சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
அப்பா ஒரு சூப்பர் ஹீரோ. மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். அவர் மக்கள் விரும்பும் நடிகராக இருந்தவர். அவருடைய ரேஞ்சே வேற. அந்த இடத்தை என்னால் நெருங்ககூட முடியாது. ஆனால் அவருடய முகம் அப்படியே என்னிடம் உள்ளது. அது எனக்கு ப்ளஸ் பாய்ண்டுதான் என்கிறார் நடிகர் ஜெய்சங்கரின் மகன் சஞ்சய் சங்கர்.
தினமலர் இணையதளத்திற்காக அவருடன் ஒரு சந்திப்பு...
பெரிய ஹீரோவின் மகனாக இருந்தும் சினிமாவுக்கு வராமல் வேறு துறைக்கு சென்றது ஏன்?
எங்க அப்பா ஜெய்சங்கர் படிப்புக்குத்தான் முதலிடம் கொடுக்க சொல்வார். படிப்புதான் அடித்தளம். அதனால் டிகிரி வாங்கி விடு, அதை முடித்தபிறகு, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பார். அந்தவகையில், என் அண்ணன் விஜய் சங்கரையும், எனது தங்கை சங்கீதாவையும் டாக்டருக்கு படிக்க வைத்தார். என்னை இஞ்சினியராக்கினார். நானும், எங்க அண்ணனும் காலேஜ் படிக்கிறப்ப சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் படிப்பு முடியாததால் அப்போது நடிக்க முடியவில்லை. அதையடுத்து, படிப்புக்கேற்ற வேலையை செய்யத் தொடங்கி விட்டோம். அதனால் சினிமாவை நினைக்க முடியவில்லை. அப்பா பெரிய நடிகராக இருந்தும் வெவ்வேறு துறையில கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டோம்.
இப்போது திடீரென்று நடிக்க வந்தது ஏன்?
இப்போதுகூட நான் நடிக்க முயற்சி பண்ணவில்லை. எனது நண்பரான இசையமைப்பாளர் எம்.எஸ்.ராம் என்பவர் தான் இசையமைக்கும் விரைவில் இசை படத்துக்கு ஒரு காமெடி நடிகர் தேவைப்பட்டபோது, என்னைப்பற்றி அப்பட டைரக்டர் பிரபாவிடம் சொல்லியிருக்கிறார். அதையடுத்து எனது போட்டோவைப்பார்த்த அவரும் உடனே ஓகே சொல்லி என்னை நடிக்க வைத்து விட்டார். அந்த வகையில், நான் நடிகராவேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. எதிர்பாராதவிதமாக இந்த படத்தில் நடிகராகி விட்டேன். அப்பா இருந்த துறைக்குள் நானும் அடியெடுத்து வைத்திருப்பது ரொம்ப சந்தோசமாக உள்ளது.
ஹீரோவாக நடிக்காமல் காமெடியனாக அறிமுகமானது ஏன்?
அப்பா நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவருடைய லெவலே வேற. நான் அவரை நெருங்ககூட முடியாது. மேலும், நான் கதாநாயகனாக நடிக்க வேண்டிய வயதில் சினிமாவை பற்றி நினைத்ததில்லை. அதனால் சினிமாவைப்பற்றிய எந்தவித திட்டமிடலும் என்னிடம் இருந்ததில்லை. நான் என் வேலையை செய்து கொண்டிருந்தேன். திடீரென்று நடிக்க கேட்டபோதுதான், அப்பா சாதித்த சினிமா துறைக்குள் நாமும் வந்தாலென்ன என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. முக்கியமாக, அப்பாவுக்கு சிஐடி சங்கர் என்ற கேரக்டர் கிடைத்தது போன்று இந்த படத்தில் எனக்கு சாத்தூர் சங்கர் என்ற கேரக்டர் கிடைத்திருக்கிறது. அதுவே எனக்கு நல்லதொரு அறிகுறியாக தென்பட்டது.
மேலும், விரைவில் இசை படத்தில் என்னை நடிக்கக் கேட்டதே காமெடி ரோலுக்குத்தான். ஆனால், காமெடி என்றதும் முதலில் நான் ரொம்ப பயந்தேன். நடிப்பில் எந்த அனுபவமும் இல்லை. காமெடி ரோலில் நடிப்பது கஷ்டமாயிற்றே என்று யோசித்தேன். ஆனபோதும், உங்களால் முடியும் என்று டைரக்டர் நம்பிக்கை கொடுத்தார். அதனால் தைரியமாக இறங்கி நடித்தேன். அந்த யூனிட்டில் உள்ள அனைவருமே எனது நடிப்பைப்பார்த்து பாராட்டினார்கள். அதனால் அவர்களைப்போன்று ரசிகர்களும் எனது நடிப்புக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். நான் ஷோலோ காமெடியன் என்றபோதும் என்னுடன் நெல்லை சிவா சாரும் நடித்துள்ளார். அதனால் காமெடி காட்சிகள் நான் நினைத்ததை விடவும் நன்றாக ஒர்க்அவுட்டாகியிருக்கிறது.
அதோடு, இந்த படத்தில் தப்பாட்டம் தப்பாட்டம் வாழ்க்கை ஒரு தப்பாட்டம் என்ற பாடலில் இரண்டு மூன்று வரிகளை பாடியபடி நடனமும் ஆடியிருக்கிறேன். அதனால் இந்த படம் எனக்கு நல்லதொரு என்ட்ரியாக அமைந்திருக்கிறது. அதற்காக வாய்ப்புக்கொடுத்த டைரக்டர் பிரபாவுக்கும், என்னை அவரிடம் அறிமுகம் செய்த எனது நண்பரும், இசையமைப்பாளருமான எம்.எஸ்.ராமுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
உங்களுக்கு பிடித்த காமெடியன்கள் யார்?
நாகேஷ் அங்கிளின் காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் பார்த்து வளர்ந்த பையன் நான். அதேபோல் அசோகன் அங்கிள் காமெடியும் பிடிக்கும். அதையடுத்து சந்திரபாபு, சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, சந்தானம், சூரி வரைக்கும் நான் காமெடியை ரொம்ப ரசிப்பேன். இந்த நிலையில், அவர்கள் வரிசையில் நானும் ஒரு காமெடியனாக என்ட்ரி கொடுத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
கேமரா முன்பு சென்ற முதல் அனுபவம் எப்படி இருந்தது?
இநதபடத்தில் நடிப்பதற்கு முன்பு நான் ரிகர்சல் எதுவுமே பார்க்கவில்லை. நேரடியாக கேமரா முன்பு சென்றுவிட்டேன். அதுவும் முதல் காட்சியிலேயே 3 பக்க டயலாக் கொடுத்தார் டைரக்டர். முதல் காட்சியிலேயே 3 பக்க டயலாக்கா என்று பயந்தேன். ஆனபோதும், டைரக்டர் தட்டிக்கொடுத்து வேலை வாங்கினார். இத்தனைக்கும் எங்க அப்பா என்னை ஒரு படப்பிடிப்புக்குகூட அழைத்து சென்றதில்லை. அவர் நடித்ததை ஒருதடவைகூட நான் பார்த்ததில்லை. ஓரிரு சினிமா விழாக்களுககு மட்டுமே சென்றிருக்கிறேன். என்றாலும் சினிமா குடும்பம் என்பதால் சினிமாவைப்பற்றி நான் அறிந்திருந்த விசயங்களைக்கொண்டு நடித்தேன். இதையடுத்து இன்னும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இந்த படம் திரைக்கு வரும்போது தற்போதைய தமிழ் சினிமாவின் டைரக்டர்கள் எனக்கு நல்ல வாய்ப்புகளை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
நடிப்பு ஈஸியாக இருந்தா? இல்லை கடினமாக இருந்ததா?
ரொம்ப கஷ்டமாக இருந்தது. நம்மை சுற்றி நிறையபேர் நின்று கொண்டிருக்கும்போது நடிப்பில் கவனம் செல்லாமல் மற்றவர்கள் நம்மை பார்க்கிறார்களே என்பதிலேயே சென்றுகொண்டிருந்தது. அதோடு நடித்து முடித்தபிறகு டைரக்டர் என்ன சொல்வாரோ அல்லது ரீடேக் பண்ண சொல்றாரோ என்று மனது பலவிதமான குழப்பங்களுடன்தான் இருந்தது. என்றாலும், போகப்போக அதிலிருந்து விடுபட்டு நடிப்பில் மட்டுமே எனது கவனத்தை திருப்பிக்கொண்டேன். என்னைப்பொறுத்தவரை நீங்கள் எந்த அளவுக்கு நடித்திருக்கிறீர்கள் என்று கேட்டால், நான் ஜீரோ என்றுதான் சொல்வேன். ஆனால், மக்கள் என் நடிப்புக்கு கொடுக்கும் மதிப்பெண்தான் சரியான தீர்ப்பாக இருக்கும் என்று காத்திருக்கிறேன்.
அடுத்தபடியாக உங்கள் வயதுக்கேற்ற ஹீரோ வேடங்களில் நடிக்க முயற்சி எடுப்பீர்களா?
என்னைப்பொறுத்தவரை நடிக்க வந்ததே எதிர்பாராவிதமாக நடந்துள்ளது என்பதால், என்னை நம்பி டைரக்டர்கள் எந்த மாதிரியான வேடம் கொடுத்தாலும் நடிக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். மற்றபடி ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம பெரிதாக இல்லை.
இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. ஹீரோவாக நடித்தால் நிறைய ப்ரஷர் இருக்கும். முக்கியமாக நடிக்கிற படம் ஓட வேண்டும். ஆனால் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்கிறபோது நம்முடைய நடிப்பை மட்டுதான் கருத்தில் கொள்வார்கள். வெற்றி தோல்வி நம்மை பாதிக்காது. அதனால், ஒரே மாதிரியாக இல்லாமல் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கவே விரும்புகிறேன். கதாபாத்திரங்களுக்கேற்ப எனது பாடிலாங்குவேஜையும் மாற்றி நடிப்பேன். ஒருவேளை என்னை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் நான் கவலைப்பட மாட்டேன். அப்பா இருந்த பீல்டில் நாமும் ஒரு படத்தில் நடித்து விட்டோம் என்கிற திருப்தியோடு இருந்து விடுவேன். வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று பீல் பண்ண மாட்டேன்.
ஜெய்சங்கரின் மகன் என்பது உங்களுக்கு ப்ளஸா? மைனஸா?
பெரிய ப்ளஸ்தான். காரணம், நடிகர் ஜெய்சங்கரின் மகன் என்பதால் எனக்கு சினிமா வட்டாரங்களில் நல்ல மரியாதை தருகிறார்கள். காரணம் எங்க அப்பா அந்த அளவுக்கு நல்ல பெயரை சம்பாதித்து வைத்துவிட்டு போயிருக்கிறார். அவர் இறந்து 14 வருடங்களாகி விட்டது. ஆனபோதும், அவர் பெயரை சொன்னாலே நல்ல நடிகர். நல்ல மனிதர் என்கிறார்கள். அதனால் அவரது பெயரை காப்பாற்ற வேண்டும் என்கிற பொறுப்பும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
உங்க அப்பா நடித்ததில் பிடித்த படங்கள்?
எங்க அப்பா ஹீரோவாக நடித்த நிறைய படங்கள் பிடிக்கும். வல்லவனுக்கு வல்லவன், துணிவே துணை, வண்டிக்காரன் மகன், சிஐடி சங்கர், வீட்டுக்கு வீடு என பல படங்கள் உள்ளன. அதோடு அவர் வில்லனாக நடித்த படங்களும் எனக்கும் பிடிக்கும். நான் அவரை ஒரு நடிகராகத்தான் பார்ப்பேன். குறிப்பாக, முரட்டுக்காளை படத்தில் வில்லனாக நடித்தார். அந்த செகண்ட் இன்னிங்சும் அவருக்கு பெரிய அளவில் இருந்தது. அப்போது அவர் நடித்த ஊமை விழிகள், தளபதி, பாயும் புலி, ஒரு தாயின் சபதம், பிள்ளை நிலா, அருணாச்சலம் என பல படங்கள் அவரை பேச வைத்தன. இதில் ஊமை விழிகள் படத்தில் தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா -என்று பாடியபடி எங்க அப்பா நடித்த அந்த பாடல் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.
உங்க அப்பா இடத்தை நிரப்ப முயற்சி செய்வீர்களா?
அப்பா ஒரு சூப்பர் ஹீரோ. மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் என்று மக்கள் விரும்பும் நடிகராக இருந்தவர். அவருடைய ரேஞ்சே வேற. அந்த இடத்தை என்னால் நெருங்ககூட முடியாது என்பது எனக்கு நன்றாக தெரியும். அவருடைய லுக், ஸ்டைல் எல்லாமே வேற. ஆனால் அவருடய முகம் அப்படியே என்னிடம் உள்ளது. அது எனக்கு ப்ளஸ்தான்.
மேலும், அப்பாவோட படங்களை நானும் ஒரு ரசிகனாகத்தான் பார்த்திருக்கிறேன். அவரை மாதிரி நடிக்கணும் என்று அவரது பாணியை பின்பற்ற நினைக்கவில்லை. அது என்னால் நிச்சயமாக முடியாது.
உங்க அப்பா உங்களை சினிமாவில் கொண்டு வர நினைக்கவில்லை. ஆனால் நீங்கள் உங்கள் பிள்ளைகளை நடிக்க வைப்பீர்களா?
என் பசங்க டுவின்ஸ் ரெண்டு பேர் இருக்காங்க. அவங்களுக்கு பத்து வயது ஆகிறது. நானும் எங்க அப்பா மாதிரிதான் அவங்களுக்கு சினிமா ஆசையை ஏற்படுத்தியதில்லை.இப்போதுவரை அவர்களுக்கு படிப்பில் மட்டும்தான் கவனம உள்ளது இரண்டு பையன்களில் ஒருவன் அப்பா மாதிரியே இருப்பான்.