இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு நாளை வெளிவருகிறது. இதில் கமலுடன் கவுதமி நடித்துள்ளார். படம் வெளிவருவதையட்டி நேற்று கமல் தன் அலுவலகத்தில் அளித்த சிறப்பு பேட்டி:
பொதுவாக நீங்கள் ரீமேக் படங்களுக்கு முக்கியத்தும் தரமாட்டீர்கள் த்ரிஷ்யம் ரீமேக் படத்தில் நடித்தது எப்படி?
நல்ல விஷயத்தை யார் சொன்னாலும் அதை என் மக்களுக்கும் சொல்ல வேண்டியது கலைஞனாகி எனது கடமை என்று நினைக்கிறேன். மலையாளத்தில் மோகன்லால் நடித்த படம் தெலுங்கு, கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றிருக்கிறது. இந்தப் படத்தை என் மக்களுக்கும் காட்ட வேண்டும் என்று நினைத்தேன். அதனால் நடித்தேன்.
பாபநாசம் படத்தில் மகாநதியின் சாயல் இருப்பதாக சொல்கிறார்களே?
அதை நான் மறுக்கிறேன். படத்தின் புகைப்படங்களை பார்த்துவிட்டு சிலர் அப்படியொரு முடிவுக்கு வரலாம். அந்த படத்தின் நோக்கம் வேறு. இந்தப் படத்தின் நோக்கம் வேறு.
மீனா கேரக்டருக்கு கவுதமியை தேர்வு செய்தது எப்படி?
அது இயக்குனர் ஜீது ஜோசப்பின் முடிவு. அவர்தான் கவுதமியை நடிக்க வைக்கலாம் என்றார். ஆனால் எனக்கு தயக்கம் இருந்தது. தயாரிப்பாளரும், வசனகர்த்தா ஜெயமோகனும் விரும்பியபோது என்னால் மறுக்க முடியவில்லை. ஒப்புக் கொண்டேன். முழு படத்தை பார்த்த பிறகுதான் நான் தயங்கியது அர்த்தமற்றது என்று புரிந்தது. படத்தை பார்க்கும்போது உங்களுக்கும் புரியும்.
நாத்திகரான நீங்கள் கடவுள் பக்தராக திருநீறு அணிந்து நடிக்கிறீர்களே?
எனது படங்களில் தனி மனித விமர்சனங்கள் இழையோடுமே தவிர கதாபாத்திரத்திற்குள் எனது கருத்தை திணிக்க மாட்டேன். எனக்கென்று சில கொள்கைகள் இருக்கிறது. அதை விட்டுத் தரமாட்டேன். சாதியை போற்றும் படங்களில் நடிக்க மாட்டேன். சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியும் இல்லை அவர் சொன்ன பாப்பாவும் கொள்ளு பாட்டியாகிவிட்டார். ஆனால் இன்னும் நாம் சாதியை பிடித்துக் கொண்டிருக்கிறோம். சாதிகள் பற்றிய படத்தில் நடித்திருந்தாலும் சாதிக்கு ஆதரவாக நடித்ததில்லை.
பாபநாசம் படப்பிடிப்பின் போது நாங்குநரி வானமாமலை ஜீயர் சாமிகளை சந்தித்தது ஏன்?
அது பக்தியின் பாற்பட்டதல்ல. மனிதாபிமானத்தின்பாற் பட்டது. பாபநாசம் படப்பிடிப்புக்கு அவர் இடம் கொடுத்து உதவினார். அதற்கு நன்றி சொல்லத்தான் சென்றேன். அந்த கடமை எனக்கு இருக்கிறது. மதம் இல்லாது போனாலும் என்னிடம் மனிதம் இருக்கிறது. எல்லோரையும் மனிதர்களாகத்தான் பார்க்கிறேன். முல்லாவாகவோ, ஜீயராகவோ, அய்யராகவோ பார்ப்பதில்லை.
பாபநாசம் படத்தின் அடிபடையே பாலியல் குற்றம்தான். இன்று பெருகி வரும் பாலியல் குற்றங்களை எப்படி பார்க்கிறீர்கள்?
பாலியல் குற்றங்கள் பெருகி வருவது கவலை தரும் விஷயம். இதனை தனி மனிதர்களால் தடுத்து விட முடியாது. ஒவ்வொருவரும் தானாக திருந்தினால்தான் இந்த குற்றங்கள் குறையும். நள்ளிரவில் ஒரு பெண் நகைகளுடன் பாதுகாப்பாக தனியாக செல்ல முடிவதுதான் இந்தியாவின் சுந்திரம் என்றார்கள். அப்படியென்றால் இந்தியாவுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று அர்த்தம். டில்லியில் தன் நண்பருன் பேருந்தில் சென்ற பாலியல் பலாத்காரம் செய்யப்ட்டார். அவர் தனியாகவும் செல்லவில்லை. நகை அணிந்தும செல்லவில்லை.
மருது நாயகம் படத்தை கைவிட்டுவிட்டீர்களா?
நான் கைவிடவில்லை. படத்திற்கு பைனான்ஸ் தருவதாக சொன்ன அமெரிக்கர்கள் கை கழுவி விட்டார்கள்.