சீரியல்களுக்கும் சினிமா ரேஞ்சுக்கு இசையை கொடுப்பேன்! - இசையமைப்பாளர் உதயன்
31 ஆக, 2015 - 10:55 IST
கண்டேன் சீதையை, பீஷ்மர், மன்னாரு, மேல் உள்பட 15 படங்களுக்கு இசையமைத்திருப்பவர் உதயன். தற்போது யார் அந்த தேவதை, நட்சத்திர ஜன்னலில், பெயரிடப்படாத 2 படங்கள் என இசையமைத்துக் கொண்டிருக்கிறார். அதோடு ஆஸ்திரேலியா, லண்டன் என வெளிநாடுகளில் தயாராகும் தமிழ்ப்படங்கள் மற்றும் ஆல்பங்களுக்கும் பிசியாக இசையமைத்து வருகிறார் உதயன். இதற்கிடையே பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிழல் என்ற நெடுந்தொடருக்கும் பின்னணி இசையமைத்து வருகிறார்.
இப்படி சினிமா-சீரியல் என இரண்டு துறைகளிலும் இசையமைத்து வரும் அனுபவத்தைப்பற்றி அவர் கூறும்போது, மியூசிக் மாறிடுச்சு, ரசனை மாறிடுச்சுன்னு சொல்வதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. இன்னைக்கு இல்லேன்னாலும் பத்து வருசம் கழிச்சு இதே பாடல்களை கேட்பார்கள். இது ஒரு சர்க்கிள் மாதிரி சுத்திக்கிட்டே இருக்கும். அதேமாதிரி, சின்னத்திரை-சினிமா என்ற வித்தியாசமும் கிடையாது. அந்தந்த காட்சிகளுக்கேற்ற இசையை கொடுத்தாலே போதுமானது. என்னைப்பொறுத்தவரை இசை என்பது ஒன்றுதான். மேலும், தற்போது நான் இசையமைத்து வரும் நட்சத்திர ஜன்னலில் என்ற படத்தில் கவிஞர் மு.மேத்தா பாடல் எழுதியிருக்கிறார். ஏற்கனவே உதயகீதம் படத்தில் இடம்பெற்ற பாடும் நிலாவே, வேலைக்காரனில் தோட்டத்துல பாத்தி கட்டி, வேலை இல்லாதவன்தான், காசியில் என் மனவானில் என பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியவர் மு.மேத்தா. அவர் இந்த படத்திற்காக, பாதை எதுவரை போகுமென்று பார்வை அறிவதில்லை- என்றொரு அருமையான பாடலை எழுதி தந்திருக்கிறார்கள். அந்த அந்த படத்தின் ஹைலைட் பாடலாக அமையும். அதோடு, பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிழல் என்ற தொடருக்கும் பின்னணி இசையமைத்து வருகிறேன். பின்னணி இசைக்காகவே இந்த தொடர் டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது. வாரம் நான்கு நாட்கள் இரவு 9 முதல் 9.30 வரை இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. மாசத்துக்கு 22 எபிசோடு பின்னணி இசையமைத்து கொடுத்தாக வேண்டும். அதனால் நான் ரொம்ப பிசியாகி விட்டேன். ஞாயிற்றுக்கிழமைகூட எனக்கு ஓய்வு இல்லை. மேலும், இனிமேல் சினிமா மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களுக்கும் தொடர்ந்து இசையமைக்கப்போகிறேன். சீரியல்களுக்கும் சினிமா தரத்தில் இசையை கொடுப்பேன். என்னைப்பொறுத்தவரை எப்போதும் நான் இசை சம்பந்தமான வேலைகளில் பிசியாக இருக்க வேண்டும். தரமான இசையை கொடுக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்கிறார் இசையமைப்பாளர் உதயன்.