ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்திய சினிமாவில் தனித்தன்மையோடு வலம் வரும் நடிகை பார்வதி, 10 வருட சினிமா அனுபவத்தில் அவர் நடித்தது 20க்கும் குறைவான படங்கள்தான். ஆனால் நடித்த அத்தனை படங்களுமே முக்கியமானவை. தமிழில் அவர் நடித்த பூ, சென்னையில் ஒருநாள், மரியான், உத்தம வில்லன் படங்கள் தனி சிறப்பு வாய்ந்தவை. இப்போது பெங்களூர் நாட்கள் மூலம் மீண்டும் வந்திருக்கிறார். அவர் தினமலர் இணையதளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி:
* ஒரே கேரக்டரை இரண்டு மொழிகளில் நடிப்பது போரடிக்கவில்லையா?
அஞ்சலி மேனன், சாரா கேரக்டரை சொன்னதில் இருந்து அந்த கேரக்டராகவே என்னை பாவிக்க ஆரம்பித்தேன். முழுமையாக அந்த கேரக்டரை உள்வாங்கிக்கொண்டேன். மலையாள பெங்களூர் டேய்ஸ் முடிந்த பிறகும் சற்கர நாற்காலியில் இருந்து என்னால் எழுந்திருக்க முடிவில்லை. அதே கேரக்டரில் நடிக்க மீண்டும் அழைத்தபோது நான் போட்ட ஒரே நிபந்தனை சாரா கேரக்டரை துளி அளவுகூட மாற்றக்கூடாது என்பதுதான். ஒரே கேரக்டரில் மீண்டும் நடிக்கும்போது இன்னும் நம்மை மெருகேற்றிக்கொள்ள முடியும்.
* அஞ்சலி மேனன், பொம்மரிலு பாஸ்கர் யார் பெஸ்ட்?
ஒரே கதையை இருவரும் இயக்கியிருக்கிறார்கள். இருவரிடம் அவரவர் தனித்தன்மைமய கண்டேன். இதில் யார் பெஸ்ட் என்றெல்லாம் மார்க் போட முடியாது. என்னுடைய கேரக்டரை பொறுத்தவரை இருவருமே மிக அற்புதமாக கையாண்டார்கள்.
* 10 ஆண்டு சினிமாவில் என்ன சாதித்து விட்டதாக நினைக்கிறீர்கள்?
எதுவுமே சாதிக்கவில்லை. நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். நிறைய மனிதர்களை சந்தித்திருக்கிறேன். அவர்களிடமிருந்து நிறைய கற்றுகொண்டிருக்கிறேன். சினிமா பற்றிய நல்ல புரிதல் வந்திருக்கிறது. ஒரு படம் இயக்கும் அளவிற்கு என்னை தயார்படுத்த முடிந்திருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் என் சினிமா கேரியர் எப்படி இருக்கும் என்று தெரியாது. நான் நானாக இருப்பேன் அதை மட்டும் என்னால் உறுதியாக கூறமுடியும்.
* எனக்கு சாதி அடையாளம் தேவையில்லை என்று நீங்கள் சொன்னது சர்ச்சையை கிளப்பி உள்ளதே?
அது என்னுடைய தனிப்பட்ட உரிமை. மற்ற யாரையும் நான் உங்கள் ஜாதி அடையாளத்தை தூக்கி எறியுங்கள் என்று சொல்லவில்லையே. பிறகு ஏன் சர்ச்சை கிளம்பபோகிறது. ஜாதி வேண்டுமா, வேண்டாமா என்பது அவரவர் விருப்பம். வேண்டாம் என்பது என் விருப்பம்.
* அழகா இருக்கீங்க? திறமையாவும் இருக்கீங்க அப்புறம் ஏன் டாப் ஹீரோயினாக வரமுடியவில்லை?
அழகுக்கு என்ன வரை முறை வச்சிருக்கீங்க. மூக்கும் முழியுமா, சிவப்பா இருக்கிறதுதான் அழகுன்னு நினைச்சீங்கன்னா. பல படங்களில் அயிட்டம் சாங்கிற்கு ஆடுறவங்க என்னை விட அழகா இருக்காங்க. எனக்கு பிரண்டா நடிக்கிற ஜூனியர் ஆர்ட்டிஸ்டுங்க பலர் என்னை விட அழகா இருக்காங்க. அழகு என்பது ஒரு விஷயமே இல்லை. டாப் ஹீரோயினாகணும்னா என்ன தகுதி, நிறைய படங்களில் நடிக்கணுமா?, நிறைய சம்பளம் வாங்கணுமா? எனக்குத் தெரியல. நான் ஒரு நடிகை. என் தொழிலை நான் நேசிக்கிறேன். அதுக்கு நேர்மையா இருக்கிறேன். அதை தாண்டி நான் யோசிப்பதே இல்லை.
* ரொம்ப எளிமையாக இருக்கீங்களே எப்படி?
ரொம்ப நல்லவளா இருக்கீங்களே எப்படின்னு கேட்குற மாதிரி இருக்கு, ஒருவர் நல்லவராக இருக்கிறது எப்படியோ அதுமாதிரி எளிமையா இருக்குறதும் அடிப்படையான விஷயம். எனக்குத் தேவையில்லாத எதையும் நான் என்னோடு வைத்துக்கொள்வதில்லை. அது பணமாக இருந்தாலும்கூட நான்கைந்து உதவியாளர்கள் வைத்துக்கொள்ள முடியும். அந்த நான்கைந்து பேரும் சரியா சாப்பிட்டாங்களா? தூங்கினாங்களா? என்கிற கவலை எனக்குள் வந்து விடும். அதை ஏன் நான் சுமக்க வேண்டும். எனக்கு நானே துணை, எனக்கு நானே உதவி.
பார்வதி நிச்சயம் வித்தியாசமானவர்தான். 10 ஆண்டுகால சினிமாவுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு திரும்பினோம்.