தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
2016ன் மார்ச் மாதம் இந்த வருடத்தில் குறிப்பிட வேண்டிய ஒரு மாதமாக அமைந்துவிட்டது. அதற்குக் காரணம் படங்களின் எண்ணிக்கை. இந்த மாதத்தில்தான் இந்த ஆண்டில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 50ஐக் கடந்தது. 90 நாட்களுக்குள் 50 படங்கள் வெளிவந்துள்ளது ஆச்சரியமான ஒன்றுதான். இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வருடத்திற்கு சராசரியாக 200 படங்கள் வந்து கொண்டிருப்பதால் இந்த வருடமும் கடந்த வருடங்களைப் போலவே வெளிவரும் படங்களின் எண்ணிக்கை 200ஐத் தொடும் என்பது இதன் மூலம் தெரிகிறது.
மற்ற மாதங்களுடன் ஒப்பிடும் போது மார்ச் மாதத்தில் மூன்று படங்கள் முத்திரை பதித்த படங்களாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மிகப் பெரிய வெற்றி, அதே சமயம் லாபகரமான வெற்றி என்று பார்த்தால் ஜனவரி மாதத்தில் 'ரஜினி முருகன்' படத்தையும், பிப்ரவரி மாதத்தில் சுமார் வெற்றி பெற்ற படங்களாக 'விசாரணை, மிருதன், சேதுபதி' ஆகிய படங்கள் அமைந்திருந்தன.
மார்ச் மாதத்தைப் பொறுத்தவரையில் மூன்று படங்கள் மிகப் பெரிய வெற்றி படங்கள் என்று சொல்லக் கூடியதாக அமைந்துவிட்டது. “பிச்சைக்காரன், காதலும் கடந்து போகும், தோழா” ஆகிய படங்கள் படங்களை வாங்கிய அனைவருக்குமே லாபரமான படங்களாக அமைந்தது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த லாபம் குறிப்பிட வேண்டிய ஒன்று.
ஓரளவிற்கு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜீவா, ஹன்சிகா நடித்த 'போக்கிரி ராஜா' படம் மிகப் பெரும் தோல்விப் படமாக அமைந்தது. எந்தப் பேய் படம் வந்தாலும் வெற்றி பெற்றுவிடும் என்று ஓரளவிற்கு நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு 'சௌகார்பேட்டை' படம் மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.
விமல் நடித்து வெளிவரும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறாமல் தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கின்றன. அந்த ராசி 'மாப்ள சிங்கம்' படத்திலும் தொடர்ந்தது. இப்படியே போய்க் கொண்டிருந்தால் விமல் என்ற ஒரு வெற்றிகரமான நடிகர் இருந்தார் என்று சொல்லக் கூடிய நிலைமை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மினிமம் பட்ஜெட் படங்களின் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் விமல் இனி படங்களைத் தேர்வு செய்வதில் அதிக கவனம் கொள்ள வேண்டும்.
விமலைப் போலவே கடந்த சில படங்களாக தொடர் தோல்வியைக் கொடுத்துக் கொண்டு வருபவர் ஜெய். இவர் நடித்து வெளிவந்த 'புகழ்' படம் பல முறை இதோ வருகிறது, அதோ வருகிறது என்று சொல்லப்பட்டு ஒரு வழியாக கடந்த மாதம் வெளிவந்தது. ஆனாலும் யாருக்கும் புகழைச் சேர்க்காமல் அந்தப் படம் போய்விட்டது. இனியாவது தான் அஜித் இல்லை, சாதாரண நடிகர்தான் என நினைத்து தான் நடிக்கும் படங்களை ஜெய் விளம்பரப்படுத்த வர வேண்டும். இல்லையென்றால் அவரை விளம்பரங்களில் போடாத நிலையே வரும்.
ஒரு சில குறும்படங்களை எடுத்துவிட்டு, அல்லது தன்னால் வித்தியாசமான படங்களைக் கொடுக்க முடியும் என்ற 'ஓவர் கான்ஃபிடன்ஸ்' உடன் சிலர் படங்களை எடுக்க வந்து கொண்டிருக்கிறார்கள். எப்படியோ தயாரிப்பாளர்களைப் பிடிப்பவர்களால் சரியான விதத்தில் படங்களைக் கொடுக்க முடியாமல் தயாரிப்பாளர்களையும் தவிக்க வைத்துவிடுகிறார்கள். அதற்கு சரியான உதாரணம் 'ஆகம், சவாரி, ஜீரோ' ஆகிய படங்கள். இனியாவது அனுபவமில்லாத சில புதுமுக இயக்குனர்களிடம் தயாரிப்பாளர்கள் உஷாராக இருப்பது நல்லது.
வழக்கம் போலவே கடந்த மாதத்திலும் பத்திரிகையாளர்களுக்குக் கூட தங்களது படங்களை திரையிட்டுக் காட்ட முடியாத சில படங்களைத் தயாரித்தவர்களையும் இயக்கியவர்களையும் என்னவென்று சொல்வது. அந்த வரிசையில் “பக்கி பயலுக, என்ன பிடிச்சிருக்கா, என்று தணியும், அடிடா மேளம்” ஆகிய படங்கள் இடம் பெற்றன.
சந்தானத்தின் துணையுடன் ஹீரோவாக நடித்த அவருடைய நண்பர் சேது நடித்து பலமுறை வெளிவருவதாக அறிவிக்கப்பட்டு தள்ளிப் போன 'வாலிப ராஜா' படம் கடந்த மாதம் கடைசியாக வெளிவந்தது. படம் வெளிவந்ததே ஒரு சாதனைதான்.
முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது “பிச்சைக்காரன், காதலும் கடந்து போகும், தோழா'' ஆகிய படங்கள் வெற்றி பெற்றிருப்பது வரவேற்க வேண்டிய விஷயம்தான்.
மார்ச் மாதத்தில் வெளிவந்த 17 படங்களில் 3 படங்கள் வெற்றி பெற்றிருப்பதே ஒரு மகத்தான சாதனைதான். இனி வரும் கோடை விடுமுறை நாட்களில் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவே வாய்ப்பிருக்கும். இந்த கோடை விடுமுறைப் படங்களாவது மேலும் பல கோடிகளைக் குவிக்கும் படங்களாக அமையட்டும்.