ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தனக்கு எதிரான விமர்சனங்களையே, தனக்கு சாதகமாக்கி சாதித்து காட்டியவர் பவர் ஸ்டார் சீனிவாசன். பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எவ்வளவு அடித்தாலும், புன்னகையுடன் தாங்கிக் கொள்ளும் தைரியசாலி. அவர் சீரியசாக பேசுகிறாரா, சிரிப்புக்காக பேசுகிறாரா என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. அவருடனான ஒரு சந்திப்பிலிருந்து...
அதென்னங்க பவர் ஸ்டாருன்னு ஒரு பட்டம்...?
நான் நடித்த முதல் படமான, லத்திகா இசை வெளியீட்டில் நிறைய வி.ஐ.பி.,க்கள் கலந்து கொண்டனர். அதில் ஒரு தலைவர், எனக்கு, மின்சார நாயகன் என்ற பட்டத்தை கொடுத்தார். ஆனால், நான், இந்த பட்டம், மக்கள் மனதில் பதியாது என்றேன். அதற்கு அப்புறம் தான், பவர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்தார். அன்றைக்கு அவர் கொடுத்த பட்டம் தான், இன்று, பவர் புல்லா இருக்கு.
உங்களுக்கு ஏதோ விருது கிடைத்ததாக கூறினீர்களாமே; உண்மையா?
அய்யோ, இன்னும் கிடைக்கவில்லை. சும்மா ஒரு, பில்டப் கொடுத்தேன். மேடையில் பேசும்போது, அப்படித்தான் பேசணும். ஆனால், கண்டிப்பா எழுதி வச்சுக்கங்க; இன்னும் இரண்டு ஆண்டில், எத்தனை விருது வாங்குறேன் பாருங்க.
நிஜமாவே உங்களுக்கு ரசிகர்கள் இருக்காங்களா; இல்ல அதுவும் பில்டப்பா?
என்ன இப்படி கேட்டுட்டீங்க. தமிழகத்தில் மட்டும் எனக்கு, 1,500 ரசிகர் மன்றங்கள் இருக்கு; ஒரு கோடிக்கு மேல் ரசிகர்கள் இருக்காங்க. இன்னும் சில ஆண்டுகளில், ரசிகர் மன்றத்தை ஒரு பெரிய கட்சியாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. என் உயிரினும் மேலான ரசிக உடன் பிறப்புகள், என் மேல் வெறித்தனமா இருக்காங்க. அவங்க கையில் சூடத்தை கொளுத்தி, அன்பை வெளிப்படுத்துறாங்க; தலைவா, உனக்காக உயிரை விடுவோம் என, கோஷம் போடுறாங்க. அவர்களை அமைதி படுத்தி வைத்துள்ளேன்.
சினிமாவை நீங்க புரிஞ்சுக்கிட்டீங்களா; இல்ல சினிமாக்காரங்க உங்களை புரிஞ்சிக்கிட்டாங்களா?
சினிமாவை இப்ப கரைச்சி குடிச்சிட்டேன்னு சொல்லலாம். நான் சினிமாவுக்கு வரும்போது, பெயர், புகழ், வெளிச்சம் கிடைக்க, 30 கோடி ரூபாய் வரை இழந்திருக்கேன். மூன்று கோடி ரூபாய் போட்டால், ஒன்பது கோடி ரூபாய் கிடைக்கும் என, லாட்டரிச் சீட்டு மாதிரி என்னை இறக்கிவிட்டாங்க. அவர்களை நம்பி ஏமாந்துட்டேன். நிறைய பேர் என்னை பயன்படுத்தி, செட்டில் ஆகிட்டாங்க. தயவு செய்து, புதிதாக வரும் தயாரிப்பாளர்களை ஏமாத்தாதீங்க.
உங்கள் முதல் படமான, லத்திகா 250 நாள் ஓடியதா; இல்லை, நீங்களே படத்தை ஓட்ட வச்சீங்களா?
முதல் படத்தை, 365 நாள் ஓட வைக்கலாம் என, நினைத்தது உண்மை; அதற்காக, நிறைய விளம்பரம் செய்தேன். ஆளே இல்லாமல், தியேட்டர் கேன்டினுக்கு மட்டும், பல லட்சம் செலவு செய்து கடைசியில், போதும் வேண்டாம் என, விட்டுட்டேன்.
எந்த நடிகையோட ஜோடியாக நடிக்க ஆசை?
முன்னாடி எல்லாம் ஐஸ்வர்யா ராய் கூட ஒரு பாட்டிலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், இப்போ அவங்களுக்கு குழந்தை பிறந்து, கொஞ்சம் வயசு ஆகி விட்டதால், என் முடிவை மாத்திக்க வேண்டியதாயிடுச்சி. ஐஸ்வர்யாவுக்கு அப்புறம், அவர் அளவுக்கு யாரும் இன்னும் வரவில்லை.
சினிமாவில் உங்களுக்கு போட்டி யார்?
என் குருநாதர் சூப்பர் ஸ்டார் ரஜினி தான் எனக்கு போட்டி. உழைப்பால் உயர்ந்தவர். அவரை ரொம்ப நேசிக்கிறேன்; அவரை போல் பெயரும், புகழும் அடைய வேண்டும்.
உங்களை கலாய்க்கிறாங்கன்னு உங்களுக்கு தெரியுமா?
பேஸ்புக், டுவிட்டர் தான் எனக்கு தலைவலியாக இருக்கு. என்னை கலாய்க்கிறாங்கன்னு நல்லாவே தெரியுது; ஆனால், நான் எதுக்கும் அசரமாட்டேன். எனக்கு, பேஸ்புக்கில், எந்த அக்கவுன்டும் இல்லை; ஆனால், என் பெயரில், 100 பேர் இருக்கான். அர்னால்டு கூட கைகுலுக்குற மாதிரி போடுறானுங்க; பாகிஸ்தான் பிரதமர் கூட கைகோர்த்த மாதிரி போட்டோ போடுறாங்க; வருங்கால சி.எம்.,ன்னு போடுறாங்க. தயவு செய்து, என்னை எந்த சிக்கல்லயும் மாட்டிவிடாதீங்கன்னு கேட்டுக்கிறேன்.
கண்ணா லட்டு தின்ன ஆசையாவுக்கு பின், சந்தானம் உங்களை கழட்டி விட்டுட்டார் போல?
அந்த படத்தில நான் இருக்க வேண்டும் என, தம்பி சந்தானம் ஆசைப்பட்டார். எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கு. ஒரு படத்தில என்னை கொண்டு வந்தார். அதன்பின், நான் தான் என் திறமையை வைத்து, அடுத்தடுத்த படங்களுக்கு பெயர் சொல்ற அளவு நடிக்கணும். கண்டிப்பாக, அவர் அடுத்த படத்திற்கு என்னை கூப்பிடுவார்.
சிம்பு பற்றி சொல்லுங்க...?
சிம்பு, என் கடை குட்டி தம்பி. என்னை பார்த்தாலே சிரிச்சிடுவார்; கட்டிப்பிடிச்சி அன்பை வெளிப்படுத்துவார். என் கூட பிறக்கல அவ்வளவு தான்; நான் ரொம்ப மதிக்கக்கூடியவர்கள் சிம்பு, சந்தானம்.
தெற்றுப்பல், கறுப்பு கிளாஸ்; எப்படி பவரா மெயின்டெய்ன் பண்றீங்க?
உதாரணத்துக்கு சொல்றேன்; என் கறுப்பு கிளாசை கழட்டினால், நானும் சாதாரண ஆளாயிடுவேன். அந்த கிளாசை போட்டால் தான், நமக்கு ஒரு, இமேஜ் கிடைக்குது; பவர்ன்னா எப்பவும் பவரா தான் தெரியணும்.
உங்க திறமையை வெளிப்படுத்தும் வகையிலான கேரக்டர் கிடைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளதா?
இந்த பேட்டி முழுக்க, என்னை கலாய்ச்சி தான் எடுத்துக்கிட்டு இருக்கீங்க; ஆனால், நான் வருத்தப்படவில்லை. முன்பெல்லாம், நான் ஆர்வத்தில எந்த ரோல் கிடைத்தாலும் நடிக்க போயிடுவேன்; இப்போ, ரொம்ப செலக்டீவா தான் ஒத்துக்கிறேன். ஜெயிக்கிற குதிரை, சவுக்கார் பேட்டை போன்ற படங்களில் நடிக்கிறேன். 24 மணி நேரமும் நடிக்க ஆசை. மக்களை சந்தோஷப்படுத்தணும்; அதுதான் பவரின் ஆசை.