இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
2015ம் ஆண்டின் முக்கால் ஆண்டு கடந்து விட்டது. இன்னும் காலாண்டு மட்டுமே உள்ளது. அடுத்த காலாண்டின் 91 நாட்களில் எத்தனை படங்கள் வரப் போகிறது என்பதைப் பொறுத்துத்தான் 2014 படங்களின் எண்ணிக்கையை முறியடிக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். அவற்றில் எத்தனை படங்கள் சாதனை படைக்கப் போகிறது என்பதன் பட்டியலில் சில முக்கிய படங்களும் இடம் பெற்றுள்ளன.
எதிர்பார்க்கும் படங்கள் ஏமாற்றத்தைத் தருவதும், எதிர்பாராத படங்கள் வெற்றி பெறுவதும் சினிமாவில் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். அதனால், வரப் போகும் படங்களைப் பற்றி அதன் வெளியீட்டு சமயத்தில் பார்ப்போம்.
அதே சமயம், இதுவரையிலான 2015ம் ஆண்டில் முத்திரை பதித்த சில படங்களைப் பற்றிப் பார்ப்போம். இந்தப் பட்டியல் கமர்ஷியல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பலராலும் வரவேற்புப் பெற்ற படங்கள்.
ஐ
ஷங்கர் இயக்க விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்த படம். ஷங்கரின் முந்தைய படங்களான 'சிவாஜி, எந்திரன்' ஆகிய படங்களுடன் ஒப்பிடும் போது 'ஐ' படம் சுமாரானப் படமாகத்தான் அமைந்தது. விக்ரம் என்ற நடிகரின் கடுமையான உழைப்பும், நடிப்பும்தான் இந்தப் படத்தைப் பற்றிப் பேச வைத்தது. மற்றபடி சில 'பூ' சுற்றல்களை வழக்கம் போலவே கொடுத்திருந்தார் ஷங்கர். ஏ.ஆர். ரகுமானும் அவர் பங்கிற்கு பாடல்களில் கொஞ்சம் ஏமாற்றினாலும், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு படத்தைப் பற்றிப் பேச வைத்தது.
டார்லிங்
ஒழுங்காக இசையமைத்துக் கொண்டிருக்கிறாரே இவருக்கு ஏன் வேண்டாத வேலை என ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்தில் நாயகனாக அறிமுகமான போது சில குரல்கள் எழத்தான் செய்தது. ஆனால், படத்தின் வெற்றி அதையெல்லாம் மறைத்துவிட்டது. ஒரு பேய்ப் படத்தை நகைச்சுவையாகச் சொல்லி வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களின் கல்லாவை நிரப்பியதால் இந்த 'டார்லிங்'கை அனைவரும் கொஞ்சத்தான் செய்தார்கள். இந்தப் படத்தின் வெற்றி அடுத்து வேறு ஒரு படத்திற்கும் 'டார்லிங் 2' என பெயர் வைக்கும் அளவிற்கு வந்துள்ளது என்றால் அதை விடப் பெருமை வேறென்ன வேண்டும்.
என்னை அறிந்தால்
அஜித் நடித்த படம் என்ற ஒரு காரணத்தால் மட்டுமே இந்தப் படம் இந்தப் பட்டியலில் இடம் பெறும். ஒரு பரபரப்பில்லாத மெதுவான திரைக்கதையுடன் பொறுமையை சோதித்து ஒரு மாஸ் ஹீரோவை வைத்து கௌதம் மேனன் இயக்கிய படம். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் இந்தப் படம் வியாபார ரீதியாக வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் தரவில்லை என்பதுதான் உண்மை. அதை எத்தனை முறை சொன்னாலும் அஜித் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை. அஜித்தின் திறமையை முழுவதுமாகப் பயன்படுத்தி ஒரு சிறந்த படத்தை கொடுக்கக் கூடய இயக்குனர் தமிழ்த் திரையுலகத்தில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியே இருந்தாலும் அவர்களை அஜித் பயன்படுத்திக் கொள்ளாமலே இருக்கிறார் என்றுதான் அர்த்தப்படுத்த வேண்டும்.
கொம்பன்
தென் மாவட்ட மக்களின் வாழ்வியலை சமீபத்தில் யதார்த்தமாகப் பதிவு செய்த படம் என்று இந்தப் படத்தைத் தாராளமாகச் சொல்லலாம். 'பருத்தி வீரன்' படத்திற்குப் பிறகு மீண்டும் கார்த்தியின் நடிப்பை முழுமையாகப் பயன்படுத்திய படம். ராஜ்கிரண், லட்சுமி மேனன், கோவை சரளா என படத்தில் நடித்துள்ள மற்ற கலைஞர்களுக்கும் அவர்களுடைய திறமையை வெளிப்படுத்த சரியான சந்தர்ப்பத்தை இயக்குனர் முத்தையா அமைத்துக் கொடுத்திருந்தார். கார்த்தியின் சிறந்த படங்களின் பட்டியலில் இந்தப் படத்திற்கு எப்போதுமே ஒரு இடமுண்டு.
ஓ காதல் கண்மணி
மணிரத்னம் இந்தப் படத்திலாவது வெற்றியைக் கொடுப்பாரா என அவருடைய ரசிகர்களை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்த படம். வழக்கம் போலவே படம் வெளிவந்ததும் 'ஏ' சென்டர்களில் மட்டும் வசூலை அள்ளியது. இப்படி ஒரு கதை தமிழ்ப் படங்களுக்குத் தேவையா என்ற விவாதத்தையும் கிளப்பியது. இருந்தாலும் மணிரத்னம் மீண்டும் அவருடைய 'டச்'சை அழுத்தமாகப் பதிய வைத்துவிட்டார் என்றுதான் பலரும் பாராட்டினார்கள். கதையை தவிர்த்துப் பார்த்தால் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் ஆகியோரின் நடிப்பு ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. மணிரத்னத்திடம் இருந்து அடுத்து ஒரு வித்தியாசமான படத்தை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை இந்தப் படம் கொடுத்தது.
காஞ்சனா 2
ராகவா லாரன்ஸ் இதற்கு முன் இயக்கிய 'காஞ்சனா' படம் பேய்ப் படங்களின் வசூலில் சாதனை புரிந்தது. மீண்டும் இந்த 'காஞ்சனா 2' படமும் அதைவிடப் பெரிய சாதனையைப் புரிந்தது. அவருக்கு மட்டும் பேய் இப்படி வசூல் சாதனை புரிய வைக்கிறதே என மற்ற பேய்ப் பட படைப்பாளிகள் யோசிக்கலாம். பேயைப் பார்த்து முழுவதுமாகப் பயப்படாமல் அந்த பயத்திலும் ஒரு நகைச்சுவையை வைத்து ரசிக்க வைத்ததும் அதற்குக் காரணமாக இருக்கலாம். இந்த ஆண்டின் அதிக வசூல் மற்றும் லாபம் தந்த படங்களில் இந்தப் படத்திற்கு மிக முக்கிய இடமுண்டு.
36 வயதினிலே
தமிழ் சினிமாவில் எப்போதுமே ஹீரோக்களுக்குத்தான் வரவேற்பு அதிகம். ஹீரோக்கள் இல்லாத படங்கள் அதிக வரவேற்பு பெறாது என்ற பேச்சை உடைத்த படம். ஹீரோயின்களும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்து ஒரு படத்தை வெற்றி பெற வைக்க முடியும் என்பதை நீண்ட காலத்திற்குப் பிறகு உணர்த்திய படம். மீண்டும் நடிக்க வந்த ஜோதிகாவுக்கு இந்தப் படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. திருமணமாகி, குழந்தைகள் பெற்ற பின் ஒரு முன்னாள் ஹீரோயினுக்கு தமிழ் ரசிகர்கள் வரவேற்பு கொடுக்க மாட்டார்கள் என்பதை காலம் காலமாக சொல்லி வந்தவர்களுக்கு இந்தப் படம் பாடம் கற்றுக் கொடுத்துள்ளது.
காக்கா முட்டை
படத்தின் பெயரே வித்தியாசமாக இருக்கிறதே, இரண்டு சிறுவர்கள் நடித்திருக்கிறார்களே இது எந்த மாதிரியான படமாக இருக்கும் என யோசிக்க வைத்தவர்களுக்கு இந்தப் படத்திற்குக் கிடைத்த விருதும், தியேட்டர்களில் கிடைத்த வரவேற்பும் தக்க பதிலைக் கொடுத்துள்ளது. குடிசைப் பகுதி, ஏழைச் சிறுவர்களின் 'பீட்சா' ஆசையை இப்படி ஒரு யதார்த்தப் பதிவாக ஒரு படமாகக் கொடுக்க முடியுமா என இயக்குனர் மணிகண்டன் ஆச்சரியப்படுத்திவிட்டார். அதுதான் இந்தப் படத்திற்கும், இதில் நடித்த சிறுவர்களுக்கும் தேசிய விருதை வாங்கிக் கொடுத்துள்ளது. மணிகண்டன் போன்ற பல இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் வரவேண்டும் என்ற ஆசையை இந்தப் படம் உருவாக்கியுள்ளது.
பாபநாசம்
மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய 'த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக். 'உத்தம வில்லன்' படத்தால் ரசிகர்களை ஏமாற்றிய கமல்ஹாசன் 'பாபநாசம்' மூலம் அதைச் சரி செய்துவிட்டார். கதையும், சில காட்சிகளும் விவாதத்தை எழுப்பினாலும் இந்தப் படத்தை ஒரு கமர்ஷியல் சினிமாவாக மட்டுமே பார்க்க முடியும். கமல்ஹாசன் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. ஒரு பாசமான குடும்பத்தைக் கண் முன் காட்டியது இந்த 'பாபநாசம்'.
பாகுபலி
தெலுங்கிலும் தமிழிலும் ஒரே சமயத்தில் உருவான படம் என்கிறார்கள். ஆனால், சில காட்சிகளில் தெலுங்கு வாயசைப்பு இருந்தது என்பதை படத்தின் இயக்குனரே மறுக்க முடியாது. இந்தப் படம் கதைக்காகப் பாராட்டப்பட்டது என்று சொன்னால் அது குறைவுதான். ஆனால், படமாக்கப்பட்ட விதத்திற்காக மிகவும் பாராட்டப்பட்டது. அந்த உருவாக்கம்தான் இந்தப் படம் 600 கோடி ரூபாய்க்கும் மேலும் வசூல் செய்யக் காரணமாக அமைந்தது. இந்தியத் திரையுலகில் குறிப்பிட வேண்டிய இயக்குனர்களில் தென்னிந்தியாவில் இருந்து மேலும் ஒருவர் சேர்ந்திருக்கிறார். இரண்டாம் பாகத்தின் மூலம் மேலும் சாதனைகளை இயக்குனர் ராஜமௌலி படைப்பார் என எதிர்பார்க்கலாம்.
தனி ஒருவன்
இயக்குனர் ராஜா, மோகன் ராஜா-வாக பெயரை மாற்றிக் கொண்டு முதல் முறையாக தனது சொந்தக் கதையை இயக்கி பெரிய வெற்றியைப் பெற்ற படம். இப்படி ஒரு பரபரப்பான திரைக்கதையுடன் ஒரு ஆக்ஷன் படத்தைத் தமிழ் ரசிகர்கள் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. ஜெயம் ரவிக்கு ஒரு மாற்றத்தைக் கொடுத்த படம். இந்தப் படத்தின் வெற்றியை அவர் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டால் நல்லது. அரவிந்த்சாமி இப்படியெல்லாம் கூட நடிப்பாரா என ஆச்சரியப்படுத்திய படம். இதுவரை அடுத்தவர்களின் படங்ளை தமிழில் ரீமேக்காகக் கொடுத்த ராஜாவின் இந்த 'தனி ஒருவன்' இப்போது அடுத்தவர்கள் ரீமேக் செய்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறது.
த்ரிஷா இல்லனா நயன்தாரா
இந்தப் படத்தையும் இந்த முத்திரை பதித்த படங்களில் சேர்ப்பது நியாயமா என்று சிலர் கேட்பார்கள். ஆனால், சினிமாவில் கடைசியாக வெற்றி என்ற ஒன்றே ஒரு படத்தைப் பற்றிப் பேச வைக்கும். அந்த விதத்தில் இந்தப் படத்தை வாங்கியவர்களுக்கு இந்தப் படம் லாபத்தைத்தான் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. வசூலுக்கு முன்னால் தரமான படம், தரமில்லாத படம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. சினிமா என்பது இங்கு வியாபாரம்தான், எந்தப் படம் வசூலைத் தருகிறது என்றுதான் வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் பார்ப்பார்கள். யாரை நம்பி படம் எடுத்தார்களோ அதை வைத்து வெற்றி பெற்று விட்டார்கள் என்பதே உண்மை.
குற்றம் கடிதல்
சிறந்த படம் என்ற தேசிய விருதுக் குழுவே இந்தப் படத்தைத் தேர்வு செய்து விருதையும் வழங்கிவிட்டது. இயக்குனர் பிரம்மா ஒரு பிரமாதமான படைப்பைக் கொடுத்திருக்கிறார். அதே சமயம் இந்தப் படங்களும் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று சிலர் சொல்வது தேவையற்றது என்றே சொல்லத் தோன்றுகிறது. இந்தப் படங்களை அனைவரும் பார்க்கும் விதத்தில் எந்தெந்த வழிகளில் கொ்டு செல்ல முடியுமோ அந்தந்த வழிகளில் கொண்டு சேர்க்க வேண்டும். தியேட்டர்கள் மூலம் மட்டுமே மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும், அதன் மூலம் மட்டுமே வசூலைப் பார்க்க வேண்டும் என்தெல்லாம் தேவையில்லை. பல அமைப்புகளின் மூலமும், பட விழாக்கள் மூலமும் பலரது கவனத்தையும் ஈர்க்க முடியும். இங்கு மற்றவர்களுக்கு அறிவுரை சொன்னால் யாருமே ஏற்றுக் கொள்வதில்லை என்ற காலத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசிய விருது பெற்ற 'காக்கா முட்டை' படம் வசூலை அள்ளியது என அதனுடன் இப்படத்தை ஒப்பிடுவதும் தேவையற்றது. அந்தப் படம் நகைச்சுவை இழையோட இருந்தது. இந்தப் படம் முற்றிலும் சீரியசான கதை நகர்த்தலில் இருந்தது. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
2015 ஜனவரி முதல் செப்டம்பர் வரை இந்த முக்கால் ஆண்டில் 160 படங்கள் வரை வெளிவந்துள்ளது. அவற்றில் ஏதோ ஒரு விஷயத்தால் ரசிகர்களைக் கவர்ந்த படங்களாகவும், அதிகம் பேசப்பட்ட படங்களாகவும் உள்ள படங்களைப் பற்றித்தான் பார்த்தோம். இந்தப் பட்டியலில் இன்னும் சில படங்களைச் சேர்த்திருக்கலாம், சில படங்களை நீக்கியிருக்கலாம் என கமெண்ட்டுகள் வருவதும் இயல்புதான். படங்களைப் பார்ப்பதிலும் பகுப்பதிலும் அனைவரின் பார்வையும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
மொத்தமாக ரசிகர்களின் கவனத்தில் அதிகம் ஈர்க்கப்பட்ட படங்களைத்தான் இதில் குறிப்பிட்டிருக்கிறோம். இருந்தாலும் 160 படங்களில் 12 படங்கள் மட்டுமே இடம் பெற்றிருப்பது நிறையவே யோசிக்க வைக்கிறது.