தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இன்றைக்கு தமிழ் சினிமாவில் திரும்பிய பக்கமெல்லாம் திகில் படங்கள்தான். தயாராகிக் கொண்டிருக்கும் படங்களில் மூன்றில் ஒன்று திகில் படமாக இருக்கிறது. இந்த திகில் பட சீசன் கார்த்திக் சுப்புராஜின் பீட்சாவும், ராகவா லாரன்சின் காஞ்சானவும், அனுஷ்காவின் அருந்ததியும் துவக்கி வைத்தாலும் தமிழ் சினிமாவில் திகில் படத்துக்கு பிள்ளையார் சுழி போட்டவர் வீணை எஸ்.பாலச்சந்தர். அது மட்டுமல்ல இன்றைக்கு நடைமுறையில் உள்ள பல விஷயங்களுக்கும் அவர்தான் முன்னோடியாக இருந்தார்.
3 வயதில் மேடை ஏறியவர்
தஞ்சை மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியம்தான் பாலச்சந்தரின் சொந்த ஊர். ஆனால் அவர் பிறந்தது சென்னையில். காரணம், அவரது அண்ணன் ராஜம் சினிமாவில் பாடுகிறவர். அப்பா, தாத்தா எல்லாம் சிறுசிறு வேடங்களில் சினிமாவில் நடிப்பவர்கள். இந்த பின்னணியில் வளர்ந்த பாலச்சந்தர் 3 வயதில் நாடக மேடை ஏறினர். 10 வயதில் சினிமாவுக்கு வந்தார். 1933ம் ஆண்டு வெளிவந்த சீதா கல்யாணம் படத்தில் கஞ்சிரா வாசிக்கும் சிறுவனாக நடித்தார்.
முதல்படமே பேய்படம்
அதைத் தொடர்ந்து ஆராய்ச்சிமணி, காமதேனு, ரிஷ்யசிருங்கர், நாரதன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 1848ம் ஆண்டு வெளிவந்த இது நிஜமா படத்தில் ஹீரோவாக நடித்தார். அவர் நடித்த முதல் படமே பேய் படம்தான். இந்த படத்தில் மாது, கோபால் என்ற இரு கேரக்டர்களில் நடித்தார். மாது வெளிநாட்டில் கொல்லப்பட்டு விடுவார். அவர் கோபால் உடம்பிற்குள் ஆவியாக புகுந்து கொன்றவர்களை பழிவாங்குகிற கதை. அதை தொடர்ந்து கைதி படத்தில் நடித்தார். இது கொலை குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவிக்கும் கைதி ஒருவன் ஜெயிலிருந்து தப்பி வந்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் ஆக்ஷன் கதை. இதுவும் 1948ம் ஆண்டுதான் வெளிவந்தது. என் கணவர் என்ற படத்திற்கு இசை அமைத்தார். அந்த படத்தின் டைட்டில் இசையை முதன் முறையாக இசை தட்டில் கொண்டு வந்தார்.
எல்லாமே திகில் தான்
இவர் இயக்கி நடித்த அந்தநாள் படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. இது ஜப்பானிய இயக்குனர் அகிரோ குரசேவாவின் ராஷோமான் என்ற படத்தை தழுவி எடுத்தார். இதில் பாடல்கள் கிடையாது. ஒரு பாடலாவது வையுங்கள் என்று ஏவிஎம் செட்டியார் கேட்டபோதும் பிடிவாதமாக மறுத்துவிட்டர். ஒரு படத்தில் 20 பாட்டு 30 பாட்டு என்று வந்து கொண்டிருந்த காலத்தில் பாடலே இல்லாமல் படத்தை இயக்கினார். படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு அவன் அமரன், அவனா இவன், பொம்மை, நடு இரவில் படங்களை இயக்கினார். எல்லாமே திகில் படங்கள்தான்.
பயமுறுத்திய பொம்மை
பொம்மை உள்பட அனைத்து படங்களுமே ஹாலிவுட் படங்களின் தாக்கத்தில் உருவானவை. அவனா இவன் படம் 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற எ பிளேஸ் இஸ்தி சன் என்ற ஹாலிவுட் படத்தின் தாக்கத்தில் உருவானது. வில்லன்களும், ஹீரோக்களுக்கு இணையானவர்கள்தான் என்று ராஜாம்பாள் படத்தில் வித்தியாசமான வில்லனாக நடித்து காட்டினார். வீணை பாலச்சந்தரின் படம் என்றால் நள்ளிரவு காட்சிக்கு யாரும் வரமாட்டார்கள் என்கிற அளவிற்கு அவரது படங்கள் அப்போது மக்களை பயமுறுத்தியது. பொம்மை படத்தை இப்போது பார்த்தாலும் திகிலாக இருக்கும். இன்றைய டிரண்டுக்கு அன்றே பிள்ளையார் சுழி போட்ட வீணை பாலச்சந்ததரை இன்று திகில் படம் எடுப்பவர்கள் நினைத்து பார்த்துக் கொள்ளட்டும்.
வீணையில் வித்தகர்
40 வகையான இசைக் கருவிகளை வாசிக்கத் தெரிந்த பாலச்சந்தர் வீணை இசையில் பெரிய வித்வானாக இருந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகி வீணை இசையில் மட்டும் கவனம் செலுத்தினார். தமிழ் சினிமாவில் வீணை பாலச்சந்தரின் பங்களிப்பு மிக முக்கியமானது.