இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'தென்மேற்குப் பருவக்காற்று' படம் மூலம் தமிழ்த் திரையுலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் சீனு ராமசாமி. அந்தப் படத்தில் யதார்த்த நாயகனான விஜய் சேதுபதியை அறிமுகப்படுத்திய பெருமை அவருக்குண்டு. அந்தப் படத்தில் தமிழ்த் திரையுலகம் இதுவரை காட்டியிருக்காத ஒரு புதிய அம்மாவாக சரண்யாவைக் காண்பித்து அவருக்கு தேசிய விருதும் கிடைக்கக் காரணமாக இருந்தார்.
தமிழில் 2010ம் ஆண்டிற்கான சிறந்த படத்திற்கான தேசிய விருதும், வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதும் இந்தப் படம் தேடிக் கொடுத்தது.
அடுத்து இயக்கிய 'நீர்ப் பறவை' படம் மூலம் கடல் சார்ந்த இடத்தின் யதார்த்த காதலைப் பதிவு செய்திருந்தார். முந்தைய இரண்டு படங்களும் தயாரிப்பாளருக்கு கமர்ஷியலாக லாபம் தந்ததோடு தமிழ்த் திரையுலகில் குறிப்பிட்ட படங்களாக அமைந்தன.
அடுத்து 'இடம் பொருள் ஏவல்' படம் மூலம் ஒரு பெரிய வெற்றியை எதிர்நோக்கியிருக்கிறார் சீனு ராமசாமி. அவரின் முந்தைய படங்களின் நாயகர்களான விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் இணைந்து நடிக்க, நந்திதா, 'காக்கா முட்டை' மூலம் பலரின் பாராட்டுக்களைப் பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ், வடிவுக்கரசி உட்பல பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
நமக்காக அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் படம் பற்றிய சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
'இடம் பொருள் ஏவல்' படத்தின் தலைப்பிலேயே பொருள் பதிந்திருக்கிறதே...
'இடம் பொருள் ஏவல்' என்பது மூன்று வகையான கதை, ஒரு புள்ளியில் இணைவதுதான் படம். இடத்தைத் தேடி, பொருளைத் தேடி, பொருள் என்றால் பணம், ஏவல் என்பது ஒரு நிமித்தமாகச் செல்பவர், இந்த மூன்று விதமான கதாபாத்திரங்களின் சந்திப்புதான் இந்தப் படத்தோட ஆன்மா.
'தென்மேற்குப் பருவக்காற்று' படத்தை வறண்ட பகுதியில எடுத்தோம், 'நீர்ப் பறவை' படத்தை கடல் சார்ந்த பகுதியில எடுத்தோம். இந்தப் படத்தை மலை சார்ந்த பகுதியில எடுத்திருக்கோம்.
அப்படியென்றால் அடுத்த படமும் 'ஐந்து வகை நிலப் பகுதி'யின் தொடர்ச்சியா ?
ஆமாம், அடுத்து 'வயலும், வயல் சார்ந்த இடம்' பற்றி படம் இயக்க உள்ளேன். இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லாத ஒரு பின்னணியை, புதிய இடத்தைக் காட்டலாம் என நினைத்து வருகிறேன்.
மனிதனுடைய உள் உணர்வுகளைச் சொல்லக் கூடிய படமாக இந்த 'இடம் பொருள் ஏவல்' படம் இருக்கும், ஒரு 'ஃபீல் குட்' மூவியா இருக்கும். எல்லா தரப்பு சினிமா விரும்பிகளும், குடும்பத்துடன் அனைவரும் வந்து பார்க்கக் கூடிய படமா இருக்கும். இரட்டை அர்த்த வசனங்களோ, தேவையற்ற ஆபாசங்களோ படத்துல இருக்காது. தமிழ்த் திரையுலகத்துல ஒரு ஆரோக்கியமான படமா இருக்கும்.
'இடம் பொருள் ஏவல்' படத்தில் நட்சத்திரங்கள் தெரிவார்களா அல்லது கதாபாத்திரங்கள் தெரிவார்களா ?
இந்தப் படத்தில் 5 கதாநாயகர்கள், விஜய் சேதுபதி - பாண்டி என்ற கதாபாத்திரத்திலும், விஷ்ணு வந்து ஆசைத்தம்பி, வடிவுக்கரசி - வீரம்மா என்ற மலைக் கிராமத்துப் பெண்மணி, நந்திதா பெயர் வெண்மணி, ஐஸ்வர்யா கதாபாத்திரப் பெயர் கலைச் செல்வி. இவங்க எல்லாருமே இந்தப் படத்தோட கதாபாத்திரங்களா மட்டுமே நம்ம மனசுல அழுத்தமா பதிவாங்க. நடிப்பு விஷயத்துல இவங்க எல்லாரையும் அடுத்த கட்டத்துல இந்தப் படத்துல பார்க்கலாம்.
'இடம் பொருள் ஏவல்' என்பதற்குரிய கதாபாத்திரங்கள் யார் யார் ?
வடிவுக்கரசி - இடம், விஜய் சேதுபதி - பொருள், விஷ்ணு - ஏவல், இந்த மூணு பேரும்தான் டைட்டிலுக்குரியவர்கள். படத்தைப் பற்றி தேவையற்ற அதீதமான விஷயங்களைச் சொல்லி தேவையற்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்த விரும்பலை. என்னுடைய முந்தைய படங்களான 'தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை' ஆகிய படங்களை விட இன்னும் ஒரு படி மேல இந்தப் படத்தை ரொம்ப நேர்த்தியா எடுத்திருக்கோம்.
யுவன்ஷங்கர் ராஜா - வைரமுத்து கூட்டணி பற்றி ?
பாடல்கள் வெளியாகிவிட்டது, நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கு, அர்த்தத்தோட இருக்குங்க வரவேற்பு கிடைச்சிருக்கு. ஒரு பரபரப்புக்காகவோ, விளம்பரத்துக்காகவோ இந்தக் கூட்டணியை உருவாக்கலை. யுவன் எனக்கு பிடிச்ச மியூசிக் டைரக்டர். இதுக்கு முன்னாடி நான் எடுத்த படங்கள் குறைந்த பட்ஜெட் படங்களா இருந்ததால யுவனை என் படங்கள்ல பயன்படுத்த முடியலை. 100 படங்களுக்கு இசையமைச்சிருக்கிற ஒரு இசையமைப்பாளர், என் படங்களில் தொடர்ந்து பாட்டெழுதிக் கொண்டு வரும் வைரமுத்து சார், இவர்கள் கூட்டணி இந்தப் படத்தில் அமைந்தது.
இந்தப் படத்துல ஒரு பாடலைத் தவிர மற்ற பாடல்கள் படம் பிடிக்கப்பட்டு காட்டப்பட்டு இசையமைக்கப்பட்டது. யுவன் முதலில் டியூன்களை உருவாக்க, அதன் பின்னர்தான் வைரமுத்து சார் பாடல்களை எழுதினார். பின்னணி இசையில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திவிட்டார் யுவன். அதில் அவருடைய 100 படங்களுக்குண்டான அனுபவம் வெளிப்பட்டது. இதுவரை சேர்ந்து பணி புரியாதவர்கள் சேர்ந்து பணிபுரியும் போது இந்தப் படத்திற்கான கவனம் கூடுதலா கிடைச்சிருக்கு. அவங்க இரண்டு பேரையும் சேர்த்து வைத்த பெருமைதான் எனக்குக் கிடைத்திருக்கிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக இருக்குமா ?
இன்றைய சூழ்நிலையில் சில பேய்ப் படங்கள் வெளிவந்து ரசிகர்களின் ரசனையை மாற்றியிருந்தாலும், 'காக்கா முட்டை' போன்ற படங்கள் தமிழ் ரசிகர்களின் ரசனை இன்னும் அதே உச்சத்தில்தான் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது. நல்ல படங்களை நேசிக்கும் ரசிகர்களுக்கு 'இடம் பொருள் ஏவல்' ஒரு சிறந்த படமாக இருக்கும். எனக்கு ஒரு முக்கியமான இடத்தையும், தயாரிப்பாளருக்கு நல்ல பொருளையும், நட்சத்திரங்களுக்கும், மற்ற கலைஞர்களுக்கும் நல்ல ஏற்றத்தையும் தரும் என்ற நம்பிக்கை நிறையவே உள்ளது.