பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவில் தற்போது கதை இருக்கிறதா என்று கேட்க மாட்டேன் என்கிறார்கள், மாறாக பேய் இருக்கிறதா என்றுதான் கேட்கிறார்கள். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவை தற்போது பேய் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. வாரத்திற்கு நான்கு படங்கள் வெளிவந்தால் அதில் ஒரு படம் கண்டிப்பாகப் பேய்ப் படமாக அமைந்து விடுகிறது. முன்பெல்லாம் பக்திப் படங்களும், மிருகங்களை வைத்து எடுக்கப்பட்ட படங்களும் தாய்மார்களை அதிகம் கவர்ந்து அவர்களை தியேட்டர் பக்கம் வரவைத்தன. இப்போது அந்த வேலையை பேய்ப் படங்கள் பத்திரமாக செய்து கொண்டிருக்கின்றன.
பேய் என்றால் பயம் என்றிருந்த காலம் போய், இப்போது பேய் என்றாலே பயமே இல்லாமல் போய் விட்டது என்று சொல்லுமளவிற்கு பேய்ப் படங்களை நகைச்சுவைப் படங்களாகவும் கொடுத்து சிறுவர், சிறுமியர்களையும் கவர்ந்து விட்டார்கள்.
தமிழ் சினிமாவில் இப்போதுதான் பேய்ப் படங்கள் வருகிறது என்று நினைக்க வேண்டாம். அந்தக் காலத்திலேயே பேய்ப் படங்கள் வந்திருக்கின்றன. ஆனாலும், விட்டலாச்சார்யா காலத்தில்தான் தெலுங்கிலும், தமிழிலும் அதிகமான பேய்ப் படங்கள் வந்திருக்கின்றன. அந்தக் காலத்தில் 'ஜகன்மோகினி' படம் அந்த அளவிற்கு ரசிகர்களை பயமுறுத்தியது. வெறும், காமிரா ஜாலம் மூலமே பல திகிலான காட்சிகளை உருவாக்கி ரசிகர்களைக் கவர்ந்தவர் விட்டலாச்சார்யா.
அவருடைய பட தமிழ் சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு சில பேய்ப் படங்களே வந்துள்ளன. ரஜினிகாந்த், லதா நடித்த 'ஆயிரம் ஜென்மங்கள்', கமல்ஹாசன் நடித்த 'நீயா, சிகப்பு ரோஜாக்கள்,' கார்த்திக் நடித்த 'ஆயிரம் நிலவே வா', மோகன் நடித்த 'உருவம்', ராஜா, வைஷ்ணவி நடித்த 'வா அருகில் வா', அர்ஜுன், நளினி நடித்த 'யார்', நிழல்கள் ரவி, சாதனா நடித்த 'மை டியர் லிசா', மோகன், நளினி நடித்த 'பிள்ளை நிலா', ராகவா லாரன்ஸ் நடித்துள்ள “முனி, காஞ்சனா, காஞ்சனா 2', ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி, அனுஷ்கா நடித்த 'அருந்ததி', மிஷ்கின் இயக்கிய 'பிசாசு', மாதவன், நீது சந்திரா நடித்த 'யாவரும் நலம்', பிரசாந்த், மீனா நடித்த 'ஷாக்', பிரியாமணி நடித்த 'சாருலதா', மற்றும் கடந்த சில வருடங்களில் வெளிவந்த 'பீட்சா, யாமிருக்க பயமே, அரண்மனை, ர', சமீபத்தில் வெளிவந்த 'டார்லிங்' என 50க்கும் குறைவான முக்கியமான படங்களே இதுவரை பேசப்பட்டுள்ளன. இந்தப் பேய்ப் படங்களில் இரண்டு பொதுவான விஷயங்கள் இரண்டு இருக்கும். தன் மரணத்திற்குக் காரணமானவர்களை அந்தப் பேய் பழி வாங்குவது ஒன்று, மற்றொன்று அந்தப் பேய் ஒரு பாழடைந்த வீட்டில் மட்டுமே இருக்கும். அந்த இரண்டு விஷயங்களை மட்டுமே வைத்து இதுவரை எத்தனையோ கதைகளைப் படைத்து விட்டார்கள் நமது இயக்குனர்கள். ஆனாலும், ஒவ்வொரு படமும் திகிலை ஏற்படுத்துவதில் சளைக்காமல் இருந்திருக்கிறது.
இருட்டறைக்குள் எங்கு பேய் இருக்கிறது என்பது , சத்தம் போடும் கதவுகள், ஜன்னல்கள், கிரீச்சிடும் கட்டில் நாற்காலி, திடீரென எதிரே ஒரு உருவம் வந்து நிற்பது, கண்ணாடியில் திடீரென யாரோ தோன்றி மறைவது, வேறு எந்த சத்தமும் இல்லாத 'பின்-டிராப்' சைலன்ட்டில் வெறும் கொலுசு சத்தம் மட்டும் கேட்பது, வாய் விட்டு சிரிக்கும் கலகல சிரிப்புச் சத்தம் போன்ற விஷயங்களை மட்டுமே வைத்து வசூலை அள்ளி வருகின்றன பேய்ப் படங்கள்.
இந்த மாதிரியான படங்களுக்கு கதை தேவையில்லை, நல்ல திரைக்கதை இருந்தாலே போதும். இதுவரை வந்த படங்களைப் பார்த்து விட்டு, அதில் இது வரை இல்லாத அளவிற்கு வேறு ஏதாவது புத்தம் புது காட்சிகளை யோசித்தாலே போதும், ஒரு அருமையான பேய்ப் படம் ரெடி என்றாகிவிட்டது.
எப்படியும் இந்த 2015ம் ஆண்டில் சுமார் 50க்கும் மேற்பட்ட பேய்ப் படங்கள் வந்து விடும் போல இருக்கிறது. இந்த மாதத்திலேயே சூர்யா நடித்துள்ள 'மாஸ்', ஆவி குமார், டிமான்டி காலனி ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. அடுத்தடுத்து 'கோப்பெருந்தேவி, ஓம் சாந்தி ஓம், மாயா, சௌகார்பேட்டை' போன்ற பேய்ப் படங்களும் வர உள்ளன.
இவை மட்டுமல்லாமல் சுமார் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் பேய்க் கதைகளுடன் படமாகி வருகின்றன. இவை ஓரளவிற்கு வெளியில் தெரிந்த படங்கள், இன்னும் தெரியாமல், சத்தமில்லாமல் பல படங்கள் உருவாகி வருகின்றன.
'மாஸ்' போன்ற பெரிய படத்தில் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களே பேய்ப் படங்களில் நடிக்க வந்திருப்பதும் ஆச்சரியமான ஒன்றுதான். இந்தப் படம் ஹிட் ஆகிவிட்டால், மற்ற முன்னணி நடிகர்களும் பேய்ப் படங்களைத் தேடி ஓட ஆரம்பித்து விடுவார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
எவ்வளவு பேய்ப் படங்கள் வந்தாலும் இன்னமும் தொழில் நுட்பத்திலும், கிராஃபிக்ஸ் காட்சிகளிலும் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக என்று சொல்லுமளவிற்கு எந்தப் படமும் வரவில்லை. இந்தக் குறையும் சீக்கிரமே நிவர்த்தி செய்யப்படவும் வாய்ப்புள்ளது.
சமீபத்தில் வெளிவந்த 'டார்லிங், காஞ்சனா 2' ஆகிய இரண்டு பேய்ப் படங்கள்தான் இதுவரை இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் அனைவருக்குமே லாபத்தை அள்ளிக் கொடுத்த படங்கள் என்று கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. ஆக, பேய்கள்தான் தற்போது தமிழ் சினிமாவை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.
அதனால், இன்னும் கொஞ்ச நாளைக்கு தமிழ் சினிமாவைப் பிடித்திருக்கும் பேய்ப் பட மோகத்தை எந்த இடத்திற்கும் சென்று விரட்டியடிக்க முடியாது என்றே தோன்றுகிறது.