டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரன், தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். அவருடன் ஒரு சந்திப்பு:
நீங்கள் நடித்துள்ள, நையப்புடை படம் பற்றி சொல்லுங்களேன்?
கிராமத்தில் வசிக்கும் முரட்டு இளைஞன், ராணுவத்தில் சேருகிறான். ஓய்வுக்கு பின், தன் சொந்த கிராமத்துக்கு வருகிறான். அங்கு, அவனுக்கு சொந்தம்ன்னு யாரும் இல்லை. இதனால், சென்னைக்கு வருகிறான். நல்ல வசதியுடன் இருக்கும் அவன், எங்கு வேண்டுமானாலும் போய் வசிக்கலாம். ஆனால், ஒரு குடிசைப் பகுதியில் குடியேறுகிறான். அங்குள்ள குழந்தைகளுடன் தங்குகிறான். இந்த சூழ்நிலையில், அந்த குடிசைப் பகுதியில் ஒரு பிரச்னை ஏற்படுகிறது. அதை, எப்படி, சமாளிக்கிறான் என்பது தான், படத்தின் கதை.
படத்தில், சண்டை எல்லாம் பயங்கரமா போட்டுருக்கீங்க போல; 73 வயதில், இது தேவைதானா?
படத்தில் சண்டை காட்சி இருக்கு என, முன்கூட்டியே தெரிந்திருந்தால், இதில் நடித்திருக்க மாட்டேன். இயக்குனர், என்னிடம் கதை சொல்லும்போது, இது, சமுதாய பிரச்னையை சொல்லும் கதை. அதில், கொஞ்சம் சண்டையும் இருக்கு என்று மேலோட்டமாகத் தான் கூறினார். நடிக்க வந்தபின் தான், கயிறு கட்டி தொங்கும் அளவுக்கு சண்டை காட்சி இருப்பது தெரிந்தது. புது இயக்குனர் கொடுத்த தெம்பில், நடித்து முடித்து விட்டேன். டூப் போடாமல் நடித்திருக்கேன்.
விஜயுடன் சேர்ந்து நடிக்கும் எண்ணம் உண்டா?
இப்போது தான், சில படங்களில் நடிக்க துவங்கியிருக்கேன். விஜய் கூப்பிட்டால், முடியாது என சொல்ல முடியுமா; கண்டிப்பாக நடிப்பேன். முதலில், இந்த படம், நன்றாக ஓடட்டும். மற்றதை எல்லாம் அப்புறம் பார்க்கலாம். காசுக்காக நடிக்க வேண்டும் என்ற நிலையில், கடவுள் என்னை வைக்கவில்லை. அதனால், எல்லா படங்களிலும் நடிக்க மாட்டேன். மக்களுக்கு நல்ல விஷயத்தை சொல்லும் படமாக இருந்தால், கண்டிப்பாக நடிப்பேன்.
இன்றைக்கு சினிமா எந்தளவுக்கு மாறி இருக்கிறது.?
வியாபார ரீதியாக நன்றாக இருக்கு என்று சொல்ல முடியவில்லை. ஆனால் தொழில் நுட்பம் நன்றாக வளர்ந்திருக்கிறது. படம் எடுக்க தெரியாதர்வகள் எல்லாம் சினிமாவுக்கு வந்து சினிமாவை கெடுத்துவிடாதீர்கள். சினிமா என்பது வியாபாரம் கிடையாது, அது ஒரு கலை, இவ்வளவு போட்டால் எவ்வளவு எடுக்கலாம் என்று பார்க்க முடியாது. சினிமாவை நேசித்து செய்யுங்கள்.
உங்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்கள் பற்றி சொல்லுங்க.?
செந்தில்நாதன், பவித்ரன், ஷங்கரிலிருந்து பல பேர் இருக்காங்க. ஒரு ஆசிரியர் போல உணர்கிறேன், மிகவும் பெருமையாக இருக்கிறது. வாத்தியாரிடம் படித்த பலபேர் ஜெயிப்பாங்க. அவர்களில் உதாரணாக ஷங்கரை சொல்லலாம். இன்றைக்கு உலகளவில் பேசப்படும் ஒருவராகி உள்ளார். அவர் என்னிடம் வரும்போது நடிக்கத்தான் வந்தார், அவரிடம் உள்ள திறமையை பார்த்து இயக்குநர் பக்கம் இழுத்து கொண்டேன். ஷங்கர் தவிர ராஜேஷ், பொன்ராம் உள்ளிட்ட பலபேர் இருக்காங்க. என்னதான் படங்கள் இயக்கி இருந்தாலும் நான் வெளியில் செல்லும்போது விஜய் அப்பாவாகத்தான் தெரிகிறேன். இது எல்லார்க்கும் கிடைக்காத வரம் என்று நினைக்றேன்.
விஜய் படங்கள் பற்றி சொல்லுங்க.?
விஜய்யை வைத்து விஷ்ணு என்ற படத்தை எடுத்தேன். காமெடி படம். அடுத்து அவரது வாழ்க்கையை மாற்றிய படம் பூவே உனக்காக. அதன்பின்னர் காதலுக்கு மரியாதை, திருப்பாச்சி, திருமலை, கில்லி, போக்கிரி போன்ற படங்கள் அவரது கேரியரை உயர்த்தியது. துப்பாக்கி படம் விஜய்யை இன்னொரு இடத்திற்கு கொண்டு சென்றது. அதன்பிறகு அவர் நடிக்கும் படங்களில் எல்லாம் ஒரு சமூக செய்தி சொல்ற மாதிரி படங்கள் அமைந்து நல்ல பெயரை பெற்று தந்தது.
விஜய், அரசியலுக்கு வர வேண்டும் என, அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். ஒரு தந்தையாக உங்கள் ஐடியா என்ன?
என்னை இப்படி மாட்டி விடுறீங்களே; நியாயம் தானா? விஜயிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கலாமா? என்னுடைய தனிப்பட்ட கருத்தை வேண்டுமானால் சொல்லலாம். காசு வாங்கி விட்டு, ஓட்டுப் போடும் மக்களின் மனநிலை மாறினால், அரசியலுக்கு வரலாம். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். ஓட்டு என்பது, மிகப் பெரிய ஆயுதம். அதை, காசுக்கு விற்பது நியாயமல்ல.
இளம் வயதில் பட்ட கஷ்டத்தை நினைத்து பார்ப்பது உண்டா?
ராமநாதபுரம் தான் என் சொந்த ஊர். அம்மா, டீச்சர். இளம் வயதிலேயே சினிமா ஆசை வந்து விட்டது. அதனால், பி.யு.சி., முடித்த கையுடன், சென்னைக்கு வந்து விட்டேன். கார்ப்பரேஷன் தண்ணீர் மட்டுமே குடித்து வாழ்ந்த நாட்கள் அவை. ஒவ்வொரு ஸ்டூடியோவாக ஏறி, இறங்குவேன். போராடித் தான், வெற்றி பெற்றேன். அந்த நாட்களை மறக்க முடியாது.
சினிமாவை விடுங்க; தனிப்பட்ட உங்கள் ஆசைகள் நிறைவேறியதா?
நடைபாதையில் கிடந்தவன்; இன்று, பங்களா வீட்டில் வசிக்கிறேன் என்றால், என் ஆசை நிறைவேறி இருக்கிறது என்று தானே அர்த்தம்.
ஷோபா உங்கள் வாழ்கையில் வந்த பிறகு.?
காதல் ஒரு எனர்ஜி. 5 வருடம் ஷோபாவை காதலித்தேன். 1973-ல் கல்யாணம் செய்தேன். 74-ல் விஜய் பிறந்தார். காதல் என்றால் பொழுதுபோக்காக இல்லை, உண்மையாக காதலித்தேன். நான் கிருஸ்த்துவன், அவர் இந்து. கல்யாணத்திற்கு பெரும் எதிர்ப்பு இருந்தது. பல போராட்டம் கடந்து எங்கள் திருமணம் நடந்தது. அது ஒரு பெரிய கதை. ஷோபா பற்றி சொல்லணும் என்றால், சினிமாவில் எப்போது வெற்றி, தோல்வி வரும் என்று தெரியாது. ஒருசமயம் படம் தயாரிக்க அவரது நகையை கேட்டேன், உடனே கொடுத்தார். அதுக்கு காரணம் நான் ஜெயிக்க வேண்டும் என்று அவர் எண்ணியது தான்.
தனிப்பட்ட முறையில் ஷோபா உங்களிடம் எதுவும் ஆசைப்பட்டு கேட்டாரா.?
பர்சனலான விஷயம் ஒன்றை சொல்கிறேன். கல்யாணம் ஆன புதிதில் கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே ஒரு வீட்டில் தங்கியிருந்தோம். சின்ன வீடு தான். ஒரே அறையில் சமைப்பது, தூங்குவது எல்லாம் அந்த சின்ன அறையில் தான். நான்கு குடும்பத்திற்கு பொதுவான ஒரு டாய்லட் இருக்கும். அப்போது நான் உதவி இயக்குநராக இருந்தேன். அவரிடத்தில் உனக்கு என்ன ஆசை என்று கேட்டேன், அதற்கு அவர் ஒரு வீடு கட்டி, அதில் பெட்ரூம் உடன் ஒரு டாய்லட் அமைக்கணும் சொன்னாங்க. நான் இயக்குநராக வளர்ந்தபின்னர் அவர் ஆசைப்படியே வீடு கட்டினேன்.
விஜயிடம் பிடித்த விஷயம்; அவர், மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைக்கும் விஷயம்?
இரண்டுமே, பிடிவாதம் தான். அவர் நண்பர்களிடம் கூட, அதிகம் பேசி, நான் பார்த்தது இல்லை. மற்றவர்களை பேசச் சொல்லி, அவர் கேட்பார். அது, அவருடைய கேரக்டர்.