தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'என் போன்ற மூத்தோர்களைக் கண்டால் தாழ்கிறது உன் கழுத்து; அதனால் வாழ்கிறது உன் எழுத்து' - கவிஞர் பா.விஜய் பற்றி, கவிஞர் வாலி பாராட்டிச் சொன்ன வார்த்தைகள் இவை! கவிதைகள் ஆகட்டும்; பாடல்கள் ஆகட்டும்; மேடைப் பேச்சுகள் ஆகட்டும்; தன்னம்பிக்கையை, தன்னடக்கத்துடன் விதைக்கும் 'வித்தக கவிஞர்' இவர்! கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், பாடல்கள், திரைக்கதை வசனங்கள் என, கடந்த 20 ஆண்டுகளாக, எழுத்துச் சிறகுகளோடு சிறகடித்துக் கொண்டிருக்கிறார்!
கலை மேல் இவருக்குள்ள காதல், 'ஞாபகங்கள், இளைஞன்' ஆகிய படங்களில், இவரை நடிகனாக்கி அழகு பார்த்தது; அந்த முயற்சி சற்றே சறுக்கினாலும், தான் எழுதிய 'ஒவ்வொரு பூக்களுமே...' பாடலையே உத்வேகமாகக் கொண்டு, மீண்டும் 'தகடு தகடு' படம் மூலம் நாயகனாக பிரவேசிக்க இருக்கிறார். இதோடு, இரண்டு படங்களின் தயாரிப்பு வேலையிலும், மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். ஓர் மாலைப் பொழுதில், பா.விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்தோம்!
பல ஆண்டுகள் கழித்து, 'ருத்ரம்மாதேவி' படத்திற்கு வசனகர்த்தா; பின்னணி என்ன?
'இளையராஜாவின் இசையில், படத்தின் அனைத்து பாடல்களையும் எழுத வேண்டும்' என்று தான், நான் திரைத்துறைக்குள் நுழைந்தேன்; இப்படத்தின் மூலமாக, என் ஆசை நிறைவேறியிருக்கிறது. இந்த வசனகர்த்தா வாய்ப்புக்கும் கூட அவர்தான் முக்கிய காரணம்! மேலும், நான் எழுதிய வரலாற்று சரித்திரங்கள் சார்ந்த புத்தகங்களை, 'ருத்ரம்மாதேவி' இயக்குனர் குணசேகரன் படித்திருக்கிறார். இவர்கள் இருவரும் என் மீது வைத்த நம்பிக்கையை, நான் காப்பாற்றி இருப்பதாகவே நம்புகிறேன்!
இன்னும், 'ஒவ்வொரு பூக்களுமே...' பாடல் வெற்றியை முறியடிக்க முடியவில்லையே...?
'ஏழாம் அறிவு' படத்தில், 'இன்னும் என்ன தோழா...;' 'துப்பாக்கி'யில், 'போய் வரவா...;' 'காவியத்தலைவன்' படத்தில், 'சொல்லிவிடு சொல்லிவிடு...' போன்றவை, அதற்கு இணையாக முயற்சித்த பாடல்கள் தான்! பூமிக்கு ஒரு சூரியன் போல், எனக்கு அமைந்த பாடல் 'ஒவ்வொரு பூக்களுமே...;' அதை முறியடிக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை!
தமிழ் திரைப்பட பாடல்களின் வளர்ச்சி?
நான் சினிமாவில் நுழைந்தபோது, ஆங்கில வார்த்தைகள் கலந்த பாடல்களுக்குத் தான் மதிப்பு; பின், குத்துப்பாடல்களின் ஆதிக்கம் அதிகமானது; தற்போது, இவை இரண்டையும் தாண்டி, புதுக்கவிதைகள் ரீதியில் எழுதப்படும், 'மெலடி' பாடல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எதிர்காலத்தில், பாடல்கள் மிகவும் எளிமையாகக் கூடும்... கண்ணதாசன் காலத்தில் இருந்ததைப் போல!
இலக்கியவாதி பா.விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
'தோற்பது கடினம்' எனும் புத்தகத்தையும், 'ஐந்திணை காதல்' எனும் தலைப்பில் 5 புத்தகங்களையும், தயார் செய்து கொண்டிருக்கிறேன். தற்போது, 'ஜெயிப்பது தான் கடினம்' எனும் பொதுவான கருத்து இருக்கிறது; ஆனால், என் வாழ்க்கை அனுபவங்கள் கொண்டு, 'ஜெயிப்பவனுக்கு தோற்பது எவ்வளவு கடினம்' என்பதை, 'தோற்பது கடினம்' வாயிலாக சொல்லியிருக்கிறேன்! குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என, நிலவகைப்பட்ட காதலை சொல்லும் புத்தகமாக, 'ஐந்திணை காதல்' அமையும்!
சமீபத்தில் ரசித்த பாடல்கள்?
'கயல்' படத்தில் யுகபாரதி எழுதிய பாடல்களும், 'என்னை அறிந்தால்...' படத்தில் தாமரை எழுதிய பாடல்களும், மிகவும் கவர்ந்தன! இருவருமே, அவரவர் நடையில் மிக அழகாகவும், அழுத்தமாகவும் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.
நீண்டநாள் கனவு?
'பெரிய புராணத்தை புதுக்கவிதையாக எழுது' என, என் குருநாதர் வாலி எப்போதும் கூறுவார். அதுபற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். மேலும், தமிழ் மன்னர்கள் குறித்து, விரிவான படைப்பை உருவாக்கும் முயற்சியிலும் களமிறங்கி இருக்கிறேன்!