தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விவசாய மக்கள் வஞ்சிக்கப்படுவது காலம் காலமாக நடந்து வருகிற ஒன்று. இன்றுகூட அவர்களது விளைநிலங்கள் குறைந்த விலை கொடுத்து அபகரிக்கப்பட்டு அடுக்குமாடி கட்டிடங்களாகவும், ஆலைகளாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன. விவசாயிகளின் நாயகர்களாக அன்றைய ஹிரோக்கள் நடித்தனர். குறிப்பாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் விவசாயி, உழைக்கும் கரங்கள், உரிமைக்குரல் போன்ற படங்களில் விவசாயிகளின் துயர் துடைக்கும் நாயகனாக நடித்தார். சிவாஜி விவசாயிகளில் ஒருவராக நடித்து அவர்களின் வேதனையை புரிய வைத்தார். அப்படி ஒரு படம்தான் பழனி.
1965ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை ஏ.பீம்சிங் இயக்கினார். சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், ஸ்ரீராம், தேவிகா, புஷ்பலதா, டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா, நாகேஷ் நடித்திருந்தார்கள். விஸ்வநாதன், ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர். கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார். ஜி.வி.அய்யர் என்பவர் படத்தின் கதையை எழுதியிருந்தார்.
பழனியின் கதை
கிராமத்து அப்பாவி விவசாயி பழனி (சிவாஜி). அவரது தம்பிகள் முத்துராமன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஸ்ரீராம். மனைவியை இழந்த பழனி தம்பிகளுக்காக மறுமணம் செய்து கொள்ளாமல் உழைப்பையே மூலதனமாக கொண்டு வாழ்கிறார். அண்ணன் தம்பிகள் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள். மூத்த தம்பியின் மனைவிக்கு தனிக்குடித்தன ஆசை வந்த பிரிந்து போகிறார். பூமிதான இயக்கம் சிவாஜிக்கு உள்ளூர் பண்ணையாரிடம் வாங்கிக் கொடுத்த நிலத்தை பண்ணையாரே ஏமாற்றி பிடுங்கிக் கொள்கிறார். பிழைக்க வழியின்றி மற்ற தம்பிகள் இருவரும் நகரத்துக்கு சென்று விடுகிறார்கள்.
பழனியின் தங்கை மற்றும் உள்ளூர் பெண் எமிலியை அடைய நினைக்கும் பண்ணையார் அதற்காக கீழ்த்தரமான வேலைகளை செய்கிறார். நகரத்துக்கு பிழைக்கப்போன தம்பிகளில் ஒருவர் சிறைக்குச் செல்கிறார். இப்படி வில்லனால் திசைக்கு ஒருவராக சென்றவர்கள் வில்லனை வென்று எப்படி மீண்டும் ஒன்று சேர்கிறார்கள், தங்கள் நிலத்தை எப்படி மீட்கிறார்கள் என்கிற கதை.
தேசிய விருது
எம்.ஜி.ஆர் விவசாயிகளின் காட்பாதராக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அப்பாவி விவசாயியாக நடித்தார் சிவாஜி. படத்தில் அவருக்கு ஜோடியும் இல்லை. தம்பிகளுக்காகவே வாழ்வார். அவரின் இந்த யதார்த்த நடிப்பும், கூட்டுக்குடும்ப வாழ்க்கையும், நிலச்சுவான்தார்களின் கொடுமையும், பெண்களின் தனிக்குடித்தன ஆசை என அத்தனை விஷயங்களையும் படம் பேசியதால் அனைத்து தரப்பினருக்கும் பிடித்து வெற்றிப் படமானது. அந்த ஆண்டு சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா ஆகியோர் கொடூர வில்லன்களாக நடித்திருந்தார்கள். நாகேஷ் வில்லன்களின் ஆளாக இருந்து கொண்டு நியாயம் பேசி சிரிக்க வைத்தார்.
பூமிதான இயக்கம்
அப்போது பிரபலமாக இருந்த விநோபாவின் பூமிதான இயக்கத்தை ஊக்கப்படுத்தியும். பூமிதான இயக்கம் மூலம் பெற்ற நிலங்களும் எப்படி விவசாயிகளிடமிருந்து அபகரிக்கப்படுகிறது என்பதையும் தெளிவாக காட்டிய படம். கிராமத்திலிருந்து நகரத்திற்கு பிழைப்பு தேடிவரும் அப்பாவி மக்கள் படும் துயரத்தையும் பேசியது.
இப்படி அந்தக்கால சினிமா இலக்கணங்களை உடைத்து யதார்த்தமான சமூக வாழ்க்கைக்கான படமாக பழனி அமைந்தது. “ஆறோடும் மண்னில் இன்றும் நீரோடும்...” அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே...” என்பது உள்பட அருமையான பாடல்களும் இடம்பெற்ற படம்.
காலத்தை வென்று நிற்கும் படம்
50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படமாக இருந்தாலும் படத்தில் பேசப்பட்ட அண்ணன் தம்பி, உறவு, கூட்டுக்குடும்பம், விவசாய நிலத்தை அதிகார வர்க்கம் பறிப்பது போன்ற விஷயங்கள் இன்றைய காலத்தோடும் பொருந்திப்போவதாக அமைந்துள்ளது. அப்படியே தூசி தட்டி இப்போது வெளியிட்டாலும் எந்த பிசிறும் இல்லாமல் இப்போது நடப்பது போன்ற கதையும் காட்சியுமாகவே படம் இருக்கும். அதுதான் பழனி படத்தின் சிறப்பு.