பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தென்னிந்திய படங்களில் மட்டுமல்லாது, இந்தி படங்களிலும் நடித்துள்ளவர் நடிகை ஸ்ரேயா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என 6 மொழிகளில் நடித்திருக்கும் அவர், தற்போது த்ரிஷ்யம் இந்தி ரீ-மேக்கில், அஜய் தேவ்கன் உடன் நடித்துள்ளார். மலையாளத்தை போலவே தென்னிந்திய அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் இப்போது இந்தியிலும் ரீ-மேக்காகி இருப்பதால் அங்கும் வெற்றி பெறும் என அனைவரும் நம்புகின்றனர். இந்தியில் இப்படம் வருகிற ஜூலை 31ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. த்ரிஷ்யம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து, அவரது சினிமா வாழ்வு குறித்தும் ஸ்ரேயா நம்மோடு பகிர்ந்து கொண்டதாவது...
த்ரிஷ்யம் படம் பற்றி சொல்லுங்க...?
த்ரிஷ்யம் படம் மலையாளம் படத்தின் ரீ-மேக் என அனைவருக்கும் தெரியும். இந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் ரீ-மேக்காகி இருக்கிறது. எல்லா மொழியிலும் நான் பார்க்கவில்லை, ஆனால் ஒரிஜனல் படத்தை பார்த்துள்ளேன். மிகவும் அருமையாக இருந்தது. இந்தி ரீ-மேக்கும் சிறப்பாக வந்துள்ளது. இந்தப்படத்தில் உள்ளப்பூர்வமாக நடித்துள்ளேன். இந்தியிலும் இப்படம் ஹிட்டாக கடவுளை வேண்டுகிறேன்.
முதன்முறையாக இரண்டு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளீர்கள்...? அந்த அனுபவம் பற்றி...?!
ஆமாம், முதன்முறையாக இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்துள்ளேன். அம்மாவாக நடிப்பதை நான் ஒன்றும் சிரமமாக உணரவில்லை. ஏனென்றால் படத்தில் நடிக்கும் முன்பே அந்த ரோலுக்கு நான் தயாராகிவிட்டேன். படத்தில் எனது கேரக்டர் கொஞ்சம் வித்தியாசமாக தான் இருந்தது. இதுவரை இப்படியொரு ரோலில் நான் நடித்தது இல்லை. முற்றிலும் புதுவித அனுபவமாக இருந்தது.
படத்தில் உங்கள் கேரக்டர் பற்றி சொல்லுங்க...?
நடுத்தரவர்க்கத்து குடும்ப தலைவியாக நான் நடித்துள்ளேன். எனது கணவராக அஜய் தேவ்கன் நடித்துள்ளார். கோவாவில் ஒரு கிராமத்தில் நாங்கள் வசிப்பது போன்று எங்களது கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளது. எனக்கும், அஜய்க்கும் இடையேயான கணவன்-மனைவி உறவு அவ்வளவு அழகாக வந்துள்ளது. சராசரி மனிதரும் இந்த உறவை நேசிப்பார்கள்.
முதன்முறையாக அஜய்யுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து...?
உண்மை தான். இப்போது தான் அவருடன் முதன்முறையாக நடிக்கிறேன். அருமையான மனிதர் அஜய். அவரது நடிப்பை மிகவும் ரசித்தேன். வசன உச்சரிப்புகளை வித்தியாசமாக உச்சரிக்க கூடியவர் அஜய். படத்தில் இருக்கும் வசன வரிகள் என்பதையும் தாண்டி உள்ளப்பூர்வமாக பேசக்கூடியவர். ஒரு காட்சியில் நடிக்க ஆரம்பித்துவிட்டால் அந்த காட்சியோடு ஒன்றிப்போய் விடுவார்.
தென்னிந்திய மொழிகளில் உங்களது சினிமா கேரியர் எப்படி போகிறது.?
அதில் எந்த சந்தேகமும் வேண்டாம், சிறப்பாக போய் கொண்டு இருக்கிறது. தற்போது நான் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறேன். ஆனால் பாலிவுட்டில் தான் எனக்கான வாய்பை பெற தவறிவிட்டேன். ஆனால் இந்த த்ரிஷ்யம் படம் வௌிவந்த பிறகு பாலிவுட்டில் எனக்கான இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன். த்ரிஷ்யம் தான் பாலிவுட்டில் எனக்கு திருப்புமுனை தர போகிறது.
நீங்கள் நடித்த தென்னிந்திய படங்களில் ஏதாவது ஒன்றை இந்தியில் ரீ-மேக் செய்ய வேண்டுமென்றால் எந்த படத்தை சொல்வீர்கள்.?
தெலுங்கில் நான் கடைசியாக நடித்த 'மனம்' படத்தை தான் இந்தியில் ரீ-மேக் செய்ய வேண்டும். எனக்கு மிகவும் பிடித்தமான படமும் கூட. இந்தி ரசிகர்களுக்கும் இந்தப்படம் கண்டிப்பாக பிடிக்கும். பாலிவுட்டில் நிறைய படங்கள், தென்னிந்திய மொழிகளில் ரீ-மேக்காகி உள்ளது. குறிப்பாக ''வெட்நெஸ்டே, முன்னாபாய்..'' என்று சொல்லி கொண்டே போகலாம்.
இந்தி நன்றாக பேசுகிறீர்களே எப்படி...?
சிரிக்கிறார். நான் வட இந்திய பெண், அதனால் இந்தி எனக்கு நன்றாக தெரியும். டேராடூனில் தான் பிறந்தேன். பின்னர் டில்லிக்கு வந்தோம். பிறகு டில்லியிலிருந்து மும்பைக்கு வந்தோம். ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்து பின்னர் தான் தென்னிந்திய படங்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினேன். ஒரு நடிகையாக நான் ஆறு மொழி படங்களில் நடித்திருக்கிறேன்.
தபு உடன் நடித்த அனுபவம் குறித்து...?
தபு மிகச்சிறந்த நடிகை, அவருடன் நடித்த அனுபவம் மறக்க முடியாது. சமீபத்தில் அவரது நடிப்பில் வௌிவந்த ஹைடர் படத்தை பார்த்தேன். அவ்வளவு அருமையாக நடித்திருந்தார். ஒரு நடிகையாக அவரிடம் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டேன். அவரிடமிருந்து நிறைய கற்றும் கொண்டேன். அவர் மட்டுமல்ல அஜய்யிடமும் கூட நிறைய விஷயங்கள் கற்று கொண்டேன்.
இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.