருந்து போன் “மகள் சவுந்தர்யா ஒரு இயக்குனரை கண்டுபிடிச்சிருக்காங்க மெட்ராஸ் படம் பண்ணியிருக்கார்ல ரஞ்சித் அவர்தான். இந்த சின்ன வயசுல எம்புட்டு ஞானம் தெரியுமா அந்த பையனுக்கு கதைய கேளுங்க பண்ணலாம்”னு சொன்னார். அதற்கு தாணு “நான் கதை கேட்கவில்லை உங்களுக்கு பிடிச்சிருந்தா போதும்” என்று கூறிவிட்டார் எல்லா முன் ஏற்பாடுகளும் முடிந்து படப்பிடிப்பு துவங்கிய அன்று தான் ரஞ்சித்திடம் கபாலி கதையை கேட்டார் தாணு. அந்த அளவிற்கு ரஜினி மீது நம்பிக்கை வைத்திருந்தார் தாணு.
ரஜினி அமெரிக்கா செல்வதற்கு முன்பு ரஜினியும், தாணுவும் அமர்ந்து 'கபாலி' படம் பார்த்தார்கள். படம் முடிந்ததும் ரஜினி கேட்டார் “உங்களுக்கும் எனக்கும் எத்தனை வருட நட்பு?” என்றார். தாணு “36 வருடம் இருக்கும்” என்றார். “இந்த நட்புக்கும் உங்க கம்பெனிக்கும் கபாலி ஒரு மகுடம்” என்று கூறிவிட்டு பிளைட் பிடித்து அமெரிக்கா சென்று விட்டார். தனக்கு 'சூப்பர் ஸ்டார்' பட்டம் கொடுத்தார் என்கிற ஒரே காரணத்துக்காக 36 ஆண்டுகள் நட்பு வளர்த்து, அந்த நன்றி கடனையும் தீர்த்திருக்கும் ரஜினி நிஜ வாழ்க்கையிலும் சூப்பர் ஸ்டார்தான்.