Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

மணிரத்னம் - இளம் இயக்குநர்களின் ஆதர்ஷம்! பிறந்தநாள் ஸ்பெஷல்

02 ஜூன், 2016 - 13:26 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-Mani-Ratnam

தமிழ்சினிமாவில் இயக்குநர்களுக்கு பஞ்சமே இல்லை. காளிதாஸ் பட இயக்குநர் ஹெ.எச்.எம். ரெட்டி தொடங்கி கணக்கு எடுக்கத் தொடங்கினால் தமிழ்சினிமாவை இயக்கியவர்கள் எண்ணிக்கையில் பல ஆயிரம் பேர் இருப்பார்கள். படத்தை இயக்கியவர்கள் எல்லாம் இயக்குநர்கள் என்றால், அனைவரும் இயக்குநர்கள்தான். ஆனால் தங்களின் தனித்துவமான சிந்தனையால் வித்தியாசமான... புதுமையான படங்களை இயக்கி, திரைப்படப் பார்வையாளர்களின் மனசை வென்றவர்கள் மட்டுமே காலத்தைக் கடந்தும் ஜீவிக்கிறார்கள்.

குறிப்பாக, தனக்கென புதிய பார்வையை... புதிய பாதையை தானே உருவாக்கிக் கொண்டு பயணித்த முன்மாதிரி இயக்குநர்கள் - டிரெண்ட் செட்டர்கள் - மட்டுமே மக்கள் மனதில் நட்சத்திர அந்தஸ்த்து பெற்ற இயக்குநர்களாக இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நட்சத்திர இயக்குநர்களில் ஒருவர்... மணிரத்னம். அவருக்கு இன்று பிறந்தநாள்.


1955 ஆம் ஆண்டு இதேநாளில் (ஜூன் 2 )பிறந்த மணிரத்னம், இன்று 62 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். வீனஸ் ஸ்டுடியோஸ் அதிபர் வீனஸ் கோவிந்தராஜின் சகோதரர், வீனஸ் ரத்னத்தின் இளைய மகனான சுப்பிரமணியம் தான் இன்றைய மணிரத்னம். ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை பள்ளியில் , எம்.பி.ஏ. படித்த மணிரத்னம், சினிமாவுக்கு வருவதற்கு முன் டி.வி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்தவர். வேலை பார்த்துக் கொண்டே இன்னொரு பக்கம், சினிமாவை இயக்கும் முயற்சியையும் தொடர்ந்து கொண்டிருந்தார்.


முதல்படம் : யாரிடமும் உதவியாளராக பணிபுரிந்திராத மணிரத்னத்தை நம்பி படம் தயாரிக்க யாரும் முன்வரவில்லை. அவரது பெரியப்பாவான வீனஸ் கோவிந்தராஜ், மணிரத்னத்தை வைத்து படம் தயாரிக்க முன் வந்தார். பல்லவி அனுபல்லவி என்ற பெயரில் 1983ல் கன்னடத்தில் தயாரிக்கப்பட்ட அந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். அன்றைய காலகட்டத்தில் முன்னணி இயக்குநராக இருந்த பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்தார். ஹிந்தி நடிகர் அனில்கபூர்தான் கதாநாயகன். விமர்சகர்களால் விரும்பப்பட்ட அளவுக்கு ரசிகர்களால் விரும்பப்படவில்லை. எனவே பல்லவி அனுபல்லவி தோல்விப்படமாக அமைந்தது. ஆனாலும் அந்த ஆண்டின் கர்நாடக மாநில விருதுப்பட்டியலில் சிறந்த திரைக்கதைக்கான விருதை வென்றது பல்லவி அனுபல்லவி.


முதல் தமிழ்ப்படம் : பிறகு உணரு என்ற மலையாளப்படத்தை இயக்கினார் மணிரத்னம். மோகன்லால் நடித்த இப்படம் கேரளத்தில் உள்ள தொழிலாளர் சங்கங்களில் நிலவும் ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்டியது. உணரு படமும் வர்த்தக வெற்றியைப் பெறவில்லை. எனவே வணிக ரீதியில் படம் இயக்கினால் மட்டுமே தன்னை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற புதிய கொள்கை முடிவுக்கு வந்த மணிரத்னம், முரளி சத்யராஜ், ரேவதியை வைத்து பகல்நிலவு என்ற படத்தை இயக்கினார்.


தன்னை சமரசம் செய்து கொண்டு வணிக சினிமாவை அவர் இயக்கினாலும் மணிரத்னம் தன்னை தரம் தாழ்த்திக்கொள்ளவில்லை. வணிக சினிமாவிலும் தன் முத்திரையை பதிக்கத்தவறவில்லை. அதுதான் மற்றவர்களிடமிருந்து அவரை வித்தியாசமாக தனித்துக்காட்டியது. இவருடைய படங்கள் சுருக்கமான வசனங்களுக்கும், நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்றவை. இவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்தும் இளையராஜா மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் இருவரின் இசையமைப்பில் வெளியாகியுள்ளன.


இளையராஜா போய் ரஹ்மான் என்ட்ரி : இவரது முதல் திரைப்படமான பல்லவி அனுபல்லவி முதல் தளபதி வரை இளையராஜாதான் இசை. அமைதியான சுபாவம் கொண்ட மணிரத்னம் சுயமரியாதைக்காரர். படங்களில் சமரசம் செய்து கொள்ளாதது போலவே நிஜ வாழ்க்கையிலும் தன் தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டார். தன் அபிமானத்துக்குரிய இசையமைப்பாளராக இருந்த இளையராஜா, ஒரு சந்தர்ப்பத்தில் மணிரத்னத்தை மரியாதைக்குறைவாக நடத்தியதை பொறுக்க முடியாமல், இனி இளையராஜா உடன் இணைந்து பணியாற்றுவதில்லை என்ற முடிவை எடுத்தார்.


அந்த கோபத்தில்தான் ரோஜா படத்தில் ஏ. ஆர். ரஹ்மானை அறிமுகம் செய்தார். அவர் அறிமுகப்படுத்திய ஏ. ஆர். ரஹ்மான், ரோஜாவின் வெற்றிக்குப் பிறகு இளையராஜாவை வீட்டில் உட்கார வைத்தது மணிரத்னமே எதிர்பார்க்காத சர்ப்ரைஸ். ரோஜா படம் முதல் இன்று வரை மணிரத்னம் இயக்கும் படங்களுக்கு ஏ. ஆர். ரஹ்மான்தான் இசையமைப்பாளர்.


பயங்கரவாதம் பற்றி பேசிய மணி படங்கள் :


பகல் நிலவு, இதயகோவில், மௌனராகம், நாயகன், அக்னிநட்சத்திரம், அஞ்சலி, திருடா திருடா படங்களில் காதல், நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்ட பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கிய மணிரத்னம், ரோஜா படத்தில் தீவிரவாதம் பற்றி பேசினார். அப்படத்துக்கு தேசிய அளவில் கிடைத்த கவன ஈர்ப்பு, அவரை தேசிய பிரச்சனைகள் பக்கம் சாய வைத்தது. ஏறக்குறைய அதில் ருசி கண்டார்.


தோல்வியும், வெற்றியும் : அதன் பிறகு அவர் இயக்கும் படங்கள் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிப்படங்களாக உருவாக்கப்பட்டன. அதனால் தில்சே (உயிரே), குரு (குரு), ராவண் (ராவணன்) ஆகிய படங்கள் தமிழ்ப்படங்களாகவும் இல்லாமல் ஹிந்திப்படங்களாகவும் இல்லாமல் இரண்டுங்கெட்டான் படங்களாகி தோல்வியை சந்தித்தன. அதன் பிறகு தன்னை சுய பரிசோதனை செய்து கொண்ட மணிரத்னம், தன் பாதையை மாற்றிக் கொண்டு ஓ காதல் கண்மணி படத்தை இயக்கினார். அவரே எதிர்பார்க்காத மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.


மணிரத்னத்தின் வருகைக்குப் பிறகு வந்த இயக்குநர்கள் அனைவருக்கும் மணிரத்னம் ஆதர்ஷமாக இருக்கிறார். கடந்த 30 வருடங்களில்... அதாவது மணிரத்னத்தின் வருகைக்குப் பிறகு வெளியான படங்களைப் பார்த்தால், குறைந்தபட்சம் ஒரு காட்சியாவது... அல்லது ஒரு வசனமாவது.... ஒரு ஷாட்டாவது மணிரத்னத்தின் சாயலில் இருப்பதை காண முடியும். மணிரத்னத்தின் திரையுலக வாழ்க்கையில் எத்தனை தோல்விப்படங்களைக் கொடுத்தாலும், இன்றைய இளம் இயக்குநர்களின் ஆதர்ஷமாக மணிரத்னமே இருக்கிறார். இதுதான் மணிரத்னத்தின் வெற்றி.


மணிரத்னம் பற்றி காதில் விழுந்த தகவல்கள்.....


  • தீபாவளிக்கு முதல் நாள் தன் உதவியாளர்கள், ஊழியர்கள், உறவினர்கள் அனைவரையும் ஒரு கல்யாண மண்டபத்தில் கூட்டி சைவ விருந்து அளிப்பர். பாட்டும் ஆட்டமும் அவசியம் உண்டு.
  • கைக்கடிகாரம் அணிகிற வழக்கம் இல்லை. ஆனால்,கடிகாரத்தை பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்து, நேரம் அறிய விரும்பும்போது பார்ப்பார்.
  • மணிரத்னம் சென்னைக்காரர் என்றே நினைக்கிறார்கள். மாப்ளே, மதுரைக்காரர். ஜூன் 2...பிறந்த தேதி!.
  • தன்னை யார் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் ரியர்க்ஷன் காட்டவே மாட்டார். இரண்டையும் புறம்தள்ளி விடுகிற இயல்புடையவர்.!
  • கதை விவாதத்துக்கு எப்பொதும் துணை சேர்க்கவே மாட்டார். எல்லாமே அவரது எண்ணங்களாகத்தான் இருக்கும். சந்தேகம் இருந்தால் மட்டும், ராக்கெட்டோ ஜாக்கெட்டோ சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்புகொள்வார்!.
  • முழு ஸ்க்ரிப்ட்டையும் பென்சிலில் தான் எழுதுவார். பேனா உபயோகிக்க மாட்டார். தவறாக எழுதியிருந்தால் திருத்தி எழுத வசதியாச்சே. பென்சிலில் இருந்து நேரடியாக ஸ்க்ரிப்ட் கம்ப்யூட்டர்மயமாகி விடும்!.
  • படம் ரிலீஸான தினத்தன்று கொஞ்சம்கூட டென்ஷன் ஆக மாட்டார். தியேட்டர் நிலவரம் விசாரிக்க மாட்டார். நிதானமாக அன்றைக்கு அடுத்த படத்தின் வேலையை ஆரம்பிப்பார்!.
  • மகன் நந்தனுக்குப் பரீட்சை என்றால் அன்று அலுவலகத்துக்கு விடுமுறை போடுவார். மகனுக்கு சொல்லிக்கொடுக்கத்தான் இந்த விடுமுறை!.
  • நல்ல படமாகவும் இருக்க வேண்டும், அது வெற்றிகரமான படமாகவும் இருக்க வேண்டும். அந்த வித்த்தில் 16 வயதினிலே படத்தைத்தான் பிடித்த படம் என அடிக்கடி குறிப்பிடுவார்!.
  • காரில் ஏறி உட்கார்ந்ததும் முதல் வேலையாக ஸீட் பெல்ட் போட்டுக்கொள்வார். எல்லோரையும் அவ்விதம் செய்யத்தூண்டுவார்!.
  • படத்துக்கு பூஜை கேமராவுக்கு முன்னாடி தேங்காய் உடைத்துத் தீபாராதனை காட்டுவது, பூசணிக்காய் உடைப்பது, ராகுகாலம், எமகண்டம் இப்படி... எதையும் பார்க்க மாட்டார். தன் உழைப்பு ஒன்றையே நம்புவார்!.
  • பாலாவின் பிதாமகன், நான் கடவுள் படங்களை டிக்கெட் எடுத்து தியேட்டருக்கே போய் மக்களோடு இருந்து பார்த்திருக்கிறார். பாலாவின் படங்களின் மீது மட்டும் ஸ்பெஷல் மரியாதை!.
  • தன்னிடம் இருந்து எந்த அசிஸ்டென்ட் வெளியே வாய்ப்பு தேடிப் போனாலும் அவர்களுக்கு ஒரு தொகையைக் கொடுத்து, வாய்ப்பு கிடைக்கும் வரை பயன்படுத்திக் கொள்ளச் சொல்வார்!.
  • மனைவியை எப்பொழுதும் ஹாசினி என்றே அழைப்பார். சுஹாசினியும் இவரை சிம்பிளாக மணி!.
  • பெண் குழந்தை ரொம்பவும் பிடிக்கும். அநேகமாக அவரின் பல படங்களில் ஹீரோ ஹீரோயினைப் பார்த்து என்க்குப் பெண் குழந்தை பிடிக்கும் எனச் சொல்லும் ஸீன் இருக்கும்!.
  • மணிரத்னம் முதல் ஐந்து படங்கள் முடியும் வரை கார் வாங்கவே இல்லை. தளபதி படம் முடிந்த பிறகுதான் கார் வாங்கினார். அவரின் திருமணமும் அப்புறம்தான் நடந்தது!.
  • மணிரத்னம் தான் இயக்கிய படங்களில் தனக்கு மிகவும் பிடித்ததாகவும், சிரமப்பட்டு எடுத்த படமாகவும் கருதுவது இருவர். பேச்சின் ஊடாக அதை அடிக்கடி குறிப்பிடுவார்!.
  • நடிகர்களிடம் இப்பிடித்தான் நடிக்க வேண்டும் என நடித்துக் காட்ட மாட்டார். அவர்களை இயல்பாக நடிக்கவிட்டு, தேவையான கரெக்ஷன்களை மட்டுமே கொடுத்துப் படமாக்குவதையே விரும்புவார்!.
  • மணிரத்னத்தின் படங்களில் மழையும் ரயிலும் நிச்சயம் இடம்பெறும். கூர்ந்து கவனிக்கும் ரசிகர்களுக்குப் புரிபடும் இந்த உண்மை!.
  • தனிமை விரும்பி, அவரைத் தெரிந்து கொண்டவர்கள் அதை அனுசரித்து நடப்பார்கள்!.
  • மணியின் மானசீக குரு, அகிரா குரோசோவா. அவரது படங்களைத் திரையிட்டுக் காண்பதை அதிகம் விரும்பும் மனசு!
  • கொடைக்கானலில் மணியின் கனவு இல்லம் கிட்டத்தட்டத் தயார். பெரிய தியேட்டரும் உள்ளே உண்டாம்!.
  • மணிரத்னத்தின் நெருங்கிய நண்பர்களாக ரியல் இமேஜ் ஜெயேந்திரா, பி.சி.ஸ்ரீராம், சந்தோஷ் சிவன் மூவரையும் சொல்லலாம். மாதம் ஒரு தடவையாவது சந்தித்துச் சிரிப்பது வழக்கம்!.
  • உடை, தேர்வில் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டார். சிம்பிளாக பருத்தி ஆடைகள் போதும். எவ்வளவு கிராண்ட் ஃபங்ஷனாக் இருந்தாலும் கவலையேபடாமல் எளிமையின் வடிவில் வருவார்!.
  • உலகின் நூறு சிறந்த படங்களில் ஒன்றாக நாயகன் டைம்ஸ் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்ட்து. மிகப் பெரிய கெளரவத்தைக் கொண்டாட விழா எடுக்க நினைத்தபோது அதைத் தடுத்தவர் மணிரத்னம்!.


மணிரத்னத்தின் திரைப்பட பட்டியல்....


1983 - பல்லவி அனுபல்லவி (கன்னடம்) - சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான கர்நாடக அரசின் திரைப்பட விருது


1984 - உணரு (மலையாளம்)


1985 - இதய கோவில்


1985 - பகல் நிலவு


1986 - மௌன ராகம் (பாக்யராஜின் "அந்த ஏழு நாட்கள்" திரைப்படத்தின் தழுவல் என்று விமர்சனங்களுக்கு உள்ளானது) சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது


1987 - நாயகன்


1988 - அக்னி நட்சத்திரம்


1989 - கீதாஞ்சலி (தெலுங்கு)


1990 - அஞ்சலி


1991 - தளபதி (மகாபாரதத்தின் கர்ணன், துரியோதனன் கதாபாத்திரங்களின் தழுவலாக கருதப்பட்டது)


1992 - ரோஜா (இந்திய முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று முஸ்லிம்களின் கண்டனங்களுக்கு உள்ளானது)


1993 - திருடா திருடா


1995 - பம்பாய்


1997 - இருவர்


1998 - தில் சே (இந்தி) - தமிழில் உயிரே என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வெளிவந்தது.


2000 - அலைபாயுதே


2002 - கன்னத்தில் முத்தமிட்டால்


2004 - ஆய்த எழுத்து - யுவாவும் ஆய்த எழுத்தும் வெவ்வேறு நடிகர்களை வைத்து ஒரே நேரத்தில் தமிழிலும் இந்தியிலும் திரைப்படமாக்கப்பட்டன


2007 - குரு (இந்தி) - இதே பெயரில் தமிழிலும் மொழிமாற்றப்பட்டு வெளியானது.


2010 - ராவணன்(இந்தி)- திரைக்கதை இராமாயணத்தின் இராவணன் கதாபாத்திரத்தின் தழுவல். ராவண் என்ற பெயரில் இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியானது


2013- கடல்


2015- ஓ காதல் கண்மணி


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in