டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமா என்பது அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டுமே கதவைத் திறக்கும் என்று சொல்பவர்கள் அதிகம். ஆனால், அதிர்ஷ்டம் மட்டுமே ஒருவருக்கு வாய்ப்பைக் கொடுத்துவிடாது. உண்மையாகவே திறமை இருந்தால் மட்டுமே அந்த அதிர்ஷ்டமும் அவர்களுக்குக் கை கொடுக்கும்.
யாருக்குமே கிடைக்காத அற்புதமான வெற்றி சிலருக்கு முதல் படத்திலேயே கிடைத்துவிடும். அதன் பின் அவர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்ப்பார்கள். ஆனால், என்ன காரணத்தாலோ அவர்கள் அதற்குப் பின் சோபிக்காமலேயே போய்விடுவார்கள். அதற்கு அதிர்ஷ்டம் காரணமா அல்லது தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பையும், வெற்றியையும் அவர்கள் தக்க வைக்காமல் விட்டுவிட்டார்களா என்றுதான் கேட்கத் தோன்றும்.
தமிழ் சினிமாவில் கடந்த சில காலங்களில் தங்களது முதல் வாய்ப்புகளிலேயே பட்டி, தொட்டி எங்கும் பேசப்பட்ட சிலர் அதன் பின் அந்த பெயரையும் புகழையும் தக்க வைத்துக் கொள்ளாமலே போய்விட்டார்கள். அவர்கள் அனைவருமே அடுத்தடுத்து தங்களது திறமையை பயன்படுத்திக் கொண்டிருந்தால் இந்நேரம் திரையுலகில் முக்கியமானவர்களாக இருந்திருப்பார்கள். அப்படி தங்களுக்குக் கிடைத்த பெயரையும், புகழையும் அடுத்தடுத்து தவற விட்ட சிலரைப் பற்றிப் பார்ப்போம்.
இயக்குனர் சி.எஸ்.அமுதன்
2010ம் ஆண்டு வெளிவந்து தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாது திரையுலகத்தினரையும் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு படம் 'தமிழ் படம்'. தமிழில் ஸ்பூஃப் வகையிலான முழு படமாக வெளிவந்து எதிர்பாராத ஒரு வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன் அதுவரை எந்த ஒரு தமிழ் இயக்குனர்களுமே தொடாத ஒரு கதையை எடுத்துக் கொண்டு ஒரு கலகலப்பான படத்தைக் கொடுத்திருந்தார். தமிழ்ப் படம் என பெயர் வைத்து விட்டு தமிழ்ப் படங்களையே கிண்டலடித்து ஒரு படம் எடுக்க அசாத்திய தைரியம் வேண்டும். அப்படி ஒரு படத்தைக் கொடுத்த இயக்குனரின் 'ரெண்டாவது படம்' படத்தின் இசை வெளியீடு நடந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் எப்போது வரும் என்றே தெரியாத அளவிற்கு உள்ளது. தமிழ் சினிமாவுக்கு ஒரு வித்தியாசமான இயக்குனர் கிடைத்து விட்டார் என்று நினைத்தவர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றத்திற்கு ஆளாக்கிவிட்டார் அமுதன்.
இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர்
2004ம் ஆண்டு எந்த சேனலைத் திருப்பினாலும், எந்த கல்யாண வீட்டிற்குச் சென்றாலும், “தொட்டுத் தொட்டு உன்னை, வெற்றுக் களிமண்ணி...., உனக்கென இருப்பேன்...உயிரையும் கொடுப்பேன்...” என்ற அற்புதமான காதல் வரிகளை தன் இனிமையான இசையால் எங்கும் ஒலிக்க வைத்தவர் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர். 'காதல்' படத்தில் இடம் பெற்ற அந்தப் படத்தின் பாடல்களே படத்தின் வெற்றிக்குக் காரணமாகவும் அமைந்த்து. மெலோடி பாடல்களில் மட்டுமல்லாது, மண் மணம் கமழும் மற்ற பாடல்களிலும் ஒரு இனிமையைக் கொடுத்திருந்தார் ஜோஷ்வா ஸ்ரீதர். தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய, திறமையான இசையமைப்பாளர் வந்துவிட்டார் என பத்திரிகைகளும் பாராட்டின. தொடர்ந்து 'காதல்' படத்தின் பாடல்கள் சேனல்களிலும், வானொலிகளிலும் பல மாதங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. இன்றும் அந்தப் பாடல்களைக் கேட்கும் போது உள்ளுக்குள் ஏதோ ஒன்று செய்யும். அடுத்தடுத்து பல ஹிட் பாடல்களைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோஷ்வா தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சனை காரணமாக தனக்குக் கிடைத்த பெயரையும், புகழையும் தக்க வைத்துக் கொள்ளாமலே விட்டுவிட்டார்.
ரவி கிருஷ்ணா
அப்பா மிகப் பெரிய தயாரிப்பாளர், அண்ணன் இயக்குனர் என சினிமாவிலேயே ஊறிய குடும்பத்திலிருந்து நாயகனாக அறிமுகமானவர் செல்வராகவன். தன்னுடைய தம்பி தனுஷ், தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கிய இடத்தை நோக்கி வளர்ந்து கொண்டிருந்த நிலையில் ரவி கிருஷ்ணாவை '7ஜி ரெயின்போ காலனி' படத்தில் அறிமுகப்படுத்தினார் செல்வராகவன். படம் பார்த்த பலரும் தனுஷ் நடித்திருக்க வேண்டிய படம் போலவே இருக்கிறதே என்று சொன்னார்கள். அந்த அளவிற்கு தனுஷுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு கதையில் ரவிகிருஷ்ணா அறிமுகமானது போல்தான் இருந்தது. ஆனாலும், அப்பாவித்தனமான முகத்தாலும், வித்தியாசமான பேச்சாலும் ரவிகிருஷ்ணா நடித்தாரா அல்லது இயல்பாகவே இருந்தாரா என்று கேட்கும் அளவிற்கு அந்தப் படத்தில் தெரிந்தார். தயாரிப்பாளரின் மகனாயிற்றே அடுத்தடுத்து நல்ல இயக்குனர்களின் படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக வந்து விடுவார் போலிருக்கிறதே என்று எதிர்பார்க்கப்பட்டவர் ரவிகிருஷ்ணா. அடுத்தடுத்து மோசமான படங்களில் நடித்தாலும், 2011ல் வெளிவந்த 'ஆரண்ய காண்டம்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துப் பெயர் வாங்கினார். அதன் பின்னும் தொடர்ந்து நடிக்காமல் முதல் படத்தில் கிடைத்த பெயரையும், கடைசியாக நடித்த படத்தில் கிடைத்த பெயரையும் தொடர்ந்து காப்பாற்றிக் கொள்ள தவறிவிட்டார்.
பிரியாமணி
தமிழ்த் திரையுலகின் முக்கியமான இயக்குனரான பாரதிராஜாவால் அறிமுகம், 'பருத்தி வீரன்' படத்தில் சிறந்த நடிகைகக்கான தேசிய விருது தன் திறமையாலும், நடிப்பாலும் தமிழ்த் திரையுலகத்தில் தனித்துத் தெரிந்தவர். மற்ற நடிகைகள் போலில்லாமல் இவர் வேறு மாதிரியாக வருவார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர். 'பருத்தி வீரன்' படத்தில் அவர் நடித்த நடிப்பும், பெங்களூரில் வளர்ந்த ஒருவரின் மதுரைப் பக்கத்துப் பேச்சையும் தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த நடிகையால் கூட செய்திருக்க முடியாது. அந்த திறமைதான் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. 70களின் கடைசியில் தமிழ் சினிமாவை தன்னுடைய நடிப்பால் உலுக்கிய ஷோபா போன்று வருவார் பிரியாமணி என பலரும் சொன்னார்கள். ஆனாலும், தொடர்ந்து நல்ல கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுக்காத காரணத்தால் தமிழ் சினிமாவில் அவரால் தொடர்ந்து தனக்குக் கிடைத்தப் பெயரை தக்க வைத்துள்ளாமல் போய்விட்டது. மணிரத்னம் இயக்கத்தில் நடித்தால் கூட அதில் அவருக்கு முக்கியத்துவம் இல்லாமலே போனது. 'பருத்தி வீரன்' படம் வெளிவந்த ஆண்டு 2007, இந்த எட்டு வருடங்களில் பிரியாமணி நடித்த தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை ஆறு மட்டுமே.
பின்னணிப் பாடகி மாலதி
'மன்மத ராசா...மன்மத ராசா....' பாடலை இப்போது டிவியில் போட்டால் கூட, குழந்தைகள் தங்களை அறியாமல் நடனம் ஆடுவார்கள். அப்படி ஒரு உத்வேகத்தை அந்தப் பாடலில் கொடுத்து தன் வித்தியாசமான குரலால் பாடியவர் மாலதி. 'திருடா திருடி' படம் வெளிவந்த 2003ம் ஆண்டு அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டவர்கள் எவ்வளவு பேர் என்று கணக்கிடவே முடியாது. இப்போதும் அந்தப் பாடலுக்கு டியூபில் சைனாவில் ஆடுகிறார்கள், சிங்கப்பூரில் ஆடுகிறார்கள், மலேசியாவில் ஆடுகிறார்கள் பகிர்வுகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. தமிழ் சினிமாவில் சில பாடல்கள் மட்டுமே பல காலங்களைக் கடந்தும் ஒலி,ஒளித்துக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஒரு புகழ் 'மன்மத ராசா...' பாடலுக்கு உண்டு. தட்டுத் தடுமாறி தமிழ் சினிமாவில் முன்னேறிக் கொண்டிருந்த தனுஷை, பட்டி, தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்த பெருமை அந்தப் பாடலுக்கு உண்டு என்றால் அது மிகையில்லை. ஒல்லி உடம்பை வைத்துக் கொண்டு சாயாசிங்குடன் கெட்ட ஆட்டம் போட்டதாலேயே அந்தப் பாடலில் தனுஷும் பேசப்பட்டார். ஒரே ஒரு பாடல் பின்னணிப் பாடகி மாலதியே ஓஹோவென உயர்த்தியது. ஆனாலும், தொடர்ந்து அவர் பல ஹிட் பாடல்களைப் பாடவேயில்லை. 'திருப்பாச்சி' படத்தில் 'கும்பிடப் போன தெய்வம்..., 'கந்தசாமி' படத்தில் 'என் பேரு மீனாகுமாரி...', 'காஞ்சனா'வில் 'கொடியவனின் கதையை..', என சில ஹிட் பாடல்களை மட்டுமே பாடியுள்ளார். சமீபத்தில் வெளிவந்த 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' படத்தில் கூட ஒரு பாடலைப் பாடியிருந்தார். ஆனாலும், 'மன்மத ராசா...' அளவிற்கு அடுத்தடுத்து ஹிட்களை கொடுக்காமல் விட்டுவிட்டார்.
ஏன் இந்த ஐந்து பேர் என்று நீங்களும் கேட்கலாம். போட்டி நிறைந்த இந்த திரையுலகத்தில் அவரவர் துறையில் இந்த ஐந்து பேரும் தங்களைப் பற்றிய அறிமுகப் படங்களிலேயே அதிகம் பேசப்பட்டவர்கள். மற்றவர்களுக்குக் கிடைத்த பெயர், புகழ், அங்கீகாரம் ஆகியவற்றை விட இவர்களுக்கு அதிகமாகவே கிடைத்தது என்பது உண்மை.