திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு ஆளுமையின் ஆதிக்கம் இருக்கும். அந்த ஆளுமை செய்வது எதுவாக இருந்தாலும் அதை மறு ஆய்வு செய்யாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் ரசிகர்கள் இருப்பார்கள். தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, எம்.ஜி.ஆர், ரஜினி ஆகியோர் அத்தகைய ஆளுமைகளாக இருந்திருக்கிறார்கள். ரஜினியின் ஆளுமை இப்போதும் தொடர்ந்து கொண்டிருந்தாலும் அந்த வரிசையில் இளைய சமுதாயத்தின் பிரதிநிதியாக இருப்பவர் அஜீத். தியாகராஜ பாகவதரிலிருந்து அஜீத் வரை அனைவருமே எந்த பின்னணியும் இல்லாமல் போராடி சினிமாவில் உச்சம் தொட்டவர்கள் என்பது இவர்கள் அனைவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை.
அஜீத்துக்கு இன்று (மே 1) பிறந்த நாள். 44 வயதை நிறைவு செய்கிறார். அவரை பெருமைப்படுத்தும் விதமாக அவரைப் பற்றிய 44 சுவாரஸ்யமான செய்திகளை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
1. அஜீத் பிறந்தது 1971ம் ஆண்டு மே 1ந் தேதி. அப்பா சுப்பிரமணியம் மலையாளி, அம்மா மோகினி சிந்து. பிறந்தது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில், வளர்ந்தது தமிழ்நாட்டில், மொத்தத்தில் அஜீத் ஒரு தனிமனித பாரத விலாஸ்.
2. படிப்பு 10ம் வகுப்பு வரைதான். அதன் பிறகு மோட்டார் சைக்கிள் மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்தார். அங்குதான் அவருக்கு பைக் மற்றும் கார் மீது காதல் உண்டானது.
3. பைக் ரேஸ் அவருக்கு பிடித்த விளையாட்டு. உலகின் சிறந்த கார் அல்லது பைப் ரேஸராக வரவேண்டும் என்பதுதான் அவரது லட்சியம். அந்த லட்சியத்துக்காக சின்ன சின்ன விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
4. திருப்பூரில் ஆயத்த ஆடை நிறுவனத்தை தொடங்கினார். தொழிலில் நேர்மையாக இருந்ததால் லாபம் சம்பாதிக்க முடியாமல் நிறுவனத்தை இழுத்து மூடினார். அதன் பிறகு நடிப்பு தான் இனி வாழ்க்கை என்று முடிவு செய்தார்.
5. தனது நண்பர் சுரேஷ் சந்திராவின் ஸ்கூட்டரின் பின்னால் உட்கார்ந்து கொண்டு, ஆல்பத்தை கையில் ஏந்திக் கொண்டு ஒவ்வொரு தயாரிப்பு அலுவலகமாக ஏறி இறங்கினார். அதே சுரேஷ் சந்திராதான் இப்போதும் அவரது நண்பர், உதவியாளர், மானேஜர், மக்கள் தொடர்பாளர் எல்லாம்.
6. என் வீடு என் கணவர் படத்தில் சின்ன கேரக்டரில் நடித்ததுதான் அஜீத்தின் முதல் படம். வெளிவந்த ஆண்டு 1990.
7. ஹீரோவாக முதலில் நடித்தது பிரேமபுஸ்தகம் என்ற தெலுங்கு படம். அது 1992ல் வெளிவந்தது. அப்போது வயது 21. தமிழில் நடித்த முதல் படம் அமராவதி. முதல் ஹீரோயின் சங்கவி, முதல் இயக்குனர் செல்வா.
8. அமராவதி படத்தில் அஜீத்துக்கு டப்பிங் குரல் கொடுத்தவர் அன்றைக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்த விக்ரம். ஆசை படத்தில் டப்பிங் குரல் கொடுத்தவர் பன்னீர் புஷ்பங்கள் சுரேஷ்.
9. அமராவதி படப்பிடிப்பில் பைக் விபத்தில் சிக்கினார். அதன் பிறகு 18 மாதங்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்தார். அடுத்த படமான பவித்ராவில் பைக் விபத்தில் சிக்கிய இளைஞனாகவே நடித்தார். இதுவரை 13 விபத்துக்களில் சிக்கிய அஜீத்தின் உடம்பில் 20க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இப்போதும் ஒரு பை நிறைய மாத்திரை வைத்திருப்பார்.
10. அம்மா பாசம் அதிகம். தினமும் வெளியில் செல்லும்போது அம்மாவை வணங்கிவிட்டுத்தான் செல்வார்.
11. விமானியாக வேண்டும் என்று விரும்பி அதற்கான பயிற்சி எடுத்தார். சினிமா வாய்ப்பு கிடைக்கவே விமானி ஆசையை துறந்தார்.
12. வஸந்த் இயக்கிய ஆசை படம்தான் அடையாளம் கொடுத்தது. வரலாறு படத்தில் பெண்தன்மை கொண்ட கேரக்டரிலும், வில்லன் படத்தில் மாற்றுத் திறனாளியாகவும், வாலி படத்தில் வில்லனாகவும், சிட்டிசன் படத்தில் வயதானவராகவும் நடித்து தனது நடிப்பு திறமையை நிரூபித்தார்.
13. ஷாலினியை சந்தித்தது அமர்களம் படப்பிடிப்பில். கண்டதும் காதல். காதலித்ததும் கல்யாணம். புகழின் உச்சியில் இருந்த ஷாலினி நல்ல மனைவியாக வாழ தீர்மானித்து சினிமாவிட்டு விலகினார். இன்று வரை ஆதர்ச தம்பதிகளாக வாழ்கிறார்கள்.
14. ஷாலினி பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனை இதற்காக தன் வீட்டிலேயே மனைவிக்கு ஒரு விளையாட்டு மைதானத்தை அமைத்து கொடுத்திருக்கிறார்.
15. தன்னிடம் பணியாற்றும் அத்தனை பணியாளர்களுக்கும் சொந்தமாக வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்.
16.எவ்வளவு முக்கிய வேலையாக இருந்தாலும் இரவு 7 மணிக்கு மேல் யாரையும் அழைக்க மாட்டார்.
17. விலை உயர்ந்த செல்போனை பயன்படுத்த மாட்டார். மிக குறைவான எண்களே அவரது போனில் இருக்கும். யாரிடம் பேசினாலும் "ப்ரீயா இருக்கீங்களா பேசலாமா என்று அனுமதி கேட்டுவிட்டுத்தான் பேசுவார்.
18. உள்ளூரில் இருந்தால் மாருதி ஸ்விப்ட் காரையும், வெளியூரில் இன்னோவா காரையும் பயன்படுத்துவார். மேக்-அப் போடவில்லை என்றால் தானே காரை ஓட்டிச் செல்வார்.
19. தான் குடியிருக்கும் பகுதி தெருக்களில் சர்வசாதாரணமாக சைக்கிளில் செல்வார். தெரு குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடும் அதிசயமும் அடிக்கடி நடக்கும்.
20. தான் சாமி கும்பிட்டாலும். தன் மனைவி இயேசுவை துதிக்க அனுமதிப்பார். அவரும் துதிப்பார். இரு மத கடவுள்களின் படங்களும் வீட்டின் வரவேற்பரையில் இருக்கும். தீபாவளிக்கும், கிறிஸ்துமசுக்கும் வீடு கொண்டாட்டமாக இருக்கும்.
21. புகைப்படங்களின் மீது தீராத காதல். படங்கள் எடுப்பது மிகவும் பிடிக்கும். எப்போதும் கையில் நவீன கேமரா வைத்திருப்பார். தனக்கு பிடித்தவர்களை அவர்களுக்கு தெரியாமல் படம் எடுத்து அவர்களுக்கு சர்ப்பரைசாக பரிசளிப்பார். தன் மகளை ஒவ்வொரு ஆண்டும் தனியாக படம் எடுத்து சேகரித்து வருகிறார். வீட்டுக்குள்ளேயே போட்டோ ஸ்டூடியோ ஒன்றும் வைத்திருக்கிறார்.
22. ரெட் படத்துக்கு பிறகு சில ஹார்மோன் கோளாறால் உடம்பு குண்டாகி விட்டது. தனது எடையை அதிரடியாக 23 கிலோ குறைத்து மிகவும் ஒல்லியாக திருப்பதி படத்தில் நடித்தார்.
23. ஏ.ஆர்.முருதாஸ் இயக்கிய தீனா படத்தில் நண்பர்கள் தல என்று அழைக்க அதுவே அவருக்கு நிரந்தர பட்டமாகி விட்டது.
24. ரெட் படத்தில் பேசிய "அது" என்ற ஒரு வார்த்தை அவரது ரசிகர்களுக்கும் வேத வாக்கானது.
25. ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். இன்றளவும் விஜய்யின் நெருக்கமான நண்பராக இருக்கிறார்.
26. நேருக்கு நேர் படத்தில் முதலில் விஜய்யுடன் நடித்தது அஜீத்தான். சில பிரச்னைகள் காரணமாக அஜீத் விலக்கிக் கொள்ள அதன் பிறகு அந்த கேரக்டரில் சூர்யா நடித்தார்.
27. புத்தங்கள் படிப்பது மிகவும் குறைவு. ரஜினி அன்பளிப்பாக கொடுத்த லிவிங் வித் ஹிமாலயன் மாஸ்டர்ஸ் என்ற புத்தகத்தை படித்த பிறகு புத்தகம் படிக்க ஆரம்பித்தார். தன்னம்பிக்கை புத்தகங்கள் ரொம்ப பிடிக்கும். இப்போது சாய்பாபா பற்றி நிறைய படிக்கிறார்.
28. ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் பத்திரிகையாளர்களுக்கு விருந்து வைப்பதை கடமையாக வைத்திருந்தார். ஒரு விருந்தில் அவருடன் போட்டோ எடுக்க பத்திரிகையாளர்களே முண்டியடித்து தள்ளியது அவரை பாதித்தது. பத்திரிகையாளர்களும் ரசிகர்களாக மாறுவதை விரும்பாத அஜீத் அதன் பிறகு விருந்து வைப்பதை நிறுத்திக் கொண்டார்.
29. ஒரு தயாரிப்பாளரை தனக்கு பிடித்துவிட்டால் தொடர்ந்து அவருக்கு படங்களை கொடுப்பது அஜீத் ஸ்டைல். அன்று நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி, இன்று ஏ.எம்.ரத்னம்.
30. தொடர் தோல்விகளால் பெரும் கடனில் இருந்த ஏ.எம்.ரத்தினத்திற்கு படம் தயாரிக்க வாய்ப்பு கொடுத்து அவரை கடன்களிலிருந்து விடுவித்தார்.
31. சக நடிகர்களுக்கு மதிப்பு கொடுப்பதில் அஜீத்தை அடிச்சுக்க ஆள் கிடையாது. மங்காத்தா படத்தில் நடித்த அர்ஜுனுக்காக நிறைய விட்டுக் கொடுத்தார். பல நாள் படப்பிடிப்பில் அவருக்காக காத்திருந்தார். சமீபத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் பல வருடமாக சினிமாவில் போராடிக் கொண்டிருக்கும் ஒரு நடிகருக்கு வாய்பளித்து வாழ்க்கை கொடுத்தார்.
32. இப்போது ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டுகிறார். முழுமையான பாபா பக்தராக மாறியிருக்கிறார். மயிலாப்பூர் சாய்பா கோவிலுக்கு மாதம் ஒருமுறையாவது சத்தமே இல்லாமல் வந்து செல்கிறார்.
33. தன் மனைவி இரண்டு குழந்தைகளை பிரசவிக்கும்போதும் அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டார். தன் மகனுக்காக வீட்டில் சில மாற்றங்களை செய்துள்ளார்.
34. தனது 50வது படமான மங்காத்தாவில் தைரியமாக ஆன்டி ஹீரோவாக நடித்தார்.
35. ரஜினிக்கு பிறகு இமேஜ் பற்றி கவலைப்படாமல் தன் நிஜ தோற்றத்துடன் வெளியில் வருவது இவர் மட்டும்தான்.
36. அஜீத் ஆரம்பித்து வைத்த சால்ட் அண்ட் பெப்பர் லுக் இப்போது பாலிவுட் வரைக்கு எதிரொலிக்கிறது.
37. அஜீத் கிண்டும் பிரியாணி ரொம்பவே பேமஸ். பிடித்தமானவர்களுக்கு தன் கையால் பிரியாணி சமைத்து கொடுப்பதில் அவருக்கு ரொம்ப மகிழ்ச்சி. ஆனால் அவர் சைவ சாப்பாட்டைத்தான் விரும்பி சாப்பிடுவார்.
38. தமிழக முதல்வரையே எதிரில் வைத்துக் கொண்டு ஆளுங்கட்சியினர் மிரட்டலை துணிச்சலாக சொன்னவர்.
39. இந்தியாவிலேயே தனது ரசிகர் மன்றத்தை கலைத்த ஒரே நடிகர் அஜீத்தான்.
40. தனது மைத்துனர் ரிச்சர்ட், தனது மைத்துனி ஷாம்லி உள்பட யாருக்காகவும், யாரிடமும் சிபாரிசு செய்ய மாட்டார்.
41. மகள் படிக்கும் பள்ளியில் நடக்கும் அத்தனை விழாக்களிலும் தந்தையாக கலந்து கொள்வார். அங்கு வரும் மற்ற பெற்றோர்களுடன் சிரித்து பேசி மகிழ்வார்.
42. படப்பிடிப்பு எதுவும் இல்லாமல் வீட்டில் இருந்தால் மகளை பள்ளியில் கொண்டு விடுவதும், அழைத்து வருவதும் அவர்தான்.
43. ரஜினியின் 100வது படம் அவருக்கு பிடித்த ஸ்ரீராகவேந்திரர் என்பதை போல தனது 75வது படத்தில் பாபாவாக நடிக்க வேண்டும் என்பது அஜீத்தின் சமீபத்திய ஆசை.
44. பிரபலமான வட இந்திய இணைய தளம் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்ற கருத்து கணிப்பை நடத்தியது. அதில் அஜீத் 51.27 சதவிகித வாக்குகளை பெற்ற தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டாராக அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடம் பெற்ற விஜய் பெற்ற வாக்குகள் 39.69 சதவிகிதம். மீதமுள்ள 9 சதவிகிதத்தைதான் ரஜினி, கமல் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் பெற்றிருக்கிறார்கள்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜீத்...!