இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், ஜான் விஜய், கிஷோர் மற்றும் பலர் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள படம் கபாலி. இப்படத்தின் பாடல்கள் அதிகாரப்பூர்வமாக நேற்று இரவு முதலே இணையதளங்களில் வெளியிடப்பட்டன.
இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே பாடல்களின் சில வரிகளும், பன்ச் டயலாக்குகளும் இணையத்தில் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தின.
நேற்று மாலை மிக எளிமையாக நடைபெற்ற விழாவில் படத்தின் இசையை தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் ரஞ்சித், ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா வெளியிட்டார்கள்.
நேற்று இரவு 9 மணி அளவில் யு டியூப் இளையதளத்தில் உலகம் ஒருவனுக்கா பாடலை முதலில் வெளியிட்டனர். தொடர்ந்து சில மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து அனைத்து பாடல்களையும் வெளியிட்டார்கள்.
ரஜினிகாந்த் ரசிகர்கள் வீட்டில் மட்டுமல்லாது இசை ரசிகர்கள் பலரது வீட்டிலும் கபாலி பாடல்கள் எப்படியிருக்கும் என்று கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஏற்கெனவே, சமூக வலைத்தளங்களில் கபாலி பாடல்களைப் பற்றிய கருத்துப் பரிமாற்றம் ஆரம்பமாகிவிட்டது.
கபாலி படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பாடல்களை கபிலன், உமாதேவி, விவேக், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் எழுதியுள்ளார்கள். பாடல்களைப் பாடியிருப்பவர்களும் இளம் பின்னணிப் பாடகர்கள், பாடகிகள்தான். ரஜினிகாந்த் படங்களில் வழக்கமாக நாம் கேட்கம் எஸ்பிபி, மனோ ஆகிய குரல்கள் இந்தப் படத்தில் இல்லை.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக அறிமுகமான சில வருடங்களிலேயே ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்கக் கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார்.
அதிரடி
1. நெருப்புடா...
பாடல் - அருண் ராஜா காமராஜ்
பாடியவர் - அருண் ராஜா காமராஜ்
ஏற்கெனவே டீசரில் இரண்டு கோடி பேருக்கும் மேல் ரசித்த நெருப்புடா...வார்த்தைகள் ரஜினி ரசிகர்களிடம் தீயாகப் பற்றிக் கொண்டது. படத்தின் தீம் இசையாகவும் இந்தப் பாடல்தான் இருக்கப் போகிறது. அனேகமாக படத்தில் ரஜினிகாந்தின் அறிமுகப் பாடலாகவும் இந்தப் பாடல் இருக்கத்தான் வாய்ப்புகள் அதிகம்.
காதல்
2. மாயநதி
பாடல் - உமாதேவி
பாடியவர்கள் - அனந்து, பிரதீப் குமார், ஸ்வேதா மோகன்
25 வருடங்கள் கழித்து சிறையிலிருந்து (?) திரும்ப வரும் ரஜினிகாந்திற்கும் அவருடைய மனைவியான ராதிகா ஆப்தேவுக்கும் இடையிலான காதல் பாடலாக இந்தப் பாடல் இருக்குமோ என்ற ஐயம் உள்ளது. தூய நரையிலும்...காதல் மலருதே... என்ற வார்த்தைகள் அதை உணர்த்துகிறது. படத்தில் உள்ள பாடல்களில் இனிமையான மெலடியாக இந்தப் பாடல் இருக்கிறது.
புகழ்
3. உலகம் ஒருவனுக்கா...
பாடல் - கபிலன், ராப் பாடல் - விவேக்
பாடியவர்கள் - அனந்து, சந்தோஷ் நாராயணன், கானா பாலா
கபாலியின் புகழைப் பரப்பும் ஒரு பாடலாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. இத்தனை நாளா கூட்டுக்குள்ளே, இனிமே வாரான் நாட்டுக்குள்ளே...எதிரி கூட்டம் ஆடிப்போச்சே...குருதியில் நெருப்புதான் கூடிப் போச்சே.. வரிகள் ரஜினி ரசிகர்களை கைத்தட்ட வைக்கும். அதே சமயம், நாங்க எங்க பிறந்தா, அட உனக்கென்ன போடா, தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன்டா... வரிகள் சர்ச்சையைக் கிளப்பவும் வாய்ப்புண்டு.
அந்தக் காலத்தில் மன்னர்களைப் புகழ்ந்து பாடல் இயற்றி பொற்காசுகளைப் பரிசாகக் கவிஞர்கள் பெற்றதாக வரலாறு உண்டு. இந்த ராப் வரிகளை எழுதிய விவேக், ரஜினியிடமிருந்து தொடர்ந்து வாய்ப்புகளைப் பெறுவார் என்பது மட்டும் உறுதி. பிழைக்கத் தெரிந்த பாடலாசிரியர்.
பிரிவு
4. வானம் பார்த்தேன்...
பாடல் - கபிலன்
பாடியவர் - பிரதீப் குமார்
பிரிவின் சோகத்தை உச்சமாக வெளிப்படுத்தும் பாடல். பிரதீப் குமாரின் குரலில் அந்தச் சோகம் இயல்பாகவே ஒலிக்கிறது. மனைவியின் பிரிவை நினைத்து ரஜினிகாந்த் பாடும் பாடலாகவே, பின்னணிப் பாடலாகவே இந்தப் பாடல் இருக்கலாம். எங்கும் பார்த்தேன், உந்தன் பிம்பம்...கனவிலும் நினைவிலும்...தினம் தினம்...வருபவள்..எதிரினில்..இனி வர நேராதோ... பிரிவின் சோகத்தை வெளிப்படுத்தும் உணர்ச்சிகரமான வரிகள்.
பெருமை
5. வீர துரந்தரா...
பாடல் - உமாதேவி
பாடியவர்கள் - கானா பாலா, லாரன்ஸ், பிரதீப் குமார்
கபாலியின் பெருமைகளை தமிழிலும், மலாய் மொழியிலும், ராப் வரிகளிலும் பறைசாற்றும் பாடல். Since the 80s untouchable , fighting for whats right என ஆங்கிலத்திலும் உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களிடமும், தமிழ் தெரியாதவர்களிடமும் இந்தப் பாடல் ரஜினியை இன்னும் அதிகமாகக் கொண்டு போய்ச் சேர்க்கும்.
ரஜினிகாந்த் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டாரா என ஏங்கிய ரசிகர்களுக்கும், இளம் தலைமுறையினருடன் ரஜினி நடித்தால் எப்படி இருக்கும் என ஆச்சரியப்பட்டவர்களுக்கும் கபாலி பாடல்கள் நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்.
இதுவரை வெளிவந்த ரஜினிகாந்த் படப் பாடல்களில் காலத்திற்கேற்ப மாறுபட்டு வந்திருக்கும் பாடல்கள்தான் கபாலி பாடல்கள்.
கபாலி பாடல்கள் - ரஜினி ரசிகர்களுக்கு நெருப்புடா... என பெருமைப்பட்டுக் கொள்ளலாம், படக் குழுவினருக்கு...மகிழ்ச்சி என கொண்டாடிக் கொள்ளலாம்.