அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
'ஒவ்வொரு இயக்கத்திற்கும் அதற்கு இணையான எதிர் வினை உண்டு' - இது நியூட்டனின் மூன்றாம் விதி. இந்த விதிக்கும் சினிமாவிற்கும் நிறையவே தொடர்பு உண்டு. இந்த விதியை எந்த ஒரு ஆக்ஷடன் படத்தில் சரியாகக் கடைபிடிக்கிறார்களோ அந்தப் படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறும்.
ஒரு நாயகனை அதிகப்படியான 'ஹீரோயிசத்துடன்' காட்ட வேண்டுமென்றால் அதற்கு சரியான, பலமான எதிரி வேண்டும். ஒரு நாயகன் யாருடன் மோதி வெற்றி பெறுகிறார் என்ற வரலாறு சினிமாவில் முக்கியம். சாதாரணமான, பலமில்லாத எதிரியை வீழ்த்தி நாயகன் வெற்றி பெறுகிறார் என்றால் அந்தப் படம் ஹீரோயிசத்திலும் சேர்க்கப்பட்டாது, ஆக்ஷன் படத்திலும் சேர்க்கப்படாது.
இப்படி சரியான எதிரியை, பலமான வில்லனை, கதாபாத்திரங்களில் உருவாக்காத படங்களும், பலமான வில்லனை கதாபாத்திரத்தில் வடிவமைத்துவிட்டு, அதற்குப் பொருத்தமான நடிகரைத் தேர்வு செய்து நடிக்க வைக்காத படங்களும் வெற்றிப் படங்களின் பட்டியலில் இணைந்ததே இல்லை.
ராமாயணம், மகாபாரதம் காலத்திலிருந்து இன்றைய 'பாகுபலி' காலம் வரை கதாநாயகர்களை எதிர்க்கும் வில்லன்களும் கதாநாயகர்களுக்குச் சமமான வலிமை கொண்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டு வருகிறார்கள். அதனால்தான் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் இன்று வரை ரசிக்கப்பட்டு வருகிறது. ராமாயணம், மகாபாரதம் கதையும், கதாபாத்திரங்களும் இன்னமும் நம் இயக்குனர்களுக்கும், கதாசிரியர்களுக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் சமீபத்தில் வில்லன்கள் பஞ்சம் அதிகமாகவே ஏற்பட்டுவிட்டது. திரும்பத் திரும்ப பிரகாஷ்ராஜையும், நாசரையும், வில்லனகாவே பார்த்துப் பழகி ரசிகர்களுக்குப் போரடித்துவிட்டது என்று இயக்குனர்கள் நினைத்துவிட்டார்கள். பிரகாஷ்ராஜும் நாயகனாகவும், குணச்சித்திரக் கதாபாத்திரத்திலும், நாசரும் குணச்சித்திரக் கதாபாத்திரத்திலும் அதிகமாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், வித்தியாசமான வில்லன்களைத் தேடி பயணப்பட்டுவிட்டார்கள் இயக்குனர்கள். அப்படி இயக்குனர்களின் கையில் சிக்கி, இந்த ஆண்டில் வித்தியாசமான வில்லன்காள உருமாறிய சில வில்லன்களைப் பற்றிப் பார்ப்போம்.
அரவிந்த் சாமி - தனி ஒருவன்
'தனி ஒருவன்' படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற செய்தி வந்த போதே, திரையுலகத்தினரும், ரசிகர்களும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அமுல் பேபி மாதிரியான முகத்தை வைத்துக் கொண்டு அதிர்ந்து கூட சிரிக்காதவர் எப்படி வில்லத்தனத்தைக் காட்டப் போகிறார் என்று சந்தேகப்பட்டார்கள். ஆனால், கடைசியில் 'தனி ஒருவன்' படத்தில் அரவிந்த்சாமி அவருடைய வில்லத்தனத்தை ஸ்டைலிஷாகவும், அலட்டிக் கொள்ளாமல் காட்டி நடித்ததும அந்தப் படத்திற்கு மிகப் பெரும் பிளஸ் பாயின்டாக அமைந்தது. அட, இப்படிக் கூட வில்லத்தனத்தைக் காட்டலாமோ என வியக்க வைத்தார் அரவிந்த்சாமி. 'தளபதி, ரோஜா' காலத்திலிருந்தே அவரை டீன்ஏஜில் ரசித்த அன்றைய இளம் பெண்களான இன்றைய 'ஆன்ட்டி'கள் நிறையவே அதிர்ச்சியடைந்திருப்பார்கள் என்பது நிஜம்.
கார்த்திக் - அனேகன்
அரவிந்த்சாமி 90களின் ஆரம்பத்தில் தனக்கென தனியாகப் பெண் ரசிகைகளை வைத்திருந்தாலும் 80களில் இருந்து 90களின் மத்தி வரை அதை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருந்தவர் கார்த்திக். அன்றைய இளம் பெண்களுக்கு மட்டுமல்ல, இளம் ஹீரோயின்களுக்கும் கனவுக் கண்ணனாகத் திகழ்ந்தவர் கார்த்திக். அவருடன் ஒரு படத்திலாவது நடித்துவிட மாட்டோமா என்று அவர்கள் ஏங்கியதுண்டு. இன்னமும் ஹீரோவுக்குரிய அத்தணை அம்சங்களும் பொருந்தியிருக்கும் கார்த்திக், தனுஷ் நாயகனாக நடித்த 'அனேகன்' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். பணக்கார வில்லன்தான், இருந்தாலும் பெண்ணாசைக்காகத்தான் இந்த 'அனேகன்' வில்லன் போராடினார் என்பது அதிகமான வரவேற்பைப் பெறவில்லை. இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சிகளில் மட்டும் வில்லத்தனத்தைக் கொஞ்சம் அதிகமாக வெளிப்படுத்தியிருந்தார் கார்த்திக். ஆனால், இவரை அரவிந்த்சாமி 'தனி ஒருவன்' படத்தில் ஓவர் டேக் செய்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
மிதுன் சக்ரவர்த்தி - யாகாவாராயினும் நா காக்க
ஹிந்தித் திரையுலகின் 80, 90களின் வசூல் நாயகன். அதிகப்படியான பெண் ரசிகைகளைத் தன் பக்கம் வைத்திருந்தவர். 'டிஸ்கோ' என்ற வார்த்தையும், டிஸ்கோ டான்சும் இந்தியாவில் இவருடைய 'டிஸ்கோ டான்சர்' படத்தால்தான் பிரபலமானது. அதன்பின் அந்தக் காலங்களில் டிஸ்கோ டான்ஸ் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை உருவாக இவரும் ஒரு முக்கியக் காரணம். அப்படிப்பட்ட ஒரு புகழ் பெற்ற, பிரபலமான நாயகன் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாமகிறார், அதிலும் வில்லனாக நடிக்கிறார் என்பதை மிகவும் 'ல-ப்ரொஃபைலாக' வெளிப்படுத்திய படம் 'யாகாவாராயினும் நா காக்க'. இந்தப் படத்தில் மிதுன் சக்கரவர்த்தி வில்லனாக நடித்திருக்கிறார் என்பது இப்போது கூட சிலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. படம் வந்த பிறகாவது அவருடைய கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டிருக்க வேண்டும். 'நாயகன்' - 'வேலு நாயக்கர்' கதாபாத்திரத்தின் ஜெராக்ஸ் ஆகத்தான் 'யாகாவாராயினும் நா காக்க' படத்தில் மிதுன் சக்கரவர்த்தியின் வில்லன் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது. அவரும் முடிந்தவரையில் வசனங்களை அதிகம் பேசாமல், கொஞ்சம் முரட்டுப் பார்வையிலேயே வில்லத்தனத்தை வெளிப்படுத்த முயற்சித்திருந்தார்.
ராணா டகுபதி - பாகுபலி
ஒரு தென்னிந்தியத் திரைப்படம், 600 கோடி ரூபாய் வசூலை அள்ளி, இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவிலும் கவனத்தை ஈர்த்த 'பாகுபலி' படத்தின் வில்லன் ராணா டகுபதி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் நாயகனாக, குணச்சித்திர நடிகனாக நடித்துக் கொண்டிருக்கும் ராணா, 'பாகுபலி' படத்தில் வில்லனாக நடிக்க சம்மதித்ததன் காரணம் இப்போது பலருக்குப் புரிந்திருக்கும். கதாபாத்திரத்தின் தன்மையாகப் பார்த்தால் அவர் வில்லன்தான், ஆனால் 'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தில் அவருக்குத்தான் அதிகக் காட்சிகள் என்பது போல நமக்குத் தோன்றியிருக்கும். அந்த அளவிற்கு முதல் பாகத்தில் அவருடைய ராஜ்ஜியம்தான் அதிகமிருந்தது. அதற்கேற்றபடி தன்னை புஜபல பராக்கிரமத்துடன் உருவாக்கிக் கொண்டு, அப்படி ஒரு வலிமையான எதிரி 'பாகுபலி'க்கு இருக்கிறான் என்பதை தன் நடிப்பின் மூலம் உணர்த்தினார். 'பாகுபலி' படத்தின் வெற்றியில் பிரபாஸைப் பற்றிப் பேசும் அளவிற்கு ராணா டகுபதியைப் பற்றியும் கண்டிப்பாகப் பேசுவார்கள்.
முன்பே சொன்னது போலத்தான் ராமாயணத்தில் ராமரைப் பற்றிப் பேசும் போது ராவணனைப் பற்றியும் பேசுவார்கள், மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களைப் பற்றிப் பேசும் போது கௌரவர்களைப் பற்றியும் பேசுவார்கள்.
அந்த விதத்தில் தமிழ் சினிமாவில் சில சிறந்த படங்களைப் பற்றியும், அதில் நடித்த ஹீரோக்களைப் பற்றியும் பேசும் போது அதில் சிறப்பாக நடித்த வில்லன்களைப் பற்றியும் பேசுவார்கள். இந்த ஆண்டில் மேலே குறிப்பிட்ட வில்லன்களாக மாறிய நாயகர்களில் யார் சிறப்பாக நடித்தார்கள் என்று இந்தப் படங்களைப் பற்றி எதிர்காலத்தில் பேச்சு வரும் போதும் இருக்கும்.